இந்த ஆண்டு - 2022 ஸ்ரீஅரவிந்தர் பிறந்த நூற்றி ஐம்பதாவது ஆண்டு விழா. ஒத்துழையாமை இயக்கத்தின் போது மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டதன் நூறாவது ஆண்டு விழா, வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டதன் எண்பதாம் ஆண்டு நிறைவு விழா. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழா, நாட்டின் முதல் பொதுத் தேர்தலின் எழுபதாம் ஆண்டு நிறைவு விழா, இந்தியா-சீனா போரின் அறுபதாம் ஆண்டு விழா என்று ஆண்டுவிழா ஆண்டாக இருக்கப் போகிறது.
பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்தால் அவருக்கே உரித்தான ஆரவாரம் மற்றும் உற்சாகத்துடன் நிச்சயமாக இந்த ஆண்டு விழாக்கள் கொண்டாடப்படும். ஒவ்வொரு நிகழ்வும் நரேந்திர மோடியின் ஆளுமை வழிபாட்டை மேலும் மேம்படுத்தப் பயன்படுத்தப்படலாம். ஸ்ரீஅரவிந்தரின் ஆன்மீக மகத்துவம், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் போராட்டம், தியாகம், இந்திய ஜனநாயக மரபுகளின் ஆழமான, நீடித்திருக்கும் வேர்கள், வெளிநாட்டு எதிரியை எதிர்கொள்ளும் போது நமது துருப்புக்கள் குறைவான தயார் நிலையில் இருப்பதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்ற தன்னுடைய அரசாங்கத்தின் உறுதிப்பாடு ஆகியவற்றைப் பற்றி அந்த விழாக்களில் மிகவும் பரபரப்பான உரைகளை பிரதமர் நிச்சயம் நிகழ்த்தக் கூடும்.
ஆயினும் பிரதமரின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியில் இருந்து ஓர் ஆண்டுவிழா குறித்த நினைவுகள் நிச்சயமாக விடுபட்டிருக்கும் என்ற சந்தேகம் எனக்குள் இருக்கிறது. அது 2002 பிப்ரவரி-மார்ச் காலகட்டத்தில் குஜராத் கலவரத்தின் இருபதாம் ஆண்டு நினைவு நாள். 'கலவரங்கள்' என்ற வார்த்தை உண்மையில் ஒரு வெற்று வார்த்தையாகவே இருக்கும். அங்கே நடந்த வன்முறை முக்கியமாக முஸ்லீம்களை இலக்காகக் கொண்டிருந்ததால் அதை விளக்குகின்ற மிகவும் துல்லியமான சொல் 'படுகொலை' என்பதாகவே இருக்கும்.
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகளுக்கும், அந்த படுகொலைகளுக்கு பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக 1984ஆம் ஆண்டு நடத்தப்பட்ட படுகொலைகளுக்கும் இடையே சில குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் இருக்கின்றன. பிரதமர் இந்திரா காந்தியை 1984ஆம் ஆண்டு அவரது மெய்க்காப்பாளர்கள் படுகொலை செய்த செயல் அந்தக் கொலையுடன் எந்தவிதத் தொடர்புமில்லாத ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்களுக்கு எதிராக காட்டுமிராண்டித்தனமான பழிவாங்கல் நடவடிக்கைகளைத் தூண்டி விட்டது. சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் 2002ஆம் ஆண்டில் ஐம்பத்தொன்பது யாத்ரீகர்கள் கொல்லப்பட்ட செயல் அந்த தீ வைப்பு சம்பவத்தில் எந்தவிதத் தொடர்பும் இல்லாத ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லீம்களுக்கு எதிராக காட்டுமிராண்டித்தனமான பழிவாங்கல் நடவடிக்கைகளைத் தூண்டி விட்டது. அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், வன்முறை பரவுவதற்கும், கலவரம் சிறுபான்மையினரை குறிவைத்து இலக்கு வைக்கப்பட்ட படுகொலையாக மாறுவதற்கும் மாநில நிர்வாகம், ஆளும் கட்சி போன்றவை அனுமதித்து துணை நின்றிருந்தன. இரண்டு நிகழ்வுகளிலும், படுகொலை நடந்தபோது பொறுப்பில் இருந்த அரசியல்வாதிகள் - முறையே பிரதமர் ராஜீவ் காந்தி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி - அந்த வன்முறைகள் மூலமாக கணிசமான அரசியல் மூலதனத்தை தங்களுக்காக உருவாக்கிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றதன் மூலம், அவர்களின் பிரச்சாரங்கள் குறிப்பிட்டவர்களின் ஆதரவைப் பெறும் வகையில் சிறுபான்மையினருக்கு எதிரான அவதூறுகளால் நிரம்பியிருந்தன.
அந்த இரண்டு படுகொலைகளுக்கும் இடையே இருந்த சில ஒற்றுமைகளுடன் குறிப்பிடத்தக்க சில வேறுபாடுகளும் இருந்தன. ஒன்று, 1984ஆம் ஆண்டு சீக்கியர்கள் மீதான அந்த விஷமத்தனமான கொடூரத்திற்கு காங்கிரஸ் கட்சி அதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்ட போதிலும் இறுதியில் பரிகாரம் செய்தது. சோனியா காந்தி 1999ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட சிறிது காலத்திலேயே பொற்கோவிலுக்குச் சென்றார். அங்கே அவர் முறையான மன்னிப்பு கேட்கவில்லை என்றாலும் 2004ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, முந்தைய காங்கிரஸ் பிரதமரின் கண்காணிப்பில் நடந்தவற்றிற்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
‘சீக்கிய சமூகத்திடம் மன்னிப்பு கேட்பதில் எனக்கு எந்தவொரு தயக்கமும் இருக்கவில்லை. நான் சீக்கிய சமூகத்திடம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்திய தேசத்திடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் 1984ஆம் ஆண்டு நடந்தது நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள தேசியம் என்ற கருத்தை மறுத்து விட்டதாகவே இருந்தது’ என்று 2005 ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் பேசிய டாக்டர் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருந்தார்.
உண்மையில் அந்த மன்னிப்பை டாக்டர் மன்மோகன் சிங் கேட்ட நேரத்தில், சீக்கியர்கள் பெரும்பாலும் தேசத்துடன் சமரசம் செய்து கொண்டிருந்தனர். நான் 2005 ஏப்ரலில் பஞ்சாப் சென்று அங்கே இருந்த சீக்கிய பள்ளி ஆசிரியர்களுடன் நீண்ட நேரம் உரையாடினேன். டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த நிலையில் ஜெனரல் ஜே.ஜே.சிங் (முதல் சீக்கிய) ராணுவத் தளபதியாகவும், மாண்டேக் சிங் அலுவாலியா (அப்போது மிகவும் செல்வாக்கு பெற்றிருந்தவர்) திட்டக் கமிஷனின் துணைத் தலைவராகவும் சீக்கியர்கள் இருந்தது இந்த நிலத்தின் சமமான குடிமக்களாக அவர்கள் கருதப்படுவார்கள் என்று இறுதியாக சீக்கியர்களுக்கு உறுதியளித்திருப்பதாக அவர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டனர். அடுத்தடுத்து நடந்த அந்தச் செயல்களை நிச்சயமாக காங்கிரஸ் திட்டமிட்டுச் செய்யவில்லை. தானாக நிகழ்ந்த அந்தச் செயல்கள் அரசியல், ராணுவம் மற்றும் பொருளாதார அதிகாரம் ஆகிய பதவிகளில் மூன்று சீக்கியர்களை அமர்த்திய செயல் மிகப் பெரிய அடையாள முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருந்தது.
சீக்கியர்களுக்கு எதிரான படுகொலைகள் நடத்தப்பட்டு இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சிறுபான்மை சமூகத்தின் புண்பட்ட உணர்வுகள் கணிசமாகத் (முழுமையாக இல்லாவிட்டாலும்) தணிக்கப்பட்டன. ஆனால் மறுபுறத்தில் குஜராத்தின் முஸ்லீம்கள் 2002ஆம் ஆண்டில் இருந்ததைப் போலவே இன்னும் பயத்தில் உறைந்து போய் பாதுகாப்பற்றவர்களாகவே இருந்து வருகிறார்கள் - உண்மையில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கலாம் - என்றாலும் நரேந்திர மோடியிடமிருந்தோ அல்லது வேறு எந்த பாரதிய ஜனதா கட்சித் தலைவரிடமிருந்தோ இதுவரையிலும் எந்தவொரு வருத்தமோ, மன்னிப்போ வருவதற்கான தொலைதூர அறிகுறிகூட எதுவும் இருக்கவில்லை. மோடியும் அவரது கட்சியும் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸுக்கு நேர்மாறான படிப்பினைகளையே பெற்றிருக்கின்றனர். அதாவது ஒரு காலத்தில், வெளிப்படையான வன்முறைகள் மூலம், முஸ்லீம் சிறுபான்மையினரை அடக்கி, மிரட்டி வந்த அவர்கள், இப்போது தங்களுடைய பெரும்பான்மைத் திட்டத்தை அதிகரித்துக் கொண்டு, அரசு இயந்திரம் மீதான தங்கள் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி மற்ற மதங்களைச் சார்ந்த இந்தியர்கள் மீது குறிப்பாக முஸ்லீம்கள் மீது ஹிந்துக்களின் விருப்பத்தை உறுதியாகத் திணிக்க முயன்று வருகிறார்கள்.
முஸ்லீம் பிரதமர் அல்லது முஸ்லீம் ராணுவத் தளபதியுடன் - அவர்கள் அந்தப் பதவிகளுக்கு சிறந்த தகுதியுள்ள வேட்பாளர்களாக இருந்தாலும் கூட - பாரதிய ஜனதா கட்சியால் ஆளப்படுகின்ற இந்தியா இருப்பதாகக் கற்பனை செய்வது என்பது மிகவும் கடினமாக காரியமாகும். பாகுபாடு மேலும் மேலும் ஆழமாகிக் கொண்டே செல்கிறது. மக்களவையில் உள்ள முந்நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பி.க்களில் பாஜகவுக்கு என்று ஒரு முஸ்லீம் உறுப்பினர் கூட இல்லை. மேலும், தன்னுடைய தேர்தல் பிரச்சாரங்களில் - தேசிய அளவிலான மற்றும் மாநில அளவிலான தேர்தல் ஒவ்வொன்றிலும் (சமீபத்தில் உத்தரப்பிரதேசம் சாட்சியாக இருக்கிறது) அதன் ‘ஹிந்துக்கள் ஆபத்தில் உள்ளனர்’ என்ற கருப்பொருளை சற்றே மாற்றியமைத்துக் கொண்டு, சாத்தியமான அதன் வாக்காளர்களிடமிருந்து முஸ்லீம்களை முற்றிலுமாக ஒதுக்கி வைக்கவே முயல்கிறது. அன்றாட வாழ்வில் தெருக்களில் சுற்றித் திரிகின்ற ஆளும் ஆட்சியுடன் தொடர்புடைய குழுக்கள், முஸ்லீம்களைக் கேலி செய்யலாம், அச்சுறுத்தலாம், அவமானப்படுத்தலாம், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கலாம். பாஜக ஆளும் மாநிலங்களில் நடத்தப்படுகின்ற மாநாடுகளில் பேசுகின்ற ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான பேச்சாளர்கள் ‘முஸ்லீம்களை பெருமளவில் கொல்ல வேண்டும்’ என்ற அழைப்பை விடுத்து வருகின்றனர்.
அப்போது பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த வன்முறை மாநில முதல்வர் தனது ‘ராஜ தர்மத்தை’ கடைபிடிக்காததன் விளைவு என்றே நினைத்தார். ஆனால் ஆட்சியில் இருக்கின்ற அரசியல்வாதி என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய அவரது புரிதல் முந்தைய பிரதமர்களின் புரிதலில் இருந்து வேறுபட்டது என்பதையே நரேந்திர மோடியின் பிற்கால நடவடிக்கைகள் காட்டுகின்றன. மோடி மற்றும் அமித் ஷா தலைமையின் கீழ் உள்ள பாஜக ஹிந்துக்களுக்காக நடத்தப்படுகின்ற, ஹிந்துக்களை மட்டுமே கொண்ட கட்சியாக தன்னைக் காட்டிக் கொள்கிறது. அந்த வகையில் பார்க்கும் போது, குஜராத் 2002 என்பது இப்போது தேசிய அளவில் அவர்கள் முயற்சி செய்து கொண்டிருப்பவற்றிற்கான சோதனை ஓட்டமாகவே இருந்துள்ளது.
1984ஆம் ஆண்டு கலவரங்களுக்காக வருத்தம் தெரிவிக்கின்ற தனது குறிப்பில் ‘நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள தேசியம் என்ற கருத்து மறுக்கப்பட்டது’ என்று மன்மோகன் சிங் கூறியிருந்தார். குஜராத்தில் 2002ஆம் ஆண்டு படுகொலைகள் நரேந்திர மோடியின் கண்காணிப்பிலேயே நடந்தன என்பது அரசியலமைப்புச் சட்டம் கட்டளையிடுவதை மறுக்கவே செய்தது. ஆயினும் ஒரு பகுதி தற்பெருமையின் காரணமாக என்றாலும் பெரும்பாலும் அவரது லட்சிய தேசம் அரசியலமைப்பில் பொதிக்கப்பட்டுள்ள கருத்துகளுக்கு எதிரானதாக இருப்பதால், நடந்தவற்றிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மோடி நினைத்திடவில்லை.
பதினேழாம் நூற்றாண்டின் பிரெஞ்சு எழுத்தாளரான ஃபிராங்கோயிஸ் டி லா ரோச்ஃபோகால்ட் (Francois de La Rochefoucaud) ‘நற்பண்புகளுக்கு தீமை செலுத்துகின்ற மரியாதை’ என்று பாசாங்குத்தனத்தை விவரித்தார். அந்த விவரிப்பு 2022ஆம் ஆண்டில் ஏராளமாக விளக்கப்பட்டதை இந்தியர்கள் கண்டிருப்பார்கள். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு எந்தவொரு பங்களிப்பையும் அளிக்கவில்லை என்றாலும், இந்த ஆண்டில் பல சந்தர்ப்பங்களில் பிரதமர் அந்தப் போராட்டத்தை தூண்டியிருப்பதை நாம் காண முடிந்திருக்கிறது. அவரது ஹிந்துத்துவ பெரும்பான்மைவாதம் காந்தியின் அனைவரையும் உள்ளடக்குகின்ற நம்பிக்கையுடன் முழுமையாக முரண்பட்டிருக்கும் போதிலும், அவர் காந்தியைப் புகழ்வதை நம்மால் கேட்க முடிகிறது. பாராளுமன்றத்தின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ள போதிலும் (புதுதில்லி மேலும் மேலும் மாசுபட்டுக் கொண்டிருக்கிறது), 'ஜனநாயகத்தின் ஆன்மா', 'புதிய இந்தியா' ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்லப்படுகின்ற பிரமாண்டமான புதிய கட்டிடத்தை பிரதமர் திறந்து வைப்பதைக் காண முடிகிறது. இறுதியாக அறிவார்ந்த, துறவறம் பூண்ட ஆன்மீகவாதியான ஸ்ரீஅரவிந்தருடமிருந்து தார்மீக, அறிவுசார் ரீதியாகப் பிரித்து வைக்கப்பட்டிருந்தாலும் அவருடனான உறவு குறித்து விளம்பர வெறி கொண்ட நமது பிரதமர் உரிமை கோரவே முயல்வார்.
இதுபோன்று 2022ஆம் ஆண்டில் பல்வேறு ஆண்டுவிழாக்களைக் கொண்டாடும் போது தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்காக வரலாற்றைத் திரித்து, நரேந்திர மோடி தனக்கென்று பெருமையைத் தேடிக் கொள்வார். அதே நேரத்தில் மோடியின் கண்காணிப்பின் கீழ் நடந்த, இன்றைக்கும் குடியரசின் மீது அதன் கருமையான நிழல் படிந்திருக்கின்ற குஜராத் படுகொலையின் இருபதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்த ஆண்டு குறித்து - உண்மையில் அவருக்கு மிகவும் முக்கியமான ஆண்டுவிழா குறித்து - தனிப்பட்ட மற்றும் அரசியல் கண்ணோட்டத்தில் அவர் பொதுவெளியில் கருத்து வெளியிடுவதற்கான சாத்தியம் எதுவும் இருக்கவில்லை.
பின்குறிப்பு: குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் உண்மையில் என்ன நடந்தது என்பதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கான ஆர்வமுள்ளவர்கள், பின்குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான ஆவணங்கள் மற்றும் பகுப்பாய்வுகளைப் பார்க்கவும்.
வெறுப்பின் உள்ளமைப்பு: ரேவதி லால்
ரகசிய நடவடிக்கை: ஹிந்துத்துவ இருளுக்குள் எனது பயணம்: ஆஷிஷ் கேதன்
குஜராத்: திரைக்குப் பின்னால்: ஆர்.பி.ஸ்ரீகுமார்
குஜராத்: துயரம் உருவான விதம்: எஸ்.வரதராஜன், ஆசிரியர்
https://www.telegraphindia.com/opinion/grim-anniversary/cid/1845641
நன்றி: டெலிகிராப் இந்தியா
தமிழில்: தா.சந்திரகுரு