articles

img

சியாட்டில் ‘கதவு’ திறந்துள்ளது; பிற நகரங்களுக்கு... தேசங்களுக்கு..! - சுதிப்தா தத்தா

பிப்ரவரி 21  அன்று சாதி பாகுபாடுகளை முதலில் தடை செய்த நகரமாக  சியாட்டில் உருவெடுத்துள்ளது. இம் முடிவு ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் பரவலான விவாதத்தை முன்னெடுத்துள்ளன. மதம், இனம், பாலின ஒடுக்குமுறை போன்று சாதி ஒடுக்குமுறையும் பாகுபாடு என அங்கீகரிக்கும் திருத்தம் நகர கவுன்சில் விதிகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஹார்வர்ட், பிரவுன், கலிபோர்னியா பொதுப் பல்கலைக் கழகங்கள் தங்களின் பாகுபாடு எதிர்ப்புக் கொள்கையில் சாதியை இணைத்துள்ளன.

அம்பலத்திற்கு வந்த பாரபட்சம்

சாதிய பாரபட்சம் அமெரிக்காவில் இருப்பது 2000இல் அம்பலத்திற்கு வந்தது. கலிபோர்னியாவின் பெர்க்லி நகரத்தில், ஆந்திராவின் ஆதிக்க சாதியை சேர்ந்த லக்கி ரெட்டி பாலி ரெட்டி என்பவர் தனது சொந்த கிராமத்தி லிருந்து நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் தலித் தொழி லாளர்களை கொண்டு வந்த பிரச்சனை அது. அப்படி கொண்டு வரப்பட்டவர்களில் தலித் சிறுமிகளும் உண்டு.  அந்த வழக்கில் காவல்துறை விசாரணை மேற்கொண்டது. ரெட்டியும் அவருடைய மகன்களும் சிறைத் தண்டனை பெற்றனர். இதுவே அமெரிக்காவில் சாதி தொடர்பு கொண்ட  ஒரு கடத்தல் பிரச்சனையில் குற்றவாளிகள் தண்டனை பெற்ற நிகழ்வு.   சமீபத்தில் “சிஸ்கோ” வழக்கு. கலிபோர்னியாவின் நியாயமான வேலை மற்றும் வீட்டு வசதித்துறை தொடர்ந்த வழக்கில் ஒரு தலித் பொறியாளர் சாதிய பாகுபாடுகளுக்கு ஆட்படுத்தப்பட்டதற்காக நடைபெற்ற வழக்கு அது. 

ஆய்வுகள் தந்த அதிர்ச்சி

சியாட்டில் நகர கவுன்சில் விதிகளில் சாதி பற்றி, “இறுக்கமான சமூக அடுக்கு வடிவம் கொண்டது. பாரம்பரிய அந்தஸ்து, அக மண முறை, சமூக தடைகள் ஆகியன மரபு, சட்டம், மதம் வழியாக நிலை பெற்றுள்ளன.  இத்தகைய சாதி பாகுபாடுகள் தனி நபர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்படுவதை “இச்சட்டம் தடை செய்கிறது என்று கூறுகிறது.  சாதி பாகுபாடுகள் குறித்து பல சமூக செயற்பாட்டா ளர்கள், அமைப்புகள் அமெரிக்க சமூகத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தன.  “2016இல் ஈக்குவாலிட்டி லேப்ஸ் நடத்திய ‘அமெரிக்காவில் சாதி ‘ஆய்வில் வெளிப்பட்ட தகவல்கள்  இவை. அந்த தேசத்தில் நான்கில் ஒரு தலித் உடல் ரீதியான தாக்குதலையோ, வார்த்தை வாயிலான வசையையோ எதிர்கொண்டுள்ளார். மூன்றில் இரண்டு தலித்துகள் பணித் தலத்தில் பாரபட்சத்தை எதிர்கொண்டுள்ளார்கள்.”  - தேன்மொழி சவுந்தர்ராஜன் (நிர்வாக இயக்குநர், ஈக்குவாலிட்டி லேப்ஸ் - தி இந்து நேர்காணல்) இந்த ஆய்வு தகவல்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் நேரடி சாட்சியங்கள்  வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளன. பணித்தலங்கள், வழிபாட்டுத் தலங்கள், சமூக உறவுகள் ஆகியவற்றில் நிலவும் பாரபட்சங்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்களால் பகிரப்பட்டவை. 

உலகத்திற்கு செய்தி

தேன்மொழி சௌந்தரராஜன் இன்னும் கூறுவது,  “சியாட்டில் நகர கவுன்சில் சாதிய பாரபட்சங்களுக்கு எதிராக விதித்துள்ள தடை இனி வரும் நூற்றாண்டுகளுக்கும் முக்கியமானது. உலகம் முழுக்க அது ஒரு செய்தியை தந்துள்ளது. சாதியின் காயங்களை குணப்படுத்த சாதியப் பாகுபாடுகளை தடை செய்ய வேண்டும் என்பதே.”  சியாட்டில், வாஷிங்டன் மாநிலத்தில் உள்ளது. அங்குள்ள  ‘மைக்ரோசாப்ட், அமேசான், போயிங்’ நிறுவனங்களில் தெற்காசிய தொழிலாளர்கள் உள்ளனர். அந்த மாநிலத்தில் உள்ள 1,50,000 தெற்காசிய தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் சியாட்டிலில்தான் உள்ளனர்.  “நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். நாம் வெட்கப்பட வேண்டும். இன்னும் இத்தகைய பாகுபாடு நிலவுகிறது என்பதை “  என்கிறார் சூரஜ் எங்டே, கேஸ்ட் மேட்டர்ஸ் “Caste Matters” நூல் ஆசிரியர். “சியாட்டில் தடை, கதவுகளைத் திறந்துள்ளது. ஒவ்வொரு நகரத்திற்கும்... ஒவ்வொரு தேசத்திற்கும்... சாதியை பாகுபாடு எதிர்ப்பு கொள்கையில் இணைப்பதற்கு...” என்கிறார் -தேன்மொழி சவுந்தர்ராஜன் தி ட்ராமா ஆஃப் கேஸ்ட் “The Trauma of Caste” நூல் ஆசிரியர். 

(நன்றி: தி ஹிண்டு ஆங்கிலம் 26.02.2023)  தமிழில் சுருக்கம் : க.சுவாமிநாதன்