cinema

img

கடைசி விவசாயி முதல் தர திரைப்படம் - ஜி.ராமகிருஷ்ணன்

பூச்சிக்கொல்லி மருந்து, மலட்டுவிதை போன்றவைகளின் எதிர் விளைவுகளை 80 வயது உண்மையான சம்சாரி ஒருவரின் அனுபவங்கள் வழியாக  சொல்லப்படுவது “கடைசி விவசாயி” திரைப்படம். பல ஊடகங்களிலும் புகழப்படுவதைப் போல தமிழின் மிக முக்கியமான சினிமா இது. எண்பது வயது விவசாயி மாயாண்டி சந்தைக்குப் போய் வாங்கும் தக்காளிக்கு கடைக்காரர் சிபாரிசு செய்கிறார். வெதை இல்லாத தக்காளி ஆச்சே என கேட்கும் மாயாண்டியிடம் இது செயற்கை தக்காளி; நல்லா காய்க்கும் ; வெதையை நாங்கள் விற்கிறோம் என்பதைக் கேட்ட மாயாண்டி, சம்சாரிக்கான மொழியில், இந்த வெதையை கண்டு பிடிச்சவனுக்கு ஆண்குழந்தை பிறந்து, அது வெதைக்கொட்ட இல்லாம பிறந்தா, அவர் மனசு என்ன பாடுபடும் என்கிற வார்த்தைகளில் விவசாயிகளின் வலியைப் பகிரும் இடம் முக்கியமானது.

மாயாண்டி விவசாயியை மயில்களைக் கொன்றதாகச் சொல்லி, கோர்ட் வரைக்கும் கொண்டு போய் விடுகிறார்கள். விவசாயியை பொய்யாக கைது செய்து வந்திருப்பதை உணர்ந்த மாஜிஸ்டிரேட், கோயில் திருவிழாவிற்காக விதைக்கப்பட்ட நெல், தண்ணீர் இல்லாமல் கருகிடும் என்று கோர்ட்டில் பேசுவதோடு, இந்த பயிருங்க ஒவ்வொண்ணும் தனித்தனி உசுருங்கதான் என மாயாண்டி சொல்கிற போது, அவரின் ஈரமனதை புரிந்து கொண்ட மாஜிஸ்டிரேட், பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச விசாரணைக்கு அழைத்து வந்த பூச்சிக்கண்ணு ஏட்டையாவையே, மாயாண்டி நிலத்திற்கு டியூட்டி போட்டு, தண்ணீர் பாய்ச்சவும் மாடுகளை பராமரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கிறார். நீதிமன்றக் காட்சிகள் பிரம்மாதமாக இயல்பான முறையில் எடுத்திருப்பதை பாராட்ட வேண்டும். சினிமாவோடு சம்பந்தப்படாத ஒரு விவசாயி ஹீரோவாக நடிக்கிறார். முதல்தர வரிசையில் வரும் முன்னணி கதாநாயகர் விஜய்சேதுபதி, தன்னை அவருக்கு கீழாக நிறுத்தி, கதை என்ன சொல்கிறதோ அப்படி ஒத்துழைத்து நடித்திருப்பதால் அவரை அசல் கலைஞன் என்று பாராட்ட வேண்டும். தனக்கு தரப்பட்ட பாத்திரத்தை நேர்த்தியாக நடித்திருப்பதன் மூலமாக, தமிழ் சினிமாக்களின் நாயக பிம்பங்களை விஜய்சேதுபதி உடைக்கிறார் என சொல்லலாம்.

மொத்த கிராமத்து மக்களை அவர்கள் போக்கில் விட்டு படத்தை இயல்பான முறையில் காக்காமுட்டை, புகழ் இயக்குநர் மணிகண்டன் இயக்கி இருக்கிறார். நகைச்சுவையை இயல்பாக அமைத்திருப்பதும் சிறப்பு. நீதிமன்ற தீர்ப்பிற்காக காத்திருக்கும் மாயாண்டி, பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்தடித்து பாழானதை அறிந்து சொல்ல முடியாமல் தவித்து, காவல்நிலையத்தில் அப்படியே சாய்ந்து படுத்தவர் எழவே இல்லை.ஆவணங்களை திருத்திக் கொண்டு வர காவல் அதிகாரிகளுக்கு இட்ட ஆணை, தாமதமாவதை அறிந்து காவல்நிலையம் வந்த மாஜிஸ்டிரேட் உள்ளிட்டோர் மாயாண்டி இறந்து விட்டாரோ, விசாரணை என்ற பேரில் அவரைக் கொன்று விட்டோமோ என அத்தனை பேரும் பதைப்பது, விவசாயத்தை அழித்து விடுகிறோமோ என்று புரிந்து கொள்வதன் அடையாளமாக அந்த கிளைமாக்ஸ் காட்சி எண்ண வைக்கிறது. மாஜிஸ்டிரேட்டாக நடித்த பெண் ராய்ச்சல் ரைபைக்கா நல்ல தேர்வு. வழக்கமான தமிழ் சினிமாக்களின் மசாலா பார்முலாக்களில் மாட்டிக் கொள்ளாமல் மக்களின் வாழ்நிலையை பதிவாக்குவது என்ற முறையில் சமீபத்தில் வந்திருக்கும் படங்களின் வரிசையில் கடைசி விவசாயி படமும் இணைந்து கொள்கிறது.

கதை, திரைக்கதை, உரையாடல் ஒளிப்பதிவு, இயக்கம் என கிராமத்தின் ஆன்மாவை சித்தரித்த மணிகண்டனுக்கு பக்கபலமாக, சந்தோஷ் நாராயணன் - ரிச்சர்ட் ஹார்வி இசை படத்திற்கு உயிர் தருகிறது. இயற்கையான கிராமத்தின் அசல் கெட்டுவிடாமல், இயல்பூக்கம் மிளிர தோட்டா தரணி கலை இயக்கம் செய்திருக்கிறார். விஜய்சேதுபதி படத்தை தயாரித்து, மணிகண்டனுக்கு பெருமை சேர்த்திருக்கிறார். மாயாண்டி விவசாயியாக வாழ்ந்த நல்லாண்டி படம் வெளியாகும் முன்னே இறந்திருப்பது படத்தின் சோகச்சுவையை அடர்த்தியாக்கிவிட்டது. கடைசி விவசாயியை ஒவ்வொரு விவசாயி மட்டுமல்ல ஒவ்வொரு தனிநபர்களும் அவசியம் காண வேண்டிய திரைப்படம் என பரிந்துரைக்கிறேன். பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான உயிர்த்தொழில் பயிர்த்தொழில் என்பதால் தமிழக அரசு படத்திற்கு வரிவிலக்கு அளித்து உதவ வேண்டுமென தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.