புதுதில்லி, ஜுலை 2- சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாத் மற்றும் முன்னாள் காவல்துறை இயக்குநர் ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் 300 பேர் வலியுறுத்தியுள்ளனர். ‘‘டீஸ்டா செதல்வாத் மற்றும் ஆர்.பி . ஸ்ரீகுமார் ஆகியோரின் கைது நாட்டில் இருக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் நீதிமன்றங்களில் இருக்கும் சட்ட நடைமுறைகளுக்கும் அச்சுறுத்த லாக இருக்கும்” என்று இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு 300க்கும் மேற்பட்ட செயல்பாட்டாளர்கள், முற்போக்காளர்கள், அறிவுஜீவிகள் கடிதம் எழுதியுள்ளனர். 2002-ஆம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலையில் நரேந்திர மோடிக்கும், அச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்கள் மீது கீழமை நீதிமன்றங்கள் வழக்கு பதிவு செய்ய மறுத்ததை எதிர்த்து ஜாகியா ஜாஃப்ரி மற்றும் டீஸ்டா செதல்வாத் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து வழக்கு தொடுத்தவர்களையே கைது செய்தது குஜராத் அரசு.
இதற்கு கண்டனம் தெரிவித்து எழுதப் பட்டுள்ள அக்கடிதத்தில், ‘‘மனுதாரர் அல்லது சாட்சியங்கள், ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்காக நீதிமன்றத்தில் தொடர்ந்து எந்தவித தயக்கமும் இல்லாமல் முறையீடு செய்து வந்தால், அந்த காரணத்தை தகுதி அற்றதாக கருதினால், அதற்காக மனுதாரர் மீதே நீதிமன்றம் குற்றம் சுமத்துவது முற்றிலும் அபாயத்தை வெளிப் படுத்துவதாக இருக்கிறது’’ என்று அதில் கையெ ழுத்திட்டுள்ள 300 பேர் குறிப்பிட்டுள்ளனர். டீஸ்டா செதல்வாத் மற்றும் ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக கையெழுத்திட்ட 300 பேரில் முன்னாள் பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அஞ்சனாயண பிரகாஷ், வழக்கறிஞர் கே.எஸ். சவுகான், அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அமர் சரண், மூத்த வழக்கறிஞர்கள் அவனி பன்சால், ஆனந்த் குரோவர், இந்திரா ஜெய்சிங், பரஞ்சோயய் குஹா தாகுர்தா, பேரா.ராமச்சந்திர குஹா, சஞ்சய் ஹெக்டே, நவ்ரோஸ் சேர்வை, அஞ்சனா மிஸ்ரா, மனோஜ் குமார் ஜா, கவிதா கிருஷ்ணன் போன்றோர் அடங்குவர்.
“குஜராத்தைச் சார்ந்த அதிருப்தி அதிகாரி களும் பிறரும் குஜராத் படுகொலைக்கு நீதி கேட்டு சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக தொடர்ந்து நீதிமன்றத்தில் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, நீதி கேட்டவர்களையே சட்டரீதியாக தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்கிறது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் ஒரு பகுதி. வன்முறை வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவை தவறாகப் பயன்படுத்தி அவர்கள் மோடிக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்தனர் என்று செதல்வாத், ஸ்ரீகுமார் , சஞ்சீவ் பட் ஆகியோ ருக்கு எதிராக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. “நெருக்கடி நிலை காலத்தில் கூட, உச்சநீதிமன்றத்தின் சட்ட நடைமுறைகளைப் பயன்படுத்தி மேல்முறையீடு செய்தவர்களை சிறையில் அடைக்கவில்லை. நீதிமன்றங்களில் மக்களுக்கான பிரச்சனைகளுக்காக போராடிய வர்களை ஒரு போதும் தண்டித்தது கிடையாது. ஆனால் மக்களைப் பழி வாங்கத் துடிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதி மன்றம் வளைந்து செல்ல விரும்புகிறது என்பதை நாங்கள் நம்புவதற்கு மறுக்கிறோம். நீதிமன்றத்தின் தீர்ப்பு எந்தவிதமான மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும் விதத்தில் இருக்காது என்பதை நீதி மன்றங்களே தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.