court

img

ஜம்மு - காஷ்மீர் அரசியலமைப்புக்கு பிறகு, பிரிவு 370 இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது!

புதுதில்லி, ஆக. 23 - “ஜம்மு - காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பிறகு 370-ஆவது பிரிவு இல்லாமல் போனது என்ற வாதத்தை ஏற்க முடியாது” என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்புரிமை வழங்கும் அரசியலமைப்பு பிரிவு- 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் எஸ்.கே. கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூர்ய காந்த் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, ஆகஸ்ட் 2 முதல் தினமும் (திங்கட்கிழமைகள் மற்றும் வெள்ளிக்கிழமைகள் தவிர்த்து) விசாரணை நடத்தி வருகிறது. 

ஜம்மு - காஷ்மீர் குடிமக்களின் அனுமதியின்றி 370 சட்டப்பிரிவை ரத்து செய்ய முடியுமா?; இதில் அரசியலமைப்புச் சட்டம் மீறப்பட்டிருக்கிறதா? என்ற இரண்டு அம்சங்களில் வாதப் பிரதிவாதங்களைக் கேட்டு வருகிறது. இந்நிலையில், செவ்வாயன்று 8-ஆவது நாள் விசாரணை நடைபெற்றது. அப்போதுதான், “ஜம்மு - காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பிறகு 370-ஆவது பிரிவு இல்லாமல் போனது என்ற வாதத்தை ஏற்க முடியாது” என உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது. முன்னதாக, மூத்த வழக்கறிஞர்கள் தினேஷ் திவேதி, சி.யு. சிங், சஞ்சய் பரிக், பி.சி. சென் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர்.  முதலாவதாக, மூத்த வழக்கறிஞர் தினேஷ் திவேதி தனது வாதங்களைத் தொடங்கினார். அவர், “ஜம்மு - காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த முறையானது, மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்டது” என்பதைச் சுட்டிக்காட்டினார். “ஜம்மு - காஷ்மீர் ஒருபோதும், இந்தியாவுடன் ஒரு நிலையான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. மேலும், அது ஆகஸ்ட் 15, 1947-க்குப் பிறகுதான் இந்தியாவுடன் இணைந்தது. மற்ற சமஸ்தானங்களைப் பொறுத்தவரை, இந்தியாவுடன் இணைவதற்கு நிலையான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இந்தியாவுடன் தங்கள் இறையாண்மையை முழுமையாக விட்டுக்கொடுத்தார்கள். 

பிரிவு 238 காஷ்மீருக்கு தன்னாட்சியை அளிக்கிறது

ஆனால், ஜம்மு - காஷ்மீர் இந்தியாவுடன் ‘பி’ பகுதி மாநிலமாக இணைந்தது. சட்டப்பிரிவு 238, இந்திய அரசியலமைப்பிற்குப் பதில், மாநிலத்தின் அரசியலமைப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வாக்குறுதியை அளிக்கிறது. அரசியலமைப்புச் சட்டப் பகுதி 6-இன் விதிகளை மாநிலங்களுக்குப் பயன்படுத்துவதைக் கையாளும் இந்த 238 சட்டப்பிரிவானது, பகுதி ‘பி’ மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்.  பிரிவு 238 மாநிலத்தின் தன்னாட்சியைப் பற்றிப் பேசுகிறது. அதன்படி காஷ்மீர் வேறு என்பதே அடிப்படைக் கருப்பொருளாகும். ஜம்மு - காஷ்மீர் மற்ற மாநிலங்களைப் போல இந்தியாவோடு ஒன்றிணைக்கப்படவில்லை என்ற அர்த்தத்தில் அது வேறுபட்டது. இந்திய அரசியலமைப்பு அல்லது எதிர்கால அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல காஷ்மீரிகள். அவர்களுக்கென தனியாக ஒரு இறையாண்மை உள்ளது. அதனை இந்திய ஒன்றிய அரசு பறிக்க முடியாது. உதாரணமாக காஷ்மீரில் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம். காஷ்மீர் இந்தியாவின் ஆளுகைக்குள் சேர்ந்திருப்பது தனித்துவமானது. ஜம்மு - காஷ்மீரைப் பொறுத்தவரை, இறையாண்மை பற்றிய கருத்து வித்தியாசமானது. அகம் மற்றும் புறம் ஆகிய இரண்டு காரணிகளைக் கொண்டது. பாதுகாப்பு, வெளிவிவகாரங்கள் மற்றும் தகவல்தொடர்புகளை உள்ளடக்கிய வெளிப்புற இறையாண்மையை ஒரு அரசு (ஜம்மு - காஷ்மீர்)விட்டுக் கொடுத்திருப்பதால், அது உள்நாட்டு இறையாண்மையையும் விட்டுக்கொடுப்பதாக அர்த்தம் இல்லை. 

இவ்வாறு மூத்த வழக்கறிஞர் தினேஷ் திவேதி கூறினார்.

திடீரென குழப்பிய தினேஷ் திவேதி 

வாதங்களின் போது, 1957-ஆம் ஆண்டு, ஜம்மு - காஷ்மீர் அரசியலமைப்பு இயற்றப்பட்டவுடன், 370-ஆவது பிரிவு செயல்படுவதை நிறுத்தியது என்று திவேதி ஒரு கருத்தை முன்வைத்தார். இதன்படி 370-ஆது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் (அதை ரத்து செய்ய) ஜம்மு - காஷ்மீர் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது, செயல்படுவதை நிறுத்தியது என்றார்.  தனது வாதத்தை வலுப்படுத்துவதற்காக, அரசியல் நிர்ணய சபை விவாதங்களின் போது டாக்டர் கோபாலசாமி அய்யங்கார் ஆற்றிய உரையை திவேதி சுட்டிக்காட்டினார். சட்டப்பிரிவு 370-ஐ ஒரு ‘இடைக்கால ஏற்பாடு’ என்றும், காஷ்மீர் தொடர்பாக, ஒன்றிய அரசு மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பு மற்றும் ஒன்றிய மற்றும் மாநில உறவுகள் தொடர்பான இறுதி முடிவு எப்போதுமே அரசியலமைப்புச் சபையால் எடுக்கப்படும் என்று டாக்டர் கோபாலசாமி அய்யங்கார் கூறியதாக தெரிவித்தார். ஏனெனில், சட்டப்பிரிவு 370 உருவாக்கப்பட்ட நேரத்தில், அரசியலமைப்புச் சபையோ அல்லது ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டமன்றமோ இல்லை என்பதையும் ஒரு காரணமாக கூறினார். ஆனால், துவேதியின் இந்தக் கருத்தின்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “அரசியலமைப்புச் சபையின் தனிப்பட்ட உறுப்பினர் ஒருவர் ஆற்றிய உரை, எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், ஜம்மு - காஷ்மீர் மீதான தேசத்தின் உறுதிப்பாட்டையே அது பிரதிபலிக்கிறது என்று நாம் கூற முடியுமா? இது அரசியலமைப்பின் விளக்கத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும்?” என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால், “ஜம்மு - காஷ்மீர் அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட பின், சட்டப்பிரிவு 370 இல்லாமல் போய்விட்டது” என்ற கருத்தில் திவேதி உறுதியாக  இருந்தார். ஜம்மு - காஷ்மீர் அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட பின், எடுக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் செல்லுபடியாகும் தன்மையை நியாயப்படுத்த முடியாது” என்றும் கூறினார். “சட்டப்பிரிவு 370 இல்லாமல் போய்விட்டது என்ற உங்களின் சமர்ப்பிப்பை, அரசியல் சாசன அமர்வு ஏற்றுக்கொண்டால் என்ன நடக்கும் என்பதை உணர்கிறீர்களா..?” என்று திவேதியிடம் நீதிபதி எஸ்.கே. கவுல் கேட்டார்.  அதற்கு, “ஜம்மு - காஷ்மீர் அதன் சொந்த அரசியலமைப்பை உருவாக்கிக் கொள்ள அனுமதி வழங்கிய, இந்த நாட்டை வடிவமைத்த சிற்பிகளின் நோக்கம் அதுவாகவே இருப்பதால், அந்த வாதத்தை ஏற்றுக்கொள்வதால் பாதகமான விளைவுகள் எதுவும் இருக்காது” என்று துவேதி பதிலளித்தார்.  மேலும், “அரசியலமைப்புகள் ஒரு நாளுக்காக உருவாக்கப்படவில்லை என்றும், ஒரு மாநிலம் அல்லது ஒரு நாட்டின் வாழ்நாள் முழுவதும் உருவாக்கப்பட்டவை என்றும் கூறிய அவர், ஜம்மு - காஷ்மீர் அரசியலமைப்பை இடைக்கால நடவடிக்கையாக பார்க்க முடியாது” என்றும் கூறினார்.

பிரிவு 370 அமலில் இல்லை என கூற முடியாது

அதற்கு, “பிரிவு 370 செயல்படுவதை நிறுத்தி விட்டு, பிரிவு 1 தொடர்ந்து செயல்பட்டால், ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். ஜம்மு - காஷ்மீரில் 2019 வரை சட்டப்பிரிவு 370 இருந்தது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளாத வரையில், நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பை கேள்விகேட்க முடியாது. உங்கள் வாதத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டால், நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு எந்தத் தடையும் கூற முடியாது” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் சுட்டிக்காட்டினார். இதையடுத்து, தனது வாதங்களை முடிக்கும்போது, சற்று யோசித்த திவேதி  “நான் அதிகமாக குழப்பவில்லை என நம்புகிறேன்” என்று கூறி முடித்துக் கொண்டார். தினேஷ் திவேதியைத் தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பரிக் தனது வாதங்களை முன்வைத்தார். 

ஜம்மு - காஷ்மீர் இறையாண்மை மக்களிடமே உள்ளது

“காஷ்மீர் மக்கள் ஒன்று கூடி, காஷ்மீருக்கு அரசியல் சாசனம் மற்றும் பொருளாதாரத் திட்டம் வேண்டும் என்று ஒரு அறிக்கையை அளித்துள்ளனர்” என்று அவர் சுட்டிக்காட்டினார். “ஜம்மு - காஷ்மீர் மக்களின் இறையாண்மை, அம்மாநில மக்களிடமே உள்ளது” என்றும் “எழுதப்பட்ட அரசியலமைப்பு இருக்கும்போது, அந்த எழுதப்பட்ட அரசியலமைப்புதான் உச்சபட்ச அதிகாரம் கொண்டது” என்றும் கூறினார். மேலும், “357-ஆவது பிரிவு, ஜம்மு - காஷ்மீரால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதன்படி, சட்டத்தை இயற்றுவதற்கான மாநில சட்டமன்றத்தின் அதிகாரத்தை, இந்திய நாடாளுமன்றம் தன்னிச்சையாக எடுத்துக் கொள்ள முடியாது, மேலும் அதை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்க முடியாது. எனவே, நேரடியாகச் செய்ய முடியாத ஒன்று, காஷ்மீரில் மறைமுகமாகச் செய்யப்பட்டுள்ளது” என்று சஞ்சய் பரிக் தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீருக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன

மூத்த வழக்கறிஞர் பி.சி. சென், தனது வாதங்களை வைத்தபோது, வரலாற்று அடிப்படையில், நீதித்துறை மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகளின் அடிப்படையில் மூன்று பரந்த தலைப்புகளில் பேசத் துவங்கினார்.  வரலாற்றுச் சூழலைப் பற்றிப் பேசுகையில், “ஜம்மு - காஷ்மீர் பிராந்தியம் முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்டிருந்தது. அந்த மக்களுக்கு இரண்டு வாய்ப்புக்கள் இருந்தன. ஒன்று பாகிஸ்தானுக்குள் சென்று பெரும்பான்மையாக இருப்பது. இரண்டு இந்தியாவோடு இணைந்து சிறுபான்மையினராக இருப்பது. இந்த இரண்டுக்கும் இடையில் அவர்கள் பிந்தையதைத் தேர்ந்தெடுத்து, நாட்டுப் பிரிவினையின்போது அரங்கேறிய கொடூரமான வன்முறைச் சூழலுக்கும் இடையே, இந்தியாவில் ஒரு பிராந்தியத்தில் சிறுபான்மையினராக இருக்கும் முடிவைத் தேர்ந்தெடுத்தனர். இந்தப் பின்னணியில், 370-ஆவது பிரிவின் தன்மையில் அரசியலமைப்பு வாக்குறுதி இருந்தால், அதைக் கண்டிப்பாகக் கருத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

ஜம்மு - காஷ்மீரில் 356-ஐ திணிக்க எந்த காரணமும் இல்லை

“அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடு இருக்கும் தருணத்தில், ஒரு வரம்பும் இருக்க வேண்டும்” என்ற பி.சி. சென், பெரும்பான்மையினருக்கு எதிரான உரிமைகளைப் பற்றிப் பேசுகையில், எல்ஜிபிடிக்யூ (டுழுக்ஷகூணு) + தீர்ப்புகள் மற்றும் அதிகாரப்பகிர்வு எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும் எடுத்துக்காட்டினார். “வரலாற்று ரீதியாக சிறுபான்மை மதத்தை உள்ளடக்கிய மக்களிடமிருந்து, உரிமைகைளை ஒருவர் அகற்றினால், அது ஒரு பிற்போக்கு நடவடிக்கையாக இருக்கும்” என்று பதிவு செய்தார். இறுதியாக அவர் வாதிடுகையில், “பதிவுசெய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையை எடுத்துக் கொண்டால், அமைதி, பாதுகாப்பு, சட்டத்தின் அடிப்படையில் பயனுள்ள நிர்வாகம் மற்றும் சமத்துவக் கொள்கைகளை நிலைநிறுத்துதல் ஆகியவற்றில் ஜம்மு - காஷ்மீர் மற்ற மாநிலங்களை விட உயர்ந்த இடத்தில் உள்ளது. இவ்வாறு எப்படிப் பார்த்தாலும் ஜம்மு - காஷ்மீரில் 356-ஆவது பிரிவை திணிக்க எந்த காரணமும் இல்லை” என்று பி.சி. சென் குறிப்பிட்டார்.

புதன்கிழமையன்று 9-ஆவது நாளாகவும் மனுதாரர்கள் தரப்பு வாதங்கள் தொடர்ந்தன.