articles

img

காலத்தை வென்றவர்கள் ஜப்பானிய கம்யூனிஸ்ட் சென் கட்டயாமா

ஜ ப்பானிய மார்க்சிஸ்ட் அரசியல் ஆர்வலர், பத்திரிகையாளர், அமெரிக்க கம்யூனிஸ்ட் உறுப்பினர்களில் ஒருவர் என பன்முகத் திறன் கொண்ட சென் கட்டயாமா 1859 டிசம்பர் 26 அன்று பிறந்தார். 1878 இல் தனது கல்விப் பயணத்தை துவங்கிய சென், 1892 இல் பட்டம் பெற்றார். தனது 21 ஆவது வயதில் மக்கள் உரிமைகள் இயக்கத்தில் இணைந்தார்.

ஜப்பானின் முதல் குடியேற்ற இல்லமான காங்கிரகேஷனலிஸ்ட் கிங்ஸ்லி ஹாலில் தனது வேலையைத் துவங்கினார். இது அவருக்கு ஆரம்ப கால தொழிலாளர் சங்க இயக்கத்துடன் தொடர்பு கொள்ள உதவியது. அதற்காக அவர், ஜப்பானின் முதல் தொழிலாளர் இதழான ரோடா செகாய் (தொழிலாளர் உலகம்) என்ற பத்திரிகையை நிறுவினார். 1900இல் சோசலிஸ்ட் உறுப்பினர்களுடன் நட்பு கொண்ட இவர், 1907 இல் சோசலிச இயக்கத்தில் சேர்ந்து, பத்திரிகைத் தொழிலைத் தொடர்ந்தார்.

1912 இல் டோக்கியோ ஸ்ட்ரீட்கார் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதற்காக சென் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1914 இல் சென் கட்டயாமா ஜப்பானை விட்டு வெளியேற வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்ட பின் ஏழ்மை அவரை சூழ்ந்தது. அதனால் அமெரிக்காவில் குடியேறிய சென், 1916 ஆம் ஆண்டு டச்சு சோசலிஸ்ட் உறுப்பினர்களால் நியூயார்க் அழைக்கப்பட்டார்.

பின்பு கலிபோர்னியா சென்ற சென், 1917-18 இல் போல்ஷிவிக் புரட்சியின் வெற்றியால் தீவிர கம்யூனிஸ்ட் ஆனார். சில நாட்களில், அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவ உதவினார். 1920 ஜனவரியில் நடந்த பால்மர் தாக்குதலிலிருந்து தப்பிய சென், 1921 மார்ச் மாதம் கம்யூனிஸ்ட்  பணிக்காக மெக்சிகோ சென்றார். அதன்பின், கம்யூனிஸ்ட் அகிலத்தில் உயர் பதவியை ஏற்பதற்காக மாஸ்கோவிற்கு அழைக்கப்பட்டார்.

ஜப்பானிய கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பற்றிய அவரது அறிவு மிகவும் பரந்தது. நன்கு அறியப்பட்ட புரட்சியாளராகவும் திகழ்ந்தார். ஜப்பானிய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவராகவும் போற்றப்பட்ட சென் கட்டயாமா, 1933 நவம்பர் 5 அன்று காலமானார். இன்று தோழர் சென் கட்டயாமா நினைவு தினம்