1991 மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி இந்தியாவில் 3,372 மொழிகள் மக்க ளால் பேசப்படுகின்றன. இவற்றில் வகைப்படுத்தப்பட்ட மொழிகள் 1576. வகைப் படுத்தப்படாத மொழிகள் 1896. இந்திய அரசியல் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், 39 மொழிகளை 8-ஆவது அட்டவணையில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
அரசியல் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஒன்றிய அரசு, ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. ஆனால், ஒன்றிய அரசுகள் இதை ஏற்கவில்லை. இப்போது, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு சமஸ்கிருதம் மற்றும் இந்தித் திணிப்பில் மூர்க்கத்தன மாக ஈடுபட்டுள்ளது. ஒன்றிய அரசு உருவாக்கியுள்ள புதிய கல்விக்கொள்கையில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தித் திணிப்பு என்பதுகூட அவர்களது தற்காலிக திட்டமே.
சமஸ்கிருதமயமாக்கச் சதி
ஒரே நாடு, ஒரே மொழி என்ற பெயரில் இந்தி யாவை பாரத் என்று பெயர் மாற்றி சமஸ்கிருத மய மாக்குவதே இவர்களது நோக்கம். சமஸ்கிருத மொழியை தேவ பாஷை என்றும், ஏனைய அனைத்து மொழிகளையும் நீச பாஷை என்றும் ஆர்எஸ்எஸ் பரிவாரம் கருதுகிறது. இந்தாண்டு விஜயதசமி அன்று நடைபெற்ற கூட்டத்தில்கூட, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அனைத்து அறிவும் சமஸ்கிருத மொழியிலேயே உள்ளது. வேதம் சொல்லப்பட்ட மொழி சமஸ்கிருதம் என்பது மட்டுமல்ல, கணிதம், அறி வியல் என அனைத்தும் சமஸ்கிருதத்தில் உள்ளது என்று கூறியுள்ளார்.
இதனால்தான் சமஸ்கிருத வளர்ச்சிக்கு அள்ளித் தரும் மோடி அரசு தமிழ் உள்ளிட்ட ஏனைய மொழி களுக்கு கிள்ளிக்கூட தருவதில்லை. கடந்த 8 ஆண்டு களில் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ.1488 கோடியை அள்ளி வழங்கிய மோடி அரசு, தமிழ் வளர்ச்சிக்கு வெறும் ரூ.74.1 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்.
கூட்டாட்சி முறைக்கு குழிபறிப்பு
மொழிவழி மாநிலம் என்பதையே ஏற்காதது இந்துத்துவா கூட்டம். அதிகாரங்கள் குவிக்கப்பட்ட ஒன்றிய அரசு, அடையாளம் இல்லாத மாநில அரசுகள் என்பது ஜனசங்க காலத்திலிருந்தே அவர்களது கோட்பாடு. மொழிவழி மாநிலங்களுக்குப் பதிலாக வேத காலத்தில் இருந்ததாக சொல்லப்படும் ‘ஜன பாதம்’ என்ற பெயரில் மாநிலங்களை பிரிக்கலாம் என்பதும், ஆனால் அந்த மாநிலங்களுக்கு அதி காரம் எதுவும் இல்லாமல், ஒன்றிய அரசுக்கு அடுத்த படியாக உள்ளாட்சி அமைப்புகள் இருந்தால் போதும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் நிலைப்பாடாக இருந்தது. அதனால்தான் தற்போது கூட்டாட்சி முறையை குறிவைத்து மாநிலங்களின் அதிகாரங்களையும் உரிமைகளையும் பறித்து வருகிறார்கள்.
ஆனால், இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கிற, பல்வேறு மொழிகளை பேசக் கூடிய, மக்கள் வாழும் ஒரு பரந்த நிலப்பகுதி என்ற அடிப்படையில், இந்திய விடுதலைப் போராட்டத்தின் போதே மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்பின் முர ணின்றி முன்வைத்தது கம்யூனிஸ்ட் இயக்கம்.
1946 ஆம் ஆண்டு இந்தியாவின் எதிர்கால ஆட்சி முறை குறித்து விவாதிக்க பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தூதுக்குழு அமைக்கப்பட்ட போது, இந்தக் குழுவிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அளித்த மனுவில், எதிர்கால சுதந்திர இந்தியா என்பது பல்வேறு தேசிய இன மக்கள் வாழும் சுயாட்சி கொண்ட மாநிலங்களாக பிரிக்கப்பட்டு, அவை இணைக்கப்பட்ட ஒன்றியமாக உருவாக்கப்பட வேண்டும் என்று தெளிவான பார்வையை முன்வைத்தது.
நாடு விடுதலை பெற்ற பிறகு, மொழிவழி மாநி லங்கள் என்ற முழக்கத்தை கம்யூனிஸ்டுகள் மீண்டும் முன்வைத்தார்கள். தெலுங்கு மொழி பேசும் மக்களை கொண்டு ஆந்திரா மாநிலம் அமைக்கப்பட வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலு வின் போராட்டத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் ஆத ரித்தது. அவருடைய தியாகத்தை போற்றியது.
ரத்தம் சிந்திய ஜீவா, எம்.ஆர்.வெங்கட்ராமன்
ராஜாஜி போன்றவர்கள் மொழிவழி மாநிலங்க ளுக்கு மாற்றாக தட்சிணப் பிரதேசம் அமைக்கலாம் என்ற யோசனையை முன்வைத்த போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்த அறிக்கையில், “ராஜ்ய புனரமைப்பு கமிசன் முடிவுகள் வெளிவர இருக்கும் சமயத்தில் இந்த கோஷம் கிளப்பப்பட்டுள்ளது. இது மொழிவழி மாகாண அமைப்புக்கு உலை வைக்கவே என்பது தெளிவு” என்று கூறப்பட்டுள்ளது.
தட்சிணப் பிரதேசத் திட்டத்தை கைவிட்டு, மொழிவழி மாநிலம் அமைக்கப்பட வேண்டும். எல்லைக் கமிசன் அமைத்து, மாநில எல்லைகள் குறித்து ஜனநாயக வடிவில் தீர்வு காண வேண்டும். சென்னை மாகாணம் என்பதற்கு பதிலாக தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்துக் கட்சி குழு அமைக்கப் பட்டது. இதன் சார்பாக விடுக்கப்பட்ட அறைகூவல் அடிப்படையில், 1956 பிப்ரவரி 20 ஆம் தேதி சென்னை யில் பி அண்ட் சி-யின் மில் தொழிலாளர்கள் 14 ஆயிரம் பேரும், ஹோட்டல் தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேரும் வேலைநிறுத்தம் செய்தனர். 50 ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஊர்வலத்தில் காவல்துறையினர் நடத்திய தடியடியில் தோழர் ஜீவா தாக்குதலுக்கு உள்ளாகி மயங்கி விழுந்தார். தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் மீது நடந்த தாக்குத லில் அவரது மூக்குக் கண்ணாடி உடைந்து, நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஜீவா,எம்.ஆர்.வி. கே.முத்தையா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சட்டமன்றத்தில் தாய்மொழியில் முழங்கிய கம்யூனிஸ்ட்டுகள்
சென்னை மாகாண சட்டமன்றத்தில், தமிழ் நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்கள் தமிழிலும், கேர ளத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்கள் மலையாளத்திலும், ஆந்திரப் பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்கள் தெலுங்கிலும் பேசினர். சட்டமன்றத்தில், அவரவர் தாய்மொழியில் கம்யூனிஸ்ட்கள் கம்பீரமாக முழக்கமிட்டனர்.
சென்னை ராஜதானி என்பதற்கு பதிலாக, தமிழ்நாடு என்று பெயர்சூட்டக் கோரி விருதுநகர் தியாகி சங்கரலிங்கனார் மேற்கொண்ட உண்ணா நிலை போராட்டத்திற்கு முழு ஆதரவு மட்டுமல்ல, பாது காப்பும் அளித்தது கம்யூனிஸ்ட்கள். அதனால்தான் அவர் தாம் இறந்த பிறகு, தம்முடைய உடலை கம்யூ னிஸ்ட்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி, உண்ணாவிரதம் இருந்து அவர் காலமான போது, மதுரையில் அவரது உடலைப் பெற்று கே.பி.ஜானகியம்மாள், கே.டி.கே.தங்கமணி, என்.சங்கரய்யா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் தத்தனேரி மயானத்தில் இறுதிநிகழ்ச்சி நடத்தினர் என்பது வரலாறு.
ஆட்சி மொழியாக தமிழ் வர...
1952 ஆம் ஆண்டிலிருந்தே தமிழக கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் தமிழிலேயே உரை யாற்றத் துவங்கிவிட்டனர். 1953 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் தோழர் பி.ராம மூர்த்தி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தமிழி லேயே உரையாற்றினார். பொருளாதாரப் பிரச்சனைக ளையும் தமிழில் பேச முடியும் என்பதை பி.ராமமூர்த்தி நிரூபித்து விட்டார் என, நிதியமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம் குறிப்பிட்டார்.
சட்டமன்றத்தில் ஆட்சிமொழி குறித்து விவாதம் வந்தபோது தோழர் ஜீவா, “நான் தமிழன். என்னு டைய மொழியே இந்த ராஜ்யத்தில் ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென்பது என்னுடைய கோரிக்கை. கல்விக் கூடங்களிலும், ஆட்சி மன்றத்திலும், நியாய மன்றத்திலும், நிர்வாகத் துறையிலும் பிரதேச மொழியே இயங்க வேண்டும். ஆகவே வெகுசீக்கிர மாக தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க அரசிய லார் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன். உயர்நீதிமன்றத்தி லும், தமிழ்மொழிதான் கையாளப்பட வேண்டும். கல்வியைப் பொறுத்தவரையில் பல படிகளிலும் தமிழ்மொழியே போதனா மொழியாக இருக்க வேண் டும். ஜனநாயகத்தின் முதல் அடிப்படையான கொள்கை இதுதான். இப்படிச் செய்தால்தான் ஜன நாயகத்தின் முதல் வடிவம் சிருஷ்டிக்கப்படும். தமிழ் தெரிந்தால் போதும், இந்நாட்டின் ஆட்சியாளராகவும் ஆகலாம்; உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் ஆகலாம். கல்லூரிப் பேராசிரியர்களாகவும் ஆகலாம் என்னும் காலம் உண்டாக வேண்டும்...” என்று முழங்கினார்.
தமிழக சட்டமன்றத்தில் இந்தியா, ஆங்கிலமா? என்ற விவாதம் நடைபெற்ற போது, தாய்மொழியாம் தமிழ் மொழியே அனைத்துத் துறைகளிலும் தலைமை தாங்க வேண்டுமென முழங்கியர்கள் கம்யூனிஸ்ட்கள். தோழர்கள் ஏ.பாலசுப்ரமணியம், என்.சங்கரய்யா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆட்சிமொழி சட்டம் குறித்த விவாதத்தில் முன்வைத்த கருத்துகள் காலம் கடந்து இன்றும் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறையாக உள்ளன.
கலை இலக்கிய பங்களிப்பு...
தமிழ் பண்பாட்டிற்கும், இலக்கியத்திற்கும் கம்யூனிஸ்ட்கள் ஆற்றியுள்ள பணி இலக்கியத்தின் திசை வழியையே திருத்தி அமைத்த ஒன்றாகும். மக்கள் இலக்கியத்தை தமிழில் முன்னெடுத்ததில் கம்யூனிஸ்ட்களுக்கு கணிசமான பங்கு உண்டு. இலக்கியத் திறனாய்வில் மார்க்சிய நோக்கு புதுப் பாய்ச்சலை உருவாக்கியதை யாரும் மறுக்க முடியாது. வாய்மொழி இலக்கியங்களாக இருந்த நாட்டுப்புற இலக்கியங்களை ஆவணப்படுத்தி, அதை இலக்கியத்தின் ஒரு துறையாக மாற்றியதில் பொது வுடமை இயக்கத்திற்கு முக்கியப் பங்கு உண்டு.
1936 இல் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவான நிலையில், தமிழகத்திலும் முற்போக்கு இலக்கிய இயக்கங்களை உருவாக்கி, முற்போக்கு இலக்கிய மரபை முன்னெடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்கள்.
தனித்தன்மை பாதுகாப்பு- ஒருமைப்பாடு பாதுகாப்பு
இன்றைக்கு ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற பாஜக கூட்டணி அரசு, தாய்மொழிகளைத் தள்ளிவைத்து, சமஸ்கிருத, இந்தித் திணிப்பில் ஈடு படும் நிலையில், அரசியல் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் மொழி உள்ளிட்ட 22 மொழிகளையும் ஒன்றிய ஆட்சிமொழி யாக்க வேண்டும். மொழித் திணிப்புக்கு பதிலாக மொழி சமத்துவம் வளர்க்கப்பட வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தி வருபவர்கள் கம்யூனிஸ்ட் கள். ஒன்றிய அளவிலான வேலைவாய்ப்புக்கான தேர்வுகள் அனைத்தையும் அவரவர் தாய்மொழியில் எழுதிட வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தி லும், மக்கள் மன்றத்திலும் கம்யூனிஸ்ட்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.
நீதித்துறையின் அனைத்து நிலைகளிலும் தடையின்றி தாய்மொழி புழங்க வேண்டும் என்றும், துவக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தாய்மொழியில் பயில தடை இருக்கக் கூடாது எனவும் அவரவர் தாய்மொழியில் வழிபாடு செய்யும் உரிமை வேண்டும் எனவும், களைப்பின்றி போராடி வருபவர்கள் கம்யூனிஸ்ட்கள்.
நவம்பர் 1 ஆம் தேதி என்பது மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள் என்பது மட்டுமல்ல, தமிழ் மொழி பேசும் மக்களைக் கொண்ட ஒரு மாநிலம் உருவான நாளும் ஆகும். இலக்கியங்க ளில் தமிழ்நாடு என்ற பெயர் பல இடங்களில் காணப் படுகிறது. ஆனால், தமிழ்நாட்டின் ஆளுநர் தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது என சொன்ன போது, அதை கண்டித்த குரல்களில் கம்யூனிஸ்ட்களின் குரல்களும் காத்திரமாக ஒலித்தது. மொழிவழி மாநிலங்கள் பாதுகாக்கப்படுவது என்பது தேசிய இனங்களின் தனித்தன்மையை பாது காப்பதற்காக மட்டுமல்ல, இந்தியாவின் ஒருமைப் பாட்டை பாதுகாக்கவும் அவசியமான ஒன்றாகும்.