சாவ்லா கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 3 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
தில்லி கூர்கானிலிருந்து, குதுப்மினார் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த 19 வயது இளம் பெண்ணை கடந்த 2012, பிப்ரவரி 9-ஆம் தேதி இரவு ராகுல் (27), ரவி (23), வினோத் 923) ஆகிய மூன்று பேர் அடங்கிய கும்பல் காரில் கடத்தியது. கடத்தப்பட்ட மூன்றாவது நாளில் அப்பெண்ணில் சடலம் ஹரியாணா மாநிலம், ரேவாரி பகுதியில் சிதைந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் விசாரணையில், காதலை ஏற்றுக் கொள்ளாததால் அப்பெண்ணை ரவி மற்றும் அவரது நண்பர்கள் கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்ததது.
இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், கடந்த 2014-ஆம் ஆண்டு மூவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, இந்த தீர்ப்பை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தில்லி உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.