கொச்சி, மார்ச் 9- மலையாள திரையுலகம் அனை வருக்கும் வழிகாட்டியாக உள்ளது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களில் சினிமாவின் பங்கை மலையாள சினிமா கற்றுக்கொடுக்கிறது. “தி கிரேட் இந்தியன் கிச்சன்” போன்ற திரைப்படங்கள் ஒரு உதாரணம் என்று சூர்யா செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். ‘எதற்கும் துணிந்தவன்’திரைப்படத்தை விளம்பரப்படுத்து வதற்காக கொச்சி வந்த சூர்யா செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: ஜெய்பீம் படத்தை பார்த்துவிட்டு முன்னாள் அமைச்சர் கே.கே.சைலஜா போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். படம் பற்றி நிறைய பேசினார். அது எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. எடுத்த படங்களும், எடுத்த முடிவுகளும் சரியென்று தோன்றியது. ஜெய் பீம் போன்ற படங்கள் சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது போன்ற திரைப்படங்கள் அதிகம் வர வேண்டும். படத்தை எப்படி மாற்றி எடுப்பது என்பது பற்றிய விவாதங்கள் நடக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் நடிகையை தாக்கியது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. சமூகத்தில் பெண்களை மதிக்க வேண்டும். அதற்கு கேரளா எப்போதும் முன்னுதாரண மாக உள்ளது என்றார் சூர்யா. இதில் இயக்குநர் பாண்டி ராஜ், நடிகர் சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.