articles

img

சமத்துவம்-நீதிக்காக- களம் காணும் சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம்! - எம்.தனலட்சுமி

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண்!  என்ற பாரதியின் வரிகளை மனதில் நிறுத்தி அறைகூவல் விடும் நாள்தான் சர்வதேச பெண்கள் தினம். உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்களது சமூக, பொருளாதார, அரசியல் நிலை பற்றியும் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் கருத்து பரி மாற்றம் செய்யும் நாள் தான் மார்ச் 8 உழைக்கும் பெண்கள் தினம். உழைக்கும் பெண்கள் நடத்திய போராட்டங்களினால் உருவான உரிமை நாள், சோசலிச சமுதாயம் படைக்க உழைக்கும் பெண்கள் புரட்சியை துவங்கிய நாள், பெண்கள் இன்று அடைந்துள்ள வளர்ச்சிக்கு வழி வகுத்த நாள், உலக மகளிர் தினம் என்பது வேறு எந்த நாளையும் விட  உலகில் உள்ள அனைத்து பெண்களும் கம்பீரமாக-  கர்வமாக- கரங்களை உயர்த்தும் வரலாற்று சிறப்பு மிக்க நாள். ஜனநாயகம், மதச் சார்பின்மைக்கான போராட்டத் துடன் சமத்துவத்துக்கான பெண்களின் போராட் டத்தை இணைக்க வேண்டும். வாக்குரிமை, 8 மணி நேர வேலை, சம கூலிக்காக ஒரு நூற்றாண்டுக்கு முன் போராடி பெற்ற உரிமைகளை தக்க வைக்க தொடர்ந்து போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உலகமயம், தாராளமயத் தாக்கத்தினால் உரு வான குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்ய பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கட்டுமானம்

இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய தொழில் கட்டுமானம். அதில் 30 சதவீதத்துக்கு மேல் பெண் தொழிலாளர்கள். இந்த தொழிலில் மிகப்பெரிய தாக்குதல்களையும், சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பணியிடத்தில் குழந்தைகள் காப்பகம், பெண்களுக்கு பாதுகாப்பான கழிப்பிட வசதி கிடைப்பதில்லை. சம வேலைக்கு சம ஊதிய சட்டம் 1976, நம் அரசியலமைப்பு சாசனத்தின் சரத்து 39 கீழ் ஆண்களுக்கு சமமாக சம்பளம் கட்டுமான துறையில் பெறுவதற்கு தொடர் போராட்டங்களை நடத்த வேண்டி உள்ளது.

அங்கன்வாடி

ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1975 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. அதில் பணி யாற்றுபவர்கள் அனைவரும் பெண்கள் அவர்களை அரசு ஊழியர் ஆக்க வேண்டும், ஓய்வூதியம் அதி கரிக்க வேண்டும், குறைந்தபட்ச ஊதிய வேண்டும், தனியார்மயத்தை தடுக்க வேண்டும்  என்று மாநில அளவிலும் அகில இந்திய அளவிலும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

ஆஷா ஊழியர்கள்

கிராமங்களில் மருத்துவ சேவை செய்வ தற்காக 2005 ஆம் ஆண்டு முதல் பணியில் அமர்த்தப் பட்டார்கள். பணியிட பாதுகாப்பு ,மருத்துவ காப்பீடு, கொரோனா காலத்தில் எந்தவித பாதுகாப்பு உபகர ணம் இல்லாமல் ஈடுபடுத்தப்பட்டனர்.  தங்கள் உயிரை பணயம் வைத்து பணி செய்யும் அவர்கள் சம்பளம் 2000, 3000 ரூபாய் தான். இவர்களும் போராடிக் கொண்டி ருக்கிறார்கள்!

மக்களைத் தேடி மருத்துவம்

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையால் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு ஆண்டு முடிவில் ஒரு கோடி  பேர் பயன் பெற்றுள்ளனர். நோயாளிகளுக்காக அவர்கள் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தேவை யான மருந்து மாத்திரைகளை வழங்குவதே இவர்கள் பணி. இரண்டு மணி நேர பணி என்று சொல்லிவிட்டு முழு நேரமும் வேலை செய்கிறார்கள், போதிய போக்குவரத்து வசதிகள், பணி பாதுகாப்பு, சீருடை, குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 என்று அவர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தையல்

தமிழ்நாட்டில் தையல் கடைகள், எம்ராய்டரிங், தையல் கூட்டுறவு என்று நல வாரியத்தில் மட்டும் 5  லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர் தையல் நல வாரியம் 1999இல் ஆரம்பிக்கப்பட்டது. நிவாரணம், ஓய்வூதியம் என்று பணப்பயன்கள் பெற்று  வந்த நிலையில் 2020 கொரோனா தொற்றின் காரண மாக ஆன்லைன் பதிவு ஏற்பட்ட பிறகு பல்வேறு குளறு படிகள் நிகழ்ந்தன. இதை சரி செய்ய, இந்த தொழிலை பாதுகாக்க போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

அவுட்சோர்சிங்

அமைப்புசாரா தொழில்கள் மட்டுமல்ல, அரசின் காலியிடங்களிலும் தகுதியானவர்களை  கொண்டு நிரப்பாமல் புதிய அரசாணைகள் மூலம் நிரந்தரத் தன்மை உள்ள பணிகளிலும் மாநகராட்சிகள், உள்ளாட்சிகள் என்று அனைத்திலும் அவுட்சோர்சிங் முறையை புகுத்த அரசு அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. இதை எதிர்த்து இந்திய தொழிற் சங்க மையம் வலுவான இயக்கத்தை நடத்தி வருகிறது!

நல வாரியங்கள்

அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாது காப்புக்காக அரசால் செயல்படுத்தப்படுவது நல வாரியங்கள். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் அரசின் சமூக பாதுகாப்பு உதவிகள் கிடைக்கும் வகை யில் அமைக்கப்பட்டுள்ளது இந்தியா முழுவதும் 150 க்கும் மேற்பட்ட தொழில்களுக்கு நல வாரியம் உள்ளது. இதில் பதிவு செய்யும் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள், ஓய்வூதியம், விபத்து நிவார ணம், கல்வி உதவி என்று வழங்கப்படுகிறது. 2020 கொரோனா காலத்தில் ஆன்லைன் பதிவு ஏற்பட்ட பிறகு பதிவு, புதுப்பித்தல், பணப்பயன்கள் பெறுவதில் பல இடங்களில் சிக்கல்கள் உள்ளன. அதை சரி செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணப்பயன்கள் கிடைப்பதற்கு சிஐடியு வலுவான போராட்ட வியூகத்தை அமைத்துள்ளது.

வன்முறைகள்

கல்வி கற்பதற்காகவும் ,பணி செய்வதற்காகவும் பெண்கள் வெளியில் வந்து விட்டார்கள். பெண்கள் மீதான வன்முறை என்பது விவாதப் பொருளாக மாறி உள்ளது. வன்முறை என்ற உடன் பாலியல் துன்புறுத்தல் என்றே பலரும் நினைக்கிறார்கள்.

புகார் கமிட்டி

அலுவலகங்களில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி ,முறைசாரா தொழி லாளர்கள், தற்காலிக அல்லது ஒப்பந்தத் தொழிலா ளர்கள், தினக் கூலி இப்படி யாராக இருந்தாலும் 10 பேருக்கு மேல் பெண்களை பணி அமர்த்தி உள்ள எந்த ஒரு நிறுவனமும் அலுவலக அளவிலான புகார் குழு ஒன்றை அமைத்திட வேண்டும். அதன் தலைவராக பெண் இருக்க வேண்டும், அதில் சமூக ஆர்வலர் ஒருவரும் இடம்பெற வேண்டும் என்று வழிகாட்டுதல் உள்ளது. விசாரணை 90 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். விசாரணை முடிந்து பத்து நாட்களுக்குள் புகார் குழு அறிக்கை தர வேண்டும். அறிக்கையின் அடிப்படையில் அறுபது நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட வழிகாட்டுதலோடு முறையான புகார் கமிட்டியை பெண்கள் பணி செய்யும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அமைக்க உரிய தலையீடு களை இந்திய தொழிற்சங்க மையமும் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவும் செய்து வருகிறது.

கட்டாய இருக்கை வசதி

தமிழகம் முழுவதும் துணிக்கடைகள் ,நகைக் கடைகள், வணிக நிறுவனங்களில் பொம்மைகளைப் போல பெண்களை நிறுத்தி வைக்கிறார்கள். இவர்க ளுக்கு அமர்ந்து பணியாற்ற கேரளாவை போல இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்று சிஐடியு  பல்வேறு இயக்கங்களை நடத்தியதின் விளைவாக 2021இல் தமிழக அரசும் சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. ஆனால் அது நடைமுறையில் உள்ளதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். அதை நடை முறைப்படுத்த உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு ஆய்வை மேற்கொள்ள வேண்டியுள்ளது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெண் தொழிலா ளர்கள் சட்ட உரிமைகள் பெறவும், பாதுகாப்பான சூழலில் பணியாற்றவும் ,ஆணும் பெண்ணும் சமம் என்பதே பெண்ணியம் என்பதை மனதில் நிறுத்தி ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலியல் வேறுபாடு தவிர வேறு ஏதும் இல்லை. வீட்டு வேலைகளையும், அலுவலக வேலைகளை யும் செய்வதற்கு ஆண் ,பெண் இருவருக்கும் சம உரி மையும், சம கடமையும் உண்டு என்பதை கவனத்தில் கொண்டு இந்தியாவில் தற்போது நிலவும் விலைவாசி உயர்வு, கேஸ் விலை உயர்வு ,வேலை வாய்ப் பின்மை ஆகியவற்றை முன்வைத்து தொடர் போராட்டம் நடத்த வேண்டி உள்ளது. அனைத்து அமைப்புகளும் இணைந்து சமத்துவம் -சமூக நீதி- சுரண்டல்- பாகுபாடு- வன் முறையற்ற வாழ்க்கை என்ற கோஷத்தை முன் வைத்து மார்ச் 8 பெண்கள் தினத்தில் போராட்ட அறை கூவல் விடுப்போம்!! 

கட்டுரையாளர்: மாநில அமைப்பாளர், 
சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு