cinema

img

மங்கம்மா சபதம் ரஞ்சனை நட்சத்திரமாக்கி, வாசனைப் பணக்காரர் ஆக்கிய முதல் பிரம்மாண்டப் படம்

ஆனந்த விகடனை 1926இல் தொடங்கி  வெற்றிகரமாக நடத்திவந்த தொழி லதிபர் எஸ்.எஸ்.வாசன் 1940 ஆம் ஆண்டு ஒரு படப்பிடிப்பு நிலையத்தை வாங்கினார். அது திரைப்படத் தயாரிப்பாளர்கள் சார்பில் அந்நாளைய பிரபல இயக்குநர் கே. சுப்ரமணி யம் நடத்திவந்த ஸ்டூடியோ. அதற்கு ஜெமினி என்று பெயரிட்டார் வாசன். இரண்டு சிறுவர்கள் எக்காளம் இசைப்பதுபோன்ற சின்னம் ஒன்றையும் அதன் ‘லோகோ’வாக வடிவமைத்தார். முதன்முதலில் அந்த ஸ்டூடியோவில் மதனகாமராஜன் (1941) என்ற  படத்தைத் தயாரித்தார் வாசன். கே.ராம்நாத் இயக்கினார். அடுத்து ஒரு தெலுங்குப்படம் ஜீவன முக்தி (1942) அங்கு உருவானது. அதே ஆண்டு தமிழில் நந்தனார் படத்தை ஜெமினி தயாரித்து வெளியிட்டது. இந்த மூன்று படங்களையும் தொடர்ந்து வெளிவந்ததுதான் மங்கம்மா சபதம் (1943). ஜெமினி தயாரித்த முதல் பெரிய பட்ஜெட் படம் இந்த மங்கம்மா சபதம். அதுவரையில் ஹாலிவுட் சினிமாக்களையே பிரம்மாண்டமான தயாரிப்பு என்று சொல்லிவந்த நிலையை மாற்றி தமிழ்ப் படமொன்றையும் பிரம்மாண்ட தயாரிப்பு என்று முதன்முதலில் ரசிகர்களைப் பேச வைத்த படம் இந்த மங்கம்மா சபதம். மதராஸில் தயாரான ஒரு சினிமா ஒன்று ஹாலி வுட் அந்தஸ்த்துக்கு வைத்துப் பேசப்பட்டது அதுதான் முதல்முறை. டி.ஜி.ராகவாச்சாரி ஒரு வழக்கறிஞர். அவரை ஆச்சாரியா என்றழைத்தார்கள். அவர் திரைத்துறையில் நாட்டம் கொண்டு எழுதி, இயக்கிய படம் இந்த மங்கம்மா சபதம். 

இந்தத் திரைப்படம் வெளிவந்து தென்னிந்தியாவில் ஒரு பரபரப்பையே ஏற்படுத்தியது. இதன் கதை ஒரு பிரபல நாட்டுப்புறக் கதையைத் தழுவியது. அதன் நாயகி மங்கம்மா ஒரு உறுதிமிக்க பெண். பெண்பித்துக்கொண்ட பட்டத்து இளவர சனால் அவள் அவமானத்துக்கு உள்ளா கிறாள். அந்த இளவரசனால் தானொரு குழந்தையைப் பெற்று, அந்தக் குழந்தையின் கையாலேயே அரசவையில் அவனுக்குக் கசையடி தந்து அவனைப் பழி தீர்ப்பதாகச் சபதம் செய்கிறாள். அதுதான் மங்கம்மா சபதம் எனும் தலைப்பின் பூர்வோத்திரம். அவளை மணந்து, அரண்மனையின் தனிமைச் சிறையில் அடைப்பதாக அந்த இளவரசனும் பதில் சபதம் செய்கிறான். எப்படி அந்தத் தனிமைச் சிறையிலிருந்து ஒரு சுரங்கத்தை உருவாக்கி, தனது கிரா மத்துக்குத் தப்பி, ஒரு மகவைப் பெற்று, அதன் கையாலேயே அந்த இளவரசன் எப்படித் தண்டிக்கப்படுகிறான் என்பது மீதிக் கதை. தனது திரைக்கதைக்கு நவீன சாயலைத் தந்தார் அதன் இயக்குநர் ஆச்சாரியா. ஒரு நாடோடிப் பெண் வேடத்தில் ஆடிப் பாடி இளவரசனை மயக்குகிறாள் மங்கம்மா. அந்தக் காட்சியில் மங்கம்மாவைக் கவர்ச்சி யாகக் காட்டிவிட்டார் இயக்குநர் என்று விமர்சனங்கள் எழுந்தன. மங்கம்மாவாக நடித்தவர் எஸ்.சௌந்தரராஜனின் ரிஷ்ய சிருங்கர் படத்தில் அறிமுகமாகி மிகப்பெரிய புகழடைந்த வசுந்தரா. அவரது கம்பீரத் தோற்றமும், இயக்குநரின் கடும் உழைப்பும் மங்கம்மா என்ற பாத்திரத்திற்கு ஒரு ஈர்ப்பை உண்டுபண்ணியது. படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் கண்டிப்பானவராக இயக்குநர் இருந்தார். அதனால், அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்ப வசுந்தராவும் கருத்தூன்றி நடித்தார். அதன் விளைவாக மங்கம்மா என்ற அந்தப் பாத்திரப்படைப்பு மிகவும் அழுத்தம் மிக்கதாக அமைந்துபோனது.

படத்தில் மொத்தம் 15 பாடல்கள். எம்.டி. பார்த்தசாரதியும் எஸ். ராஜேஷ்வர ராவும்  இணைந்து இசையமைத்தார்கள். பாடல் களைப் பாபநாசம் சிவன் மற்றும் கொத்த மங்கலம் சுப்பு எழுதினார்கள். அமெரிக்க சினிமாவின் தீவிரக் காதலரான ஆச்சா ர்யா ஹாலிவுட்டின் பிரபல கார்மென் மிராண்டாவின் பாடல் - நடனக் காட்சிகளை இந்தப் படத்தில் இணைத்தார். மிராண்டாவின் ஐ ஐ ஐ ஐ லைக் யூ வெரி மச் என்ற பாடலை ஐய்யய்யய்யே சொல்ல வெட்கமாகுதே..  என்று பாடினாள் மங்கம்மா. மாமா யே கியூரோ, டவுன் அர்ஜென்டினா வே போன்ற இன்னும் இரண்டொரு கார்மென் மிராண்டா பாடல்களின் மெட்டுக்களையும் பயன்படுத்தியிருந்தார்கள் இந்த மங்கம்மா சபதத்தில். பொதுவாக இந்திப்படப் பாடல்களின் மெட்டுக்களைத்தான் தமிழ் சினிமாவில் பயன்படுத்தும் வழக்கம் அப்போது இருந்தது. அதற்கு மாறாக ஹாலிவுட் இசையை இந்த மங்கம்மா சபதத்தில் முழங்க வைத்ததும் வசுந்தரா இந்தப் பாடல் காட்சிகளில் ஆடிய நடனமும் 1940களின் ரசிகர்களை உலுக்கியது. 

மோசமான நடத்தையுள்ள தகப்பனாக வும் பழிதீர்க்கத் துடிக்கும் மகனாகவும் இரட்டை வேடங்களில் சிறப்பாக நடித்தார் ரஞ்சன். வழக்கம்போல தங்களின் சொந்த நகைச்சுவை சரக்கினால் ரசிகர்களை மகிழ்வித்தார்கள் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், டி.ஏ.மதுரமும். ஜெமினியில் அவர்கள் பணியாற்றுவது அதுதான் முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தரத்தில் இழுத்துக் கட்டப்பட்ட கயிற்றில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் நடக்கிற வித்தையை மிகவும் சிரமப்பட்டுக் கற்றுக்கொண்டு கலைவாணர் இந்தப் படத்தில் கயிற்றில் நடந்து வித்தை காட்டு பவராக டூப் போடாமல் நடித்தார். சாப்ளினின் தி கிட் படத்தில் இடம்பெற்ற கண்ணாடி உடைக்கும் காட்சியையும் இந்தப் படத்தில் கலைவாணர் வைத்தார்.  மங்கம்மா சபதம் பெரிய வெற்றிபெற்று வாசனுக்குப் பெரும் பொருள் ஈட்டித்தந்தது. வெற்றிப்படிகள் ஏறி உயரே செல்ல இந்தப் படம் அவருக்கு உதவியது. ரஞ்சன், வசுந்தரா என்று தங்கள் குழந்தைகளுக்குப் பெயர்வைத்து மகிழ்ந்தார்கள் தமிழ் ரசிகர்கள். ஆனாலும் இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு வசுந்தராவுக்குத் திரை வாழ்க்கை நிலைக்கவில்லை. தொடர் தோல்விப்படங்களால் அவரது சினிமா  உலகம் இருண்டுபோனது. ரிஷ்ய சிருங்கரும் மங்கம்மா சபதமும் மட்டுமே  இன்றுவரையில் வசுந்தராவின் பெயர் சொல்லிக்கொண்டிருக்கின்றன. ரஞ்சனும்  சரி, வசுந்தராவும் சரி இந்தப் படத்திற்குப் பிறகுதான் திரைநட்சத்திரங் களென்று உயர்ந்தார்கள்.