cinema

img

யாருக்காக அழுதான்... ஜெயகாந்தன் எனும் இலக்கியவாதியின் திரைப்பட முயற்சிகள்...

எழுத்தாளர் ஜெயகாந்தனின் நாவல்தான் யாருக்காக அழுதான். அதனை அவரே தயாரித்து - இயக்கி கறுப்பு - வெள்ளையில் ஒரு திரைப்படமாக்கினார். திரைத்துறையிலும் இந்த யாருக்காக அழுதான் உள்ளிட்ட சில மாறுபட்ட முயற்சிகளை ஜெயகாந்தன் மேற்கொண்டார் என்பது வரலாறு. 1966 ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று வெளியான இந்தப் படத்தின் நாயகன் நாகேஷ். அவருடன் கே.ஆர்.விஜயா, டி.எஸ்,பாலையா, எஸ்.வி.சகஸ்ரநாமம், வகாப் காஷ்மீரி உள்ளிட்டோர் நடித்தார்கள். ஜெயகாந்தன் தன் சொந்தப் படநிறுவனமான ஆசியஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்தார்.  ஒரு இயக்குநராக ஜெயகாந்தனுக்கு இது இரண்டாவது படம். அவர் முதலில் இயக்கிய படம் உன்னைப்போல் ஒருவன் (1965). அதுவும் சரி, இந்த யாருக்காக அழுதானும் சரி இரண்டுமே அதே பெயர்களில் அவர் எழுதிய நாவல்கள்தான். முதலில் இந்தப் படத்தை ஜி.என்.வேலுமணிதான் தயாரிப்பதாக இருந்தது. படத்தின் நாயகனாக அவர் சிவாஜி கணேசனைத்தான் நடிக்க வைக்க எண்ணியிருந்தார். சாவித்திரியையும் இந்தப் படத்தில் நடிக்கவைக்கவே அவர் விரும்பினார். ஆனால், துவக்ககட்டமாகப் புகைப்படங்கள் எடுக்கிற நிலையிலேயே வேலுமணிக்கும் ஜெயகாந்தனுக்கும் கருத்துவேறுபாடு தோன்றிவிட்டது. வேலுமணி அதனால் விலகிவிட்டார். பிறகு ஜெயகாந்தனே தயாரிக்கவும் இயக்கவும் முடிவு செய்தார். யாருக்காக அழுதான் படத்தில் நடிக்க ஜெயகாந்தன் நாகேஷையும் கே.ஆர்.விஜயாவையும் ஒப்பந்தம் செய்தார். ஜெயகாந்தனுக்கு நாகேஷின் கலைத் திறமைமீது அளப்பரிய நம்பிக்கை இருந்தது. அதனால் சிவாஜி கணேசனுக்குப் பதிலாக நாகேஷை நடிக்க வைத்தார் அவர். 

வங்கத்தின் புகழ்பெற்ற நிமாய் கோஷ் இந்தப் படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொண்டார். படத்திற்கான இசையமைப்பு எஸ்.வி.ரமணன். சமூகப் படமென்றாலும் ஒரு புலனாய்வு பாணித் திரில்லர் ஆகவும் இதன் கதை அமைந்திருந்தது. அன்றைய முன்னணி நகைச்சுவைக் கலைஞர் நாகேஷ் இந்தப் படத்தில் ஜோசஃப் என்ற பெயருடைய மனவளர்ச்சி குறைந்த ஒரு சீரியஸ் கதாபாத்திரத்தில் மிக அற்புதமாக நடித்திருந்தார்.   கதையின் சுருக்கம் இதுதான்: சென்னையில் ஒரு விடுதியின் வேலைக்கார இளைஞன் ஜோசஃப். மனவளர்ச்சியற்ற அப்பாவி அவன். போதைக் கிறக்கத்தில் அந்த விடுதியில் தங்க வரும் ஒரு வடநாட்டுப் பணக்கார முதலாளி தன்னிடமிருக்கும் பெருந்தொகையான பணத்தை அந்த விடுதியின் சொந்தக்காரரிடம் தந்து பாதுகாப்பாக வைத்திருக்கும்படி வேண்டுகிறார். அதன்பின்னர் அறையில் உறங்கச் சென்றுவிடுகிறார். மறுநாள் காலையில் போதை தெளிந்தவராக அவர் தன் பணப்பெட்டியை யாரிடம் கொடுத்தோம் என்பதை மறந்த நிலையில் அந்தப் பழி அப்பாவி ஜோசஃப் மீது விழுகிறது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் விடுதி முதலாளி அந்தப் பணத்தை அபகரித்துக்கொண்டு, ஜோசஃப்பைக் குற்றவாளியாக்கிவிடுகிறார். விசாரணை என்ற பெயரில் தன்மீது பழி சுமத்தப்படுவதால் அமைதியிழக்கிறான் ஜோசஃப். அதே சமயத்தில் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் அந்த விடுதியில் தங்கவரும் ஒரு இளம் பெண் அந்தப் பிரச்சனையில் ஜோசஃப்புக்கு உதவுகிறாள். விடுமுறையில் சென்றுவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பும் தலைமைச் சமையல்காரர் நாயுடு இறுதியில் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார். 

இதில் பணத்தைத் திருடும் விடுதிச் சொந்தக்காரராக டி.எஸ்.பாலையா நடித்தார். பணத்தைப் பறிகொடுக்கும் போதை ஆசாமியாக வகாப் காஷ்மீரி நடித்தார். விடுதியில் தங்கும் பெண்ணாக கே.ஆர்.விஜயாவும், சமையல்கார நாயுடுவாக எஸ்.வி.சகஸ்ரநாமமும் நடித்தார்கள். யாருக்காக அழுதான் திரைக்கதையின் உள்ளடக்கத்திற்காகவும், புதுமையான  செய்நேர்த்திக்காகவும் சினிமா விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. நாகேஷின் மிகஇயல்பான யதார்த்த நடிப்பும், அதிக வசனங்கள் பேசாமல் மிகச் சிறந்த உடல்மொழி வெளிப்பாடும் படத்தின் தரத்தை உயர்த்தின. என்றாலும், வசூல் ரீதியில் பெரிய வெற்றியை ஈட்டித்தரவில்லை. இதனால், உன்னைப்போல் ஒருவன் மற்றும் யாருக்காக அழுதான் படங்களுக்குப் பிறகு ஜெயகாந்தன் திரைப்படங்களை இயக்குவதை நிறுத்திக்கொண்டார். என்றாலும், சிலநேரங்களில் சில மனிதர்கள் (1976), ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978) போன்ற படங்களின் மூலம் தனது நாவல்களைத் திரைப்படமாக்கும் முயற்சிகளை அவர் தொடரவும் செய்தார்.