சென்னை:
கொரோனா பாதிப்பின் காரணமாக ரயில், விமான சேவை இன்னும் முழுமையாக நடைபெறவில்லை. இதனால் பொது மக்கள் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருவது குறைந்துள்ளது. இதன் காரணமாக ஓட்டல் தொழில்கள் கடுமையாக முடங்கி உள்ளன. சென்னையில் சிறிய, பெரியஓட்டல்கள், டீ, பேக்கரி கடைகள் என 10 ஆயிரம் செயல்பட்டன. பெரும்பாலான கடைகள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக 6 மாதம் ஓட்டல்கள் மூடப்பட்டிருந்தன. கட்டிட உரிமையாளர்களுக்கு வாடகை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது தளர்வின் காரணமாக ஓட்டல் கள் செயல்பட்டாலும் வியாபாரம் இல்லாததால் இத்தொழிலை விட்டு பலர் வெளியேறுகின்றனர்.வாடகை, குடிநீர் கட்டணம், மாநகராட்சி வரி உள்ளிட்ட பல்வேறு சுமையால் ஓட்டல் தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமல் மூடிவிட்டனர். சென்னையில் சிறிய, பெரிய அளவிலான 2000 ஓட்டல்கள் மூடப்பட்டு இருப்பதாக சென்னை ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் வசந்தபவன் ரவி தெரிவித்தார். கொரோனா காலத்தில் கடை வாடகை குறைக்கப்படவில்லை. முழுமையாக கட்ட வேண்டும் என்று உரிமையாளர்கள் வலியுறுத்துகிறார்கள். இதனால் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.