தமிழக அரசு ஊழியர்களின் போராட்ட வரலாற்றில் 1984 மே 6 ஒரு திருப்புமுனை. அன்றுதான் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உதயமானது. அதன்பிறகே நமது உரிமைப் போராட்டங் கள் ஒரு புதிய பரிமாணத்தை அடைந்தன. வீரம் செறிந்த ஒற்றுமையான போராட்டங்கள் மூலம் பல வெற்றிகளை நாம் குவித்தோம்.
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், மருத்துவப்படி, போனஸ், தனி ஊதியம் என பல கோரிக்கைகளை வென்றெடுத்தோம். ஒன்றிய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி பெற்ற அதே நாளில் நாமும் பெறும் உரிமையை நிலைநாட்டி னோம். நிபந்தனையற்ற தேர்வுநிலை, சிறப்பு நிலை ஆகியவற்றுடன், ஊதியத்தில் இருந்த குறைபாடுகள், முரண்பாடுகள் அனைத்தையும் களைந்து ஊதிய உயர்வும் பெற்றோம்.
2002-2003 : கடும் சவால்களை எதிர்கொண்ட காலம்
புதிய பொருளாதாரக் கொள்கையின் இரண்டாம் கட்ட அமலாக்கம் நம்மை கடுமையாக தாக்கியது. பண்டிகை முன்பணம், சரண்டர் லீவு, பணிக்கொடை, சேமநல நிதி என அனைத்தும் பறிபோனது. ஆனால் நாம் தளரவில்லை. எழுச்சிமிகு போராட்டங்கள் மூலம் இழந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுத்து வரலாறு படைத்தோம்.
1984 முதல் இன்று வரை நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவரையும் பாது காத்த பெருமை நம் சங்கத்திற்கு உண்டு. வேலைநிறுத்த காலங்களை கூட பணிக்காலமாக கணக்கிட வைத்து, எந்த ஊழியரும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டோம்.
இன்றைய போராட்டக் களம்
2016 முதல் இன்று வரை ஜாக்டோ-ஜியோவுடன் இணைந்தும், தனியாகவும் பல முக்கிய கோரிக்கைகளுக்காக போராடி வருகிறோம். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் பெற வேண்டும் என்பது முதன்மையான கோரிக்கை. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சரண்டர் விடுப்பு சலுகையை மீட்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.
சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், ஊராட்சி செயலாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்ட ஊழியர்கள் என அனைவருக்கும் சிறப்பு கால முறை ஊதியம் வேண்டும். தொகுப்பூதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியமும், ஓய்வூதியமும் வழங்கப்பட வேண்டும்.
சாலைப் பணியாளர்களின் வாழ்வில் ஒரு கறுப்புப் புள்ளியாக இருக்கும் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக கணக்கிட வேண்டும். 2016 ஜனவரி 1 முதலான ஊதிய மாற்ற நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டும்போன்ற, அரசுத் துறைகளில் நிலவும் ஒப்பந்த முறை, வெளி முகமை மூலம் ஆள் எடுப்பது போன்ற கொத்தடிமை முறைகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.
சமீபத்திய வெற்றிகளும் சவால்களும்
2017ஆம் ஆண்டு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டம் ஒரு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், 2017 அக்டோபர் 1 முதல் ஒன்றிய அரசுக்கு இணையான ஊதிய மாற்றத்தை பெற்றோம். உயர்நீதிமன்றமே நமது போராட்டத்தை தடை செய்த போதிலும், அதே வழக்கை ஆயுதமாக்கி நீதிமன்றத்திலும் வீதி மன்றத்திலும் போராடி உரிமையை வென்றெடுத்தோம். கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட அகவிலைப்படியை கூட மீட்டெடுத்த பெருமை நமக்கு உண்டு.
ஓய்வூதியப் போராட்டத்தின் வரலாறு
2003ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு, 2004 ஜனவரி 1 முதல் புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்தது. அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் வழிகாட்டுதலின்படி, அன்று முதல் இன்று வரை இந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங் களை நடத்தி வருகிறோம். இதன் விளைவாக, கடந்த 20 ஆண்டுகளாக பழைய ஓய்வூதியத்திற்கான கோரிக்கை உயிர்ப்புடன் இருக்கிறது.
முதல்வரின் வாக்குறுதியும் அரசின் மௌனமும்
தமிழக முதல்வர் பல முக்கியமான வாக்குறுதி களை அளித்துள்ளார். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதாக உறுதி யளித்தார். ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்தும் இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவின் நான்கு மாநிலங்கள் ஏற்கனவே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு திரும்பியுள்ளன. ஆனால் தமிழக அரசோ இன்னும் மௌனம் காக்கிறது.
14வது மாநில மாநாட்டில் வாக்குறுதிகள்
2021 டிசம்பர் 17-18 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற நமது சங்கத்தின் 14வது மாநில மாநாட்டில் முதல்வர் கலந்து கொண்டார். அப்போது அவர், “நான் உங்களில் ஒருவன். கவலைப்பட வேண்டாம். நிதி ஆலோசனை நிலைமையை சரி செய்து படிப்படியாக கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். தேர்தல் கால வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்று வேன்” என்று உறுதியளித்தார். மாநாடு முடிந்த சில நாட்களிலேயே 14 சதவீத அகவிலைப்படி அறிவிக்கப் பட்டது. ஆனால் அதன் பிறகு நிதியமைச்சர் சட்டமன்றத்தில் “பழைய ஓய்வூதியம் சாத்திய மில்லை” என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனைக் கண்டித்து மாநில செயற்குழு கூட்டப்பட்டு, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
தற்போதைய போராட்டங்களும் எதிர்கால திட்டங்களும்
2022 ஜூன் மாதம் நாம் மேற்கொண்ட பரந்துபட்ட போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. ஜூன் 20 முதல் 24 வரை தமிழ்நாட்டின் ஏழு முனைகளிலிருந்தும் ஊழியர் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடத்தினோம். அதே ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணி நடத்தினோம்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் 2022ஆகஸ்ட் 5 அன்று மாவட்ட தலைநகரங்களில் முக்கியகோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்
பட்டன. குறிப்பாக:
- தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுதல்
- 2022 ஜனவரி 1 முதல் வழங்க வேண்டிய 3% அகவிலைப்படியை உடனடியாக வழங்குதல் ஜாக்டோ-ஜியோ நடத்திய ஓய்வூதிய உரிமை மீட்பு மாநாட்டில் பங்கேற்க முதல்வரை அழைத்தபோது, “உங்களது சிலகோரிக்கைகளையாவது நிறைவேற்றிவிட்டுத்தான் அந்த மாநாட்டிற்கு வருவேன்” என்று கூறினார்.
ஜாக்டோ - ஜியோ மாநாட்டில்...
தமிழக அரசு ஊழியர்கள் இயக்க வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பல அமைப்புகளை ஒன்றிணைத்து, லட்சக்கணக்கான ஊழியர்களை ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட ஜாக்டோ-ஜியோ வாழ்வாதார மாநாட்டில் முதல்வர் பேசுகையில், “திமுகவின் வெற்றி அரசு ஊழியர் ஆசிரியர்களால் கிடைத்த வெற்றி” என்பதை மறக்கவில்லை. மேலும் தேர்தல் கால வாக்குறுதிகளை “மறுக்கவுமில்லை, மறக்கவு மில்லை, மறைக்கவுமில்லை” என்று கூறி, “திமுக அரசு உங்களது நியாயமான கோரிக்கைகளை நிச்சயமாக நிறைவேற்றித் தரும் என இப்போதும் நான் உறுதியளிக்கிறேன்” என்றார். ஆனால் இன்று வரை அந்த நம்பிக்கை காப்பாற்றப்படவில்லை. முதல்வரின் நெடிய மௌனமே பதிலாக உள்ளது.
15வது மாநில மாநாட்டின் முக்கியத்துவம்
வாக்குறுதிகளை நிறைவேற்ற வைக்கும் வகையில், தமிழ்நாடு அரசின், முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 2024 டிசம்பர் 13,14 ஆகிய நாட்களில் தூத்துக்குடியில் நடைபெறவிருக்கும் 15ஆம் மாநில மாநாடு மிக முக்கியமானது. இந்த மாநாட்டின் மூலம் நாம் வலியுறுத்தும் முக்கிய கோரிக்கைகள்:
- பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல்;
- சரண்டர் விடுப்பு உரிமையை மீண்டும் பெறுதல்;
- அரசுத்துறைகளை இணைப்பு, மறுசீரமைப்பு பெயரில் மூடுவதைத் தடுத்தல்;
- காலிப்பணியிடங்கள் நிரப்புதல் மறுக்கப்பட்ட, மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட நம் உரிமைகளை மீட்டெடுக்க இந்த மாநாடு ஒரு திருப்புமுனையாக அமையும். தோழர்களே, திரளாகப் பங்கேற்போம்! வரலாறு படைப்போம்!
ஆ. செல்வம்
பொதுச் செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்