articles

img

நெட்ட நெடு மரமென நின்று தொலைவோமா! - க.கனகராஜ்

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்ய நாத் மீண்டும் முதல்வராக பொறுப் பேற்ற பிறகு, குற்றவாளிகள் என்று அவர் கருதிய பலரது வீடுகள் இடிக்கப்பட்டன.  அதைத் தொடர்ந்து ராமநவமியின் போது மத்தியப் பிர தேசம் இந்தூருக்கு அருகே 80 வீடுகளும், கோர்கா னில் 16 வீடுகளும், 32 கடைகளும் அரசால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. ராமநவமி ஊர்வலத்தின் போது கல்வீசியவர்கள் என்று அரசால் குற்றம் சாட்டப் பட்டவர்களின் வீடுகள் இவை. மத்தியப் பிரதேசத்தில் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா ஒரு நேரத்தில் இடிக்கப்பட்ட வீடுகளெல்லாம் குற்றவாளிகளின் வீடுகள் என்றும், பிறிதொரு நேரத்தில் அவை யெல்லாம் சட்ட விரோதமான ஆக்கிரமிப்புகள் என்றும் குறிப்பிட்டார். இதில் ஆறு மாதத்திற்கு முன்பு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட ஹசினா ஃபக்ரூவின் வீடும் ஒன்று. குற்றம் சாட்டப் பட்டவர்களில் 3 பேர் வேறொரு வழக்கில் கடந்த மார்ச் 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் இருப்ப வர்கள். தில்லியின் ஜஹாங்கீர்புரியில் இதேபோன்று ராமநவமியையொட்டி இஸ்லாமியர்கள் மீது வன்முறை ஏவிவிடப்பட்டதோடு 21 பேர் கைது செய்யப்பட்டிருக்கி றார்கள். குஜராத்தில் ஹம்பத் நகரில் ராமநவமியை யொட்டி குற்றம் சாட்டப்பட்ட பலரின் வீடுகளும், கடை களும் இடிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் அரசே நேரடியாக தன் எந்திரத்தை வைத்து நடத்திய இடிப்புகள்.

தற்போது இது மெல்ல நகர்ந்து, கர்நாடகா மாநிலம் ஹூப்பாளியில் (ஹூப்ளி) இஸ்லாமியர்கள் மீது வன்முறை ஏவிவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இதே கர்நாடகா மாநிலத்தில் பேளூர் சென்னகேசவா கோவில் இடத்தில் பல பத்தாண்டுகளாக கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த இஸ்லாமியர்கள் அங்கிருந்து துரத்தப்பட்ட சம்பவம் நடந்தது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டங்களையொட்டி நடைபெற்ற வன்முறையில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். 85 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்கு முன்ன தாக ஹரித்துவாரில் தர்ம சன்சத் என்கிற ‘மத நாடாளு மன்ற’ நிகழ்வில் பேசிய வன்முறை பேச்சுகளும், அதைப்பற்றி அரசு கண்டுகொள்ளாத நிலையும் அனை வருக்கும் தெரியும். இதேபோன்று ஹரித்துவாரில் நரசிங்கானந்த் என்கிற கலவரச் சாமியார் இந்துக்கள், இஸ்லாமியர்களை குறிவைத்து கொல்வதற்காக ஆயுதம் ஏந்த வேண்டும் என்று பேசியதையும், மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்ட தும் வெளியே வந்த பிறகு இமாச்சலப் பிரதேசம் உனா வில் இதைவிட மோசமான வெறிப்பேச்சுகளை ஜாமீன் நிபந்தனைகளை மீறி அவர் பேசியிருப்பதையும் நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. இப்போது சுவாமி ஆனந்த் ஸ்வரூப் என்பவர் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய இடங்களுக்கு இந்துக் கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது என்று பேசியிருக்கிறார். முனி என்கிற மற்றொரு சாமியார் இஸ்லாமிய பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க வேண்டுமென்று பேசியிருக்கிறார்.

திட்டமிட்ட தொடர் வெறியாட்டம்

எப்போதாவது எங்காவது சில வெறிபிடித்த ஜந்துக்கள் மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகை யில் பேசுவது கடந்த கால நிகழ்வுகளாக இருந்துள் ளன. ஆனால், தற்போது திட்டமிட்டு ஒவ்வொரு இடமாக பார்த்து பார்த்து வெறுப்பை கக்குவதும் விஷம் தோய்ந்த கருத்துக்களை விதைப்பதும் அதையொட்டி இஸ்லாமியர்களின் மீது தாக்குதல் நடப்பதும் அந்த தாக்குதல்களை சாக்கிட்டு இஸ்லாமியர்களை வேட்டை யாடுவதும் அவர்களது வீடுகளையும், வியாபார நிறுவ னங்களையும், கடைகளையும் அரசே இடித்துத் தள்ளு வதும் அன்றாட நிகழ்வுகளாகிக் கொண்டிருக்கின்றன.

இந்தியா தன்னை உருவாக்கிக் கொண்ட போது மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்று பிரகடனப் படுத்திக் கொண்டது. இப்போதும் கூட நாம் மிகப்பெரிய ஜனநாயகம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கி றோம். இங்கு சட்டம் இருக்கிறது. அரசுகள் இருக்கின் றன. நீதிமன்றங்கள் இருக்கின்றன. ஆனால், சட்டப் படியான எந்த முறைகளும் பின்பற்றப்படாமல் வீடுகளும், கடைகளும், நிறுவனங்களும் உடைத்து நொறுக்கி வீசி எறியப்படுகின்றன. பத்திரிக்கைகள் நிகழ்வுகளை எழுதுகின்றன. ஆனால் பலருக்கு இவற்றையெல்லாம் கண்டிப்பதற்கு கூட தைரியம் இல்லை என்கிற நிலைமைதான் நீடித்துக் கொண்டி ருக்கிறது.

வரலாறு நெடுகிலும் அரசின் ஏற்பாட்டில் நடக்கிற காலித்தனங்கள் ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியி னருக்கு எதிராக தங்கள் அரசியல் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள கையில் எடுக்கப்படுகின்றன. ஆனால் காலப்போக்கில் தங்களை ஆதரித்தவர்கள் மாற்றுக் கருத்தை சொன்னால் கூட அவர்கள் மீது இத்த கைய காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்து விடு வதையே இதுபோன்ற அரசுகள் செய்து வந்திருக் கின்றன.

மதச்சார்பின்மை இல்லையேல்...

மதச்சார்பற்ற ஜனநாயகம் இந்தியாவின் பெருமை மட்டுமல்ல, இந்தியாவிற்கான அடிப்படையும் அது தான். மதச்சார்பின்மை இல்லையேல் ஜனநாயகம் இல்லை. ஜனநாயகம் இல்லையேல் மதச்சார்பின்மை இல்லை. மதச்சார்பற்ற ஜனநாயகம் இல்லையேல் இந்தியா என்கிற நாடு ஒரு நாடாக நீடிப்பது சாத்திய மற்றுப்போகும். அரசே ஒருதலைப்பட்சமாக செயல் படும். இன்னும் சொல்லப்போனால் அரசே இந்த கல வரங்களை திட்டமிட்டு உருவாக்கும். சம்பந்தமில்லாத வர்களை கைது செய்து சிறையில் அடைக்கும். எவ்வித  சட்டத்தையும் பின்பற்றாமல் உடனடி நீதி என்கிற முறையில் அநீதியாக வீடுகளை இடித்துத் தள்ளும் இந்த நாடு ஜனநாயக நாடுதானா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது. ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் கொள்கை எப்படி இருந்தபோதும் அதிகாரிகள் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த மாட்டார்களா? நிலைமை இப்படி இருக்கிறபோது, குஜராத்தில் நரேந்திர மோடிக்கு பேச்சு எழுதிக் கொடுத்து கொண்டி ருந்த மனோஜ் சோனி என்கிற நபர் இப்போது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (யுபிஎஸ்சி) தலைவ ராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒருவேளை ஒருதலைப் பட்சமாக நடப்பவர் அதாவது, ஆர்எஸ்எஸ் பரிவா ரத்தின் பாட்டுக்கு ஆட்டம் போடுகிறவர் ஐஏஎஸ் அதிகாரிகளாகவும், சட்டத்தை பற்றி கவலைப்படாமல் சொத்துக்களை இடித்து மனிதர்களை தாக்கி காயப்படுத்தி சிறையில் அடைப்பவர்கள் ஐபிஎஸ் அதிகாரிகளாகவும் இனி நியமிக்கப்படமாட்டார்கள் என்று சொல்வதற்கு என்ன உத்தரவாதம்? இத்த னைக்கும் நடுவே இந்தியாவில் ஏராளமான நீதிமன் றங்கள்  இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இங்கு நீதிபதிகளும் இருக்கிறார்கள். ஆனால் தானே முன் வந்து இதை வழக்காக்கி விசாரிப்பதற்கு எந்த நீதி மன்றமும் முன்வரவில்லை என்பது தற்செயலானது அல்ல.

பொறுப்பு மக்கள் கையில்...

இப்போது இந்தியாவில் மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொது மக்களின் கையில் இருக்கிறது. வேலை யின்மை, விலைவாசி உயர்வு, வறுமை, சிறுகுறு தொழில்கள் பாதிப்பு என்று ஏராளமான பிரச்சனை கள், வாழ்வாதார பிரச்சனைகள் மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும்போது அவற்றிலிருந்து திசை திருப்புவதற்காக ஆளும் கட்சி நடத்தும் இந்த அட்டூழியத்தை தடுத்து நிறுத்துவதற்கான பொறுப்பு மக்கள் கையில் மட்டுமே இருக்கிறது. 

பாஞ்சாலி சபதத்தில் பாரதி சொல்வதுபோல, நெட்டை நெடு மரமென நின்று வெற்றுப் புலம்பல்க ளால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. இந்தியா முழுமைக்கும் என்ன செய்யப் போகிறோம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். தமிழகத்தின் எந்தவொரு கிராமத்திலும் எந்தவொரு நகரத்திலும் எந்தவொரு மூலையிலும் ஒரு காலிக்கூட்டம் மதத்தின் பெயரால் இப்படியொரு அட்டூழியத்தை நிகழ்த்த முனைந்தால் அதற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து நிற்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தையும் தங்கள் வேட்டைக்காடாக அந்த கும்பல் மாற்றிவிடும். அவர்களின் நடவடிக்கைக்கு எதிர் நடவடிக்கை என்பது மட்டும் போதுமானதல்ல. கொரோனாவை விட கொடிய வைரஸான இந்த வெறுப்பு பிரச்சா ரத்தை முறியடிக்க வேண்டுமென்றால் சிகிச்சை போதாது. தடுப்பூசிகள் அவசியம். அந்த தடுப்பூசி மதச்சார்பின்மையும், மத நல்லிணக்கமும். அதை தெருத்தெருவாக வீடுவீடாக உருவாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. இல்லையேல் நெட்டை நெடு மரமென நின்று புலம்பி இந்தியாவைத் தொலைத்து நிற்போம்.

கட்டுரையாளர் : மாநில செயற்குழு உறுப்பினர்,சிபிஐ(எம்)