articles

img

பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் - ஜி.ராணி

“எந்த வேலையும் இல்லை; மாதம் 2000-3000 ரூபாய் கூலி கிடைப்பதே பெரிய விஷயம்; இதை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்துவதா அல்லது மாதந்தோறும் 1200 ரூபாய்க்கு சிலிண்டரை வாங்குவதா என்று தெரிய வில்லை; இலவச சிலிண்டர், உஜ்வாலா திட்டத்தில் கொடுத்தார்கள்; இலவசமாக கொடுக்கிறார்களே என்று வாங்கி விட்டேன்; ஆனால் இப்போது 1200 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை”. - படபடவென பொறிந்து தள்ளியவாறே, எங்கள் வீட்டிற்குள் வந்து பாருங்கள் என்று உள்ளே அழைத்துச் சென்று சிலிண்டரைக் காட்டினார்  அந்தப் பெண். சிலிண்டர் மேல் விறகை அடுக்கி வைத்தி ருந்தார்கள். ஒரு வருட காலமாக சிலிண்டரைப் பயன்படுத்துவதில்லை; இன்னும் சில மாதங்கள் இதே போன்று விலை உயர்வு இருந்தால் சிலிண்டரையே இரண்டாக வெட்டி அடுப்பாக பயன்படுத்த வேண்டியதுதான் என்று காட்டமாக கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் பள்ளபட்டி, சிறுநாயக்கன்பட்டி, விளாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வீடு வீடாக பிரசுரம் விநியோகித்து மக்களை சந்தித்தபோதுதான் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல தேசம் முழுவதும் உள்ள நிலை கண்கூடாகத் தெரிந்தது. ஒரு கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்தார்கள்; எதற்காக இந்த நோட்டீஸ் கொடுக்கி றீர்கள் என்று கேட்டார்கள். மோடி ஆட்சியின் எட்டு ஆண்டு காலத்தில் மக்கள் படும் அவலங்களை விளக்குவதற்காக என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர்கள் குறுக்கிட்டு, “நாங்கள் எட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். நீங்கள் மோடியிடம் நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் விலை எல்லாம் அதிகரித்துவிட்டது; கொஞ்சம் குறைக்கச் சொல்லுங்கள்; எங்களால் வாங்க இயலவில்லை; எங்கள் வீட்டில் படிக்கப் போக வேண்டாம் என்று சொல்லி வேலைக்கு போக சொல்கிறார்கள்” என்றார் கள். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் தூய்மைப் பணியாளர்கள், எங்கள் பெற்றோரால் அதிக விலை கொடுத்து நோட்டு, பேனா, பென்சில் வாங்கித்தர முடியாது என்றும் கண்களில் ஏக்கத்தோடு குறிப்பிட் டார்கள்.

இரண்டு ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பத்தை சந்தித்தபோது அவர்கள் சொன்னது: “உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது. அதுபோல மோடியின் 8 ஆண்டு கால ஆட்சி யில் கோவணம் கூட மிஞ்சவில்லை”. மோடியின் ஆட்சியில் விவசாயிகள் தொடர் தற்கொலை செய்தது தான் மிச்சம். விவசாயிகள் அனைவரும் பணக்காரர்க ளா? உரத்தின் விலையை பல மடங்கு உயர்த்தி விட்டார் மோடி. இது துரோகம் எனக் குமுறினார்கள். நிலத்தில் பூக்கள், காய்கறிகள் பயிரிட்டு வந்ததாகவும் கட்டுப்படியான விலை இல்லாததால் தற்போது அதை அழித்துவிட்டு மாமரம் வைத்துள்ளதாகவும் வேதனையோடு தெரிவித்தார் ஒரு விவசாயி.

ஏழு பால் மாடுகள் வைத்துள்ள ஒரு குடும்பத்தைச் சந்தித்தபோது, புண்ணாக்கு விலை அதிகமாகி விட்டதாலும் பாலின் கொள்முதல் விலை மிகவும் குறை வாக இருந்ததாலும் 20 மாடுகளில் 13 ஐ விற்று விட்டதாக கண்ணீர் வடித்தார்கள். குடும்பமே அதில் வேலை பார்த்தது. கட்டுப்படியான விலை இல்லாத தால் தற்போது கூலி வேலைக்கு சென்று கொண்டி ருக்கிறார்கள். அந்த குடும்பத் தலைவர் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவருக்கு கடன் கொடுத்த கடன்காரர் பணத்தை எப்போது கட்டுவீர்கள் என்று காரசாரமாக வசைப் பாடிச் சென்றார். அவமா னத்தின் உச்சத்தில் அந்த பால் விவசாயி பரி தவித்து நின்றார்.

இஸ்லாமிய மக்கள் மத்தியில் செல்லும்போது ஒட்டுமொத்த பெண்களும் மோடி ஆட்சியின் மீது மிகுந்த கோபத்தில் இருப்பதைப் பார்க்க முடிந்தது. ஒரு பெண், 75 ஆவது சுதந்திர தினத்தன்று தேசபக்தி உள்ளவர்கள் எல்லாம் வீடுகளில் கொடியேற்றுங்கள் என்று மோடி சொன்னது சரியா என கேள்வி எழுப்பி னார். சுதந்திரப் போராட்டத்தில் 63 ஆயிரம் பேர் இஸ்லாமியத் தியாகிகள். மோடியின் ஆர்.எஸ்.எஸ். கும்பல் அதில் பங்கு எடுத்ததா என்று சரமாரியாக கேள்விக்கணைகள் வந்து விழுந்தன. “கம்யூனிஸ்ட் கட்சி இல்லை என்றால் நாங்கள் இந்தியாவில் இருந்திருக்க வாய்ப்பில்லை” என்று பேசினார் ஒரு ஆசிரியர். குடியுரிமை திருத்தச் சட்டம் மோடியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது எவ்வளவு பெரிய அவல நிலைமையை கொண்டு வந்து விட்டது என்பதையும் கவலையோடு சுட்டிக்காட்டினார். இஸ்லாமியர்கள் வியாபாரம் செய்ய முடியவில்லை; முஸ்லிம் ஆண்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள் என கவலையைப் பகிர்ந்தார்.

பல படித்த பட்டதாரி இளைஞர்கள், மோடியின் ஆட்சியில் இரண்டு கோடிப் பேருக்கு வேலை தருவேன் என்று சொல்லிவிட்டு எங்களை வேலை இழக்கச் செய்துவிட்டார் என்று புலம்பினார்கள். அக்னி பாதை திட்டத்தைப் பற்றி அவர்கள் சொல்லும் பொழுது, ஏதோ எங்களுக்கு இந்த வேலையாவது கிடைக்கும் என்று இருந்தோம்; ஆனால் நீங்கள் சொல்வதைக் கேட்டால் எங்களைப் போன்ற இளை ஞர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வேலையில்லாத சூழ்நிலையை உருவாக்கும் திட்டம்தான் அக்னி பாதை என்று புரிந்து கொண்டோம் என்றார்கள்.

ஹோட்டல் நடத்தி அதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளான ஒரு குடும்பத்தின் தலைவர் சொல்லும் போது, 500- 1000 நோட்டு செல்லாத போது என் மகளின் திருமணம் நடைபெற்றது; இரண்டு நாட்கள் இருக்கும்போது தான் பணம் செல்லாது என்று மோடி அறிவித்தார். அந்த நேரத்தில் பணத்தை மாற்ற இயலாமல் கந்து வட்டிக்கு கடன் வாங்கி என் மகளின் திருமணத்தை முடித்தோம்; என் மகள் திரு மணம் முடித்த மூன்று ஆண்டுகளில் கொரோனா வந்து தொழிலே நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்; இதனால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் கடன் வலையில் சிக்கிக் கொண் டோம். மோடியின் ஆட்சி மக்களாட்சி இல்லை; மன்னராட்சி நடக்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கண்ணீர் மல்கப் பேசினார். 100 நாள் வேலை செய்யக்கூடிய பெண்களை சந்தித்தபோது, 100 நாட்கள் வேலை தருவதில்லை; 20 அல்லது 30 நாட்கள் மட்டுமே வேலை; ரூ.200க்கும் உட்பட்டே கூலி வழங்குகிறார்கள் எனத் தெரி வித்தார்கள். இந்த வேலையை நம்பித்தான் நாங்கள்  கடன் வாங்கி குடும்பத்தை நடத்துகிறோம்; ஆனால் இப்போது வேலையும் இல்லை, கூலியும் இல்லை. விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது; நாங்கள் வாழ்வதா சாவதா என்று தெரியவில்லை எனக் குமுறி னார்கள். சமையல் எண்ணெய் எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு ரூ.250 ஐ தொட்டுவிட்டது; கடுகு, சீரகம் போன்ற மளிகைச் சாமான்கள் விலை அதிக மாகி விட்டது என மனக்குமுறலைக் கொட்டினார்கள்.

பழங்குடியின மக்களைச் சந்தித்தபோது, குறிப்பாக குறிச் சொல்ல செல்லும் காட்டு நாயக்கர்  சமூக மக்களைச் சந்தித்தபோது, “படித்த இளைஞர்க ளுக்கு சாதி சான்றிதழ் இல்லாமல் வேலை கிடைக்க வில்லை. எங்களுடைய சலுகை எல்லாம் கிடைக்கா மல் போகிறது. கம்யூனிஸ்ட் கட்சி தான் தொடர்ந்து போராட்டம் நடத்துகிறது” என்றனர். அவர்களில் 103 வயதான ஆண்டி என்பவரைச் சந்தித்தபோது, “சுதந்திரப் போராட்டக் காலத்தில் கூட இதுபோன்ற சிரமங்களை சந்தித்ததில்லை” என்றார். “நாங்கள் முதன்முதலாக எங்கள் பகுதிக்கு சாதிச் சான்றிதழ் வேண்டும் என்று போராடிய போது கம்யூனிஸ்ட் கட்சி தான் எங்களோடு துணை நின்றது; அன்றைய காலத்தி லேயே விலைவாசி உயர்வுக்கு எதிராக தோழர் கே.பி. ஜானகி அம்மாவோடு போராட்டக் களத்திற்கு நான் சென்று உள்ளேன்” என நினைவு கூர்ந்தார்.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, “இந்தியாவின் இருளை அகற்றுவோம்! மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்” என்ற முழக்கத்துடன்  ஆகஸ்ட் 20 துவங்கி செப்டம்பர் 5 வரை நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை நடத்துகிறது என்பதை மக்கள் சந்திப்பு மூலமாக அறிந்து உற்சாகம் அடைந்த அந்த 103 வயது பெரியவர், “பாரதியார் சொன்னது போல பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பதற்கு இணங்க மோடியின் ஆட்சியில் எங்கள் மக்கள் மட்டு மல்ல; ஒட்டுமொத்த தேசத்தின் மக்களும் மிகுந்த சிரமத்தில் இருக்கிறார்கள்; மோடியின் ஆட்சியை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும்” என்றார் தன் கைகளை உயர்த்தி. 

கட்டுரையாளர் : சிபிஐ(எம்) திண்டுக்கல் மாவட்ட 
செயற்குழு உறுப்பினர்