'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு மக்களிடம் வரவேற்பு இல்லாததால், திரையரங்குகளே இப்படத்தை திரையிடுவதை நிறுத்தியுள்ளன என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதிலளித்துள்ளது.
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடும் சர்ர்சைகளுக்கு இடையே கடந்த மே 5-ஆம் தேதி வெளியானது. மக்களிடையே பிரிவினையை தூண்டும் விதமாக படம் அமைந்துள்ளதாக பலதரப்பட்ட மக்களிடையே கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஆனால், பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் படத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசி வருகின்றனர்.
மதச்சார்பின்மையை கொண்ட கேரளாவில் திட்டமிட்டு பிரிவினையை தூண்டும் விதமாக தி கேரளா ஸ்டோரி அமைந்துள்ளதாகவும், சங்-பரிவாரங்களின் கொள்கையை பரப்புரை செய்வதற்காக எடுக்கப்பட்ட படம் தான் இது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.
இந்த சூழலில், இப்படத்திற்கு மேற்குவங்க மாநில அரசு தடை விதித்தது. தமிழ்நாட்டில் படம் வெளியான நிலையில், எதிர்ப்பு எழுந்ததால், திரையரங்க உரிமையாளர்கள் இப்படத்தை திரையிடுவதில்லை என முடிவெடுத்தனர்.
இதை அடுத்து, படத்தின் மீதான தடைக்கு எதிராக அப்படத்தின் தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தடை விதித்தது குறித்து மேற்குவங்க அரசு பதிலளிக்கவும், தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள தமிழ்நாடு அரசு, 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு மக்களிடம் வரவேற்பு இல்லாததால், திரையரங்குகளே இப்படத்தை திரையிடுவதை நிறுத்தியுள்ளதாகவும், இதில் அரசின் தலையீடு இல்லை என பதிலளித்துள்ளது.