ஆதிவாசியின் அவலம்
நான் வனத்திலே பிறந்து வனத்திலே வளர்ந்து உழைத்து வாழ்கிறேன். காட்டிலேயிருந்து நாட்டுப்புறத்துக்கு ஒரு யானை வந்தால் அதை மீண்டும் காட்டுக்கே கொண்டு வருகிறீர்கள். ஒரு மான் வந்தால், புலி வந்தால் மலைப்பாம்பு, சிறுத்தை, ராஜநாகம் எதுவாயினும் பிடித்து வந்து மீண்டும் காட்டில் விடுகிறீர்கள். ஆனால், வனத்தில் வாழும் எங்களை மட்டும் காட்டை விட்டு நாட்டுப்புறம் நோக்கி விரட்டுவது நியாயமா? தர்மா? நியாயமாரே?
எஸ்.ஏ.பெருமாள்
தேசிய பட்டியல் சாதி நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் 33 ஆண்டில் சாதித்தது என்ன?
பட்டியல் சாதி பழங்குடியினர்க்கான நாடாளுமன்றக் குழு அறிக்கை தரும் தகவல்கள் இவை. தேசிய பட்டியல் சாதி நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் (National Scheduled Caste Finance and Development Corporation - NSFDC) செயல்பாடு, எஸ்.சி எஸ்.டி நலனுக்கான திட்டங்களின் அமலாக்கம் ஏமாற்றம் அளிக்கிறது. தேசிய பட்டியல் சாதி நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் 15 பேர் கொண்ட இயக்குனர் அவையில் இரண்டே இரண்டு பேர் மட்டுமே பட்டியல் சாதியினர். 1989 இல் துவங்கிய இக் கழகம் 33 ஆண்டுகளில் 17 லட்சம் பட்டியல் சாதி பயனாளிகளை மட்டுமே கொண்டுள்ளது. இது மிகக் குறைவான எண்ணிக்கை. இதன் பங்கு மூலதனம் 33 ஆண்டுகள் கழித்தும் வெறும் ரூ.1500 கோடி மட்டுமே. 2021 - 22 இல் ரூ.2500 கோடியாக உயர்த்த வேண்டுமென்று அக் கழகம் கோரிக்கை வைத்தும் அது இதுநாள் வரை நிறைவேறவில்லை. இந்த கோப்பு பல அமைச்சகங்களின் பரிந்துரை, பரிசீலனை என பந்தாடப்பட்டு வருகிறது. 2020 - 21 இல் இக்கழகம் வாயிலாக தொழில் நுட்ப பயிற்சி பெற்ற 5537 பேருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. இன்னும் பல பட்டியல் சாதியினருக்கு, தேசிய பட்டியல் சாதி நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் திட்டங்கள் பற்றி தெரிந்திருக்கவில்லை.
பொதுத்துறை வேலைவாய்ப்புகள் வீழ்ச்சி: கேள்விக்கு உள்ளாகும் சமூக நீதி
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசு, பொதுத் துறை வேலைவாய்ப்புகள் குறைவதால் சமூக நீதியும் தாக்கப்படுகிறது. பொதுத் துறைகளில் 1980 இல் பட்டியல் சாதிகளைச் சேர்ந்த 3.40 லட்சம் பேர் வேலை பெற்றிருந்தனர். 2022 இல் அது 1.45 லட்சமாகக் குறைந்துவிட்டது. பழங்குடி ஊழியர்களின் எண்ணிக்கை இதே காலத்தில் 1.40 லட்சத்திலிருந்து 85.45 ஆயிரமாகக் குறைந்துவிட்டது. அதேபோல, 2022இல் பொதுத் துறை ஊழியர்களில் இதர பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 1.89 லட்சம்தான். பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 2019இல் 87.66 ஆயிரமாக இருந்தது, 2021-22இல் 76.67 ஆயிரமாகக் குறைந்துவிட்டது. 20 லட்சம் பதவிகள் பறிக்கப்பட்டதால் 3 லட்சம் பட்டியல் சாதியினரின் நிரந்தர வேலையும், 1.5 லட்சம் பழங்குடியினரின் வேலையும், 5.4 லட்சம் இதர பிற்படுத்தப்பட்டோரின் வேலையும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளின் நிரந்தர வேலையும் பறிபோய் விட்டன. இதுதொடர்பான புள்ளிவிவரப் பட்டியல் நீளமானது. இப்படி சமூகநீதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான போக்கு நீடிக்கிறது.
ஆர்.இளங்கோவன்
தட்சிண ரயில்வே ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர்
( நன்றி: “தி இந்து தமிழ் திசை” - நடுப்பக்க கட்டுரை)
29 ஆண்டுகள் - 1000 ஐ நெருங்கிய மரணங்கள் மலக்குழிக்குள் வீழ்ந்த உயிர்கள்
இது சஃபாய் கரம்சாரீஸ் தேசிய ஆணையம் தரும் தகவல். மனிதக் கழிவுகளை அகற்ற மனிதரைப் பணியமர்த்தல் தடைச் சட்டம் முதலில் வந்த 1993 ஆம் ஆண்டில் இருந்து 29 ஆண்டுகளில் மலக் குழியில், பாதாளச் சாக்கடைகளில் இறங்கியதால் நிகழ்ந்துள்ள மரணங்களின் எண்ணிக்கை 989. தமிழ்நாடு 218, குஜராத் 153, உ.பி.107, தில்லி 97, கர்நாடகா 86, அரியானா 84, பஞ்சாப் 43, மகாராஷ்டிரா 39, ராஜஸ்தான் 38, மேற்குவங்கம் 23, ஆந்திரா 22, தெலுங்கானா 17, ம.பிரதேசம் 16, கேரளா 13, புதுச்சேரி 9, உத்தரகண்ட் 8, கோவா 6, சண்டிகர் 3, பீகார் 2, ஒடிசா 2, திரிபுரா 2, சத்தீஸ்கர் 1 என மொத்தம் 989. இது பதிவான எண்ணிக்கைதான். ஆண்டிற்கு சராசரியாக 34 மரணங்கள். சட்டம் இருந்தும் மரணங்களின் அழைப்பு நிற்கவில்லை. ஆதாரம்: மனிதக் கழிவுகளை அகற்ற மனிதரைப் பணியமர்த்துதல் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் மற்றும் விதிகள் 2013 - நூல் வெளியீடு: இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம், தமிழ்நாடு
மலக்குழி மரணங்கள் தடுக்கப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம்?
ஒரே காரணம் சாதிதான். கற்பனைக்காக நாளை ஒரு சட்டம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு மாதமும் ஒரு சாதி மலக்குழியில் இறங்குவதென்று... அப்படி ஒரு நிலை வந்து விட்டால் துப்புரவு பொறியியல் பணிகள் விரைவாகும். இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும். ஆனால் இந்தியச் சமூகத்தில் மலம் அள்ளுவது ஒரு சாதியின் கடமையாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் பொதுச் சமூகத்தில் இப் பிரச்சனை மீது அழுத்தம் இல்லை. ஆட்சியாளர்களுக்கும் அக்கறை இல்லை. சனாதானத்தை பாதுகாக்க நினைக்கும் சக்திகள், மலம் அள்ளுவதை குறிப்பிட்ட சாதியே செய்ய வேண்டுமென்று விரும்புகின்றன. இக் கொடுமை அகல வேண்டுமென்று நினைக்கிற செயற்பாட்டாளர்கள், சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பு களத்தில் நிற்பவர்கள் வாதத்திற்காக கூட எல்லா சாதிகளும் மலம் அள்ள சட்டம் கொண்டு வர கோரவில்லை. காரணம் நாம் ஜனநாயகம் எண்ணம் கொண்டவர்கள். எந்தவொரு சாதி மீதும் மலம் அள்ளுகிற கொடுமை திணிக்கப்படக் கூடாது என்றும், எந்தவொரு மனிதரும் மலக்குழிக்குள் வீழ்ந்து மடியக் கூடாது என்றும் நினைப்பவர்கள்.
கு.ஜக்கையன்
ஆதித் தமிழர் கட்சித் தலைவர்
அமிர்த காலம் எப்போது வரும் தலித் மக்களுக்கு..?
2021 தேசிய குற்றப் பதிவு ஆணையம் (NCRB) இந்தியாவில் தலித், ஆதிவாசிகளுக்கு எதிராக நிகழ்ந்த குற்றங்கள் 50013 என்கிறது. ஆனாலும் வன்கொடுமை நிவாரணத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.600 கோடியாக 2022 - 23 இல் இருந்த நிலையில் இருந்து 2023 - 24 இல் ரூ.500 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. 2023 - 24 இல் மொத்த பட்ஜெட் தொகை ரூ.49,40, 842.73 கோடி. அதில் தலித் நலனுக்கான ஒதுக்கீடு ரூ.1,59,126.22 கோடி (3.1%). பழங்குடி நலனுக்கு ரூ.1,19,509.87 கோடி (2.3%). இதிலும் ஒரு உள் கணக்கு உள்ளது. நேரடியாக தலித் மக்களை இலக்காக கொண்டு செல்கிற தொகை (Targetted) ரூ.30,475 கோடி. பழங்குடி மக்களை இலக்காக கொண்டு செல்கிற தொகை ரூ.24,834 கோடிகள் மட்டுமே.
(நன்றி: “அவுட் லுக் இந்தியா” - கமல் கிஷோர், 10.02.2023)
நாடாளுமன்ற குழுக்களும் - குறைவான எஸ்.சி, எஸ்.டி பிரதிநிதித்துவமும்
இந்திய நாடாளுமன்றத்தின் மக்க ளவையில் 543 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 138 பேர் பட்டியல் சாதி/ பழங்குடியினர். அதாவது ரிசர்வ் தொகுதிகள் எனில் 24.13 சதவீதம். பட்டியல் சாதி/ பழங்குடி எம்பிக்கள் 25.4 சதவீதமே உள்ளனர் எனில் ரிசர்வ் தொகுதிகளைத் தாண்டி பொதுத் தொகுதிகளில் பட்டியல் சாதி/ பழங்குடி எம்பிக்கள் பெரிதாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதே பொருள். இது தவிர துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் (Department related Parliamentary Standing Committees) 24 உள்ளன. அவற்றில் 8 இல் மட்டுமே பட்டியல் சாதி/ பழங்குடி எம்பிக்களின் பிரதிநிதித்துவம் 25.4 சதவீதம் உள்ளது. மற்ற 16 இல் பட்டியல் சாதி/ பழங்குடி எம்பிக்கள் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. சில துறை குழுக்களில் பட்டியல் சாதி/ பழங்குடி எம்பிக்கள் அடைக்கப்படுகிறார்கள். உதாரணம் சமூக நீதி அமைச்சக நிலைக் குழு. இதில் பட்டியல் சாதி/ பழங்குடி எம்பிக்கள் 59.5 சதவீதம். ஆனால் நிதி அமைச்சக நிலைக் குழுவில் வெறும் 9.5 சதவீதம். பொதுக் கணக்கு குழுவில் 6.67 சதவீதம்தான். அடுத்து நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பதவிகள். 17 வது நடப்பு மக்களவையில் 16 நிலைக் குழுக்களில் (மக்களவை சபாநாயகர் 16 குழுக்களையும் மாநிலங்களவை தலைவர் மீத 8 குழுக்களையும் முடிவு செய்வார்கள்) ஒன்றே ஒன்றில் மட்டும் - பாதுகாப்பு அமைச்சகம் - ஒரு பழங்குடி எம்பி தலைவராக இருக்கிறார். 2009 - 2020 காலத்தில் மொத்தம் இருந்த நிலைக் குழு தலைவர்கள் 240 பேரில் 21 பேர் மட்டுமே பட்டியல் சாதி/ பழங்குடி எம்பிக்கள். அதாவது 7.3 சதவீதம். சட்டம் இயற்றும் அவையே இப்படி இருந்தால்...
(நன்றி: Scroll article “Even in parliamentary committees, scheduled castes and tribes have a limited voice” 17.06.2021)
சமூக ஒடுக்குமுறையும், குழந்தைகள் மரணங்களும்
தேசிய குடும்ப சுகாதார ஆய்வுகள் (NFHS) இதுவரை 5 சுற்றுக்கள் நடந்துள்ளன. 1992 - 93, 1998 - 2000, 2005 -06, 2015 -16, 2019 - 21 ஆகிய ஆண்டுகளில் இந்த தகவல்கள் திரட்டப்பட்டன. இதில் முதல் சுற்றான 1992 - 93 இல் சமூக உள்ளடக்கம் குறித்த விவரங்கள் இல்லை. அதற்கு பிந்தைய நான்கு சுற்றுக்களிலும் சாதி, மதம் குறித்த விவரங்கள் இடம் பெற்றன. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணத்தை சமூக உள்ளடக்கத்துடன் ஆய்வு செய்தால், 1000 ஆதிவாசி குழந்தைகளில் 125 குழந்தைகள் 5 வயதுக்குள் இறந்து போய் விடுகிறார்கள். 1000 பட்டியல் சாதி பெண் குழந்தைகளில் 125 குழந்தைகள் 5 வயதுக்குள் இறந்து போய் விடுகிறார்கள். 1000 பட்டியல் சாதி ஆண் குழந்தைகளில் 100 குழந்தைகள் 5 வயதுக்குள் இறந்து போய் விடுகிறார்கள். இதுவே உயர் சாதியினர் மத்தியில் 1000 குழந்தைகளில் 75 குழந்தைகள் இறந்து போகிறார்கள். குழந்தைகளின் மரணங்கள் சாதிகளுக்கு அப்பாற்பட்டு வேதனைக்குரியது. ஆனால் சாதியும் சேர்ந்து உயிர்களை பறிப்பது கவனத்திற்குரியது.
(ஆதாரம் : Social Disadvantage and Child Mortality in India: 1993 -2019. ஆஷிஷ் குப்தா, விபுல் குமார் பைக்ரா, கனிகா சர்மா “சோசியல் சயிண்டிஸ்ட்” இதழ் - செப் & அக் 2022)
விமானத்தில் “வித் அவுட்” ஆக பயணிக்கும் சாதி
வெளிநாடுகளுக்கு இந்தியர்கள் புலம் பெயரும் போது சாதியும் விசா இல்லாமல், பாஸ்போர்ட் இல்லாமல், டிக்கெட் கூட இல்லாமல் கூடவே புலம் பெயர்ந்து விடுகிறது. இதோ விகடகவி இணைய இதழில் (www.vikatakavi.in) தில்லைக்கரசி சம்பத் என்பவரின் பதிவு. 2018-ஆம் ஆண்டு Equality Labs எனும் குடிமை உரிமைக்குழு நடத்திய ஆய்வில் “ அமெரிக்காவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் 67% தலித்துகள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள்” என்று வெளிப்பட்டது. அமெரிக்காவில் 2018ல் இந்தியர்களிடையே சாதி ரீதியான பாகுபாடுகள் குறித்து எடுக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், 10ல் 4 பேர் கல்வி பயிலும் இடத்திலும், 3ல் 2 பேர் பணிபுரியும் இடங்களிலும் பாரபட்சங்களால் பாதிக்கப்படுகின்றனர். 2ல் ஒருவர் தனது சாதி பற்றி அவர் பழகும் சக இந்தியர்களுக்கு தெரிந்து விடுமோ என்று அச்சப்படுகிறார். 4 ல் ஒருவர் உடல்ரீதியான வன்முறையை எதிர்கொள்கிறார்கள். கடல் கடந்தாலும் நம்மைப் பிடித்த சாதி ஒழியவில்லை. அங்கேயும் சாதி வெறி தலைவிரித்தாடுகிறது.
மத்திய கல்வி நிறுவனங்களில் 10 ஆண்டுகளில் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி மாணவர் இடை நிற்றல் 19000 பேர்
அமைச்சர் தந்த அதிர்ச்சித் தகவல் இது. திருச்சி சிவா எம்.பி., மாநிலங்களவையில் எழுப்பிய கேள்வி... கடந்த ஐந்தாண்டுகளில் மத்தியப் பல்கலைக் கழகம், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் உள்ளிட்ட நிறுவனங்களில் இடை நின்ற எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி மாணவர்கள் எத்தனை பேர்? அதற்கு பதில் அளித்த கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தந்த பதில்: 2018 - 2023 க்கு இடைப்பட்ட ஐந்தாண்டுகளில் இடை நின்ற எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி மாணவர்கள் எண்ணிக்கை 19000 க்கும் அதிகம். இதோ இடை நின்ற எண்ணிக்கை நிறுவன வகை வாரியாக... மத்திய பல்கலைக் கழகங்கள் : எஸ்.சி 3596, எஸ்.டி 3949, ஓபிசி 6901. ஐ.ஐ.டிகள் : எஸ்.சி 1362, எஸ்.டி 538, ஓபிசி 2544. ஐ.ஐ.எம்கள் : எஸ்.சி 143, எஸ்.டி 90, ஓபிசி 133.
(நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 30.03.2023)
ஐ.ஐ.டி மும்பை சர்வே : அம்பலமாகும் சாதிய பாகுபாடுகள்
எங்கள் வளாகத்தில் சாதிய பாகுபாடுகள் இல்லை என்று தலித் மாணவர் தர்ஷன் சோலங்கி மரணத்திற்கு பிறகு ஐ.ஐ.டி மும்பை இயக்குனர் சுபாஷிஷ் சவுத்ரி அறிவித்தார். ஆனால் ஐ.ஐ.டி மும்பை எஸ்.சி, எஸ்.டி செல் 2022 இல் நடத்திய சர்வே முடிவுகள் சொல்கிற கதைகள் வேறு... (Scroll.in 12.03.2023) பிப்ரவரி 2022 இல் நடந்த சர்வே அது. 388 தலித்/ ஆதிவாசி மாணவர்கள் அதில் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள்/ சக மாணவர்கள் சாதிய பாகுபாடுகள் காட்டினார்கள் என்று 77 பேர்; “உயர்” சாதி மாணவர்கள் சாதிய/ இட ஒதுக்கீடு எதிர்ப்பு நகைச்சுவைகள், மீம்ஸ், பாடல்களை வளாகத்திற்குள் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று 93 பேர்; ஆசிரியர்களே சாதிய மீம்ஸ், நகைச்சுவை களை பகிர்ந்து கொண்டதாக 9 பேர்; பெயர்களுக்கு உள்ள பின் ஒட்டுக்களை (Surname) சாதியை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டதாக 26 சதவீதம் பேர். (அதாவது சுமார் 101 பேர்); எங்களின் நுழைவுத் தேர்வு ரேங்குகள் வாயிலாக சாதியை அறிய முயற்சித்தார்கள் என 37 சதவீதம் பேர். (அதாவது சுமார் 144 பேர்). இந்த சர்வே முடிவுகள் தர்ஷனின் மறைவுக்கு பிறகுதான் வெளி உலகத்திற்கு வந்துள்ளது. சில தனிப்பட்ட அனுபவங்களையும் அங்கே பயிலும் பட்டியல் சாதி/ பழங்குடி மாணவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். “உயர்” சாதி மாணவர்கள் கணினி பாடத்தில் புரியாமல் சந்தேகங்களை எழுப்பினால் கூட “இட ஒதுக்கீட்டில் வந்தவராக இருப்பார்” என்றுதான் ஆராயப்படும். ஒரு பழங்குடி மாணவர் சந்தேகங்களை எழுப்பிய காரணத்தால் வாட்ஸ் அப் குழுவில் கிண்டல் கேலிகளுக்கு ஆளாகியுள்ளார். தனது ரேங்க், கேட்டகிரியை மாணவர் வழிகாட்டி (Student Mentor) கேட்டு வெளியே தெரிந்த (ஐ.ஐ.டியில் சேர்ந்த) முதல் வாரம் மிகவும் வெறுப்பான சூழலை எதிர்கொண்டதாக ஒரு மாணவர் கூறியுள்ளார். ஜூன் 2022 இல் நடைபெற்ற “ஓப்பன் ஹவுசில்” ஆசிரியர் ஒருவர் தனது தேர்வுத் தாளை மறு சோதனைக்குத் தந்த போது பார்க்க மறுத்தார் என பழங்குடி மாணவர் ஒருவர் தெரிவித்தார். இவ்வளவும் இருக்கிற, ஆவணமாகியுள்ள ஐ.ஐ.டி மும்பை வளாகத்தில் சாதிய பாரபட்சம் இல்லை என அதன் இயக்குனர் தெரிவித்தார் எனில் எப்படி தர்ஷன்களுக்கு நீதி கிடைக்கும்?
தேவை “சீர்மிகு” நிறுவனங்கள் அல்ல... “மாணவர் வலி உணரும்” நிறுவனங்களே..!
இது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்களின் வார்த்தைகள். உயர்கல்வி நிறுவனங்களில் நிகழும் தற்கொலைகள் குறிப்பாக எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் உயிர் பறி போவது பற்றி... தேசிய சட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் (National Academy for Legal Studies and Research) பட்டமளிப்பு விழாவில் அவர் பேசிய போது தெரிவித்த கீழ்க்காணும் கருத்துக்கள் முக்கியமானவை. எங்கே நமது உயர் கல்வி நிறுவனங்கள் தடுமாறு கின்றன? மாணவர்கள் தங்கள் விலை மதிப்பில்லா உயிரை மாய்த்துக் கொள்வது ஏன்? நெருக்கமானவர்களின் உயிர் பறி போனதால் தவிக்கும் குடும்பங்களை நோக்கி எனது இதயம்செல்கிறது. அண்மையில் ஐ.ஐ டி மும்பையில் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி படித்தேன். உடனே என் நினைவுத் திரையில் கடந்தாண்டு ஒடிசா தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட ஆதிவாசி மாணவர் வந்தார். இந்த நிகழ்வுகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உயிர் பறி போவது பொதுவானதாக இருக்கிறது. இந்த எண்ணிக்கை எல்லாம் வெறும் புள்ளி விவரங்கள் அல்ல. அவை எல்லாம் பல நூற்றாண்டு களாக நடந்து வரும் போராட்டங்களின் தொடர்ச்சி. நாம் இவற்றை தடுக்க வேண்டுமெனில் முதலில் அங்கே நிலவும் பிரச்சனையை அங்கீகரிக்க வேண்டும். நீதிபதிகள் நீதிமன்றங்களுக்கு உள்ளும் வெளியேயும் சமூகத்துடன் உரையாட வேண்டும். உயர் கல்வி நிலையங்கள் “சீர் மிகு” (Institutions of Excellence) நிறுவனங்களாக இருப்பதை விட முக்கியம் பிறர் வலி உணரும் நிறுவனங்களாக (Institutions of Empathy) இருப்பதே. பாகுபாடுகள் இருப்பதே அந்த நிறுவனங்களில் “மாணவர் வலி உணர்தல்” குறைவாக இருப்பதற்கு காரணம். பட்டியல் சாதி, பழங்குடி மாணவர்களே அதிகம் தற்கொலைகளுக்கு இரையாகிற போக்கு இயல்பானதாக இல்லை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதிய பாகுபாடுகள் பற்றி பேசுவது இது குறித்த ஆழமான விவாதங்களுக்கு ஒரு புள்ளியாக மாற வேண்டும்.