articles

img

தேர்தல் பத்திர ஊழல் பாஜகவின் கிரிமினல் குற்றம் -n ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

“தேர்தல் நிதி பத்திரங்கள் தேர்தல் அரசியலில் கருப்புப் பணத்தின் செல்வாக்கை கையாள்வதில் ஒரு முக்கியமான முதல் படியாகும். அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் காலப்போக்கில் கவனித்துக் கொள்ளப்படும். தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவோர் கூடிய விரைவில் வருந்துவார்கள்”.

- சில தினங்களுக்கு முன்பு தந்தி தொலைக்காட்சிக்கு பிரதமர்  அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு திருவாய் மலர்ந்துள்ளார். கடந்த பிப்ரவரி 15  அன்று தேர்தல் நிதி பத்திரம் அரசியல்  சட்டத்திற்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  45 நாட்கள் பொறுத்திருந்து இப்போது, தமது அரசு உருவாக்கிய, அரசியல் சட்டத்திற்கு விரோதமான அந்த திட்டத்தை மோடி நியாயப்படுத்தியிருக்கிறார். மோடி மட்டுமல்ல, இவர்களுக்கெல்லாம் (ஒட்டுமொத்த பாஜக ஒன்றிய அரசுக்கு) நாக்பூரிலிருந்து வழிகாட்டக்கூடிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தேத்ரியா ஹோசேபேல் “தேர்தல் பத்திர திட்டம் திடீரென்று உருவாக்கப்பட்டதல்ல. ஒரு புதிய திட்டம் கொண்டுவரப்பட்டால் சில கேள்விகள் எழத்தான் செய்யும்” என நியாயப்படுத்தியிருக்கிறார்.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை முழுமையாக மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அரசியலில் கருப்புப் பணத்தை ஒழிக்க இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. திட்டத்தை ரத்து செய்வ தற்கு பதிலாக அதை மேம்படுத்தியிருக்க வேண்டும்” என்று  கூறினார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உச்சநீதி மன்ற தீர்ப்பை மதிப்பதாக கூறிவிட்டு நளினமாக நிராகரித்துவிட்டார். தென்சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடக்கூடிய முன்னாள் ஆளுநரும், பாஜகவின் முன்னாள் மாநிலத்  தலைவரு மான தமிழிசை சௌந்தரராஜன் “தேர்தல் நிதி பத்திர திட்டம் ஊழல் ஆகாது” என பேசியிருக்கிறார்.

மேலிருந்து கீழ்வரை ஒட்டு மொத்த பாஜகவின் நிலைபாடு இதுதான். உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்தாலும் பாஜகவினர் திருந்தமாட்டார்கள். பிரதமரில் துவங்கி தமிழிசை சௌந்தரராஜன் வரையில் ‘திருட னுக்கு தேள் கொட்டிய கதையாக’ உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை; முற்றாக நிராகரிக்கவும் முடிய வில்லை. தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாததற்கு முக்கியமான காரணம் உள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தை (Prevention of Money Laundary Act)  பயன்படுத்தி தில்லி  மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் மாநில முத லமைச்சர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டு நாடு முழுவதும் பல எதிர்க்கட்சித் தலைவர்களை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு முதலாளிகள், நிறுவனங்கள் செலுத்திய மொத்த பணம் ரூ.16,492 கோடி.  இதில் ரூ.8252 கோடி பாஜக கட்சிக்கு சென்றுள்ளது. இந்த நிதியை பெறுவதற்கு மத்திய ஆளுங்கட்சியான பாஜக பல வகையான தில்லு-முல்லுகளை செய்தது.

1 தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை ஆகிய வற்றின் அதிகாரிகளை ஏவிவிட்டு  முதலாளிகளின் கம்பெனிகளின் வீடுகளில்,  அலுவலகங்களில் சோதனை செய்வார்கள்.  சோதனைக்கு உள்ளானவர்கள் வேறு வழியின்றி அடுத்த சில வாரங்களில் பாஜகவுக்கு நிதி பத்திரங்கள் மூலம் பெரும்தொகையை செலுத்துவார்கள்.

உதாரணம் :-   நவயுகா என்ஜினியரிங் கம்பெனி - உத்தரகண்ட்  மாநிலத்தில் டன்னல் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடு இல்லாமல் 41 பேர் சிக்கினர். எலி வளை சுரங்க  முறை குழுவினர் தலையிட்டு காப்பாற்றினார்கள். 2018ல் இந்த நிறு வனத்தின் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அடுத்த 6 மாதங்களில் ரூபாய் 30 கோடி பாஜகவுக்கு நிதி அளித்துள்ளது. ஏராளமான உதாரணங்கள் உள்ளன. ஏடு இடம் தராது.

2 கம்பெனிகளுக்கு / கான்ட்ராக்டர்களுக்கு சலுகை மற்றும் அரசு திட்டங்களை  ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யும். சலுகைகளையும் திட்டங்களையும் பெற்ற தற்கு கைமாறாக பெரும்தொகையை பத்திரங்கள் மூலமாக பாஜகவிற்கு செலுத்துவார்கள்.

உதாரணம் - 38 கான்ட்ராக்ட் கம்பெனிகளுக்கு ரூபாய் 3.8 லட்சம் மதிப்புள்ள 179 அரசு கான்ட்ராக்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கான்ட்ராக்ட் கம்பெனிகள் பாஜகவுக்கு பத்திரங்கள் மூலம்  நிதி செலுத்தியுள்ளது. இந்த மோசடி இரண்டு வகையில் நடந்துள் ளது. கான்ட்ராக்டை பெற்ற பிறகு நிதி வழங்கியது. நிதி வழங்கி விட்டு கான்ட்ராக்ட்டை பெறுவது. (போஸ்ட்பெய்ட், ப்ரீபெய்ட்). 

3 கம்பெனிகள் குறிப்பாக மருந்து உற்பத்தி  செய்யும் கம்பெனிகள் மீது தரமற்ற மருந்து என்ற புகார் வருகிறபோது சம்பந்தப்பட்ட கம்பெனிகளை அமலாக்கத் துறை அல்லது சிபிஐயை பயன்படுத்தி சோதனை செய்வார்கள். மருந்து கம்பெனிகள் வழக்கை  சந்திக்க வேண்டியிருக்கும் என்று கருதி பத்திரங்கள் மூலமாக பாஜகவுக்கு நிதி செலுத்தி தப்பிப்பார்கள்.

உதாரணங்கள் - மருந்து உற்பத்தியில் தரம் பற்றிய புகார்களுக்கு உள்ளான 35 கம்பெனிகள் மூலம் (சோதனைக்கு உள்ளான பிறகு) பாஜகவிற்கு ரூபாய் 394 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்துள்ளன.

4நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களும் வரம்பின்றி தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளிப்பதற்கான வாய்ப்பை பயன்படுத்தி (நட்டத்தில் இயங்கும் கம்பெனியாக இருந்தாலும் வரம்பின்றி தேர்தல் பத்திரம் மூலம் நிதி செலுத்திட கம்பெனி சட்டம் திருத்தப்  பட்டது) பல முதலாளிகள் / கான்ட்ராக்டர்கள் போலி கம்பெனி கள் மூலம் (Shell company - இத்தகைய போலி கம்பெனி களில் எந்த உற்பத்தியும், வியாபாரமும் இருக்காது) பத்திரங்கள் வாங்கி பாஜகவிற்கு நிதி செலுத்தியுள்ளனர்.

உதாரணங்கள்  - வெறும் ரூபாய் 1 லட்சம் முதலீடு கொண்ட  நிறுவனமான சஃபல் கோயல் ரியால்ட்டி நிறுவனம், பாஜகவுக்கு ரூபாய் 35 கோடியை தேர்தல் பத்திரங்களாக வழங்கியுள்ளது.  அதைப் போலவே, ரூபாய் 1 லட்சம் மட்டும் முதலீடு செய்யப்பட்ட நிறுவனமான சந்தர் கமர்ஷியல் நிறுவனம் ரூபாய் 20 கோடி பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்களாக அளித்துள்ளது.

இதுபோன்ற பல போலி கம்பெனிகள் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு நிதி அளித்துள்ளன.

5மேற்கண்ட நான்கு விதமான முறையில் மட்டுமல்லாமல், மேலும் பல வடிவங்களில் சட்டவிரோதமான முறை யில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பத்திரங்கள் வாங்கி மத்திய ஆளுங்கட்சிக்கு செலுத்தியுள்ளன.

உதாரணம்: பார்ட்டி தொலைபேசி தனியார் நிறுவனத்திற்கு செயற்கைகோள் அலைக்கற்றை மோடி அரசு வழங்கியது. ஏலத்தின் மூலம் அலைக்கற்றை வழங்க வேண்டுமென்ற பழைய சட்டத்தை திருத்தி திருத்தச் சட்டம் கொண்டு வந்து ஏலம்  இல்லாமலே நேரடியாக பார்ட்டி நிறுவனத்திற்கு அலைக்கற்றை வழங்கப்பட்டது. சட்டத்திருத்தத்திற்கு முன்பும், சட்டம் திருத்தப்பட்ட பிறகும் பார்ட்டி கம்பெனி ரூபாய் 150 கோடி  பாஜகவுக்கு பத்திரங்கள் மூலம் நிதி வழங்கியது. இதன்பெயர் தான் கைமாறு செய்வது.

வெள்ளையான கருப்புப் பணம்
மேற்கண்ட விதங்களில் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு பத்திரங்கள் மூலமாக செலுத்தப்பட்ட நிதி கருப்புப் பணங்கள்தான். இத்தகைய கருப்புப் பணம் தேர்தல் நிதி பத்திரமாக பாஜகவுக்கு செலுத்தி அதை வெள்ளை பணமாக்கியிருக்கிறார்கள்.  இத்தகைய பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட -  பத்திரத்தை   வாங்கிய முதலாளிகளும், நிறுவனங்களும், பத்திரங்களை பெற்றுக் கொண்ட பாஜகவும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றத்தை செய்தவர்கள் ஆவார்கள்.

2002 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் இயற்றப்பட்ட சட்டத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கொண்டு வரப்பட்ட பல திருத்தங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை கருப்புப் பணத்தை நிதியாக கொடுத்தவர்கள் மீதும், கருப்பை வெள்ளை யாக்க நிதியை பெற்றுக் கொண்டவர்கள் மீதும் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.

இத்தகைய நடவடிக்கை எடுப்பதற்கு ஆதாரங்களை தேடி நாட்கணக்கில், மாதக் கணக்கில் சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.  பாரத ஸ்டேட் வங்கி அளித்திருக்கக் கூடிய விபரங்களை வைத்து நேரிடையாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறை யில் அடைத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம். இப்பிரச்சனையில் பாஜக தலைவர் நட்டா மட்டுமல்ல, தேர்தல் நிதி  பத்திரம் சம்பந்தப்பட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறை வேற்றுவதற்கு முக்கிய காரணமான பிரதமர் மோடி உள்ளிட்டு  அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் வழி உண்டு. 

இத்தகைய ஆபத்து உள்ளது என்பதை புரிந்து கொண்டதால் தான் எப்படியாவது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சம்பந்தப்பட்ட விபரங்களை மூடி மறைத்திட மோடி அரசு முயற்சி எடுத்தது. வங்கி நிர்வாகத்தின் மூலம் ஜூன் மாதம் 30 வரையில் விபரங்களை அளிக்க முடியாது என நீதிமன்றத்திற்கு மனு போடச் செய்தனர். உச்சநீதிமன்றத்தினுடைய உத்தரவிற்கு பிறகும் பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் முழு விபரத்தை ஒப்படைக்கவில்லை. மீண்டும் உச்சநீதிமன்றம் கடுமையாக வலியுறுத்திய பிறகுதான் முழு விபரம் வெளிச்சத்திற்கு வந்தது. இன்னமும் கூட நிதி கொடுத்தவர்கள், நிதியை பெற்றவர்கள் என்ற விபரங்கள் முழுமையாக வெளிச்சத்திற்கு வரவில்லை.

திருத்தப்பட்ட சட்டங்கள்
இதையெல்லாம் நன்கு அறிந்த பாஜக தலைமை, தேர்தல் நிதி பத்திரத் திட்டத்தை உருவாக்குவதற்கு 1. கம்பெனி சட்டம், 2. வருமான வரி சட்டம், 3. தேர்தல் பிரதிநிதித்துவ சட்டம், 4. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 5. வெளிநாட்டு நிதி பராமரிப்பு சட்டம் ஆகிய ஐந்து சட்டங்களை திருத்தினார்கள். அன்றைய இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரும், மத்திய தேர்தல் ஆணையரும் இந்த  இரண்டு சட்டங்களையும் திருத்தக்கூடாது என்று மோடி அரசுக்கு எழுத்து மூலம் ஆட்சேபணை  தெரிவித்திருந்தனர். அவர்களுடைய ஆட்சேபணைகளை நிராகரித்து அந்த சட்டங்கள் திருத்தப்பட்டன. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் அந்நியர் ஆட்சியின்போது 1934 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் அன்றாட வேலை
தேர்தல் நிதி பத்திர திட்டத்தை உருவாக்கியது மட்டுமல்ல நாடு முழுவதும் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு நிதி அளிக்காத, குறைவாக நிதி அளித்த, பல புகார்களில் சிக்கியுள்ள முதலாளிகளை, கம்பெனிகளை மிரட்டுவதற்கு அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை ஆகிய வற்றை ஏவிவிட்டார்கள். யார் நிதி கொடுத்தார்கள், யார் கொடுக்க வில்லை என்பதை கண்டறிந்து மிரட்டுவதற்கு பெரிய வலைப் பின்னல் போன்ற திட்டத்தை உருவாக்கி செய்திருக்கிறார்கள். மேலும், ஒன்றிய அரசின் பல திட்டங்களை கான்ட்ராக்ட் கொடுப்ப தன் மூலமும் முதலாளிகளுக்கு சலுகை அளிப்பதன் மூலமும் தேர்தல் நிதி பாஜக பெற்றிருக்கிறது. இந்த தில்லு -முல்லு  வேலைகளையே பாஜகவினர் அன்றாட வேலையாக செய்திருக்கின்றனர். இதற்கான ஏற்பாட்டையும் நுட்பமாக பாஜக தலைமை செய்திருக்கிறது. இதனால்தான் தேர்தல் நிதி பத்திர ஊழல் உலக மகா ஊழல் என்று வல்லுநர்கள் வர்ணித்துள்ளனர்.

சுதந்திர இந்தியாவில் இதுவரையில் கண்டிராத பாஜகவின்  மகா ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வர, சம்பந்தப்பட்ட வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு அமைப்பை ஏற்படுத்தி விசாரிக்க வேண்டுமென இந்தியா கூட்டணி கட்சிகள் வலி யுறுத்தியுள்ளன.