தியாகத்தில் தோய்ந்த கம்யூ னிஸ்ட் இயக்கம் மகத்தான பல தலைவர்களைத் தந்துள் ளது. அவர்களில் மின்னலாய் மறை யாமல் நமது நெஞ்சங்களில் சுடர் ஒளி வீசும் தலைவர் பாப்பா உமாநாத்.
தனலட்சுமி என்ற பாப்பா சிறு குழந்தையாக தவழ்ந்ததே பொன்மலை சங்கத் திடலில். சங்கத் திடலை ஒட்டிய செக்கடி என்ற சிறு பகுதியில் பாப்பாவின் அன்னை அலமேலு அம்மையார் இட்லிக் கடை நடத்தி வந்தார். சங்க அலுவலகத்தி ற்கு வரும் தலைவர்கள் எம்.கல்யாண சுந்தரம், கே.அனந்தநம்பியார், ஜீவா போன்ற பல தலைவர்களுக்கு உண வுத்தட்டை பாப்பா தனது தளிர்க் கரங்களில் ஏந்தி வந்து பரிமாறுவார். ‘அன்னமிட்ட தெய்வமணிக் கைகள்’ என்பது பாரதியின் மணிவாசகம். சிறுமி தனலெட்சுமியை தலைவர்கள் ‘பாப்பா’ என்று அன்போடு அழைப்பார்கள். அந்த செல்லப் பெயர் காலந்தோறும் பூத்துக் குலுங்கியது.
மரண ஓலங்களுக்கிடையே தண்ணீர்க் குவளையுடன்
1946ஆம் ஆண்டு தென்னகத்தைக் குலுக்கிய ரயில்வே தொழிலாளர் போ ராட்டம் வெடித்தது. அடக்குமுறையின் உச்சகட்டமாக செப்டம்பர் 5ஆம் தேதி காலை சங்கத் திடலை ஹாரிசன் தலை மையிலான போலீஸ் படைசுற்றி வளைத்தது. மைதானத்தில் கூடியிருந்த தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தியது. சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. 5 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம டைந்தனர். சங்கத்தின் பொதுச் செய லாளர் கே.அனந்த நம்பியாரை தரையில் இழுத்துப் போட்டு, அடித்து நொறுக்கி, ரத்த வெள்ளத்தில் கிடத்தினர். மரண ஓலங்களுக்கு இடையில் துணிவுடன் கையில் தண்ணீர்க் குவளையுடன் வலம் வந்தவர் பாப்பா. சங்கத் திடலில் சிந்திய ரத்தம் பாப்பா நெஞ்சில் நெருப்பாய் எரிந்தது. எதற்கும் அஞ்சி டாத நெஞ்சுரத்தை அவருக்குத் தந்தது. துப்பாக்கிச்சூடு நடத்தியவண்ணம் சங்கத்திடலில் போலீஸ் பட்டாளம் நுழைந்தபோது வீர நடைபோட்டு நுழைவாயில் கதவை பூட்டியவர் செந்தொண்டர் படை கேப்டன் கல்யாணி. அவர் பாப்பாவின் சகோத ரர். மற்றொருவர் கேப்டன் தியாகராஜன்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு முன்னதாக ரயில்வே நிர்வாகம் பல அடக்குமுறைகளைக் கையாண்டது. குடி யிருப்புகளுக்கு மின்சாரத்தை நிறுத்தி யது. குடிநீர் விநியோகம் துண்டிக்கப் பட்டது. அப்போது கையில் செங்கொடி ஏந்தி தாய்மார்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இருந்த பொன்மலை மலைக் கேணிக்கு தண்ணீர் எடுக்கச் செல்வார்கள். அந்த செங்கொடி அணி வகுப்பில் முன்னின்றவர் தோழர் பாப்பா. விடுதலைப் போராட்டத்தில் மதுரையில் கைதாகி, நிபந்தனை ஜாமீனில் அன்னை ஜானகி அம்மாள் பொன்மலை வந்தார். அவருடன் இணைந்து மாதர் சங்கப் பணிகளிலும், போராட்டங்களிலும் பாப்பா ஈடுபட்டார்.
சிறைக் கொட்டடியில்...
1948ஆம் ஆண்டுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. தலைவர்கள் வேட்டையாடப்பட்டனர். அலமேலு அம்மையார் லட்சுமி என்ற பெயரில் பாப்பாவுடன் சென்னையில் குடியமர்த்தப்பட்டார். அன்னை லட்சுமி யின் வீடு தலைமறைவாய் செயல்பட்ட தலைவர்களுக்கு புகலிடமாக இருந்தது. 1950இல் தலைவர்கள் ஆர்.உமாநாத், சிவகிரி பாண்டியன், அன்னை லட்சுமி, பாப்பா உள்ளிட்டோர் கைது செய்யப் பட்டு சைதாப்பேட்டை சிறையில் அடைக் கப்பட்டனர். கடும் அடக்குமுறைகளை எதிர்கொண்டனர். அடக்குமுறைக ளுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட் டம் துவங்கியது. அன்னை லட்சுமியும், பாப்பாவும் தனித் தனி கொட்டடியில் அடைக்கப்பட்டனர். உருக்குப் போன்ற உறுதியுடன் உண்ணாவிரதம் தொடர்ந்த வீரமங்கை அன்னை லட்சுமியின் உயிர் 23-ஆவது நாளில் பிரிந்தது. அன்னை யின் முகத்தையாவது காட்டுங்கள் என்று சிறைக் கம்பிகளுக்கு பின்னாலிருந்து பாப்பா கதறினார். ‘கட்சியை விட்டு விலகு’ என்று கடிதம் தருமாறு அரக்கக்கூட்டம் மிரட்டியது. தனது உயிரை விட பாட்டாளி வர்க்க கட்சி நலனே முக்கியம் என்று குர லெழுப்பி அதிகாரிகளை விரட்டினார் பாப்பா.
கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீங்கிய பின் பொன்மலை சங்கத்திட லின் கதவுகள் திறக்கப்பட்டன. தொழி லாளர்கள் மீண்டும் வெள்ளமெனக் குவிந்தனர். சங்கத்திடலில் நெடிய கொடி மரத்தில் செங்கொடி மீண்டும் பட்டொளி வீசிப் பறந்தது. பெற்ற தாயைப் பறி கொடுத்த தோழர் பாப்பா சங்கத் திடலில் மீண்டும் பணியாற்ற வந்தார். கட்சிப் பணிகளிலும், சங்கப் பணிகளி லும் பம்பரம் போன்று சுழன்று பணியாற்றி னார். பொன்மலை பணிமனையில் சுமார் 8 ஆயிரம் பேர் பணியாற்றினர். சம்பள தினத்தன்று பணிமனையின் ஆர்மரி கேட்டில் செங்கொடியோடு தோழர்கள் நிற்பார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு நிதி தாருங்கள் என்று பாப்பா உரக்க குரல் எழுப்புவார். தொழிலாளர்கள் புன்முறுவ லுடன் கட்சிக்கு நிதி அளிப்பார்கள்.
1952ஆம் ஆண்டு தோழர் பாப்பாவு க்கு திருமணம். போர்க்களத்திலும், சிறைக் கூட சித்ரவதையிலும் அவரோடு இணைந்து நின்ற தோழர் உமாநாத் மண மகன். திருமணம் சங்கத்திடல் அரு கிலிருந்த வ.உ.சி. திடலில். மேடையில் கம்யூனிஸ்ட் தலைவர்களோடு தந்தை பெரியார் அமர்ந்திருந்தார். ஆயிரக்க ணக்கான தொழிலாளர்கள் வாழ்த்து முழக்கங்களுடன் நடந்த திருமணம் அது.
இடைவிடாத இயக்கம் அயராத போராட்டம்
பொது வாழ்க்கையில் புடம் போட்டு எடுக்கப்பட்ட தோழர் பாப்பாவும், உமா நாத்தும் சந்தித்த போர்க்களங்கள் ஏராளம் ஏராளம். 1953ஆம் ஆண்டு குடி யாத்தம் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் காமரா சர் போட்டியிட்டார். கம்யூனிஸ்ட் கட்சி தோழர் வி.கே.கோதண்டராமனை நிறுத்தியது. 6 மாத கைக்குழந்தையு டன் (நேத்ராவதி) தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாப்பா பங்கேற்றார். போக்கு வரத்து வசதி இல்லாத காலங்களிலும் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் எண்ணற்ற பகுதிகளுக்குச் சென்று அவர் பிரச்சாரம் செய்துள்ளார். தந்தை பெரியார் வசித்த திருச்சி புதூர் பகுதியில் இருந்த உறையூரில் வாடகை வீட்டில் பாப்பா குடும்பம் வசித்தது. திருச்சிக்கு வரும் தலைவர்கள் ஜீவா, ஏ.கே.கோபாலன், பி.ராமமூர்த்தி முதல் பாவலர் வரதராஜன் வரை அனை வருக்கும் அவரது வீட்டில்தான் உணவு. வீட்டின் நடுக்கூடத்தில் மண்ணெண் ணெய் ஸ்டவ் வைத்து இட்லி, தோசை சுட்டு இன்முகத்துடன் பரிமாறுவார்.
பொன்மலை துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்த தொழிலாளி கிருஷ்ண மூர்த்தியின் தாய் பங்காரு அம்மாள். அத்தை என்று அழைக்கப்பட்ட அவருக்கு தனது வீட்டிலேயே தோழர் பாப்பா அடைக்கலம் தந்தார். தமிழகத்தில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பல பெண்கள் பாப்பா வீடு தேடி வந்து கதறி அழுவார்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்காக இறுதிவரை நின்று போராடி வெற்றி பெற்ற நிகழ்வுகள் ஏராளம். சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த பிரேமானந்தாவுக்கு ஆயுள் தண்டனை பெற போராடினார். சிதம்பரம் காவல் நிலையத்தில் கணவனைப் பறி கொடுத்து, பாலியல் கொடுமைக்கு ஆளானவர் பத்மினி. அவருக்கு மறுமணம் செய்து வைத்து, அரசு வேலையும் வாங்கித் தர உதவி செய்தார். தோழர் பாப்பா உமாநாத் தலைமையில் மாதர் சங்கம் சார்பில் நீதி கேட்டுப் போராடிய நிகழ்வுகள் ஏராளம். 1989ஆம் ஆண்டு திருவெறும்பூர் சட்ட மன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக் கப்பட்டார். சட்டமன்றத்தில் கணீரென ஒலிக்கும் அவரது குரலை முதல்வர் கலைஞர் கேட்டு ரசிப்பார்.
சுர்ஜித்தின் பாராட்டு
தோழர் பாப்பாவின் நெடிய போராட் டப் பயணம் தமிழக கம்யூனிஸ்ட் இயக் கத்தின் பெருமைக்குரிய வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது. சிறு வயதில் துப்பாக்கி குண்டுகளுக்கு மத்தியில் மூவர்ணக் கொடியை ஏற்றி சிறை சென்ற பஞ்சால சிங்கம் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் கோவையில் 2002-இல் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்தார். சிறுமியாக இருந்த போது சங்கத்திடலில் குண்டு மழை பொழிவுக்கு மத்தியில் செயல்பட்ட தோழர் பாப்பா மேடையில். அவர் அருகில் ஆர்.உமாநாத், என்.சங்கரய்யா, என்.வரத ராஜன் உள்ளிட்டோர். சுர்ஜித் உரை நிகழ்த்தும் போது பாப்பா உமாநாத் குடும்பத்தினரின் தியாக வரலாற்றை நெகிழ்வுடன் நினைவு கூர்ந்தார். அப்போது மாநாட்டு அரங்கமே கரவொலி களால் அதிர்ந்தது.
தோழர் பாப்பா உமாநாத் ரயில்வே தொழிற்சங்கத்தின் ‘தொழிலரசு’ ஏட்டின் உதவி ஆசிரியராக பணியாற்றியவர். அவர் பணியாற்றிய அதே அறையில் 7 ஆண்டு காலம் நானும் அமர்ந்து பணி யாற்றும் பேறு பெற்றேன். அவர் பங்கேற்ற பல பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. 2010ஆம் ஆண்டு தீக்கதிர் ஏட்டின் திருச்சி பதிப்பு பொன்மலை தியாகிகள் தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி துவக்கப்பட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் உற்சாகத்துடன் தோழர் பாப்பா அந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். நம்மிடமிருந்து பிரியாவிடை பெறுவதற்கு முன்பு அவர் பங்கேற்ற பொது நிகழ்வு அது.
பொன்மலை துப்பாக்கிச் சூட்டில் பலியான 5 தியாகிகளின் நினைவுத்தூண் சங்கத்திடலில் கம்பீரமாக நிற்கிறது. அந்த நினைவுத் தூண் அருகில் தோழர் பாப்பாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அருகில் தலைவர்கள் கே.அனந்த நம்பியார், ஆர்.உமாநாத் ஆகியோர் மீளாத் துயில் கொள்ளும் கல்லறைகளும் உள்ளன.
பொன்மலை மண்ணின் வீர காவியம்
தென்னகத்தின் ஜாலியன் வாலாபாக் போல திகழும் பொன்மலை மண்ணின் வீரப் புதல்வர்கள் சிந்திய ரத்தம் வீண் போகவில்லை. அவர்கள் ஏற்றி வைத்த போராட்டத் தீப்பந்தம் தான் இன்றும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் இல்லங்களில் உரிமைகளாக, சலுகைகளாக ஒளி வீசிக் கொண்டிருக்கி றது. தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிஸ்ட் பேரியக்கம்.
1947ஆம் ஆண்டு நாடு பிரிவினை செய்யப்பட்டபோது மதவெறியின் கோரத் தாண்டவத்தை நாடு கண்டது. இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். கலவரத்தால் லாகூருக்கும் பஞ்சாபுக்கும் இடையில் ரயில் போக்குவரத்து நின்றது. பல்லாயி ரக்கணக்கான மக்கள் கால்நடையாக இடம் பெயர்ந்தனர். வழியிலேயே பலர் மாண்டனர். அப்போது பிரதமர் நேரு வின் அழைப்பை ஏற்று பொன்மலை தொழிற்சங்கம் 22 ரயில் இன்ஜின் டிரைவர்களை தில்லிக்கு அனுப்பி வைத்தது.
அவர்கள் துணிவுடன் ரயில்களை இயக்கியதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டனர். விடுதலைப் போராட்டத்திலும், சுதந்திர இந்தியா விலும் பாட்டாளி வர்க்கத்தின் வீரம் செறிந்த பங்களிப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இன்று கார்ப்பரேட் நிறுவனங்க ளின் பினாமியாகச் செயல்படும் ஒன்றிய ஆட்சியாளர்களை எதிர்த்த பெரும் போரில் பாட்டாளிகளும் விவசாயிகளும் கை கோர்த்து நிற்கின்றனர். ஜனநாயக வாழ்வு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் பாப்பா உமாநாத் போன்ற தலைவர்களின் வீர காவியம் தேசபக்த சக்திகளுக்கு புத்துயிர் ஊட்டும் என்பதில் ஐயமில்லை.
இன்று (டிசம்பர் 17) தோழர் பாப்பா உமாநாத் நினைவு நாள்