states

தேனீயாய் வாழ்வாய்! - கோவி.பால.முருகு

தேனீ போல உழைத்திடுவாய்
 தேடி நன்மை சேர்த்திடுவாய்!
வீணில் உண்டு வாழாதே
 வீழும் உடலோ நோயாலே!

ஆயிரம் பூவில் எடுத்தாலும்
 அளிக்கும் தேன்சுவை ஒன்றேதான்!
வாயில் உறிஞ்சும் தேன்துளியால்
 வழங்கிடும் மகரந்தச் சேர்க்கைதான்!

வேலைக் காரத் தேனீக்கள்
 வீணாய்ப் பொழுதைக் கழிப்பதில்லை!
அலைந்து நூறு மைல்பறந்து
 அழகிய பூவின் தேன்கொணரும்!

இராணித் தேனீ ஒருகூட்டில் 
 இருந்திடும் ஒன்றே ஒன்றுமட்டும்!
இரையை உண்டு முட்டையிட்டு
 இனத்தைப் பெருக்குதல் அதன்வேலை!

ஆணாய் இருக்கும் தேனீக்கள்
 அழகாய்ச் செய்வது இனப்பெருக்கம்!
வானில் பறந்தே இராணியோடு
 வாய்க்கும் உறவில் இறப்பிருக்கும்!

உயிரைக் கொடுத்தே இனம்பெருக்கும்
 உண்மைத் தியாகம் அதுதானே!
பயிராய் தேனீ வளர்த்திடுவார்
 பயனாய்த் தேனைப் பெற்றிடுவார்!

நோயைப் போக்கும் மருந்தாகும்
 நுகர்ந்திட நல்ல விருந்தாகும்!
வாயைத் தேனாய் ஆக்கிடுவாய்
 வாய்மை மட்டுமே பேசிடுவாய்!  

;