ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கதைகளில் ஒன்றுதான் சிதைவு (The Wreck). அந்தக் கதை இந்தியாவின் பல மொழிகளிலும் சினிமாவாகியிருக்கிற அதிசயம் உங்களுக்குத் தெரியுமா? குறிப்பாக இந்தி, வங்கம், தமிழ், தெலுங்கு என்று அந்தக் கதை போகாத மொழி இல்லை. பன்மொழித் திரைப்பட கர்த்தா தாத்தினேனி பிரகாச ராவ் எனும் டி. பிரகாச ராவ் இந்தச் சிதைவு கதையைத் தமிழில் படமாக்கினார். அதற்கு மாதர் குல மாணிக்கம் என்றே பெயரிட்டார். அதில் ஜெமினி கணேசன்தான் நாயகன். அவருடன் சாவித்திரியும் அஞ்சலிதேவியும் நடித்தார்கள். எஸ்.வி.ரங்கா ராவ், நாகேஸ்வர ராவ், பி.கண்ணாம்பா, கே.ஏ.தங்கவேலு, எம்.என். ராஜம் போன்றோரும் நடித்தார்கள்.
தாகூர் தனது மிகச் சிறந்த படைப்புகளால் வங்கத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற பகுதிகளின் சினிமாக்காரர்களையும் ஈர்த்தார். 1956இல் வெளிவந்தது மாதர் குல மாணிக்கம். கதைப்படி படகு விபத்துக் காட்சி படத்தின் முக்கியப் பகுதியாகும். ஆனால், கேரளம்போல அல்லாமல், தமிழகத்தில் படகுப் போக்குவரத்து என்பது அரிதானது என்பதால் பிரகாச ராவ் ஒரு யோசனை செய்தார். அதன்படி திருச்சியை அடுத்த அரியலூரில் அப்போது மிகப்பெரிய இரயில் விபத்து ஏற்பட்டிருந்தது. அந்த விபத்துப் பகுதிக்கே தனது படப்பிடிப்புக் குழுவுடன் சென்றார் இயக்குநர். கதையில் படகு விபத்து என்றிருந்ததை இரயில் விபத்தாக்கினார். பல்வேறு கோணங்களில் அந்த அசல் விபத்தைப் படம் பிடித்தார். அவற்றையெல்லாம் கோர்வையாக்கி மாதர் குல மாணிக்கத்தில் இடம்பெறச் செய்தார். இப்படியொரு அசல் விபத்தைத் தமிழ் சினிமாவில் பயன்படுத்திக்கொண்டது இதுவே முதல் முறை என வியந்து பேசப்பட்டது.
இந்தப் படத்தின் கதை இதுதான். காணாமல் போன மனைவி அந்த இரயில் விபத்தில் இறந்துவிட்டாள் எனக் கருதி இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறான் நாயகன். ஆனால், உயிருடன் திரும்பும் முதல் மனைவியோ விபத்தால் அடையாளம் தெரியாது போகவே அந்த வீட்டின் வேலைக்காரியாகப் பணியமர்த்தப்படுகிறாள். தாகூரின் இந்த முக்கோணக் கதையைப் பயன்படுத்திக்கொள்ளாத மொழிவழி சினிமா உலகமே இந்தியாவில் இல்லை என்று சொல்லலாம். ஆண்டாண்டுகளாக மீண்டும் மீண்டும் இந்தப் பாணிக் கதையே நம்முடைய சினிமாவுக்குப் போதுமானதாக இருந்திருக்கிறது. தொலைக்காட்சி அலைவரிசைகளும் இந்த வகைக் கதைகளைப் பலவாறு பயன்படுத்தியிருக்கின்றன. இந்த முக்கோணக் கதையில் வரும் திருப்பங்களும் முடிவுமே படத்தின் உயிர்நாடியென அமைந்தன. படத்தில் நாயகியர் சாவித்திரியும் அஞ்சலிதேவியும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களில் திறம்பட நடித்து அசத்தினார்கள்.
மிகவும் பேசப்பட்ட லவ குசா படத்தைத் தெலுங்கில் எடுத்துப் பெருவெற்றி பெற்ற சங்கர் ரெட்டி தயாரித்த இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை எழுதியது ஸ்ரீதர். சலூர் ராஜேஸ்வர ராவ் இசையமைத்தார். வெற்றித் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன் இந்தப் படத்தை இந்தியில் கரானா என்ற பெயரில் எடுத்தார். அதுவும் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது. ஏற்கெனவே தாகூரின் சிதைவு கதை நேரடியாக இந்தியில் சினிமாவாகி அவ்வளவாகக் கவனம் பெறாமல் போயிருந்தது. சரணதாசி என்ற பெயரில் இதையே தெலுங்கில் எடுத்தார்கள். அதுவும் பெரிய அளவு வசூலைக் குவித்தது. அத்துடன் இயக்குநர் பிரகாச ராவுக்கும், அஞ்சலிதேவி மற்றும் சாவித்திரிக்கு விருதுகளை வாங்கித்தந்தது இந்தப் படம். மெலடி கொஞ்சிய சலூர் ராஜேஸ்வர ராவின் இசை பல தளங்களில் வரலாறு படைத்தது. அற்புதமாக மெட்டமைப்பதில் மேதையான ராஜேஸ்வர ராவ் மிகச் சிறந்த இசை விற்பன்னர் ஆவார். அது மட்டுமல்லாமல் அவர் ஒரு நடிகரும்கூட. குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கிய அவரது நடிப்பு அவரின் இளம் வயதில் ஜெமினி ஸ்டூடியோ தயாரித்து, பெரியளவில் வசூல் சாதனை படைத்த பாலநாகம்மா போன்ற படங்களில் மிளிர்ந்தது. அவர் ஒரு நல்ல பாடகரும் ஆவார். தனிப்பட்ட காதல் பாடல்களை அவர் நிரம்பப் பாடி, அவற்றுக்கு இன்றளவும் ஆந்திராவில் ஈர்ப்புள்ளதென்றால் பார்த்துக்கொள்ளலாம் அவரின் கலைத் திறனை.
ஜெமினியிலிருந்து விலகி நாகி ரெட்டி -
சக்கரபாணியோடு இணைந்து பல படங்களில் அவரது மென்மை தவழும் இசையும் பாடல்களும் முத்திரை பதித்தன. அதில் குறிப்பிடத் தகுந்த படம் மிஸ்ஸியம்மா. அவை மட்டுமா? ஸ்பானிய இசைக் கருவிகளையும் ஸ்பானிய பாணி ரிதத்தையும் தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தவர்களில் முன்னோடியும் அவர்தான். அந்த நாளின் அபூர்வ சகோதரர்கள், சந்திரலேகா போன்ற படங்களின் வெற்றிக்கு அவரது இசையமைப்பும் முக்கிய காரணமாகியது. தென்னிந்திய சினிமாவில் டி.பிரகாச ராவின் பெயர் மிகப் பெரியது. இன்றளவும் கேட்க இனிக்கும் பாடல்களைத் தமிழிலும் தெலுங்கிலும் இந்தியிலும் அந்த நாளிலேயே அள்ளி வழங்கியவர் அவர். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போன்ற செய்தியும் ஒன்று உண்டு. பிரகாச ராவ் ஒரு இடதுசாரிக் கருத்தியல் கொண்டவர் என்பதே அது. தனது கொள்கையில் மிகவும் பிடிப்புள்ளவராகவே அவர் இருந்தார். அந்த அவரது கொள்கைவழிப்பட்ட சிந்தனையின் தாக்கம் அவரது படங்களிலும் இசையிலும் முகம் காட்டுவதாக உணர்ந்தார்கள் ரசிகர்கள். தமிழில் அமரதீபம், எல்லோரும் இந்நாட்டு மன்னர், உத்தம புத்திரன், காத்திருந்த கண்கள், படகோட்டி, எங்களாலும் முடியும் போன்ற படங்களைக் குறிப்பிடலாம். இதில் எங்களாலும் முடியும் என்பது விருது பெற்ற குழந்தைகள் சினிமாவாகும். அதில் அவரும் ஒரு காவலராக நடித்திருந்தார். அந்தப் படம் ஆறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. தாகூரின் கதையைத் தழுவி, பிரகாச ராவின் ரம்மியமான இசையில் - அற்புதமான இயக்கத்தில் வெளிவந்த மாதர் குல மாணிக்கம் ஜெமினி கணேசன், சாவித்திரி, அஞ்சலிதேவி, ரங்கா ராவ் போன்றவர்களின் தேர்ந்த நடிப்பால் ஒரு வெற்றிச் சித்திரமானது.