அது கேரள மாநிலத்தின் கொச்சி நகரிலிருந்த பத்மா ஹால் திரையரங்கம். அன்றைக்கு அங்கே கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான ரசிகர்களை அங்கு குவியச்செய்தது அந்நாளைய உச்ச நட்சத்திரம் - பாடக நடிகர் டி.ஆர்.மகாலிங்கம்தான். அவரது நடிப்பில் அப்போது வெளியாகியிருந்த ஞானசௌந்தரி (1948) படத்தின் 50வது வாரக் கொண்டாட்டம் அங்கே அப்போது தொடங்கியிருந்தது. அந்தப் படத்தின் நாயகன் டி.ஆர்.மகாலிங்கம் அந்த விழாவிலே பங்கேற்கிறார் என்கிற செய்தி காட்டுத் தீயாகப் பரவி, ரசிகர்களை படையெடுக்கச் செய்திருந்தது. தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளத்திலும் பெரும் வெற்றியைக் கண்டிருந்தது ஞானசௌந்தரி திரைப்படம். கொச்சி பத்மா ஹால் திரையரங்கின் பால்கனியில் தோன்றிய மகாலிங்கம் ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்தார். ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள். திரையரங்கின் மேடையில் தோன்றி ரசிகர்களின் முன்னிலையில் பேசினார். ஞானசௌந்தரியில் தாங்கள் பார்த்த அந்த அழகிய இளம் பாடகன் - நாயகன் தங்களின் கண்முன்னே தோன்றியதைக் கண்ட மலையாள ரசிகர்கள் போதைகொண்டு கிரங்கிப்போயிருந்தார்கள் என்கிற தகவலைத் தருகிறார் தனது கட்டுரையொன்றில் பிரபல இசை விமர்சகர், திரைக்கலைஞர் ஷாஜி. ஞானசௌந்தரி ஒரு கிறிஸ்தவ பக்திப்படம். டி.ஆர். மகாலிங்கத்துடன் எம்.வி. ராஜம்மா, டி. பாலசுப்பிரமணியம், புளிமூட்டை ராமசாமி, பஃபூன் சண்முகம், பி.ஆர். மங்களம், பி.எஸ். சிவபாக்கியம், பி.ஜி. வெங்கடேசன் போன்றோர் நடித்திருந்தார்கள். முதலில் நாயகியாக பி. பானுமதியைத்தான் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். பானுமதி அப்போதே தெலுங்குப் படவுலகில் பெரிய நட்சத்திரமாகிவிட்டிருந்தார். ஒரு தயாரிப்பாளராகவும் உருவாகியிருந்தார். அவரது இயல்பைச் சமாளிக்க முடியாத படக்குழு அவரை நீக்கிவிட்டு வேறொருவரை நாயகியாகப் போடலாம் என்று முடிவு செய்தது.
அப்போது கன்னடப் படவுலகில் பிரபலமாகியிருந்த, தமிழிலும் உத்தமபுத்திரன், குமாஸ்தாவின் பெண் போன்ற படங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கியிருந்த எம்.வி.ராஜம்மாவை நாயகியாக ஞானசௌந்தரியில் நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தார்கள். மலையாள இயக்குநர் ஜோசஃப் தளியத் ஜூனியரும் எஃப். நாகூரும் இணைந்து இதன் கதையை அமைத்தார்கள். இருவரும் இணைந்தே தயாரித்தார்கள். இயக்கத்திலும் இருவரும் இணைந்தே பணியாற்றினார்கள். திருவனந்தபுரம் நீதித்துறை அதிகாரியின் மகனான ஜோசஃப் தளியத் ஜூனியர் சினிமாவுக்குப் புதிது. அவர் உருவாக்கிய படநிறுவனம்தான் சிட்டாடல் ஃபிலிம் கார்ப்பரேஷன். அப்போது வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருந்த நியூடோன் ஸ்டுடியோ நாகூருடன் இணைந்து வெளியானது தான் இந்த வெற்றிப்படம். நாஞ்சில்நாடு டி.என். ராஜப்பா திரைக்கதை, வசனம் எழுதினார். படத்தில் மொத்தம் 16 பாடல்கள். மூன்று பாடல்களை கம்பதாசன் இயற்றினார். மற்ற பாடல்களை பாபநாசம் சிவன், பாலசுந்தரக் கவி, கே.டி.சந்தானம், கே.ஆர். சாரங்கபாணி, டி.என். ராஜப்பா ஆகியோர் எழுதியிருந்தார்கள். எஸ்.வி. வெங்கடராமனின் இசை ஞானசௌந்தரியின் வெற்றிக்கு முக்கிய காரணமானது. அவருடன் எம்.எஸ். ஞானமணியும் 3 பாடல்களுக்கு இசையமைத்தார். அரண்மனை நடன மங்கையராக சிறு வேடங்களில் லலிதாவும் பத்மினியும் தோன்றினார்கள்.
படத்தின் கதை நவாப் ராஜமாணிக்கம் நடத்திவந்த நாடகத்தைத் தழுவியது. அதுவொரு கிறிஸ்தவ நாட்டுப்புறக் கதை. அரசன் தர்மரின் மகள் ஞானசௌந்தரியை அவளது சிற்றன்னை கூலிப்படையினரை வைத்துக் காட்டுக்குக் கடத்திச்சென்று அவளது இரண்டு கைகளையும் வெட்டிவிடுகிறார்கள். கைகளை இழந்த ஞானசௌந்தரியை அடுத்த நாட்டு இளவரசன், நாயகன் பிலேந்திரன் காப்பாற்றுகிறார். இருவரும் காதல்வயப்படுகிறார்கள். தேவ அருளால் அவளுக்குக் கைகள் திரும்பக் கிடைக்கின்றன. ஞானசௌந்தரிக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. காதலர்களுக்குள் பிணக்கு, பிரிவு என்று நீளும் கதையும் எல்லோரும் இணைய, மகிழ்ச்சியில் முடிகிறது. சிட்டாடலின் இந்த ஞானசௌந்தரி தயாரிக்கப்பட்ட அதே ஆண்டு, அதே கதையமைப்போடு, ஜெமினி பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எஸ். வாசன் இயக்கத்தில், எம்.கே.ராதா, பி.கண்ணாம்பா நடிப்பில் இன்னொரு ஞானசௌந்தரியும் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. ஆனால், வாசனின் அந்தப் படம் தோல்வியைத் தழுவ, தளியத்தின் ஞானசௌந்தரி தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பெரும் வெற்றியைப் பெற்றது. இந்த ஆண்டு ஞானசௌந்தரிக்கு வயது 75 என்றால், (1924 ஜுன் 16 - இல் பிறந்த) அதன் நாயகன் டி.ஆர். மகாலிங்கத்திற்கு இது அவரது நூற்றாண்டு துவக்கம் என்பதையும் மகிழ்வுடன் மனதில் வைப்போமே!