articles

img

இந்திய தேசியத்தின் ஆன்மா எது? - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்களில் ஒருவருமான மார்க்சியப் பேரறிஞர் தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், 1995 மே 7 அன்று எழுதிய கட்டுரை இது. ஆர்எஸ்எஸ்- பாஜக முன்மொழியும் இந்துத்துவா தேசியத்திற்கு எதிராக ஒட்டுமொத்த இந்திய மக்களின் உணர்வலையாக கம்யூனிஸ்ட்டுகளும், தேசபக்தர்களும் முன்னிறுத்தும் இந்திய தேசியம் எத்தகையது என்பதை விவரிக்கிறார்.

‘சுகுமார் அழிக்கோடு சொற்பொழிவுகள்’ என்ற நூல் வெளியீட்டு விழா (1995) ஏப்ரல் 18 அன்று திருவனந்தபுரம் டவுன் ஹாலில் நடை பெற்றது. அதில் நான் பங்கேற்றுப் பேசுகையில், அரை நூற்றாண்டுக் காலமாக அவ்வப்போது தொடர்ந்து நடை பெறுகிற இந்தச் சொற்பொழிவுகளின் உள்ளடக்கம் “இந்திய தேசியத்தின் ஆன்மா”  என்று கூறினேன். இதை  வரவேற்று எனக்குப் பிறகு பேசிய பல நண்பர்களும் அந்தச் சொற்பிரயோகத்திற்கு அழுத்தம் தந்தனர். ஆனால், “இந்திய தேசியத்தின் ஆன்மா” என்ற சொற்பிரயோகத்தை நான் பயன்படுத்தியது கருத்து முதல்வாதிகளின் கண்ணோட்டத்தில் அல்ல. வரலாற்று ரீதியிலான பொருள் முதல் வாதத்தின் அடிப்படையில் அந்தச் சொற்பிரயோகத்தைப் பயன்படுத்தினேன். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியுள்ளது. பொருள் முதல்வாத வரலாற்றுக் கண்ணோட் டத்துடன்தான் என்னைப் போன்ற மார்க்சிஸ்ட்டுகள் இந்திய தேசியத்தைப் பார்க்கிறார்கள். சிந்துநதி நாக ரிகக் காலம் முதல், மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்டுக ளுக்குத் தீர்மானகரமான பங்கு உள்ள மதச்சார்பற்ற இயக்கத்தின் தோற்றம் வரை இந்திய அரசியல் வளர்ந்து வந்துள்ளது. அதன் சிந்தனைகள் இந்திய மக்களிடம் குடிகொண்டுள்ளன. அதன் மொத்தம்தான் “இந்திய தேசியத்தின் ஆன்மா” என்று நான் குறிப்பிடுகிற கலாச்சார வெளிப்பாடு. வரலாற்றுப் போக்குகளூடே உருவான சிந்தனைகள் முற்றிலும் பொருள் முதல் வாத வெளிப்பாடாகும். தலைமுறை தலைமுறையாக நான்காயிரம் அல்லது ஐந்தாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வந்த இந்திய மக்களின் சிந்தனை வளர்ச்சி களை முற்றிலும் பொருள் முதல்வாத அடிப்படை யில்தான் காண்கிறேன்.

கருத்து முதல்வாதிகளோ “இந்திய தேசியத்தின் ஆன்மா” என்ற சொற்பிரயோகத்தை வைத்து அர்த்தப் படுத்துவது மிக நீண்ட இந்திய வரலாற்றில் ஏதாவ தொரு கட்டத்தில் உருவான சிந்தனைகளின் கூட்டு ஆகும். அதற்குத்தான் “இந்திய தேசியத்தின் ஆன்மா” என்று பெயரிட்டிருக்கிறார்கள். வேதங்களிலும் உபநிஷத்துக்களிலும் சொல்லப் பட்டுள்ள தத்துவங்கள்தான் “இந்தியாவின் ஆன்மா”  என்பதாக சிலரின் பார்வை உள்ளது. வேறு சிலரின் பார்வை தில்லி ராஜதானியில் முகலாயச் சக்ரவர்த்தி கள் வாழ்ந்த காலத்திய சிந்தனைதான் இந்தியாவின் ஆன்மா என்பதாக உள்ளது. அதுபோல ஒவ்வொரு மதத்தவர்க்கும் அவரவர்க்கேயான “இந்தியாவின் ஆன்மா” உள்ளது. 

காந்திஜிக்குப்  பிரியமான வரி...

இந்த வித்தியாசங்களை மட்டுமல்ல, பரஸ்பர எதிர்ப்பு உணர்வுகளும் கொண்டுள்ள இந்த இந்தியா வின் ஆன்மாக்களை நிராகரித்துக் கொண்டு, சாதி-மதம் முதலான சிந்தனைகளுக்கு அப்பால் ஒரு தேசியக் கண்ணோட்டத்தை சுதந்திரப் போராட்டக் காலத்துத் தலைவர்கள் உருவாக்கினர். சாதி-மதம் முதலான சிந்தனைகளுக்கு அப்பால் இந்திய மக்களுக்குப் பொதுவாக மற்ற சிந்தனைகளும் உள்ளன என்பதை நமது தேசியத் தலைவர்கள் கண்டறிந்தனர். அதன் மிக ஆகர்ஷிக்கத் தக்கதாக  வெளிப்பட்டதுதான் “ஈஸ்வர, அல்லா, தேரேநாம்”என்ற மகாத்மா காந்தி க்குப் பிடித்த வரி. எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மதநம்பிக்கை கொண்டவராக இருந்தாலும், எந்த மொழியைப் பேசுகிறவராக இருந்தாலும், நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்பவராக இருந்தாலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும், குஜராத்தும் சிந்துவும் தொட்டு அசாம் முதலான வடகிழக்குப் பிரதேசங்கள் வரையும் வாழ்கிற கோடிக்கணக்கான மக்கள் சேர்ந்ததே இந்தியா. அந்த மக்களின் சுதந்திர வேட்கை யும், தேச ஒற்றுமைத் தாகமுமே இந்தியாவை ஒரு தேச மாக உருவாக்கியது. இந்தக் கண்ணோட்டத்தை முன்வைத்து, இந்திய மக்களின் தேச ஒற்றுமை, சுதந்திரம், இறையாண்மை, மதநல்லிணக்கம், சாதியற்ற சமத்துவச் சமுதாயம் - இவையெல்லாம் சேர்ந்ததுதான் இந்திய தேசியத் தின் உள்ளடக்கம் என்று சுதந்திரப் போராட்டத்தின் மிக  உன்னதத் தலைவர்கள் மக்களுக்குக் கற்பித்தனர்.

அகண்ட பாரதம்  அறிவற்ற செயல்

மகாத்மா காந்தியும் மற்ற தேசியத் தலைவர்களும் விரும்பியதற்கு முற்றிலும் மாறாக இந்தியா இரண்டா கப் பிரிக்கப்பட்டது. பரஸ்பரம் யுத்தத்தில் இறங்குகிற இரண்டு சுதந்திர நாடுகள் உருவாயின. அந்த அறுவைச் சிகிச்சையை ரத்து செய்து மீண்டும் “அகண்ட பாரதம்” அமைத்திடப் பார்ப்பது மகா அறிவற்ற செயலாகும். பாகிஸ்தான் பிரிந்து போனது முடிந்த விசயமாகும்; இருக்கிற இந்தியாவிலாவது மதநல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட - சாதிப் பகைமையற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தைத்தான் நான் “இந்திய தேசியத்தின் ஆன்மா” என்று அழைக்கிறேன். இந்தக் கருத்தை உயர்த்திப் பிடித்த அறிஞர் என்ற நிலையில் சுகுமார் அழிக்கோடுவை நான் பாராட்டுகிறேன். இந்த அர்த்தத்தில் உள்ள “இந்திய தேசியத்தின் ஆன்மா”வுக்கு புராதன வைதீகக் கலாச்சாரத்தை மீண்டும் உருவாக்குவது என்ற ‘இந்துத்துவ தேசியத்து டன்’ எந்தவொரு சம்பந்தமும் இல்லை. இந்துக்களைப் போல இந்துக்கள் அல்லாதவர்களும், தெய்வ நம்பிக்கை உள்ளவர்களைப் போல தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களும், முதலாளித்துவ தேசியம் போல தொழிலாளி வர்க்க தேசியமும் சேர்ந்ததே “இந்திய தேசியத்தின் ஆன்மா.”

மார்க்சிஸ்ட் -  லெனினிஸ்ட்டுகளின் முயற்சி

இந்த அர்த்தத்தில் உள்ள “இந்திய தேசியத்தின் ஆன்மா”வை வளர்த்தெடுப்பதில் இந்தியாவில் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்டுகள் தீர்மானகரமான பங்கு வகித்திருக்கிறார்கள். சிந்துநதிக் கலாச்சாரக் காலம் முதல் 20-ஆம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளைத் தொட்டு நிற்கிற காலம்வரை இந்திய மக்கள் வளர்த்தெ டுத்த தேசிய சிந்தனைகளைத் தங்களுடையதாக்கிக் கொண்டுள்ள தொழிலாளர்கள்-விவசாயிகள் முத லான வெகுமக்களை ஒன்றுதிரட்டுவதற்கே கடந்த எழுபது ஆண்டுகளாக (தற்போது - நூறாண்டுகளாக) இந்தியாவில் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்டுகள் முயற்சி  செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்துத்துவா தேசியவாதிகளுடன் பல விஷயங்க ளிலும் முரண்பட்டுள்ள டாக்டர் அழிக்கோடு போன்ற வர்கள் இந்திய சமூகத்தையும் கலாச்சாரத்தை யும் இந்துக்களுடையதாகவோ, முஸ்லிம்களுடைய தாகவோ, கிறிஸ்தவர்களுடையதாகவோ மற்ற மதத்த வர்களுடையதாகவோ தரம்தாழ்த்தாமல் அனைத்து மதத்தவர்க்கும் - எந்த மதத்தையும் சேராதவர்க்கும் உரியதாக ஆக்குவதற்கு முயற்சிக்கிறார்கள். அது போல் “சாதியைக் கேட்கக்கூடாது; சாதியைப் பேசக் கூடாது” என்கிற ஸ்ரீநாராயணகுருவின் உபதேசம் நடை முறைக்கு வரும் விதத்தில் எல்லா சாதிகளையும் சேர்ந்த ஏழையெளிய வெகுமக்களின் விடுதலைக்காக பாடுபடுகிற கம்யூனிஸ்ட்டுகளுடன் - இவர்களுடன் தத்துவார்த்த தளத்தில் உள்ள முரண்பாட்டை வைத்துக் கொண்டே ஒத்துழைப்பதற்கும் அழிக்கோடு போன்ற வர்கள் தயாராக உள்ளனர்.

இந்திய தேசியம் உருவானது பிரிட்டிஷ் ஆட்சிக்கு  எதிரான சுதந்திரப் போராட்டம் வளர்ந்துவர ஆரம்பித்த போதுதான் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய தில்லை. அதற்கு முந்தைய  இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ஆண்டுகளுக்கிடையே உருவான அனைத்தின் நல்ல அம்சங்களையும் தனதாக்கியும், அல்லாத அம்சங்களை நிராகரித்தும் ஒரு புதிய சமூ கத்தையும் புதிய கலாச்சாரத்தையும் வார்த்தெடுக்கும் பணியையே இந்திய தேசியம் செய்தது. அதற்கு இரு விதங்களில் பங்களிப்பு வழங்கியவர்கள்தான் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்டுகளும் சுகுமார் அழிக் கோடு போன்ற மார்க்சிஸ்ட் அல்லாத அறிஞர்களும். தேசிய இயக்கத்தில் மற்ற மக்கள் பகுதியினருடன் சேர்ந்து மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்டுகளும் மார்க்சிஸ்ட் அல்லாத அறிஞர்களும் உருவாக்கிய இந்தியக் கலாச்சாரக் கண்ணோட்டத்தைத்தான் இந்திய தேசியத்தின் ஆன்மாவாக நான் சிறப்பித்துக் குறிப்பிடுகிறேன்.

இன்று (மார்ச் 19) தோழர் இஎம்எஸ் நினைவு நாள்

(இ.எம்.எஸ். எழுதிய “காலத்தின்றெ நேர்க்குப் பிடிச்ச கண்ணாடி” 
என்ற கட்டுரைகள் தொகுப்பு நூலிலிருந்து.)
தமிழில்: தி.வரதராசன்