court

img

கோடநாடு கொலை வழக்கு மேல் விசாரணைக்கு தடையில்லை - உச்சநீதிமன்றம் 

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு மேல் விசாரணைக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
கோடநாடு வழக்கு தொடர்பாக விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் சயான் ஆகியோரிடம் கவால்துறை விசாரணை நடத்தியது. இதைத்தொடர்ந்து வழக்கின் சாட்சியாக கருதப்படும் அனுபவ் ரவி காவல் துறையின் மேல் விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மேல் விசாரணை செய்ய முழு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதற்கிடையில் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் உத்தரவின் பேரில் தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அனுபவ் ரவி  மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில் கோடநாடு வழக்கின் மேல் விசாரணைக்கு தடை கோரிய மனு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தின் அனுமதியின்றி மேல்விசாரணை நடத்தப்படுவதாகவும் மேல்விசாரணை நடத்திக்கொண்டே போனால் வழக்கின் விசாரணை முடிவில்லாமல் தான் செல்லும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மனுதாரர் வாதத்தை கேட்ட நீதிபதிகள் மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை என்றும் கோடநாடு விவகாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது போல் இருக்கிறது என கூறிய நீதிபதிகள் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது . கோடநாடு விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என கூறி அனுபப் ரவியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
 

;