சோழிங்கநல்லூர் சட்ட மன்ற தொகுதி 7 லட்சம் வாக்காளர்களை கொண்ட தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொகுதி. அனைத்து தரப்பட்ட மக்களும் வசிக்கும் இடமாக இந்த தொகுதி உள்ளது.
இந்த தொகுதியின் முக்கியமான பகுதி கண்ணகி நகர். 1997ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. மாநகராட்சியின் மையப்பகுதியில், சாலை ஓரம், கடற்கரை அருகாமையில், கால்வாய் கரையோரம் வசித்த மக்களை, வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரால் வெளியேற்றப்பட்டு இங்கு குடியமர்த்தப்பட்டனர்.
இங்குள்ள ஒவ்வொரு வீடும் 150 சதுர அடிப்பரப்பில் 15 ஆயிரம் குடி யிருப்புகள் அடுக்குமாடிகளாக உள்ளன. சமையல் அறை, படுக்கை அறை, கழிப்பிடம் அனைத்தும் 150 சதுர அடிக்குள்தான். 64 பகுதிகளை சேர்ந்த மக்களை ஒரே இடத்தில் குவித்து வைத்துள்ளனர். இதேபோன்று செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், எழில் நகர், சுனாமி குடியிருப்பு என பல பகுதி கள் உருவாக்கப்பட்டு மக்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர்.
இங்குள்ள குடியிருப்புகள் 250 சதுர அடி பரப்பு கொண்ட 4 மாடிகளை கொண்டது. இந்த வீடுகளை விட சிறைச் சாலை தரமாக இருக்கிறது. இங்குள்ள வீடுகள் பாழடைந்து இருள் சூழ்ந்து உள்ளது. முறையான குடிநீர் இல்லை. கழிவு நீர், சாக்கடை, குப்பைகளை அகற்றாததால் துர்நாற்றம் வீசுகிறது. கட்டிடம் முழுவதும் சிதிலமடைந்து எந்த நேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. மரண பயத்தோடு மக்கள் வாழ்கின்றனர்.
செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் கட்டிடங்கள் 8 மாடி குடியிருப்புகளாக உள்ளன. நீர் பிடிப்பு பகுதியில் இந்த குடியிருப்பு உள்ளது. சீரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இத்தகைய அவலங்களை ஓவியங்களாக வரைந்து மறைத்துள்ளனர். விளிம்புநிலையில் உள்ள இந்த மக்களை ஆட்சியாளர்கள் மனிதர்களாக கூட பார்க்க தயாராக இல்லை.
கண்ணகி நகரில் 23 ஆயிரத்து 703 வீடுகள், செம்மஞ்சேரியில் 6 ஆயிரத்து 764 வீடுகள், பெரும்பாக்கத் தில் 23 ஆயிரத்து 320 வீடுகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் சுமார் 2 லட்சம் பேர் வாழ்கின்றனர். இன்னும் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிற்து, அடுத்த சில ஆண்டுகளில் மாநகராட்சியின் நீர்நிலை யோரம் உள்ள 5 லட்சம் மக்களை அகற்றி இங்க கொண்டு வர உள்ளதாக தெரிகிறது.
ஒரே இடத்தில் பலதரப்பட்ட மக்களை குவிப்பதால் கண்ணெதிரே நடந்த கொலைகள் எத்தனை? வேலை கிடைக் காமல் வறுமையில் தற்கொலை செய்து கொண்டவர்கள் எத்தனை பேர்? காவல்துறையினரால் கொல்லப்பட்ட வர்கள் எத்தனை பேர்? பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் எத்தனை பேர் ? குப்பை, கழிவுநீர் அகற்றாமல் விஷ காய்ச்சலுக்கு பலியானவர்கள் எத்தனை பேர்? மருத்துவமனை இல்லாததால் போகும் வழிலேயே செத்தவர்கள் எத்தனை பேர்? மழைக் காலங்களில் இருளில் உயிரை பிடித்துக் கொண்டு உறைந்து கிடந்த நாட்கள் எத்தனை? இவற்றை சொல்லி மாளாது.
இந்த குடியிருப்புகளில் வசிப் போருக்கு பெண் கொடுப்பதையும், பெண் எடுப்பதையும் கொலை குற்றம் போல் பார்க்கிற நிலை உள்ளது. குடி, போதைக்கு அடிமையானவர்கள் கணிசமாக உள்ளனர். இதனால் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது. கண்ணகி நகர், எழில் நகர் சுனாமி நகரில் 62% பெண்கள் பாலியல் வன்முறையை எதிர்கொள் கின்றனர். 53% குழந்தைகள் பாலியல் திருமணத்திற்கு கட்டாயப்படுத்தப்படு கிறார்கள். 79% குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படு கிறார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த குடியிருப்பு களின் பெயரை சொன்னாலே தொழிற்சாலைகளில் வேலை தருவது இல்லை அல்லது காவல்துறையிடம் நற்சான்றிதழ் வாங்கி வரச் சொல்கிற அவலநிலை உள்ளது.
இந்த பகுதிகளில் உள்ள ஆபத்தான கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும். சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யவேண்டும், அன்றாடம் குப்பைகளை அகற்ற வேண்டும். கால்வாய் அடைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். 1000 படுக்கை கொண்ட சிறப்பு மருத்துவமனையை அமைக்க வேண்டும். பெண்கள் மீதான வன் முறையை தடுக்க மகளிர் காவல் நிலை யம் வேண்டும். சாலை வசதி வேண்டும், பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோருகிறார்கள்.இதற்கு அரசு செவி சாய்க்குமா?
கே.வனஜகுமாரி
தென்சென்னை
மாவட்ட செயற்குழு உறுப்பினர்