articles

img

பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்

பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்

புராணங்களைப் புனைவது, அதன் வழி புராண புருஷர்களைக் கட்டமைப்பது, அவற்றை மக்களிடம் திரும்பத் திரும்பக் கொண்டு சென்று செல்வாக்கு பெறச் செய்வது, அவற்றுக்குப் பிறந்தநாள் என்ற புனைகதையை உருவாக்கிப் பரப்புவது காலம் காலமாய் வைதிகக் காவிக் கூட்டத்தின் வேலையாக இருந்து வருகிறது. அப்படித்தான் கிருஷ்ணனுக்கு அஷ்டமி என்றார்கள். ராமனுக்கு நவமி என்றார்கள். இவர்கள் கடவுளின் அவதாரம் என்று  ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே கிருஷ்ணன் மதுராவில் பிறந்தான்;  ராமன் அயோத்தியில் பிறந்தான் என்று கதைகட்டி நம்ப வைப்பார்கள். 300 ராமாயணங்கள் இருக்கிறதே! அங்கெல்லாம் அயோத்தி இருக்கிறதா? அங்கெல்லாம் ராமர் பிறந்த இடம் எது என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. அபச்சாரம். கேட்பவன் அபிஷ்டு; நாத்திகன். அறிவைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. அதுதான் அவர்களின் வேதம். அந்த குட்டையில் ஊறிய மட்டையான ஆர்.எஸ்.எஸ். ரவி - தமிழ்நாடு ஆளுநராக அமர்த்தப்பட்டுள்ள ஆர்.என்.ரவி - இப்போது புதுக்கரடியோடு தனது குதியாட்டத்தைத்  தொடங்கியிருக்கிறார். திருவள்ளுவர் பிறந்தது வைகாசி அனுஷ நட்சத்திரம் என்று புருடாவிட்டு அந்நாளில் அவருக்கு மரியாதையும் செலுத்தியிருக்கிறார். சங்கிகள் கையில் சிக்கி வள்ளுவர் படாத பாடு படுகிறார். அவருக்குக் காவி உடையணிந்து சனாதன சங்கியாக்கப்  பார்க்கிறார்கள். அப்படியான உருவப்படத்தை பரவலாக்கக் கடும்முயற்சி செய்கிறார்கள். இதெல்லாம் சரிதானா? நியாயம்தானா? என்று வள்ளுவரிடமே கேட்டால், அவர் ஒன்றே முக்கால் அடியில், ஏழு சீர்களில், நறுக்குத்தரித்தாற் போல் பதில் சொல்கிறார்.

“தேவர் அனையர் கயவர் அவரும் தான் மேவன செய்தொழு கலான்”

நினைத்ததை எல்லாம் செய்து நியாய அநியாயம்  பார்க்காதவர்கள் கயவர்கள்.  இவர்கள் செயல் ஒப்புமையால்  தேவர்களைக் போன்றவர்கள் என்று பகடி செய்கிறார். இதைவிட சங் பரிவாரங்களுக்குப் பொருத்தமான குறள் வேறொன்று  இருக்க முடியுமா? சட்டத்தை சரியாகப் படிக்காமல்  நினைத்ததைச் செய்துவிடலாம், கேள்வி கேட்க முடியாது என்று ஆட்டம் போட்டவருக்கு  உச்சநீதிமன்றம் வைத்ததே ஒரு குட்டு! கோப்புகள் மீது ஆணவத்தோடு  உட்கார்ந்திருந்த ஆர்எஸ்எஸ் ரவியைக் குப்புறத் தள்ளியது நீதிமன்றம். அதில் மூக்கு உடைபட்டுப் போனது. மனிதர்கள் தங்களின் நிலையிலிருந்து, பொறுப்பிலிருந்து தவறிவிட்டால் அவர்களுக்கு என்ன மாதிரியான மதிப்பு இருக்கும் என்று வள்ளுவர் ஒரு குறளில் (964) கூறியிருக்கிறார். இடக்கரடக்கலாக, நாகரிகமாக, இங்கே அதனைத் தவிர்ப்போம். அறிய விரும்புவோர் திருக்குறள் படித்து அறிக. பிரதமர் மோடியின் நிர்வாகக் கொள்கைகள், கல்வி,பொருளாதாரம் எல்லாம் திருக்குறள் ஞானத்தால் ஈர்க்கப் பட்டுள்ளன என்று நெஞ்சாரப் பொய் சொல்லும் ஆளுநருக்கு ஒரு தகவலை சொல்லி வைப்போம். மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுப்பதை தத்தக்க புத்தக்க என்று இனி பதிவிடாமல் இருக்க ஒருவேளை இது உதவலாம். செங்கோலைக் கொண்டு போய் நாடாளுமன்றத்தில் காட்சிப் பொருள் ஆக்கி விட்டு கொடுங்கோன்மையே தற்போது ஆட்சி முறையாக இருக்கிறது. மிரட்டல், உருட்டல், பணிய வைத்தல், அரசின் விசாரணை அமைப்புகளை அதற்குப் பயன்படுத்துதல், நீதியை வளைத்தல், இந்தி மொழியைத் திணித்தல், ஒற்றை எஞ்சின் ஆட்சியாக இருந்தால் நிதியை மறுத்தல், ஜனநாயகத்தின் நான்கு தூண்களையும் தன் விருப்பத்திற்கு ஆட்டி வைத்தல், சிறுபான்மை மக்களுக்கு எதிராக சட்டரீதியாகவும், சங்பரிவாரக் கூட்டத்தின்  வழியாகவும் தாக்குதல் நடத்துதல், கேள்வி கேட்டால் அர்பன் நக்சல் என முத்திரை குத்தி சிறையில் அடைத்தல், போலிமோதலில்  கொலை செய்தல் .... இன்ன பிற நடவடிக்கைகள் எல்லாம் கொடுங்கோன்மையின் வடிவங்கள்தானே! இப்படியான ஆட்சி பற்றியும் அய்யன்  திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து சொல்லியிருக்கிறார்.

“கொலைமேற் கொண்டாரின் கொடிதே அலைமேற்கொண்டு

அல்லவை செய்தொழுகும் வேந்து”

அதாவது குடிமக்களைத் துன்பப்படுத்திக் கொண்டு அரசாட்சிக்கு தகாத காரியங்களைச் செய்து வரும் வேந்தன் கொலைபாதகர்களைவிடக் கொடியவன் என்கிறார் வள்ளுவர். உதாரணத்திற்கு ஒன்றுதான் இது. கொடுங்கோன்மை அதிகாரம் முழுவதையும் இப்போதைய ஆட்சியுடன் பொருத்திப் பார்க்க வேண்டும். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பி னும் அப்பொருள் மெய்ப்பொருள் காணும்   அறிவை எங்களுக்கு முப்பால் தந்துள்ளது. ஆளுநர் மாளிகைக்கு அப்பால் செல்லுபடி யாகாத கருத்துக்களை உருட்டிக்கொண்டே இருங்கள். இப்படிச்  செய்வதால் எங்களின் இளைய தலைமுறை மேலும் தேடி தங்களின் மெய்யறிவைப்  பட்டை தீட்டிக்கொள்கிறது. நல்லதுதான். அறிவியல் பூர்வ ஆதாரங்களுடன் கீழடி அகழாய்வு  பற்றி தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை தருகிறார். அதனைத் திருத்தித் தருமாறு கேட்கிறது ஒன்றிய அரசும், தொல்லியல் துறையும். கூடுதல் ஆதாரங்கள் வேண்டும் என்கிறார் கலாச்சாரத்துறை அமைச்சர். ஆனால் ஆதாரமே இல்லாமல் வள்ளுவருக்குப் பிறந்தநாள் நட்சத்திரம் குறிக்கிறார் ஆளுநர் ரவி.

“பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல் மக்கட் பதடி எனல்”

என்ற வள்ளுவத்தின் வழி நின்று ஒன்றிய அரசின் கருத்தை அமர்நாத் ராமகிருஷ்ணன் நிராகரித்தது போல், ஆளுநரின் பழம் பஞ்சாங்கக் கருத்தையும் தமிழ் கூறும் நல்லுலகம் புறங்கையால் ஒதுக்கித் தள்ளும். அது சரி வள்ளுவர் மீது பாசம் பொழியும் நீங்கள் கங்கை நதி தீரத்தில் வள்ளுவர் சிலையை வைக்கவிடாத சனாதனச் சங்கிகள் பற்றி வாய் திறக்கவில்லையே ஏன்?   நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி  வஞ்சனை செய்வதன்றி  வேறொன்றறியாத கூட்டத்தின் அங்கம் என்பதால் வாய் திறக்க மாட்டீர்கள். அதையும் அறிவோம். எனவே வள்ளுவருக்குப் பிரசவம் பார்த்து நட்சத்திரம் குறிக்கும் வேலையை விட்டு விட்டு அவர் எழுதிய திருக்குறளைப்  படிப்பதற்கு ஆர்எஸ்எஸ் ரவி முயற்சி செய்ய லாம். உங்களைப் போன்றோரைத் திருத்திவிட லாம் என்று நம்பியே மானம், கயமை, கொடுங்கோன்மை, பயனில சொல்லாமை போன்ற அதிகாரங்களை வள்ளுவர்  படைத்துள்ளார்.