கேரள திரையுலகில் ஒருமாத இடைவெளியில் இரண்டு மாபெரும் நகைச்சுவை (குணச்சித்திர நடிப்பாலும் மலை யாளிகளின் மனங்கவர்ந்தவர்கள்) நட்சத்திரங்கள் இன்னொசென்ட், மாமுக்கோயா ஆகியோர் மறைந்து விட்டனர். இன்னொசென்ட் கடந்த மாதம் காலமானார். மாமுக்கோயா கடந்த 26ஆம் தேதி மறைந்தார். ’சிலவகை மரங்கள் உள்ளன. அவை உருப்படிகள் செய்வதற்கோ, சிற்ப வேலைகளுக்கோ பயன்படுவதில்லை. நானும் அதுபோல் ஒருவகை மரம்தான். கல்லாயிக் கிராமத்தின் மனித மரம்.’ ஒருவர் தன்னைக்குறித்து சுயவிமர்சனமாக இவ்வாறு கூறுவதற்கு வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளால் பக்குவப்பட்டிருக்க வேண்டும். சில தினங்களுக்கு முன்பு மறைந்த மலையாளத் திரைநட்சத்திரம் மாமுக்கோயாதான் அந்தப் பக்குவத்திற்குரியவர். கால்பந்து மாமுக்கோயாவிற்கு மிகவும் பிடித்தமான விளையாட்டாகும். சினிமாவைப் போலவே அவர் கால்பந்தாட்டத்தையும் காதலித்தார்.அவரது கடைசி நிமிடங்களும் கால்பந்தாட்ட மைதானத்தில்தான் கடந்தன. மலப்புறம் மாவட்டத்தில் காளிகாவு என்ற இடத்தில் நடைபெறவிருந்த கால்பந்தாட்டப் போட்டியைத் துவக்கிவைக்க அவர் வந்திருந்தபோதுதான் உடல்நலக்கோளாறு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற போதிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
அந்தக் கால்பந்தாட்ட ரசிகரைக் குறித்து இந்திய கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திரம், கேரளாவின் கருப்பு முத்து ஐ.எம்.விஜயன் கூறுகிறார்: மாமுக்கோயா எனக்கு யாராக இருந்தார்? இந்தக் கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் இல்லை. சொல்லிப் புரியவைக்க இயலாத ஒரு நட்புறவு. அவருடன் நான் சேர்ந்து செலவழித்த நிமிடங்கள் நினைவைவிட்டு அகலாதவை. கடைசியாக கோழிக்கோட்டில் ஒரு திருமண வீட்டில் சந்தித்தோம். நாங்கள் சந்தித்துக் கொண்டால் விவாதம் சினிமாவைப் பற்றியதாக இருக்காது. மாறாக கால்பந்தாட்டத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும். கால்பந்தைப்பற்றி எவ்வளவு பேசினாலும் அவர் சலிப்படைவதில்லை. கால்பந்தாட்டத்தின் பழைய காலங்கள், கால்பந்தாட்டத் தொடர்கள், ஆட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இவற்றைப் பற்றியெல்லாம் மிகவும் ஆர்வத்துடன் பேசுவார். சிறுவயதில் விளையாடிய கால்பந்தாட்டத்தைப்பற்றிப் பேசுவார். தொலைக்காட்சியில் கண்டு ரசித்த ஆட்டங்களைக் குறித்து வியந்து கூறுவார். உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறும் காலத்தில் அவரை சந்திக்க நேர்ந்தால் அர்ஜெண்டினா, பிரேசில் அணிகள் குறித்து எங்களது விவாதங்கள் தொடரும். மாமுக்கோயா ஒரு அற்புத மனிதர். களங்கமில்லாத மனதுக்குச் சொந்தக்காரர். சினிமாவில் நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தவர்கள், நமது அன்பிற்குரியவர்கள் விடைபெற்றுப் போய்க் கொண்டிருக்கிறார்கள். மனம் மிகுந்த வேதனையடைகிறது.
மு.சங்கரநயினார்
நன்றி : தேசாபிமானி