பாளையங்கோட்டையில் ஒரு நடுத்தரக் கிறிஸ்தவக் குடும்பத்தில் 1915இல் பிறந்தவர் அருள் சூசை ஆரோக்கியசாமி. அவரது தந்தையார் இலங்கையின் கொழும்பு நகரில் தொழில் நிறுவனம் ஒன்றினை நடத்திவந்தபோது ஆரோக்கியசாமி தனது துவக்க காலத்தை இலங்கையில் கழித்தார். கொழும்பு லண்டன் பல்கலைக்கழகத்தில் தனது பி.ஏ.ஹானர்ஸ் பட்டப்படிப்பை முடித்தார். கீழ்த்திசை மற்றும் மேற்குலக இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருந்த அவருக்கு நாடகங்களை எழுதுவதில் விருப்பம் அதிகமிருந்தது. வடமொழியில் பிரபலமாக இருந்த கவிஞர் பில்ஹணா குறித்த வழக்காற்றினை ஆங்கிலத்தில் வாசித்த அவருக்கு அந்தக் கதையில் மிகுந்த நாட்டம் ஏற்பட்டது. அதனைத் தமிழில் ஒரு நாடகமாக எழுதி, தனது கல்லூரியின் ஆண்டுவிழாவில் அரங்கேற்றினார். அது பெரிய வரவேற்பைப் பெற்றது. இரண்டாம் உலகப்போரின் நெருக்கடிகளால் அருள் சூசை ஆரோக்கியசாமியின் குடும்பம் இலங்கையிலிருந்து மறுபடியும் பாளையங்கோட்டைக்கு இடம் பெயர்ந்தது. அகில இந்திய வானொலியின் திருச்சி நிலையத்தில் தனது பில்ஹணன் நாடகத்தினை அவர் அளித்தார். அதனை ஒலிபரப்புக்கு ஏற்றுக்கொண்ட நிலையத்தார் பின்னாளில் தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் என்று உயர்ந்த எம்.கே.தியாகராஜ பாகவதரை நாயகனாக வைத்து ஒலிபரப்பினார்கள். அந்த வானொலி நாடகத்தினைப் பிரபலமான இன்னொரு கலைஞர் டி.கே.சண்முகம் கேட்க நேர்ந்தது. அவருக்கு அந்த நாடகம் பிடித்துப்போக உடனே அதனை வாங்கி, தங்களது டி.கே.எஸ். நாடகக்குழுவின் சார்பில் அரங்கேற்றினார். அதனை ஒரு திரைப்படமாக்கவும் டி.கே.சண்முகம் திட்டமிட்டார்.
பில்ஹணன் கதை இதுதான்: மன்னன் ஒருவன் தனது அழகான இளம் மகள் யாமினிக்குக் கல்வி கற்பிக்க விரும்புகிறான். பல இடங்களிலும் தேடி, ஒரு இளைஞனான பில்ஹணனை அவளுக்கு ஆசிரியராகத் தேர்வு செய்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டுவிட்டால் அவர்கள் காதல் வயப்படக்கூடும் என்று அஞ்சி ஆசிரியர் பில்ஹணன் கண்பார்வையற்றவன் என்று தன் மகளிடமும், யாமினி பார்க்கச் சகியாத அவலட்சணமான முகத்தைக் கொண்டவள் என்று பில்ஹணனிடமும் கூறிவைக்கிறான். அத்துடன் அவர்கள் இருவருக்குமிடையே ஒரு திரையைத் தொங்கவிடுகிறான். ஒருநாள் பௌர்ணமியன்று முழுநிலவின் அழகைப் பார்த்து அருமையானதொரு கவிதையைப் பாடுகிறான் பில்ஹணன். பார்வையற்ற தனது ஆசிரியர் எப்படி நிலவின் அழகை வர்ணிக்க இயலும் என்று யாமினி அதிர்ச்சியடைகிறாள். திரையை விலக்கிப் பார்க்கிறாள். அங்கே பார்வையுள்ள அழகானதொரு இளைஞனாகத் தன் ஆசிரியரைப் பார்க்கிறாள் யாமினி. அழகிய இளம் தேவதையாக யாமினியைக் காண்கிறான் பில்ஹணன். இருவரும் மன்னன் அஞ்சியதுபோலவே காதல் வயப்படுகிறார்கள்.
அவர்களின் காதலை விரும்பாத மன்னன் அறிவுரை செய்கிறான். அதனைக் கேட்காத அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கிறான். தனது நண்பர்களாலும் மக்களாலும் கடும் எதிர்ப்பினைச் சந்திக்கும் மன்னன் உண்மைக் காதலைப் புரிந்துகொண்டு அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டு அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறான். பாளையங்கோட்டை அருள் சூசை ஆரோக்கியசாமி என்ற ஏ.எஸ்.ஏ. சாமி நாற்பது - ஐம்பதுகளில் தமிழ்த் திரைப்பட உலகில் முத்திரை பதித்த திரைக்கதாசிரியர் மற்றும் இயக்குநராகத் திகழ்ந்தவர். ராஜகுமாரி, வேலைக்காரி, அரசிளங்குமரி, கற்புக்கரசி, கைதி கண்ணாயிரம், தங்கப் பதுமை, துளி விஷம், நீதிபதி, பொன்னி, ஆனந்த ஜோதி போன்ற வெற்றிப்படங்களைப் பின்னாளில் இயக்கிப் புகழடைந்த ஏ.எஸ்.ஏ. சாமியின் முதல் நாடகமான இந்தக் கதையை டி.கே.சண்முகம் திரைப்படமாகத் தயாரித்து, நாயகன் பில்ஹணனாகவும் நடித்தார். இளவரசி யாமினியாக திரௌபதி நடித்தார். அரசனாக டி.கே.பகவதி நடித்தார். டி.கே.எஸ். நாடகக்குழுவின் கலைஞர்கள் பலரும் இந்தப் படத்தில் நடித்தார்கள். கே.வி.ஸ்ரீநிவாசன் இயக்கினார். மகாகவி பாரதி, பாவேந்தர் பாரதிதாசன், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை ஆகியோரின் பாடல்களையே படத்தில் பயன்படுத்தினார்கள். டி.ஏ.கல்யாணம் இசையமைத்தார். சராசரி வெற்றியையே பெற்ற இதே பில்ஹணன் கதையை இதற்கு முன்பே எம்.கே.டி.பாகவதரை நாயகனாக வைத்து, பிரபல சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கப்போவதாக அறிவிப்புச் செய்திருந்தார். ஆனால், லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் தண்டனை பெற்று பாகவதர் 1944-இல் சிறை சென்றுவிட்டதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதன்பின்னர்தான் டி.கே.சண்முகம் இந்தப் பில்ஹணனை உருவாக்கினார் என்பது இன்னொரு ருசிகரச் செய்தி.