கணவன் மனைவியின் உள்ளக்கிடக்கை பகிர்வுகள் சம தளத்தில் இருக்கும்போது இல்லறவாழ்க்கை இனிமையாக அமையும். இதில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் போதே, சந்தேகம், அவநம்பிக்கை, குரோதம் போன்ற இழிகடைகள் வெளிப்படும். இவைகளை விரட்டி அடிக்க, இணையர்களுக்கிருக்கும் ஒரே ஆயுதம் “அன்பு”.
ஆர்டன்,ஸ்வீடனில் குடியேறிய அரபுக்காரன்; இவன் மனைவி லூயிஸ்.இருவரும் புரிதல் கோளாறு காரணமாகப் பிரிந்து வாழ்கின்ற னர். இவர்களுக்கு சாந்த்ரா என்ற ஒரு வயது குழந்தை உள்ளது.குழந்தை தாய், தந்தை இருவரிடமும் இருக்க வேண்டிய முறைமை (custody battle)குறித்த நீதிமன்ற ஆணையை மதிக்காதது, மற்றும் குழந்தையைத் தாக்கியது ஆகிய குற்றத்திற்காக ஆர்டன் ஏற்கனவே தண்டனை பெற்றவன். கணவனின் மீதான வெறுப்பால், மகள் சாந்த்ராவை, ஆர்டனிடமிருந்து அபகரித்து,தனது பெற்றோரிடம் ஒப்படைத்து, ரகசி யமாக வளர்க்கிறாள் லூயிஸ். ஒரு நாள்,குழந்தையின் ஏக்கத்தாலும், மனைவியின் மீதான கடுங்கோபத்தாலும், கைத் துப்பாக்கியோடு ஆர்டன்,மனைவி லூயிஸ் பணிபுரியும் சுகாதார நிலையத்திற்குள்,அதன் கட்டுபாடுகளை மீறி நுழைகிறான். மனைவியின் தலையில்,துப்பாக்கியை குறி வைத்து, குழந்தை சாந்த்ராவை உடனடியாக ஒப்படைக்கக் கோருகிறான்.குழந்தையை தர மறுத்தால்,மனைவியையும் கொன்று,தானும் தற்கொலை செய்யப் போவதாகவும் மிரட்டி அவளைப் பண யக்கைதி ஆக்குகிறான். இது பரபரப்பு செய்தியாகிறது. நகர போலீஸ் சுகாதார நிலை யத்தை சுற்றி வளைக்கிறது. லூயிஸ் உயிரைக் காக்க;சுகாதார நிலையத்திற்குள் ஆர்டனுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசுத் தரப்பு, போலீஸ் லூகாஸை நிராயுத பாணியாக அனுப்புகிறது. லூகாஸ் நடத்திய பேச்சு வார்த்தையின்படி,தனிக்கார் ஏற்பாடா கிறது.லூகாஸ் காரோட்ட;ஆர்டனின் துப்பாக்கி முனையில் மனைவி லூயிஸோடு; மகள் சாந்த்ரா இருப்பிடம் நோக்கி பயணிக்கிறார்கள். இவர்களைப் பாதுகாக்க ஆயுதம் தாங்கிய போலீஸ் படை,ஐந்து கார்களில் பின்தொடர்கிறது. படத்தலைப்பின்படி, பயணம் ஒன்னரை நாள் நடக்கின்றது. கடத்தலின் இறுதியில், ஆர்டனின் கோரிக்கைப்படி , போலந்துக்கு மகளோடு தப்பித்துச் சென்றானா?போலீஸ் லூகாஸ், மனிதாபி மானியாக செயல்பட்டானா? அல்லது,நம் போலீஸைப் போல் கபட நாடகமாடி ஏமாற்றினானா?பயணத்தில் கணவன், மனைவிக்கு மிடையே நடந்த நீண்ட உரையாடல் வழி, ஒருவரையொருவர் சரியாகப் புரிந்து அன்பால் இணைந்தனரா?
இக்கேள்விகளுக்கெல்லாம் ஏற்புடைய பதிலைத் தருகிறது இப்படம். திகிலூட்டும் இக் கதைப்போக்கில், நவீன குடும்ப உறவு களின் சிக்கல்கள் நேர்த்தியாக அன்பால் அவிழ்க்கப்படுகிறது. கோபத்தோடு மனைவியை துப்பாக்கி முனையில் கடத்துகிற ஆர்டன், மனைவியோடு, கடந்த கால பிரச்சனைகளுக்கு ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துகின்ற போது,அது ஒரு நிலையில் புரிதலை யும், மனமாறுதலையும் இருவருக்குமிடையே உருவாக்குகிறது; அன்பு பூக்கிறது. இதனைத் திரைமொழி ரசிக்கத்தக்க விதத்தில் கூறியிருக்கிறது. தேவதை போன்ற விளையாட்டுக் குழந்தைகளின் முன்னிலை யில் போர் புரியும் நாடுகளுக்கு இடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்துவது மரபு. அதைப் போலவே குழந்தை சாந்த்ரா அருகில் பெற்றோர்கள் சண்டையிடும் போது, குழந்தைக்கு அழுகை, வாஞ்சை யான சிரிப்பு போன்ற பாதிப்புகளை உருவாக்குகிறது.இது இவர்களது மன மாற்றத்தை உருவாக்குகிற காரணியாக அமைவதை இயல்பாக படமாக்கியுள்ளனர். வாய்ப்பை தவறவிட்ட தன்னை போல் இல்லாமல்;சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; என ஆர்டனிடம் அமைதியாக அறிவுரை கூறும் போது லூகாஸ் சிறந்த நடிப்பைத் தந்துள்ளார். அதிகமான கோபத்தில், ஆர்டனின் கைத்துப்பாக்கியின் முனை முதலில் லூயிஸின் தலையிலும்; கோபம் குறையும்போது முனை கழுத்திலும்; அடுத்து தோள்பட்டையிலும்;இறுதியில் அவளிடமே துப்பாக்கியை ஒப்படைத்து விட்டு;அவளிடமிருந்து திருமண டாலர் செயினை பெற்று;போலீஸிடம் சரணடைவது; துப்பாக்கி அன்பின் அடையாளமாக மாறுகிறது என்பதை உணர்த்துகிறது. ஆரம்பம் முதல் சரணைடையும் வரை கோபமாகவும், வெறுப்பாக வும், அழுதுகொண்டும்,சோகமாகவும் இருக்கின்ற ஆர்டன்; இறுதியில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லும்போது;காதல் மனைவி லூயிஸை திரும்பி பார்த்து,
மெல்லிய புன்னகை பூக்கின்ற கணம்; நயப்புமிக்க காட்சியாகும். கைத்துப்பாக்கியோடு மனிதக் கடத்தலில் ஈடுபட்டவரை; ஸ்வீடன் நாட்டு காவல்துறை மென்மையாகவும், பல வாய்ப்புகள் அளித்தும், விமானம் மற்றும் படகு பயண ஏற்பாடுகள் செய்வது போல் காலம் கடத்துகிற உளவியல் தந்திரம்,நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. ஒன்றரை நாள் பயணத்தில் கோடை காலத்தின் நடுப்பகுதியின் ஸ்வீடன் நாட்டின் கிராமிய அழகை, பறவைப் பார்வை உள்ளிட்ட அகன்ற கோணங்களில் ரம்மியமாக காட்சியாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் மரியனா ஃபாக்கே.கச்சிதமான படத்தொகுப்பை தந்துள்ளார் லிண்டா ஜில்ட்மாம். கதைச் சூழலுக்கேற்ற மனதை நெருடும் மெல்லிய இசை.இறுதி பின்னணி பாடல் மனதை வருடச் செய்கிறது. ஆர்டன் ஆக நடித்துள்ள அலெஜெஜ் மேன்வெலௌ;லூயிஸாக நடித்துள்ள அல்மாஃபோயிஸ்டி; ஆகியோர் ஏற்ற பாத்திரத்தை சரியாக உள்வாங்கி,கோபம், சாந்தம்,அன்பு பகிர்வு,மனமாற்றம் முதலிய வற்றை முகமொழியில் அழகாக வெளிப்படுத்தி ஈடு இணையற்ற நடிப்பை தந்துள்ளனர். படத்தின் முக்கால் பகுதி காருக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது. அதனால் அருகாமை காட்சிகள் அதிகம். இருந்த போதிலும், பாத்தி ரங்களின் மிகச்சிறந்த நடிப்பாலும்,வசனங்களாலும்,கேமரா கோணங்க ளாலும் சலிப்பின்றி செல்கிறது. ஸ்வீடன்-லெபனானியரான ஃபேர்ஸ் ஃபேர்ஸ்,லூகாஸாக அமைதியான,எதார்த்த நடிப்பை தந்ததோடின்றி, இப்படத்தை இயக்கியுமுள்ளார்.இவர் “செர்னோபில்”மற்றும் “வெஸ்ட்வேல்ட்” போன்ற பேசப்பட்ட தொடர்களில் நடித்துள்ளவர்.