articles

முஸ்லிம் மக்கள் தொகை கூடிவிட்டதாக ஆர்எஸ்எஸ் ஒப்பாரி : உண்மை என்ன?

ஒன்றிய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட் உரையின்போது, “வேகமாக அதிகரித்துக்கொண்டிருக்கும் மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் மக்கள்தொகை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்திட” ஓர் உயர் மட்டக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்துள் ளார். ஒரு பட்ஜெட் உரையில் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருப்பதே ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கி றது. அரசாங்கம் மக்கள் தொகை வளர்ச்சியை ஆய்வு  செய்திட ஒரு குழுவை அமைப்பதன் அடிப்படையில்  ஒரு புதிய மக்கள்தொகைக் கொள்கையை ஏற் படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால் அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குடியர சுத் தலைவர் உரையிலேயே குறிப்பிட்டிருக்க வேண்டும்.

“வேகமான மக்கள் தொகை வளர்ச்சி” என்பதே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. இதை அமைப்பதற்கான ஓர் உயர்மட்டக்குழுவின் நோக்க மும் தெளிவற்றிருக்கிறது. மேலும், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாதிருக்கும் நிலையில், இவ்வாறு அமைக்கப்படும் குழு எந்தத் தரவினைச் சார்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்?  

மோகன் பகவத் - ஆர்எஸ்எஸ் கூப்பாடு
மக்கள் தொகைக் கட்டுப்பாடு மற்றும் கொள்கை குறித்து, இத்தகைய ஒரு நடவடிக்கை எடுக்கப்படு வதன் பின்னணியைப் பார்க்க வேண்டியிருக்கிறது. 2022 அக்டோபரில் விஜயதசமி நாளன்று உரை நிகழ்த்துகையில், ஆர்எஸ்எஸ்-இன் தலைவரான மோகன் பகவத், “அனைவருக்கும் சமமாகப் பொருந்தக்கூடிய” ஒரு மக்கள்தொகைக் கட்டுப்பாடு சட்டம் ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். “மத அடிப்படையிலான மக்கள்தொகை சமமற்ற நிலை” இருப்பதாகவும், அதன் ஆபத்துகள் குறித்தும் மோகன் பகவத் கூறியிருந்தார்.

“இதனைக் கண்டுகொள்ளாவிட்டால் இது கிழக்கு திமோர், தெற்கு சூடான், கொசாவோ போன்று புதிய நாடுகளின் உரு வாக்கத்திற்கு வழிவகுக்கலாம்” என்றும் கூறியி ருந்தார். அவர் தன்னுடைய உரையை முடிக்கும் போது, “மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுடன், மதத்தின் அடிப்படையில் மக்கள்தொகை சமநிலை என்பதும் ஒரு முக்கிய விஷயம்” என்றும், “இதனை உதாசீனம் செய்ய முடியாது” என்றும் கூறியிருந்தார். மோகன் பகவத்தின் உரையும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் வெளியிடப்பட்டுவரும் கருத்துகளும்,

எல்லைகளுக்கு அப்பாலிருந்துவந்த ஊடுருவல் காரணமாகவும், கட்டாய மத மாற்றங்கள் காரண மாகவும் உருவாக்கப்பட்ட “மத ஏற்றத்தாழ்வு” குறித்து தொடர்ந்து கூப்பாடு போட்டு வருகின்றன. மோகன் பகவத் உரையில் மேலும், 1951க்கும் 2011க்கும் இடையே “இந்திய வம்சாவளி”யைச் சேர்ந்த மதங்களைச்  சேர்ந்தவர்களின் மக்கள்தொகை 88 விழுக்காட்டி லிருந்து 83.8 விழுக்காடாகக் குறைந்துவிட்டதாகவும், 9.8 விழுக்காடாக இருந்த முஸ்லிம்களின் மக்கள் தொகை 14.22 விழுக்காடாக உயர்ந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் ஆர்எஸ்எஸ் இயக்கமானது, எல்லைப் பகுதிகளில் நடைபெற்றுவரும் மதமாற்றங்களும், ஊடுருவல்களும் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் கலாச்சார அடையாளத்திற்கு ஓர் அச்சுறுத்த லாக உருவாகிக்கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து பரப்பி வருகிறது.

ஆர்எஸ்எஸ்-எழுப்பும் இந்தப் பிரச்சனைகள் தான், இப்போது மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் மக்கள்தொகை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய உயர் அதிகாரம் கொண்ட குழுவை அறிவிக்க வழி வகுத்துள்ளது. இது திடீரென உதித்த திட்டம் அல்ல என்பது தெளிவாகிறது. இந்த உயர் அதிகாரக் குழுவின் உறுப்பினர்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மேலும் இக்குழு மக்களவைத் தேர்தலுக்கு முன் அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் எதிர்பார்க்க முடி யாது. புதிய மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக் கொள் கையை உருவாக்குவது என்பது அநேகமாக பாஜக மூன்றாம் முறையாக ஆட்சி அமைத்தால் அதில் நிறைவேற்றப்படுவதற்கான திட்டமாகவே ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.

ஆர்எஸ்எஸ் பிரச்சாரம் உண்மையா?
இந்துக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்குவ தற்காக, முஸ்லிம்கள் மக்கள்தொகை அதிகரித்துக் கொண்டிருப்பதாக ஆர்எஸ்எஸ் மேற்கொண்டுள்ள பிரச்சாரத்திற்கு அறிவியல் அடிப்படையில் எவ்வித மான தரவும் கிடையாது. 2019-21இல் எடுக்கப்பட்ட தேசிய குடும்ப சுகாதார சர்வேயின்படி, இந்து பெண் மணிக்கும் முஸ்லிம் பெண்மணிக்கும் கருவுறுதலில் உள்ள வித்தியாசம் வெறும் 0.42 மட்டுமேயாகும். அதாவது ஓர் இந்து பெண்மணி 1.94 குழந்தை பெறு கிறார் என்றால், ஒரு முஸ்லிம் பெண்மணி 2.36 குழந்தை பெறுகிறார் என்று அந்த ஆய்வு கூறி யிருக்கிறது. 

முஸ்லிம் பெண்கள் கருவுறுதல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 1990-92இல் எடுக்கப் பட்ட முதல் தேசிய குடும்ப சுகாதார சர்வேயின்போது 3.39ஆக இருந்தது, இப்போது 2.36ஆக குறைந்தி ருக்கிறது. கடந்த இருபதாண்டுகளில் இந்துக்களின் கருவுறுதல் விகிதம் 30 விழுக்காடு அளவிற்கும், முஸ்லிம்கள் கருவுறுதல் விகிதம் 35 விழுக்காடு அள விற்கும் வீழ்ச்சி அடைந்துள்ளது. உண்மையில், கடந்த  இருபதாண்டுகளில் இந்துக்களைவிட முஸ்லிம்கள் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் வீழ்ச்சி அடைந்தி ருப்பதே அதிகமாகும். அநேகமாக 2030வாக்கில் கரு வுறுதல் விகிதம் இந்து-முஸ்லிம்களுக்கு இடையே அநேகமாக ஒரே விகிதமாக மாறக்கூடும்.  

இந்துத்துவவாதிகளின் முரண்பாடான யோசனைகள்
மக்கள்தொகைக் கட்டுப்பாடு மற்றும் புதிய மக்கள் தொகைக் கொள்கை பற்றிய பாஜக-ஆர்எஸ்எஸ் யோசனை முரண்பாடான தூண்டுதல்களில் சிக்கி யுள்ளது. ஒருபுறம், இந்துத்துவவாதிகள் மக்கள் தொகை வளர்ச்சியை சரிபார்க்க விரும்புகிறார்கள். 2019இல் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றபின் ஆற்றிய சுதந்திர தின உரையின் போது, “மக்கள்தொகை வெடிப்பு” (“population ex plosion”) கவலைக்குரியதாக இருக்கிறது என்றார். அதே சமயத்தில், ஆர்எஸ்எஸ் இயக்கம், “மத ஏற்றத் தாழ்வை” கட்டுப்படுத்திட முஸ்லிம்கள் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை சரிபார்க்க வேண்டியது அவசியம் உள்ளது என்கிறது. குறிப்பாக, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் வங்கதேச எல்லையில் உள்ள பகுதிகளில் “மக்கள்தொகை மாற்றம்” (“demographic change”) குறித்து ‘கவலை’ கொண்டிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில், புதிய மக்கள்தொகைக் கொள்கை தொடர்பாக முன்னோடியாக ஒரு திட்டம் 2021இல் ஆதித்யநாத் அரசாங்கத்தால் அறி விக்கப்பட்டது. ‘2021-2030 மக்கள்தொகை கொள்கை’ (‘Population Policy 2021-2030’) என்னும் ஓர் ஆவணம் வெளியிடப்பட்டது. அதன்படி, “பல்வேறு சமூகங்களுக்கிடையில் மக்கள்தொகை சமநிலை யை உத்தரவாதப்படுத்திட, முயற்சிகள் மேற் கொள்ளப்படும். குடும்பத்திற்கு இரு குழந்தைகள் என்பதை உத்தரவாதப்படுத்திட” ஆவணத்தில் ஊக்கத் தொகை முன்மொழியப்பட்டுள்ளது. அர சாங்கத் திட்டங்களில் முஸ்லிம் பயனாளிகள் என்று வரும்போது, அவை கண்டிப்பாக அமல்படுத்தப் படுவதை ஆதித்யநாத் அரசு கட்டாயப்படுத்தும் என்பதை எதிர்பார்த்திட முடியும்.

இந்துத்துவாவாதிகளின் உண்மையான பிரச்சனை வேகமாக அதிகரித்திடும் மக்கள்தொகை அல்ல. ஊடுருவல் மூலமாகவும், மத மாற்றங்கள் மூல மாகவும் முஸ்லிம்களின் உயர் வளர்ச்சி விகிதமே அவர்களை அலைக்கழித்திடும் பிரச்சனையாகும். அதனால்தான் அவர்கள் இந்துத்துவா அடிப்படை யிலான மக்கள்தொகைக் கொள்கைக்காக செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்களைக்  குறி வைக்கும் முகமூடி
2021 இல் நடைபெறவிருந்த; மற்றும் 2022 அல்லது 2023இல் கோவிட் தொற்றுக்குப் பிறகு நடத்தப்பட வேண்டிய ஐந்தாண்டு மக்கள் தொகை கணக்கெ டுப்பை மோடி அரசாங்கம் ஏன் நடத்தவில்லை என்பதையும் இது ஓரளவு விளக்குகிறது. ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்கள், ‘ஊடுருவி வந்தவர்கள்?’ நிலங்கள் வாங்குவதைத் தடுக்கவும், குடியுரிமைகள் பெறுவதைத் தடுக்கவும் வகைசெய்யும் விதத்தில் தேசியக் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறது. தேசிய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்டம் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகும்.

குடியுரிமை (திருத்தச்)சட்டம் நிறைவேற்றப்பட்ட சமயத்தில், அரசாங்கமானது 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு புதுப்பிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.  

 ஆகையால், புதிய மக்கள் கட்டுப்பாட்டுக் கொள்கை என்கிற முகமூடியின்கீழ் முஸ்லிம் மக்கள் தொகை குறிவைக்கப்படுகிறது. தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் அதன் அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை மத அடை யாளத்தின் அடிப்படையில் குடியுரிமைக்கு கட்டுப் பாடுகளை விதித்திடவுள்ளன.

‘பாரதியரல்லாத’ மக்களைக் கட்டுப்படுத்தும் ஆர்எஸ்எஸ் திட்டத்தை அமலாக்குவதற்காக அறி விக்கப்பட்ட உயர் அதிகாரக் குழுவின் உருமறைப்பு நோக்கம் இதுதான்.

பிப்ரவரி 14, 2024,
தமிழில்: ச.வீரமணி