உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்துவந்த நீதிபதி கே.எம்.ஜோசப் ஜூன் 16 அன்று ஓய்வு பெற்றார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி உறுதிமொழி எடுத்துக்கொண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களின் பொறுப்புகளை அச்சம், பாரபட்சம் மற்றும் எந்த ஒரு பக்க சார்பும் இன்றி நீதி வழங்குவதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டாலும் ஆளும் பாஜகவிற்கு சாதகமாக நடந்துகொள்வதை வழக்கமாக கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.பாஜகவும் நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலிஜியத்தில் தலையீடு செய்து அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமாக தனக்கு சாதகமான நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதியாக அமரவைக்கும் வேலைகளை செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டை நீதிபதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2018 ஜனவரி மாதம் கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட கே.எம்.ஜோசப் அவர்களின் பரிந்துரையை ஏற்காமல் நிராகரித்துவிட்டு கொலியத்தை மறுபரிசீலனை செய்ய வற்புறுத்தியது.இதனால் உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் இந்திய நீதித் துறைக்கும்,பாஜக அரசிற்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகி நீதிபதி நியமனத்தில் காலம் தாழ்த்தப்பட்டது.பிறகு இரண்டாவது முறையாகவும் கொலிஜியம் நீதிபதி கே.எம்.ஜோசப் அவர்களை பரிந்துரைத்த போது மீண்டும் ஒன்றிய பாஜக அரசு இடையூறு செய்து நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் வினீத் சரண் ஆகியோரை முதலிலும் நீதிபதி கே.எம்.ஜோசப்பின் பெயரை மூன்றாவதாகவும் பட்டியலிட்டு பரிந்துரைத்தது. இதன்மூலம் அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாவதை தடுக்கும் வகையில் மோடி அரசு செயல்பட்டது. இறுதியாக ஆகஸ்ட் 17, 2018 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக கே.எம்.ஜோசப் பதவியேற்றார்.
நீதிபதி ஜோசப் வழங்கிய முக்கிய தீர்ப்புகள்
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கே.எம்.ஜோசப் அக்டோபர் 14, 2004 அன்று கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.பின்னர் ஜூலை 31, 2014 அன்று உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார். இவருடைய பதவிக்காலத்தில் மிக முக்கிய வழக்குகளை கையாண்டு முறையாக தீர்ப்பு வழங்கினார்.கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறியதற்காக கேரளாவின் வேம்பநாடு உப்பங்கழியில் உள்ள நெடியதுருத்து என்ற தனியார் தீவில் கட்டப்பட்டு வந்த 200 கோடி மதிப்பிலான ஏழு நட்சத்திர விடுதியை இடிக்க உத்தரவிட்டார். 2016 ஆம் ஆண்டு உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவிவகித்த போது மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த முயன்றதை ரத்து செய்து ஒன்றிய பாஜக அரசை விமர்சித்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை உறுதி செய்தார்.இந்த தீர்ப்பு இந்திய முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் உச்ச நீதி மன்ற நீதிபதியாக பதவி வகித்த ஐந்து ஆண்டுகளில் அவர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் சட்டங்களை உறுதிசெய்தது, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பது குறித்து இந்தியக் குடியரசுத் தலைவருக்கு ஒருமனதாக ஆலோசனை வழங்க குழு அமைத்தது. சட்டப்பிரிவு 142-இன் கீழ் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி, நம்பிக்கை இன்மையால் முறிந்த திருமணத்தை உச்ச நீதிமன்றம் கலைக்க முடியும் என்பது உள்ளிட்ட ஒன்றிய அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளில் முக்கிய தீர்ப்புகளை வழங்கி உள்ளார். குறிப்பாக , வெறுப்புப் பேச்சு குற்றவாளிகள் மீது தானாக நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிட்டார்.இவ்வாறு தனது வலுவான வார்த்தைகளால், பாஜகவின் வெறுப்பு பேச்சுகளை எதிர்த்துப் போராடுவதற்கு குறிப்பிடத்தக்க உத்தரவுகளை அவர் தலைமையிலான அமர்வு வழங்கியுள்ளது.