ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி என்ற ஒரு நாட்டுப்புறக் கற்பனைக் கதைக்குக் கதை - வசனம் எழுதியபோதே அதுவொரு மூடநம்பிக்கை சார்ந்த கதை என்பதால் அதில் தனது பெயர் வருவதை விரும்பாமலிருந்தார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ஆமாம், அந்தக் கதைக்கு அவர்தான் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா. அது சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவான படம். அதன் நிறுவனர் இயக்குநர் டி.ஆர்.சுந்தரம் பாரதிதாசனிடத்தில் மிகுந்த மரியாதை கலந்த அன்பு வைத்திருந்தார். அந்த அபூர்வ சிந்தாமணி மிகப்பெரிய வசூலைக் கொண்டுவந்து சேர்த்தது. பாவேந்தரின் எதிர்பாராத முத்தம் எனும் அற்புதக் காவியத்தைத் திரைப்படமாகத் தயாரிக்கும் முனைப்பில் இறங்கினார் சுந்தரம். அதுதான் பொன்முடி எனும் திரைப்படமானது. அமெரிக்கத் தொழிற்கலைஞர் எல்லிஸ் ஆர்.டங்கன் பொன்முடியை இயக்க நியமிக்கப்பட்டார். ஹாலிவுட் தொழில்நுட்பங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்த டங்கன் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ வளாகத்துக்குள் போடப்பட்டிருந்த கடற்கரை போன்ற செட்டில் ஒரு அழகான காதல் காட்சியைப் படமாக்கினார். எலியட்ஸ் கடற்கரையையும் அங்கிருந்து கொண்டுவந்து சேலம் மாடர்ன் தியேட்டர்சில் கொட்டப்பட்ட மணலைப் பரப்பிப் போடப்பட்டிருந்த செட்டிலுமாக அந்தக் காட்சியை அதற்குமுன் எவரும் கற்பனைகூடச் செய்திராத வகையில் எடுத்தார் டங்கன். மிகவும் துணிச்சல்மிகுந்த காதல் காட்சி அது. அந்த நாளில் ஆண் - பெண் நெருக்கத்தைக் காதல் காட்சிகளில் அத்தனை எளிதில் காட்டிவிட முடியாது. டங்கன் அதிலும் நவீனப் புதுமையைச் செய்திருந்தார். இதனை அப்போதே பழமைச் சிந்தனைகொண்ட பலரும் கடுமையாக எதிர்த்தார்கள்.
பொன்முடியின் நாயகன் நரசிம்ம பாரதி. நாயகி மாதுரி தேவி. படத்திற்கு இசை ஜி.ராமநாதன். பாடல்களை மருதகாசியும் கா.மு.ஷெரீபும் எழுதியிருந்தார்கள். ஜி.ராமநாதனும் டி.வி.ரத்னமும் டூயட் பாடல்களைப் பாடினார்கள். அவற்றில் சில இந்திப்பட மெட்டுக்கள் என்று பேசப்பட்டாலும் அவை ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. ரோமியோ - ஜூலியட் கதையின் தாக்கத்தால் உருவான காதல்கதை என்று பொன்முடி சொல்லப்பட்டாலும் இரண்டு வேறு வேறு சமூகங்களைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதலை மிகவும் அழுத்தமாகச் சித்தரித்தது இந்தப் படம். நிறைய திருப்பங்கள், கடத்தல் என்று கதை பின்னப்பட்டிருந்தது. பழங்குடியினத்தின் தலைவனாக வரும் எம்.ஜி. சக்ரபாணிதான் வில்லன். மேலும், ஆர். பாலசுப்ரமணியம், டி.பி.முத்துலட்சுமி, ஏ.கருணாநிதி, தனலட்சுமி போன்றோரும் நடித்தார்கள். ஜே.ஜி. விஜயம் மேற்கொண்ட மிகச்சிறந்த ஒளிப்பதிவு, படத்தொகுப்புக் கலையில் வல்லுனரான டங்கனின் மேற்பார்வையில் எடிட்டிங் என்று நேர்த்தியாக உருவாகியிருந்தது இந்தப் பொன்முடி. வெளிப்புறக் காட்சிகளை - குறிப்பாக ஏற்காடு மலைப்பகுதியை மிகஅற்புதமாகக் காட்டி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தார் டங்கன். அவரது இயக்கம் படத்திற்கு மெருகூட்டியது. மொத்தத்தில் அழுத்தமான திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு, இயக்கம் எல்லாமே சிறப்பாக அமைந்தபோதிலும் காதல் காட்சிகளில் ஆண் - பெண் நெருக்கம் என்பது காலத்தை மீறியதாக இருப்பதாக எண்ணிய ரசிகர்களிடையே முகச்சுளிப்பும் இருக்கவே செய்தது. அது படத்தின் வெற்றியையே பாதித்தது என்றும் சொல்லப்பட்டது. எனினும் 1950இல் வெளிவந்த இந்த பொன்முடி படம் இளைஞர்களைக் கள்வெறி கொள்ளவைத்த காதல் திரைப்படம் என்று பத்திரிகைகள் எழுதினவாம்.