articles

மார்க்ஸ் எழுதிய முதல் பக்கத் தொடர்ச்சி

      கவசமிடப்பட்ட ஒரு கைத்தடியே அது. இதற்கும் சோழ அரசர்களின் செங்கோலுக்கும் சம்பந்தமில்லை. சோழ அரசர்கள் தங்கள் ஆட்சியை கலைத்துவிட்டு போகும்போது ஆதீனத்திடம் வந்து செங்கோலை ஒப்படைத்து எதிர்காலத்தில் நேரு ஆட்சிப்பொறுப்பை ஏற்கும்போது இதைக் கொடுங்கள் என்று ஒப்படைந்த பாரம்பரியம் மிக்கது என்பது போல் கதை கட்டப்பட்டுவிட்டது.  

ஆவிகளை உதவிக்கு அழைத்தல் மார்க்ஸ் எழுதுகிறார், “

   …புரட்சிகரமான நெருக்கடி காலங்களின் போது அவர்கள் கவலையோடு கடந்த காலத்திய ஆவிகளை தங்களுடைய உதவிக்கு கூப்பிடுகிறார்கள். அந்த ஆவிகளிடமிருந்து பெயர்களையும், போர் முழக்கங்களையும், உடைகளையும் கடன் வாங்குகிறார்கள். உலக வரலாற்றின் புதிய காட்சியை மிகப் பழமையான மாறுவேடத்திலும் இரவல்மொழியிலும் காட்டுகிறார்கள். இப்படித்தான் மார்ட்டின் லூதர் திருத்தொண்டர் பாலின் முகமூடியை அணிந்து கொண்டார். 1789-1814ஆம் வருடங்களில் நடைபெற்ற புரட்சி தன்னை ரோமானியக் குடியரசென்றும், ரோமானியப் பேரரசென்றும் மாறி மாறி ஒப்பனை செய்து கொண்டிருக்கிறது”.  

   மார்க்ஸ் இன்று எழுதியிருந்தால் மோடியின் செயலையும் சேர்த்து செங்கோலை தூக்கிக்கொண்டு தன்னை டெல்லி தர்பாரின் சக்கரவர்த்தி என்று பறைசாற்றிக் கொண்டார் என்றெல்லாம் எழுதியிருப்பார். சரி இந்தக் கூத்தெல்லாம் எதற்கு நடக்கிறது?

   பிரஞ்சுப்புரட்சிக்குப் பிறகு அரசதிகாரத்தை கைப்பற்றிய முதலாளி வர்க்கம் தன்னுடைய வர்க்க நலனை அரசமைப்பின் மூலமாக முன்னெடுத்துச் செல்ல என்ன கூத்தெல்லாம் செய்தது என்பதை இந்நூலில் விவரித்திருப்பார். லூயி போனபர்ட் என்ற அரசவம்ச கோமாளி தன்னை மூன்றாம் நெப்போலியன் என்று அழைத்துக் கொண்டான். பிரஞ்சுப் புரட்சிக்குப் பின் குடியரசுத் தலைவரான முதல் நெப்போலியன் பல நாடுகள் மீது போர் தொடுத்ததால் மாவீரன் என்று தம்பட்டமடிக்கப்பட்டது. அன்றையதினம் நிகழ்ந்திருந்த அரசியல் புரட்சிகளில் முதலாளித்துவ நலனை முன்னிருத்த அண்டை நாடுகளின் மீது ஓயாதுபோர் தொடுத்த நெப்போலியன் தோல்வியடைந்து சிறைபிடிக்கப்பட்டு மத்திய தரைக்கடலில் உள்ள ஒரு தீவில் சிறை வைக்கப்பட்டு அங்கேயே மாண்டான். அவனது மகன் இரண்டாம் நெப்போலியனும் ஆட்சிக்கு வரமுடியாமல் காலாவதியாகிட்டான்.  

      காலாவதியாகிப் போன நெப்போலிய வீரத்தை தூக்கிப்பிடித்து இரண்டாம் நொப்போலியனின் நான்குவிட்ட சகோதாரான தன்னை மூன்றாம் நெப்போலியன் என்று அழைத்துக் கொண்டு 1848ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விவசாய வர்க்கத்தின் ஆதரவுடன் புதிய அரசியல் சட்ட அடிப்படையில் தேர்தல் மூலம் ஆட்சியைக் கைப்பற்றினான். புதிய அரசியல் சட்டப்படி அதிபரானவர் நான்காண்டு காலம் பதவி வகிக்கலாம். பாராளுமன்றத்திற்கு கட்டுப்பட்டவர். ஒருமுறைக்குமேல் பதவி வகிக்க முடியாது.கோமாளி நெப்போலியனுக்கோ நான்காண்டு கழித்து பதவியை துறக்க மனம் இல்லை. அந்த நான்காண்டுகளில் பாராளுமன்றத்தை இழிவு செய்து 1851இல் பாராளுமன்றத்தை தூக்கியெறிந்து விட்டு தன்னை நிரந்தர அதிபர் என்று அறிவித்துக் கொண்டான். உதித்தெழுந்து வந்த முதலாளி வர்க்கத்திற்கோ கோமாளி நெப்போலியனே அவர்களின் நலனைக்காப்பவன் என்ற ஏற்பாட்டிற்குள் வந்துவிட்டனர். பிறகென்ன பாராளுமன்றமாம் மக்களதிகாரமாம். எல்லாம் குப்பைத்தொட்டிக்குப் போனது. அடுத்த இருபது ஆண்டுகள் தேர்தல் இல்லாமலே அதிபராக பொழுதைக் கழித்தான்.

 யார் ஆதரவில் யார்?

     பிரஞ்சு முதலாளி வர்க்கத்திற்கு கோமாளி லூயி போனபர்ட் தேவைப்பட்டது போல் இந்திய முதலாளி வர்க்கத்திற்கு மோடி தேவைப்படுகிறது. கோமாளி லூயிபோனபர்ட்டோ பாராளுமன்றத்திற்கே அதிகாரம் என்ற குடியரசுவாத முழக்கத்தில் நடைபெற்ற பிரஞ்சுப்புரட்சியின் சாராம்சத்தை மறுதலித்து தனக்கே அதிகாரம் என்பதை முதலாளி வர்க்கத்தின் தயவில் அடைந்துவிட்டான். மெல்ல மெல்ல பாராளுமன்றத்தை நீர்த்துப்போகச் செய்து அதை ஒரு பொருட்டில்லா பொருளாக மாற்றி இறுதியில் குப்பைத் தொட்டியில் வீசினான். இந்தியாவும் இப்படிப்பட்ட நிகழ்வுப்போக்கில் சென்றுகொண்டிருக்கிறது.  

    இப்பொழுது நமக்கு எழும் கேள்வியெல்லாம் லூயி போனபர்ட்டின் தயவில் முதலாளிவர்க்கம் இருந்ததா அல்லது முதலாளிவர்க்கத்தின் தயவில் லூயி போனபர்ட் இருந்தானா? இக்கேள்விக்கான விடையை தெளிவாக இந்த நூலில் மார்க்ஸ் கூறுகிறார். முதலாளிவர்க்கம் நெருக்கடியை சந்தித்து இதரவர்க்கங்களின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் போகும் போதெல்லாம் ஜனநாயகம் பேசாது, குடியரசுவாதம் பேசாது, இதுபோன்ற சர்வாதிகாரிகளை உருவாக்கும். 1851இல் பிரான்சில் நடந்ததை அதற்கு முந்தைய பத்தாண்டுகால பொருளாதார வளர்ச்சிப்போக்கையும் அதில் திணறிக் கொண்டிருந்த முதலாளி வர்க்க நிலையையும் இந்நூலில் எடுத்துரைக்கிறார். மற்றெல்லா நாடுகளைவிட பிரான்ஸில்தான் வர்க்கப்போராட்டம் நடப்பது அதிக வெளிப்படையாகத் தெரிவதால் அவருடைய அரசியல் ஆய்வுகள் எல்லாம் பிரஞ்சு அரசியலை மையமாக வைத்து செய்யப்பட்டது.

    மார்க்ஸ் எழுதுகிறார், “போனபர்ட் தன்னுடைய நிலைமையின் முரண் பட்ட தேவைகளினால் துரத்தப்பட்டு அதே சமயத்தில் நெப்போலியனின் பதிலாள் என்ற முறையில் பொதுமக்களின் கவனத்தை தன்னிடமே நிலை யாக வைத்திருக்க வேண்டும் என்ற தேவையினால் ஒரு மந்திரவாதியைப் போல் ஆச்சரியமேற்படுத்தக்கூடிய காரியங்களை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார்”. சட்டையில்லாச் சாமியார்கள் முன்னால் அந்த கைத்தடியை வைத்துகொண்டு தரையில் விழுந்து விழுந்து வணங்கி மோடி நடத்திய நாடகம் லூயிபோனபர்ட்டை தூக்கியடித்துவிட்டது. லூயி போனபர்ட் பாரிஸ் நகரத்து வரலாற்றுச் சின்னமான வெண்டோம் ஸ்தூபியின் உச்சியில் நெப்போலியனின் வெண்கலச் சிலையை நிறுவுதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த இறுதி வாக்கியத்துடன் மார்க்ஸ் நூலை முடிக்கிறார், “அவர் சக்கரவர்த்தி மகுடம் சூட்டப்படும் பொழுது ஸ்தூபியின் உச்சியில்இருக்கும் அந்த வெண்கலச்சிலை உச்சியிலிருந்து கீழே விழுந்து நொறுங்கிப்போகும்”. இதன் மூலம் வர்க்கப்போராட்ட மேகங்கள் பிரான்ஸை சூழ்ந்திருக்கிறது என்பதையும் அது இன்னொரு அரசியல்புரட்சிக்கு வித்திடும் என்று கூறுகிறார்.நமது நாட்டு நிகழ்ச்சியை பார்த்திருந்தால், உம்மிடி பங்காரு கடையில் செய்த அந்த செங்கோல் இன்று பாராளுமன்றத்தின் மையத்தில் நடப்பட்டுவிடட்து. மீண்டும் அது அருங்காட்சியகத்துக்குச் செல்லும் என்று இன்று எழுதியிருப்பார்.

     1851இல் மார்க்ஸ் கணித்தது 1871 பாரிஸ் கம்யூன் மூலமாக நடந்தேறியது.  ஆட்சியைக் கைப்பற்றிய தொழிலாளி வர்க்கமானது நெபோலியன் என்பவன் பொய்கள் மூலம் மகிமைப்படுத்தப்பட்ட ஈவிரக்கமற்ற கொடுங்கோலன் என்று அறிவித்து வெண்டோம் ஸ்தூபியின் உச்சியிலிருந்த நெப்போலியன் சிலையை எடுத்து ஆற்றில் வீசியது. என்றாலும், இன்று அதே இடத்தில் மீண்டும் நெப்போலியன் சிலை.வர்க்கப் போராட்டம் என்பது முதலாளிவர்க்கம் மட்டுமல்ல அனைத்து வர்க்கங்களும் முழுவதுமாக ஒழியும் வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்பதை பறைசாற்றும் சம்பவம் இது. வர்க்கப்போராட்ட களத்தில் லூயி போனபர்ட் முதல் மோடிவரை பலர் உருவாவார்கள். இவர்கள் நிரந்தரமாக வரலாற்றின் குப்பைத் தொட்டிக்கு போவார்கள் என்பது நிச்சயம்.