articles

img

வெறுப்பு அமிலத்தை முறிக்கும் நல்லிணக்கப் பாரம்பரியம் - அ.குமரேசன்

“லக்னோ ஒரு நகரத்தின் பெயர் மட்டுமல்ல. நல்லியல்பையும் பண்பாட்டையும் குறிக்கிற இன்னொரு சொல் அது.  நகரத்தின் கட்டமைப்பு சுவர்களும் சாலைகளும் வீதிகளும் தெருக்களும் கொண்டதாகத் தோன்றலாம். ஆனால் அதன் ஆன்மாவாக இருப்பது நல்லியல்பும் விருந்தோம்பலும்தான். தேசத்தின் இரு பெரும் மதங்களைச் சேர்ந்த மக்களுக்கிடையேயான அன்பிற் கும் சகோதரத்திற்கும் அடையாளச் சின்னம் இந்த நகரம்.” - உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் பற்றி இவ்வாறு கூறுகிறார் பத்திரிகையாளர் அமான். ‘லக்னோவாசிகளின் பாரம்பரியத்தில், வழிபாட்டுத் தலங்களில் நிலவும் மத நல்லிணக்கம் வெறுப்புக்கு இடமளிப்பதில்லை’ என்ற தலைப்பில் அவர் ‘தி வயர்’ இணைய ஏட்டில் எழுதியுள்ள கட்டுரை, இந்தப் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகிறது. இதற்கொரு சான்றாக அவர் இட்டுச் செல்வது 250 ஆண்டுகால ஹனுமன் கோவிலுக்கு. வாரந்தோறும் செவ்வாய், சனிக்கிழமைகளில் 30,000 பக்தர்கள் வந்துசெல்கிற இந்த மிகப் பெரிய கோவிலின் ஒரு பழைய கோபுரத்தில் சிற்ப வேலைப்பாடுகளில் ஒன்றாக ஒரு நிலாவும் நட்சத்திரமும் பதிக்கப்பட்டுள்ளது. இது, இந்தக் கோவிலைக் கட்டியதில் அலியா பேகத்தின் பங்கு பற்றிச் சொல்கிறது. அன்றைய ஆவாத் ஆட்சிப் பகுதியின் நான்காவது நவாப் ஆஸஃப் உத் தௌலா. அவருடைய தாயார் அலியா பேகம்.

அலியா பேகம் கனவில் அனுமான்

கோவிலின் பூசாரி பண்டிட் ஜகதாம்பா பகிர்ந்து கொள்கிற தகவல் சுவையானது. “இந்தக் கோவில் கட்டப்பட்டது பற்றிய கதை ஒன்று உண்டு. அதன்படி, ஒருநாள் இரவு அலியா பேகத்தின் கனவில் ஹனுமன் வந்தாராம். ஒரு தோட்டத்தில் தனது உருவம் பதிக்கப்பட்டிருப்பதாகவும், தன்னை அங்கிருந்து எடுத்து ஒரு கோவிலில் வைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் சொன்னாராம். அந்தத் தோட் டத்தைக் கண்டுபிடித்த அலியா பேகம் அங்கே அகழ்வுப் பணி நடத்த ஆணையிட்டாராம். அந்த இடத்தில் ஒரு பழைய ஹனுமன் சிற்பம் கிடைக்க, அதை எடுத்து கோவிலில் வைக்க ஏற்பாடு செய்தார். அதுதான் இன்று அலிகஞ்ஜ் கோவில் என்று குறிப்பிடப்படுகிற இந்தக் கோவில்,” என்கிறார் அவர். கனவுக் கதையும் கனவு எப்படி ஏற்படுகிறது என்ற அறிவியலும் ஒருபுறமிருக்க, மதங்களைக் கடந்த அந்த நல்லிணக்க அக்கறை பற்றிய செய்தி முக்கிய மானது அல்லவா? பின்னாட்களில், இந்துக்களின் ஜைஷ்தா மாதத்தில் இந்தப் புகழ்பெற்ற ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவைத் தொடங்கிவைத்தவர் நவாப் அலி ஷா. அத்துடன், இந்துக்களின் கோரிக் கையை ஏற்று, குரங்குகளைக் கொல்வதற்குத் தடை விதித்து அதை ஒரு குற்றச்செயலாக அந்த முஸ்லிம் மன்னர் அறிவித்தார். அது மட்டுமல்லாமல், கலை களின் காதலராகவும், கவிஞராகவும், நாடக எழுத்தாள ராகவும் இருந்த அவர், “ராதா கன்ஹையா” (ராதை-கிருஷ்ணன்) என்ற கதக் வடிவ நாடகத்தை  உருது மொழி யில்   எழுதி அதில் அவரே கிருஷ்ணனாக நடிக்கவும் செய்தார் என்றும் பண்டிட் ஜகதாம்பா தெரிவிக்கிறார்.

ஹனுமன் கோவிலிலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில், லக்னோவின் சௌபாத்தியான் (நான்கு  சிற்றோடைகள்) பகுதியில் ‘காஸ்மைன் ரௌஸா’ என்ற புகழ்பெற்ற பள்ளிவாசல் இருக்கிறது. 1852ஆம் ஆண்டில் இதைக் கட்டியவர் ஜெகநாத் அகர்வால்   என்ற இந்து. நவாப் அம்ஜத் அலி ஷா நிர்வாகத்தில் அரண்மனைத் தூதராகப் பணியாற்றியவர் ஜெகநாத் அகர்வால். ஈரான் நாட்டுக்குச் சென்றிருந்த அவர், அங்கே ஷியா முஸ்லிம்களின் 7ஆவது இமாம் குராசான் ஹஸ்ரத் மூசா நினைவாகக் கட்டப்பட்டிருந்த பள்ளி வாசலைக் கண்டார். அதன் மிகப் பரந்த பரப்பையும் கட்டடச் சிறப்பையும் கலை வேலைப்பாடுகளையும் பார்த்து வெகுவாக ஈர்க்கப்பட்ட அவர், நாடு திரும்பிய பின் அதே போன்ற பள்ளிவாசலைக் கட்ட விரும்பி தனது வட்டாரத்தில் அதே போன்ற விரிந்த நிலப்பரப்பில் கட்டுமானப் பணியை மேற்கொண்டார். பணியில் உதவுவதற்காக பாரசீக கட்டடக் கலைஞர்க ளையும் வரவழைத்தார். நான்கு மூலைகளில் நிற்கும் கம்பீரமான தூபிகள் உட்பட  ஈரான் பள்ளி வாசலைப் போலவே எழுப்பப்பட்ட, ஒரு இந்துவால் கட்டப்பட்ட முதல் பள்ளி வாசலான காஸ்மைன் ரௌஸாவுக்கு ஏராளமான முஸ்லிம் மக்கள் வருகை தருகிறார்கள். இந்தப் பள்ளிவாசலுக்குச் சென்று வந்தால் மனதின் வலிகள் தொலைந்து போவதாக ஒரு நம்பிக்கையும் அவர்களிடம் இருக்கிறது.

பிராமணத்தி மசூதி

லக்னோவின் அமின்பாத் பகுதியில் ஒரு மசூதி இருக்கிறது. வெண்ணிறப் பளிங்குக் கற்களால் கட்டப் பட்டு, தங்கத்தால் வாயிற்கதவு பொருத்தப்பட்டு செவ்வக வடிவ மலர் வேலைப்பாடுகள் கொண்ட இந்த மசூதி எவரையும் ஈர்க்கக்கூடியது. “பண்டிடைன் கி மஸ்ஜித்” என்றும், “படைன் கி மஸ்ஜித்” என்றும் குறிப்பிடப்படுகிற இந்த மசூதியைக் கட்டியவர் ஒரு இந்து பிராமணப் பெண். இந்தப் பெயர்களின் பொருளே “பிராமணத்தி மசூதி”  என்பதுதான். அமினாபாத் பகுதியின் ஆட்சியில் இருந்தவர் ராணி ஜெய் குன்வார் பாண்டே. ஆவாத் பகுதி நவாபாக இருந்தவர் சதாத் அலி கான். அவருடைய இணையர் கதீஜா கனாம். அவரது நெருங்கிய தோழி ராணி ஜெய் குன்வார் பாண்டே. அமினாபாத் பகுதி முஸ்லிம்கள் பயன்பாட்டுக்காக என இப்படியொரு மசூதியைத் தன் பொறுப்பில் கட்டி, தோழிக்குப் பரிசாக வழங்குகிற அளவுக்கு அவர்களது நட்பு இருந்தது.

தாகுர்கஞ்ஜ் என்ற ஒரு குடியிருப்புப் பகுதி லக்னோ வில் இருக்கிறது. அங்கே ஜாவ் லால் மசூதியும் அதை யொட்டி ஜாவ் லால் இமாம்பாரா என்ற கூடமும் இருக்கின்றன. 680ஆவது ஆண்டில் கர்பாலா நாட்டில் (இன்றைய இராக்) நடந்த போரில்,  நபிகள் நாய கத்தின் பேரன் ஹுசைன் இபின் அலி, அவருடைய குடும்பத்தினர், ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுடைய தியாகத்தை நினைவுகூர்வதற்காக முஸ்லிம் மக்கள் கூடுகிற இடம்தான் இமாம்பாரா. “உலகின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய இமாம் பாராக்கள் உள்ளன. அவை முஸ்லிம்களால் கட்டப் பட்டவை. ஜாவ்லால் இமாம்பாராவின் சிறப்பு என்ன வென்றால் இதைக் கட்டியவர் ஒரு இந்து,” என்று தெரி விக்கிறார் இதன் மேலாளர் மொஹமத் அப்பாஸ். நவாப் அஸஃபுதௌலா அரசில் அமைச்சராக இருந்த வரான ராஜா ஜாவ் லால் ஸ்ரீவாஸ்தவ் கட்டியதுதான் இந்த இமாம்பாரா. ஒரு இந்துவின் பெயரில் அமைந்த இந்தக் கூடத்திற்கு முஸ்லிம் மக்கள் வந்து கர்பாலா தியாகிகளை நினைவுகூர்கிறார்கள். இங்கே வந்துவிட்டுப் போகிறபோது மனம் அமைதியடைகிறது என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இருக்கிறது. ஜாவ்லால் இமாம்பாரா அமைந்துள்ள அதே தெருவில் பாபா கோம்தி தாஸ் எனும் கோவில் இருக்கி றது. இதைக் கட்டியவர் நவாப் ஆஸஃப் உத் தௌலா.  இக்கோவிலின் பூசாரி துருவ் லால் சுக்லா, “இப்ப டிப்பட்ட கோவில்கள் எங்களுக்கு மிகப்பெரிய ஈர்ப்பு  விசையாக இருக்கின்றன. முன்பு இங்கே வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களிடையே சகோதரத்துவ மும் நல்லிணக்கமும் நிறைந்திருந்தன. வெறுப்புக்கு இடமிருந்ததில்லை,” என்று கூறியிருக்கிறார்.

நவாப் மீது ஹோலி வண்ணப்பொடி

சகோதரத்துவத்துக்கும் நல்லிணக்கத்திற்கும் எடுத்துக்காட்டுகளாக இரண்டு வரலாற்று நிகழ்வுக ளைச் சுட்டிக்காட்டுகிறார் அமான். ஒருமுறை நவாப் வாஜித் அலி ஷா பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டு கொல்கத்தாவின் அன்றைய புறநகரான மெட்டியாபுர்ஜ் பகுதியில் சிறையில் வைக்கப்பட்டார். அவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக லண்டன் கொண்டுசெல்ல பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டிருப்பதாக ஒரு வதந்தி பரவியது. அதைத் தொடர்ந்து இந்துக் கள் - குறிப்பாகப் பெண்கள் - ஆவாத் நகரக் கோவில் களில் கூடி அவரை விடுவிக்க வேண்டினர். “நவாபை  லண்டனுக்குக் கொண்டுசெல்கிறார்கள், அவரைக் காப்பாற்று ராமா”  என்ற பாடலைப் பாடினர். இதனைத் தெரிவித்துள்ள, நவாப் வாஜித் அலியின் வாரிசு நவாப் மிர் ஜாஃபர் அப்துல்லா, “காலம் எப்படி மாறிவிட்டது… மக்கள் முழு நல்லிணக்கத்தோடு அமைதியாக வாழ்ந்த காலம் போய்விட்டதே,” என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். ஞானவாபி மசூதி வழக்கு குறித்த செய்தியைக் கவனித்தபடி அவர் இதைக் கூறியதாகப் பதிவு செய்திருக்கிறார் அமான்.

18ஆம் நூற்றாண்டில் நல்லிணக்கத்திற்கான அழுத்தமானதொரு முத்திரையைப் பதித்தவர் நவாப் ஆஸஃப் உத் தௌலா. முஹரம் கடைப்பிடிக்கப் படுகிற இரண்டு மாத காலத்தில் ஷியா முஸ்லிம்கள் கருப்பு உடை அணிந்து, கொண்டாட்டங்களைத் தவிர்ப் பது வழக்கம். ஒரு முறை முஹரம் அனுசரிக்கப் படும் நாட்களிலேயே ஹோலி பண்டிகை வந்தது. தல் காடோரா கர்பாலாவில் ஹுசைன் இபின் அலி நினைவுக் கோபுரச் சிற்பத்தை நல்லடக்கம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார்  நவாப் ஆஸஃப் உத் தௌலா. வழியில் ஹோலி கொண்டாடிக்கொண்டிருந்த இந்து மக்கள், அவரது ரதத்தை நிறுத்தி, அவர் மீது ஹோலி வண்ணப் பொடி களைத் தூவலாமா என்று கேட்டனர். உடன் வந்த அதி காரிகள் வியப்படைய அரண்மனை ரதத்திலிருந்து கீழிறங்கிய நவாப், இந்து மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு, அவர்கள் விரும்பியபடி செய்ய அனுமதியளித்தார். அவர்கள் ஆரவாரத்தோடு அவர் மீது வண்ணப் பொடிகளைத் தூவி மகிழ்ந்தார்கள்.  அரண்மனைக்குத் திரும்பிய பின், முஹரம் துக்கம் அனுசரிக்கப்படுகிறபோது ஹோலி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டது சரிதானா என்று அமைச்சர் கேட்டிருக்கிறார். அதற்கு நவாப், “நான் ஒரு தவறும் செய்யவில்லை. நம் மக்களின் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டேன் - அவர்கள் என் குடும்பம்,” என்று பதிலளித்திருக்கிறார். இந்த நல்லிணக்கப் பாரம்பரியத்தில் வந்தவர்க ளான, இந்துக்களான பல கவிஞர்கள் ஹுசைன் இபி அலி நினைவைப் போற்றும் பல பாடல்களை இயற்றி யுள்ளனர். இன்றும் அந்தப் பாடல்கள் பாடப்படு கின்றன. அவ்வாறு பாடுகிறவர்களில் ஒருவர் ஹிமன்சு பாஜ்பாய். மக்களுக்கு நன்கு அறிமுகமான கதைசொல்லியாகிய இவர் ஓர் ஆய்வறிஞருமாவார். “இந்தப் பாடல்களைப் பாடுவதில் எனக்கு உணர் வுப்பூர்வமான ஈடுபாடு இருக்கிறது. இதன் மூலம் லக்னோவின் வளமான பாரம்பரியத்தை உயிர்த்துடிப் போடு வைத்திருக்க விரும்புகிறேன்,” எனக் கூறும் பாஜ்பாய் ஒரு வைதீகமான பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த நல்லிணக்க வளம் லக்னோவின் பாரம்பரி யம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் மகத்தான மரபு இது. லக்னோவில் மட்டுமல்லாமல், அயோத்தியி லும் இந்துக்களால் கட்டப்பட்ட மசூதிகள், முஸ்லிம் களால் பராமரிக்கப்பட்ட கோவில்கள் உள்ளன  என்று அமான் தெரிவிக்கிறார்.

இணைக்கும் சுவர்

கேரளத்தின் கோழிக்கோடு நகரில் காட்டில்பீடிகா பகுதியில் பொதுவான வளாகச் சுவர் கட்டப்பட்டுள்ள சிவன் கோவிலும், பதர் ஜூம்மா மசூதியும் கடந்த அரை நுற்றாண்டு காலமாக நல்லிணக்கச் செய்தி யைச் சொல்லி வருகின்றன என்று தெரிவிக்கிறது ‘டெலிகிராப்’ ஏடு. ஆம், கோவிலையும் மசூதியையும் பிரிக்கிற சுவரல்ல, இணைக்கிற சுவர். சில ஆண்டுக ளுக்கு முன், கோவிலில் சில புதிய கட்டுமானங்கள் செய்யப்பட்டன. அதனால் கோவில் திருவிழாவில் யானைகள் ஊர்வலத்திற்கான சுற்றுப்பாதை ஓரிடத்தில் மிகவும் சுருங்கிவிட்டது. கோவில் நிர்வாகத்தினர், மசூதி நிர்வாகக் குழுவினரை அணுகி, ஒரு சிறு நிலப்பரப்பை விட்டுத்தரக் கோரினர். அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிடுவதாகவும் கூறியுள்ளனர். மசூதிக் குழுவினர் அந்த நிலத்தை வழங்கினார்கள் - விலை எதுவும் பெற்றுக்கொள்ளாமல். பஞ்சாப் மாநிலத்தில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக உள்ள மலேர்கோட்லா நகரில், இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள சாம்சன்ஸ் காலனி இருக்கிறது. சில சீக்கியக் குடும்பங்கள் வசிக்கிற, முஸ்லிம் குடும்பம் ஒன்று கூட இல்லாத அந்தக் காலனியில் லட்சுமி நாராயண் கோவில், ஆக்ஸா மசூதி இரண்டும் அடுத்தடுத்து அமைந்துள் ளன. “சில அரசியல்வாதிகள் எப்போதாவது மதவிவ காரத்தைப் பேச வருவார்கள்.  அவர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை,” என்று கோவிலைச் சார்ந்தவர் கள் கூறுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் குரான் பிரச்சனை ஒன்றைச் சாக்கிட்டு வன்முறை தூண்டப் பட்டபோது இந்துக்களும் சீக்கியர்களும் முஸ்லிம்க ளுக்குப் பாதுகாப்பு அரணாக நின்றதை மசூதிக் குழு வினர் நினைவு கூர்கின்றனர். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பதிவு செய்திருக்கிறது.

இத்தகைய பெருமிதத்திற்குரிய காட்சிகள் தமிழ கத்திலும் உள்ளன. அனைவரும் அறிந்த சான்றாக, நாகூர் தர்காவைச் சொல்லலாம். இந்து-இஸ்லாமிய கட்டடக் கலைக் கலவையை இங்கு காணலாம். சந்தனக் கூடு விழாவுக்கான தேரைச் செய்து தருபவர்கள் இந்து  மதத்தைச் சேர்ந்த தச்சர் குடும்பத்தினர் என்று முன் பொரு செய்தி வந்திருக்கிறது. “மராட்டிய மன்னன் பிரதாபசிங் கட்டியுள்ள பெரிய மனோராவுக்கு மன்னர் துக்கோஜி கொடையளித்துள்ளார். தஞ்சாவூர் விஜயநாகம நாயக்கர் தர்காவின் முதல்வா யில் மனோராவைக் கட்டியுள்ளார். தலைமாட்டு மனோ ராவை நாகூர் நல்ல சையது மரைக்காயரும், மூன்றாவது மனோராவை பீர் நைனா மரைக்காயரும், நான்காவது மனோராவை தாவூத்கானும் கட்டியுள்ளார்கள். இதற்கு கூத்தாநல்லூரைச் சேர்ந்த நடேச ஐயர் தங்க கலசம் வைத்துள்ளார். மேலும் இங்குள்ள கட்டிடங்கள் அனைத்துமே 17-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவிவந்த திராவிடக் கட்டிடக் கலைப் பாணியும், இஸ்லாமிய கட்டிடக் கலைப்பாணியும் கலந்து கட்டப் பட்டுள்ளது. இவ்வாறு இந்துக்கள் கோயில்களுக்கு முஸ்லிம்களும், முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு இந்துக்களும் கொடைகள் மற்றும் திருப்பணிகள் வழங்கியுள்ளனர். வழங்கியும் வருகின்றனர். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நாகூரைப்போலவே ஏர்வாடி, திருச்சி, சென்னையில் உள்ள தர்காக்களிலும் பல உள்ளன,” என்று ‘திண்ணை’ இணைய ஏட்டில் வைகை அனிஷ் எழுதி யுள்ள கட்டுரையில் தெரிவிக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் உள்ள நாயகி அம்பிகை சமேதர் கோவில் திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு அவ்வூரின் முஸ்லிம் இளைஞர்கள் சேர்ந்து விருந்தளித்தது போன்ற பல செய்திகள் உள்ளன. இந்து, முஸ்லிம் மக்களுக்கிடையேயான நல்லிணக்கம் மட்டுமல்ல, வேளாங்கண்ணி போன்று கிறிஸ்துவர்களுக்கிடையேயான, சமணர், புத்தர் உள்ளிட்ட மற்ற சமயங்களைச் சார்ந்த மக்க ளுக்கிடையேயான சகோதரத்துவப் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் இடங்களும் நிகழ்வுகளும் ஏராளமாய் இருக்கும். அத்தகைய தகவல்களை ஊடக வியலாளர்கள் மட்டுமல்லாமல், மக்களின் நல்லி ணக்க வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்ந்த  அனைவருமே திரட்டித் தர வேண்டும்.  ஏனெனில், ஒற்றுமை வேரில் அமிலத்தை ஊற்ற முயலும் மத வெறிக் கும்பல்களின் சதிகளை இந்தப் பாரம்பரி யத்தாலேயே முறியடிக்க முடியும்.