எச்சில் இலையில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கிய தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்புக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே நெரூர் பகுதியில் உள்ள சதாசிவ பிரம்மேந்திரர் கோவிலில், சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்யும் நடைமுறை இருந்து வந்தது. இதற்கு எதிராக கடந்த 2015ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டது. 10 ஆண்டுகளாக இந்த நடைமுறை நடைபெறாமல் இருந்து வந்தது.
இத தொடர்ந்து, எச்சில் இலைகளின் மீது அங்கப்பிரதட்சணம் செய்யும் சடங்குக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று கோரி நவீன்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன், இந்த நடைமுறைக்கு அனுமதி வழங்கி கடந்த ஆண்டு மே 17ஆம் தேதி தீர்ப்பு அளித்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வது சுகாதாரத்துக்கும் மனித மாண்புக்கும் உகந்தது அல்ல. ஏற்கெனவே இதுபோன்ற நிகழ்வுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது என கூறிய நீதிபதிகள், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்புக்கு தடை விதித்தனர்.