நெல்லை மாவட்டம் உட்பட தமிழ்நாடு முழுவதும் கந்துவட்டிக் கொடுமை பெண்களின் கழுத்தை நெரிப்பதாகவும் நுண்நிதி நிறுவனங்கள் பெண்களின் உயிரைக் குடிப்பதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
நாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியாருக்கு தாரைவார்க்க ஒன்றிய அரசு துடிக்கிறது. சாதாரண மக்கள் சுயதொழில் துவங்க வங்கிகளில் கடன் கேட்டால் மறுக்கப்படுகிறது. வங்கியில் கடன்பெற சொத்துக்கள் , ஆவணங்கள், சாட்சிக்கு ஒருவரை அழைத்துசெல்லவேண்டும். பல உத்திரவாதங்கள் கொடுக்கப்படவேண்டும்.
கந்துவட்டிக் காரர்களின் ராஜ்ஜியம்
வங்கிகளைக் காட்டிலும் கேட்டவுடன் பணம் தருகிறவர்களாக கந்துவட்டிக்காரர்களும் மைக்ரோபைனான்ஸ் என்கிற நுண்நிதி நிறுவனங் களும் உள்ளன. கந்துவட்டிக்காரர்களிடம் அதிகவட்டி செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. தவறினால் மிகமோசமாக நடத்தப்படும் நிலை. இருந்தாலும் கந்துவட்டித் தொழில் நடத்துபவர்களை ஏன் மக்கள் நாடுகிறார்கள் என்கிற கேள்வி எழுகிறது. தேவைக்கு உடனடியாக பணம்கிடைக்கும் என்பது தான் முக்கிய காரணமாக உள்ளது.
வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கிய மாவட்டங் களில் திருநெல்வேலி மாவட்டமும் ஒன்று. இங்கு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் அதிகம் இல்லாத காரணத்தால் மக்கள் அனைவரும் விவசாய, கட்டுமான கூலிகளாகவும் பீடி, கைத்தறி மற்றும் வீட்டுவேலை, முறைசாரா தொழில்களிலும், தெருவோர வியாபாரம் உள்ளிட்ட தொழில்களையும் நம்பி இருக்க வேண்டிய நிலைமையில் உள்ளனர். விளைவித்த பொருட்களுக்கு கட்டுபடியான விலை இல்லை. ஒன்றியஅரசு பட்ஜட்டில் உரமானிய வெட்டால் விவசாயிகள் கடுமையான மனஉளைச்ச லுக்கு ஆளாகி வட்டிக்கு வாங்கும் சூழலில் தள்ளப் பட்டுள்ளனர். திருப்பிக்கட்ட முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
ஊரகவேலை முடக்கம்
அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு 100 நாள் வேலை முழுமையாக கிடைக்கவில்லை. செய்த வேலைக்கான கூலியும் பல ஊராட்சிகளில் வழங்கப்படவில்லை. அடிப்படை பணிப்பாதுகாப்பு இல்லை. பொருளாதார நெருக்கடி காரணமாக வட்டிக்கு பணம் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளபடு கின்றனர்.
திருப்பிச் செலுத்த முடியாமல் தவிப்பு
பீடித்தொழில் நாளுக்குநாள் நலிவடைந்து வருகிறது. வாரத்தில் 7 நாட்கள் வேலை என்பது 3 அல்லது 4 நாட்களாக சுருங்கிவிட்டது. வீட்டு வாடகை, மருத்துவம், படிப்புச் செலவு போன்ற தேவைகளை பூர்த்திசெய்ய நுண்நிதி நிறுவனங்களிடம் பணம் வாங்கிவிட்டு கட்டமுடியாமல் விழிபிதுங்கி நிற்கும் நிலையில் உள்ளனர்.
கைத்தறி, கட்டுமானம், தெருவோர வியாபாரிகள், மாற்றுத்திறனாளிகள் உட்பட மழைவெள்ளக் காலத்திற்கு பிறகு கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளமுடியாமல் உள்ளனர். குடும்பத்தை பாதுகாக்க வட்டிக்கு வாங்கும் நிலை, நவீன தாராளமயக் கொள்கைகளால் வேலை யிழப்பும் வருமானமிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கிராமபுற நகர்புற பெண்களின் வறுமையைப் பயன்படுத்தி கந்துவட்டி கும்பல்களும் நுண்நிதி நிறுவனங்களும் புற்றீசல் போல் தமிழகம் முழுவதும் உருவாகி வருகிறது.
எத்தனை எத்தனை வட்டி...
அப்பாவி மக்களை குறிப்பாக பெண்களிடம் ராக்கெட் வட்டி, ஸ்பீடு வட்டி, குதிரை வட்டி, மீட்டர் வட்டி, வார வட்டி, வட்டிக்கு வட்டி என்று பலவழி களில் வட்டி வசூலிக்கின்றனர். இவர்களைக் கண்டு ஓடி ஒளியும் நிலைமையும் கூனிக்குறுகி நிற்கும் நிலையும் மனநிலையில் மிகப்பெரிய வலியை உருவாக்கியுள்ளது.
சமீபத்தில் ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக நெல்லை மாவட்டத்தில் 20கிராமங்களில் ஆய்வு நடைபெற்றது.
35 வயதுப் பெண்; காது கழுத்தில் எந்த நகையும் இல்லை; சாப்பிட்டு பல நாட்கள் ஆன வாடியமுகம். கணவர் இல்லாத தனிப்பெண். அவர் சொல்கிறார்: 2 பெண் குழந்தைகளை பாதுகாக்க வீட்டுவேலை செய்து மாதம் ரூ.2,000 சம்பாதித்து அதில்தான் கௌரவமாக வாழ நினைத்தேன், ஆனால் படிப்புச் செலவு வாடகை மருத்துவச் செலவிற்கு வேறுவழி யின்றி 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினேன்.
வாரம் ரூ.600 வட்டி கட்டி வந்தேன். இதுவரை 28,800 கட்டியுள்ளேன். அசலைக் கட்ட முடியலை…கேவலமா பேசுறாங்க” - கண்ணீர் மல்க கூறினார்.
இதுபோன்று பல அதிர்ச்சியான தகவல்களையும் கேட்க முடிந்தது.
“குழந்தைகளை கடத்திக் கொண்டு போய்விடுவோம்; வீட்டில் இருந்து கஞ்சா தொழில் பண்ணுறீங்க என்று பொய்வழக்குபோட்டு கேவலபடுத்துவோம் என்று பேசுறாங்க. காவல் நிலையத்திற்கு சென்றால் வட்டிக்காரங்களுக்கு ஆதரவாக பேசி எங்களை பணம் கட்டச் சொல்லி மிரட்டி அனுப்புறாங்க” என்று பல பெண்கள் கூறினார்கள்.
காவல்துறை என்ன செய்கிறது?
புகாரை வாங்கி நடவடிக்கை எடுக்கவும் கண்ணியமாகவும் நேர்மையுடனும் காவல்துறை நடந்து கொள்ள வேண்டும். 2003இல் சட்டம் கொண்டுவரப்பட்டாலும் கிராமப்புற, நகர்புற பெண்களை துன்புறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இல்லை. ஏனென்றால் குற்றச் சாட்டுக்கு உள்ளாகிறவர்களின் பின்னணியைப் பார்த்தால் சாதி ஆதிக்க சக்திகள், பணபலம், அதிகாரபலம், ஆள்பலம், ஆட்சியாளர்கள் உதவி, காவல்துறை ஒத்துழைப்பு என்று கையில் முழு அதிகாரத்தையும் வைத்து கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டுவது தொடர் கதையாக உள்ளது.மேலும் கந்துவட்டி கும்பல்களும் நுண்நிதி நிறுவனங்களில் உள்ளவர்களும், போலியான வழக்கறிஞரை பயன்படுத்தி வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்குவது, ஆதார் கார்டை மிரட்டி வாங்குவது, அச்சுறுத்துவது என்பதும் தொடர் கதையாக உள்ளது. இதற்கு சிலஅதிகாரிகளும் உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் கந்துவட்டி கும்பல்களும் நுண்நிதி நிறுவனங்களில் உள்ளவர்களும், போலியான வழக்கறிஞரை பயன்படுத்தி வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்குவது, ஆதார் கார்டை மிரட்டி வாங்குவது, அச்சுறுத்துவது என்பதும் தொடர் கதையாக உள்ளது. இதற்கு சிலஅதிகாரிகளும் உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர்.
வரமே சாபமாக மாறுவதைப் போன்று நெல்லை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் சிறுதொழில் தொடங்குவது உள்ளிட்ட தேவை களுக்காக தேடிவந்து கடன் கொடுக்கும் நிறு வனங்கள் அதை வட்டியுடன் வசூலிப்பதற்காக நடத்தும் அட்டூழியங்களால் பலகுடும்பங்கள் தற்கொலை செய்து கொண்டதையும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதையும் மறக்க முடியாது. பலகுடும்பங்கள் ஊரைவிட்டு பிழைப்பிற்காக வெளியூர் சென்றுவிட்ட சூழலையும் காணமுடிகிறது.
நீண்டகாலமாக நீடிக்கும் இந்த நவீன கந்துவட்டி கொடுமைகளுக்கு முடிவுகட்ட அரசு நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் பெரும் முதலாளிகள் கடன் தள்ளுபடி ரூ.17.46லட்சம் கோடி. 40 சத விகிதத்திலிருந்து 35 சதவிகிதமாக கார்ப்பரேட்டு களுக்கு வரிச்சலுகை வழங்கியது மோடி அரசு. மக்களை வேலையில்லாமல் வருமானமில்லாமல் பொருளாதார நெருக்கடியில் தள்ளி கடனாளியாக மாற்றிய அரசை தண்டிக்கப் போவது யார்? மக்களின் உயிரைக் குடிக்கும் கந்துவட்டி மற்றும் நுண்நிதி நிறுவனங்களின் கடனை தள்ளுபடிசெய்ய மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமா? பெண்களை மிரட்டி அச்சுறுத்தி வரும் கந்துவட்டி கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விகளை பாதிக்கப்பட்ட பெண்களின் குரலாக ஜனநாயக மாதர் சங்கம் முன்வைக்கிறது.
கந்துவட்டி கும்பல்களுக்கு முடிவுகட்ட, நுண்நிதி நிறுவனங்களை தடைசெய்ய பெண்களுக்கு வேலைலாய்ப்பும் பாதுகாப்பும் வழங்கிட ஒன்றிணைந்து குரல்கொடுப்போம். கந்துவட்டி கும்பல்களுக்கும் நுண்நிதி நிறுவனங்களுக்கும் முடிவு கட்டுவோம். அரசை திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு பெண் சக்திகளாய் திரள்வோம்.
கட்டுரையாளர் : அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க திருநெல்வேலி மாவட்டச் செயலாளர்