articles

பாட்டாளி வர்க்கத்தின் சங்கநாதம் சங்கரய்யா மறைந்தார் - கே.பாலகிருஷ்ணன்

சுதந்திரப் போராட்ட வீரர் - இந்திய கம்யூனிஸ்ட் இயக்க முதுபெரும் தலைவர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 தலைவர்களில் ஒருவர்
பாட்டாளி வர்க்கத்தின் சங்கநாதம்

சங்கரய்யா மறைந்தார்

செங்கொடி தாழ்த்தி அரசியல் தலைமைக்குழு, மாநிலக்குழு அஞ்சலி
அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும் தியாக வாழ்க்கை
முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தி: தகைசால் தமிழர் – முதுபெரும் பொது வுடைமைப் போராளி – விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா அவர்கள் மறைந்த செய்தியால் துடிதுடித்துப் போனேன். மருத்துவமனையில் சிகிச்சை க்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் விரைந்து நலம் பெற்று விடுவார் என்றே நம்பியிருந்த வேளையில் அவர் மறைந்த செய்தி வந்து அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்தது.

மிக இளம் வயதிலேயே பொதுவாழ்க்கை யில் ஈடுபட்டு, 102 வயது வரை இந்திய நாட்டுக் காகவும், உழைக்கும் வர்க்கத்துக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் வாழ்ந்து மறைந்த  தோழர் சங்கரய்யா அவர்களின் வாழ்க்கை யும் தியாகமும் என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவ ராக இருந்தபோதே விடுதலை வேட்கை யோடு மாணவர் சங்கச் செயலாளராகப் போராட்டங்களை முன்னெடுத்தவர் தோழர் சங்கரய்யா அவர்கள். அவரது தேசியம் சார்ந்த செயல்பாடுகளால் பலமுறை சிறை யில் அடைக்கப்பட்டு படிப்பைத் துறந்தவர். இந்தியா விடுதலை பெறுவதற்கு 12 மணி  நேரத்துக்கு முன்னர்தான் அவர் விடுதலை செய்யப்பட்டார். இப்படிப்பட்ட விடுதலைப் போராட்ட வீரருக்கு 2021-ஆம் ஆண்டு விடுதலை நாளினை முன்னிட்டு நேரில் சென்று, முதல் ‘தகைசால் தமிழர்’ விருதை வழங்கியது எனக்குக் கிடைத்த வாழ்நாள் பேறு! விருதோடு கிடைத்த பெருந்தொகையைக் கூட கொரோனா நிவாரண நிதிக்காக அரசுக்கே அளித்த தோழர் சங்கரய்யா அவர்களின் மாண்பால் நெகிழ்ந்து போனேன்.

தோழர் சங்கரய்யா அவர்கள் ஒரு சிறந்த சட்டமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்து நினைவுகூரத்தக்க பல பணிகளை ஆற்றியவர். தலைவர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பராக விளங்கிய சங்கரய்யா அவர்கள், தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவுற்றபோது, அவரது இறுதிப்பய ணத்தைக் கண்டு கண்கலங்கிய காட்சி இருவருக்குமான நட்பைப் பறைசாற்றியது!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும், அதன் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யிலுமாக இருந்து அவர் நடத்திய போராட்டங்களும், தீக்கதிர் நாளேட்டின் முதல் பொறுப்பாசிரியர் முதலிய பல்வேறு பொறுப்புகளில் ஆற்றிய செயல்பாடுகளும் தமிழ்நாட்டின் பொதுவுடைமை இயக்க வரலாற்றில் அவரது தவிர்க்க முடியாத ஆளுமையை வெளிக்காட்டும்.

பொதுத் தொண்டே வாழ்க்கையென வாழ்ந்த இச்செஞ்சட்டைச் செம்மலுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என இந்த ஆண்டு ஜூலை 15 அன்று நான் அறிவிப்பு செய்திருந்தும், தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வர லாற்றை அறியாத – குறுகிய மனம் படைத்த சிலரது சதியால் அது நடந்தேறாமல் போன தை எண்ணி இவ்வேளையில் மேலும் மனம் வருந்துகிறேன்.

தகைசால் தமிழர், முனைவர் மட்டுமல்ல, அவற்றிற்கும் மேலான சிறப்புக்கும் தகுதி வாய்ந்த போராளிதான் தோழர் சங்கரய்யா அவர்கள். சிறப்புகளுக்கு அவரால் சிறப்பு என்று சொல்லத்தக்க அப்பழுக்கற்ற தியாக வாழ்வுக்குச் சொந்தக்காரர் அவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் களுக்கும், தமிழ்நாட்டுக்கும் தோழர் சங்கரய்யா அவர்களின் மறைவு எப்போதும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது அனுபவமும் வழிகாட்டலும் இன்னும் சில ஆண்டுகள் கிடைக்கும் என எண்ணியிருந்த எனக்கு அவரது மறைவு தனிப்பட்ட முறை யிலும் பேரிழப்பு.

சாதி, வர்க்கம், அடக்குமுறை, ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடிய போராளி சங்கரய்யாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், பொது வுடைமை இயக்கத் தோழர்கள், பல்வேறு அர சியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலைப் போராட்ட வீரராக, சட்ட மன்ற உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்.

வாழ்க்கையே பாடமாக அமைந்திடும் வரலாறு

முதுபெரும் சுதந்திர போராட்டவீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் என்.சங்கரய்யா (102), வயது மற்றும் உடல் நலக் குறைவின் காரணமாக இன்று (நவம்பர் 15) காலை 9.30  மணியளவில் சென்னை மருத்துவமனையில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவருக்கு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.

தற்போதைய தூத்துக்குடி மாவட்டத் தில் உள்ள ஆத்தூரை பூர்வீகமாக கொண்டது தோழர் என்.சங்கரய்யா வின் குடும்பம். நரசிம்மலு-ராமானு ஜம் தம்பதியினருக்கு 1922 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள், 2-வது  மகனாக பிறந்தார் என்.சங்கரய்யா. அவருக்கு முதலில் பிரதாப சந்திரன் என்று பெயர் வைக்கப்பட்டு, பின் னர் அவருடைய பாட்டனாரின் பெய ரான சங்கரய்யா என்ற பெயர் சூட்டப் பட்டது.

மதுரை நகராட்சியில் பொறி யாளராக பணி கிடைத்ததை ஒட்டி, நரசிம்மலுவின் குடும்பம் மதுரைக்கு இடம் பெயர்ந்தது. புனித மரி யன்னை உயர்நிலைப் பள்ளியிலும் ஐக்கிய கிறிஸ்தவ உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வியை முடித்தார் சங்கரய்யா. 1937ஆம் ஆண்டில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார். மாணவ பருவத்திலேயே இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்திலும், விடு தலை போரிலும் தீரத்துடன் பங் கேற்ற தலைவராக விளங்கினார். அவர் முன்னணியில் நின்று ஒருங்கி ணைத்த கூட்டங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.  “We are not job hunters; we are  freedom hunters”  என்ற முழக்கத்து டன் களம் கண்டதை எப்போதும் பெருமையுடன் நினைவு கூர்வார் என்.சங்கரய்யா.

நாட்டின் அரசியல் விடுதலை யோடு சமுதாய விடுதலையையும் லட்சியமாகக் கொண்டு 1940 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். விடுதலை போராட்ட த்தை ஒடுக்க முற்பட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சி நிர்வாகம் மாண வர் சங்கரய்யாவையும் கைது செய்தது. பட்டப்படிப்பின் இறுதித்  தேர்வுக்கு 15 நாள்களே இருந்த நிலையில் கைது செய்யப்பட்ட சங்கரய்யா வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.  கல்லூரி கல்வி பாதியில் நின்றது. கல்வியா? நாட்டின் விடுதலையா? என்ற கேள்விக்கு நாட்டின் விடுதலையும், பொது வாழ்க்கையும் முக்கியம் என முடிவு செய்தார். நாட்டின் விடுதலை போராட்டத்தை முன் னெடுக்கும் பணியை மேற்கொண்ட துடன் 1942 ஆம் ஆண்டு தனது 21வது வயதில் ஒன்றுபட்ட கம்யூ னிஸ்ட் கட்சியின் அன்றைய மதுரை மாவட்டச் செயலாளராக திறம்பட செயலாற்றினார்.

1946-ஆம் ஆண்டு இந்தியாவை உலுக்கிய கப்பற்படை எழுச்சி பம்பாயில் தொடங்கி கல்கத்தா, சென்னை என்று அனைத்துப் பகுதி களுக்கும் பரவியது.  இந்தப் பின்னணியில் தான் கம்யூனிஸ்ட்டு கள் மீது மதுரை சதி வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மீண்டும் சிறைப்படுத்தப்பட்ட தோழர் கள் என்.சங்கரய்யா, பி.ராம மூர்த்தி, கே.டி.கே. தங்கமணி ஆகிய தலைவர்கள் 1947 ஆகஸ்ட் 14ஆம்  தேதி இரவுதான் விடுதலையானார்கள்.

விடுதலைப் போராட்டத்தின் போதும், அதன்பின்னரும் எட்டு  ஆண்டுகள் சிறையிலும், நான்கு  ஆண்டுகள் தலைமறைவாகவும் இருந்து இயக்கப் பணியாற்றி யவர் தோழர் என்.சங்கரய்யா. தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்கி வளர்த்த வர்களில் ஒருவர். ஒன்றுபட்ட கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சிலி லிருந்து வெளிநடப்பு செய்த 32  தலைவர்களில் என்.சங்கரய்யா வும் ஒருவர். 1964ஆம் ஆண்டு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  (மார்க்சிஸ்ட்) உருவானபோது அதில் முக்கியப் பங்காற்றிய தலை வராக தோழர் என்.சங்கரய்யா இருந்தார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் மற்றும் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஆகிய  பொறுப்புகளிலும் திறம்பட செய லாற்றினார். 1995 முதல் 2002 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு  மாநிலக்குழுவின் செயலாளராக வும் பணியாற்றினார்.

1967, 1977 மற்றும் 1980 தேர்தல் களில் போட்டியிட்டு மதுரை மேற்கு மற்றும் மதுரை கிழக்கு தொகுதி களிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்சி மொழியாக தமிழே விளங்க வேண்டும் என்று கர்ஜித்த சிம்மக் குரல் அவருடையது. பேரவையில் பாட்டாளி வர்க்கத்தின் குரலாக விளங்கினார். ஏகாதிபத்திய எதிர்ப்பு, மக்கள் ஜனநாயகப் புரட்சி  என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  (மார்க்சிஸ்ட்) திட்டத்தின் அம்சங் களை பின்பற்றுவதில் உறுதியாக நின்றவர். அவருடைய உரைகளில் உழைக்கும் வர்க்கத்தின் கருத்துக் களை எளிமையாகவும், வலிமை யாகவும் வெளிப்படுத்திய ஆற்றல்மிக்க பேச்சாளர்.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தை வளர்த்தெடுத்த தலை வர்களில் ஒருவரான என்.சங்க ரய்யா, அகில இந்திய பொதுச் செய லாளர் மற்றும் அகில இந்திய  தலைவர் உள்ளிட்ட பொறுப்பு களை வகித்தவர். தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் தலைவராக நெடுங்காலம் பணியாற்றியவர்.

தீக்கதிர் நாளேடு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அதிகாரப் பூர்வ ஏடாக அறிவிக்கப்பட்டு வெளி வந்த போது, முதல் ஆசிரியராக பணி யாற்றியவர். சாதிய வன்முறை மற்றும் வகுப்புவாத அபாயம் தலை தூக்கிய நேரங்களில் அதற்கு எதிராக மக்களை ஒற்றுமைப்படுத்து வதில் முக்கிய பங்கு வகித்தவர்.

சொந்த வாழ்க்கையில் கம்யூ னிஸ்ட் நெறிமுறைகளை இறுதி வரையிலும் கடைப்பிடித்தவர் தோழர் என்.சங்கரய்யா. கட்சிக்  குடும்பத்தைச் சேர்ந்த நவமணியுட னான அவரது திருமணம் சாதி-மத மறுப்பு காதல் திருமணமாகும். இந்தத் தம்பதியருக்கு சந்திரசேகர், நரசிம்மன் என்ற மகன்களும், சித்ரா என்ற மகளும் உள்ளனர். தன்னு டைய குடும்பத்தில் அனைவரும் சாதி-மத மறுப்பு திருமணம் செய்து கொள்ள காரணமாக அமைந்தவர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தகைசால் தமிழர் விருதை உரு வாக்கி, முதல் விருதை தோழர் சங்க ரய்யாவுக்கு அவரது நூறாவது பிறந்த நாளின் போது வழங்கி சிறப்பித்தார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின ருக்கும், தமிழ்நாட்டின் இளம் தலை முறைக்கும் முன்னுதாரணமாக அமைந்த அப்பழுக்கற்ற தொண்ட றம் தோய்ந்த தூய வாழ்க்கைக்கு சொந்தக்காரர். அவருடைய இழப்பு இட்டு நிரப்ப முடியாத, ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். எப்போதும் போராட்ட வரலாறாக அவருடைய வாழ்க்கை ஒளிவீசி நமக்கு வழி காட்டும். அவரை இழந்து துயருற்று ள்ள குடும்பத்தினர் அனைவருக் கும் கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அனைத்து கிளை களும் கட்சியின் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறும், அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து, ஒரு வாரம் துக்கம் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தோழர் சங்கரய்யா சமரசமின்றி பின்பற்றிய புரட்சிகர உணர்வு மற்றும் கொள்கைகளை உறுதியாக பின்பற்றுவோம்.

- கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்