இந்திய நாட்டின் 18 வது நாடாளு மன்ற பொதுத் தேர்தல் 2024 ஏப்ரல் 19 அன்று தொடங்கி ஜூன் 01 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. 140 கோடி மக்களை ஆள்வதற்கு 543 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய 97 கோடி வாக்காளர்களில் 64 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்றி உள்ளனர். மீதம் 33 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்ற தவறிவிட்டனர். இது ஒருபுறம் இருக்க, இந்த ஜனநாயகக் கட்டமைப்பில் 33 சதவீதம் வாக்குகளைப் பெற்ற ‘சிறுபான்மையினர்’ (பாஜக) 140 கோடி பெரும்பான்மை மக்களை ஆளப் போகின்றார்கள். இந்த லட்சணத்தில் ‘பெரும் பான்மை’ பேசி சிறுபான்மை மக்களை அச்சுறுத்துவது அவர்கள் வாடிக்கையாக உள்ளது.
63 முடிவல்ல, முடிவின் துவக்கம்
கடந்த முறை பாஜக மட்டும் தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களை கடந்து 303 இடங்களைப் பிடித்து ஆட்சியைப் பிடித்து மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வந்து கொடுங்கோல் ஆட்சியை ஐந்தாண்டு காலம் நடத்தி இறுதியாக மீண்டும் மக்களை சந்திக்க சென்ற போது ஜனநாயகத்தின் எஜமானர்கள் வாக்காளர்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், அமைச்சர்கள், பிராந்திய தலை வர்கள் உட்பட அகம்பவத்துடன் வலம் வந்தவர்கள் தோல்வியைத் தழுவி, 63 இடங்களைப் பறிகொடுத்துள்ளது பாஜக. 63 நாடாளுமன்ற தொகுதிகள் குறைவாக கிடைத்தது மதவாத பாஜக பெறப்போகும் வீழ்ச்சியின் தொடக்கமாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்
சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்...
பாஜக வெற்றி பெற்ற சற்றேறக்குறைய 165 இடங்களில் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்று உள்ளனர். கரணம் தப்பினால் மரணம் என்பதைப் போன்று தப்பித்தோம் பிழைத் தோம் என்று, நடுநிலை தவறிய தேர்தல் ஆணையத்தின் உதவியோடு கரை சேர்ந்துள்ளார்கள் என்பதுதான் உண்மை. ஜனநாயகம் பெரிது; அதற்கு அரசுகள் கட்டுப்பட்டது என்று, கன்னத்தில் அறைந்து அறைகூவல் விடுத்து உள்ளது 18 வது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிவுகள். மோடி தலைமையிலான பாஜக அரசு என்பதற்கு பதிலாக, மோடி - நிதிஷ் குமார் - சந்திரபாபு நாயுடு கூட்டணி அரசு என்று காட்சிகள் மாறியுள்ளன. “மோடி கா சர்கார் மோடி கா கியாரண்டி” என்ற முழக்கம் மாறி, “மோடி கா சர்கார் நிதிஷ் குமார் சந்திரபாபு கியாரண்டி” என்று மாறியுள்ளது பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள வரலாற்றுத் துயரம். 400 இடங்களைப் பிடித்து, இந்திய அரசியல் சாசனத்தை மாற்றி, பிரதமருக்கு பதிலாக அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரவேண்டும் என்று இருந்த மோடி தலைமையிலான மதவாத பாஜகவின் கனவில் தேர்தல் முடிவுகள் கல்லெறிந்து உள்ளது. மோடி தலைமையிலான மதவாத பாஜக அரசு சிறுபான்மை முஸ்லிம்களை இழிவுபடுத்தி பேசியது. தமிழர்களைப் பற்றி, தமிழ்நாட்டைப் பற்றி தவறான புரிதலை இந்திய மக்களிடம் உருவகப்படுத்தியது. சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக குடியுரிமை திருத்தச் சட்டம், நாட்டின் எதிர் காலங்களான மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வுமுறை, நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை பாதிக்கும் மூன்று வேளாண் திருத்தச் சட்டம், பாஜக ஆளாத மாநில அரசுகளுக்கு போதிய நிதி ஒதுக்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஓரவஞ்சனையோடு நடத்தியது; சட்டத்தை மதிக்கத்தெரியாத - மக்கள் செல்வாக்கு இல்லாத ஆளுநர்களை கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு இடையூறு செய்வது என அராஜகம் செய்தது. இதற்குத்தான் மக்கள் பலத்த அடி கொடுத்துள்ளனர்.
பாசிசத்திற்கு எதிரான போரில் நாட்டிற்கே வழிகாட்டியுள்ளது தமிழ்நாடு. தமிழ்நாடு-புதுவையில் திமுக தலைமை யிலான இந்தியா கூட்டணி 40 மக்களவைத் தொகுதியிலும் வெற்றி பெற்று, சட்டமன்ற தொகுதிகளில் ஏறக்குறைய 223 சட்ட மன்றத் தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி முகட்டில் உள்ளது. இது மகத்தான சரித்திரச் சாதனை ஆகும். ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி கொட்டம் அடித்த அஇஅதி முக, பாஜக, அவர்களைச் சார்ந்த கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்காளர்கள் தக்க பாடத்தை புகட்டி உள்ளனர். பல தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்து உள்ளனர் “கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து” - என்ற வள்ளுவப் பேராசானின் குறளுக்கு ஏற்ப, ஒரு செயலைச் செய்ய கொக்குப் போல காத்திருந்து காலம் வாய்க்கும் போது விரைந்து செயல்பட்டு வெற்றி பெறுவதைப் போன்று எதிர் முகாமை ஊடுருவிப் பார்த்துக் கொண்டே இருப்போம்; எதேச்சதிகாரி மோடியுடன், தற்போது கூட்டுச் சேர்ந்து இருப்பவர்கள் ஒரே படகில் நீண்டகாலம் கருத்தொற்றுமையுடன் பயணிக்க முடியாது. நிச்சயம் வீழ்வார்கள். அதுவரை காத்திருப்போம்! ஜனநாயகச் சுடரை தூக்கிப் பிடிப்போம்!