articles

img

அச்சங்குட்டத்தின் அமைதியை அசைக்கும் மதவெறியர்கள் - க. கனகராஜ் ,மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூர் வட்டத்தில் உள்ள ஒரு  கிராமம் அச்சங்குட்டம். இந்த கிரா மத்தில் சுமார் 700 இந்து குடும்பங்களும், சுமார் 100 கிறிஸ்துவ குடும்பங்களும் வசித்து வருகின்றன. இந்த குடும்பங்கள் அனைத்தும் ஒரே சாதியை சார்ந்தவர்கள். வழிபாட்டு முறை வேறுவேறாக இருந்தாலும் இரண்டு பிரிவினரும் பெண் கொடுத்து பெண் எடுத்து மாமன் மச்சான் களாக, அண்ணன் தம்பியாக வாழ்ந்து  வந்தார்கள். பரஸ்பரம் சுக துக்கங்களி லும், விழா கொண்டாட்டங்களிலும் பங்கெடுப்பது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.  இந்த கிராமத்தில் 20.06.1941 முதல் ஆரம்பப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதோடு சேர்த்து கிறி ஸ்துவர்களின் வழிபாட்டுத் தலமும் ஆரம்பம் முதல் ஒரே இடத்தில் இருந்தே வந்திருக்கிறது. இது அரசு  உதவிபெறும் பள்ளி. இது திரு நெல்வேலி மறைமாவட்ட அறக்கட்டளைச் சங்க (டி.டி.டி.ஏ.) நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

இந்த பள்ளியில் 177 குழந்தை கள் பயின்று வந்தனர். இந்நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியை விசாலமான கட்டிடத்தில் இயங்க வேண்டுமென தெரிவித்ததன் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டு வேறொரு இடத்தில் பள்ளி கட்டப் பட்டு இயங்கி வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே பள்ளி யின் அருகில் இருந்த தேவாலயத்தை புதுப்பித்து கட்டுவதற்காக மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரப்பட்டு அனுமதியும் பெறப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு அதே ஊரைச் சார்ந்த  வைத்தியலிங்கம் மகன் முருகா என்பவருக்கு சொந்தமான வள்ளி கன்ஸ்ட்ரக்சன் மூலம் தேவாலயம் கட்டுவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டு ரூபாய் 1,50,000 முன்பணமாக கொடுக்கப்பட்டது. இதன் மொத்த செலவாக 1 கோடியே 15 லட்சம் ஆகும் என்று சொன்னதால் அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் 80  லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு ஆகாது. எனவே ஊரில் உள்ளவர்களே சேர்ந்து சர்ச் கட்டிக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளனர். இப்போது தான் பிரச்சனை ஆரம்பம் ஆனது. வள்ளி கன்ஸ்ட்ரக்சன் உரிமை யாளர்களுக்கு ஒப்பந்தம் மறுக்கப் பட்ட பின்னணியில் ஊரில் இருக்கும் இந்து முன்னணி, பாஜகவினர் மேற்படி வள்ளி கன்ஸ்ட்ரக்சன் உரிமையா ளர்களை  அணுகி அவர்கள் எப்படி சர்ச் கட்டலாம் என்று தூண்டிவிடு கின்றனர். இதையடுத்து ஊரில் உள்ள மக்களை மிரட்டி களேபரம் செய்து சர்ச் கட்டும் வேலையை துவக்க விடாமல் செய்து வந்தனர். சர்ச் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் முறையான அனுமதியும் பெறப்பட்டிருக்கிறது. இருப்பினும், காவல்துறை, வருவாய்த்துறை அதி காரிகள் எவ்வளவு சமாதானம் பேசியும் அவர்கள் கேட்பதற்கு தயாராக இல்லை.

மாற்றுச் சான்றிதழ்களை கைப்பற்றி வைத்துக் கொண்டு

இந்த பள்ளிக்கு தங்கள் குழந்தை களை அனுப்பப் போவதில்லை என்றும் அரசு ஆரம்பப் பள்ளி கட்டப்பட வேண்டும் என்றும் கோரிக்கை யை வைத்தனர். சர்ச் கட்டப்படும் இடத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்று கோரி க்கை வைத்தனர். இதற்கிடையில் கல்வியாண்டு முடிவுறும் தருவாய் வந்துவிட்டதால் கல்வித்துறை அதி காரிகள் தலையிட்டு குழந்தைகளை அருகில் உள்ள வீராணம் கிராமத்தில் உள்ள பள்ளியில் தேர்வெழுத அனுமதித்தனர். இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட டி.டி.டி.ஏ. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தங்கள் தரப்பு குழந்தைகளின் மாற்றுச் சான்றி தழை நிர்பந்தப்படுத்தி வாங்கிக் கொண்டனர். தற்போது இந்த குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழை சங் பரிவார் அமைப்பினர் தங்கள் வசம் வைத்துள்ளனர். சில பெற் றோர்கள் தங்கள் குழந்தைகளை புதி தாக கட்டப்பட்டு இயங்கி வரும்  டி.டி.டி.ஏ. பள்ளியிலேயே சேர்ப்பதற்கு தயாராக இருந்தாலும் அவர்களை மிரட்டி மாற்றுச் சான்றிதழ்களை வைத்துக் கொண்டு அரசு பள்ளி தான் வேண்டும், அதற்குதான் தங்கள் குழந்தைகளை அனுப்பப் போகிறோம். அதுவரை குழந்தைகள் பள்ளிக் கூடத்திற்கு போக மாட்டார்கள் என்று பிடிவாதமாக தடுத்து வருகின்றனர்

உயர்நீதிமன்றம் கண்டனம் - முன் ஜாமீன் மறுப்பு

இந்த நிலையில்தான் அரசாங்கம் அப்படி மாற்றுச் சான்றிதழை கைப் பற்றி வைத்திருக்கக் கூடிய நபர் களின் மீது காவல்துறையில் புகார்  செய்து அந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் இதுவரை இரண்டு முறை அவர் களுக்கு முன் பிணையை மறுத்துள்ள தோடு இந்த 12 பேரையும் உயர்நீதி மன்றம் கண்டித்துள்ளது. “மனு தாரர்கள் தங்களின் கோரிக்கைக்கு சட்டப்பூர்வமான தீர்வைத் தேடாமல் குழந்தைகள் மத்தியில் மதத்தின் பேரில் பிளவு ஏற்படுத்த முயற்சிக் கின்றனர். குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழ்களை மனுதாரர்கள் தங்கள் வசம் வைத்துக்கொண்டனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குழந்தை களின் மாற்றுச் சான்றிதழ்களை பெற்று  அதன் அடிப்படையில் குழந்தை களை வேறு பள்ளிகளில் சேர்க்க முயன்றபோது மனுதாரர்கள் தடுத்து ள்ளனர். குழந்தைகளின் பள்ளி கல்விச் சான்று யாரிடம் உள்ளது என்பதை பற்றி மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, முன்ஜாமீன் வழங்க முடி யாது, மனு தள்ளுபடி செய்யப்படு கிறது” என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சங் பரிவார் அமைப்புகள் மத மோதலை தூண்டும் வகையில் பல்வேறு வித மான வதந்திகளையும், புரளிகளை யும் மாவட்டத்தில் பல இடங்களிலும் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்:

புரளி 1

புறம்போக்கு இடத்தில் சட்டவிரோதமாக சர்ச் கட்ட முயற்சிக்கிறார்கள்.

உண்மை

அச்சங்குட்டம் கிராமத்தில் இப்போது சர்ச் கட்டப் படும் இடத்தில் 1941 ஆம் ஆண்டிலிருந்து சர்ச் இயங்கி வந்தது. அந்த சர்ச்சை இடித்துவிட்டு புதிதாக சர்ச் கட்டுகிறார்கள். இடத்தை பொறுத்தமட்டில் 1987 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட யு.டி.ஆர். திட்டத்தில் அந்த இடம் அரசு புறம்போக்கு கிராம நத்தம் என வகைப்பாட்டில் உள்ளது. 1996ல் அமல்படுத்தப்பட்ட நத்தம் நில வரித்திட்டத்தில் அந்த நிலம் பல்வேறு உட்பிரிவுகளாக மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. அரசாணை எண் 1971 வருவாய்த்துறை (எஸ்.எஸ்.II) நாள் 14.10.1998ன் படி நத்தம் நில வரித்திட்டத்தில் “கோவில், சர்ச், மசூதி, பள்ளி, விளையாட்டு மைதானம் போன்றவை அந்த வகை நிலமாகவே பதிவு செய்திட வேண்டும்” என்று நெறிமுறைகள் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மேற்படி சர்ச் மற்றும் பள்ளி அமைந்துள்ள இடமானது சர்வே எண் 248 /41 என்ற வகைப்பாட்டில் டி.டி.டி.ஏ. பள்ளி மற்றும் சர்ச் என பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த சர்ச் 1978 முதல் மின் இணைப்பும், அச்சங்குட்டம் ஊராட்சிக்கு குடிநீர் கட்டணமும் செலுத்தி யுள்ளது. எனவே, இது திடீரென முளைத்த சட்ட விரோத சர்ச் என்பது போல பேசுவது புரளி அன்றி வேறில்லை.

புரளி 2

சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தென்காசி மாவட்டத்தை சார்ந்த கிறிஸ்துவர் என்பதால் அவருடைய தூண்டுதலின் பேரில்தான் இந்த இடத்தில் சர்ச் கட்ட சட்ட விரோதமாக தமிழக அரசு அனுமதித்துள்ளது.

உண்மை

25.05.2023 தேதியன்று தென்காசி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சிகளுக்காக சென்றிருந்தபோது இந்த பிரச்சனையை கேள்விப்பட்டு நானும், மாநிலக்குழு உறுப்பினர் பி. சுகந்தி மற்றும் அந்த மாவட்டச் செயலாளர் உ.முத்துப்பாண்டி மற்றும் நிர்வாகிகள் அந்த கிராமத்திற்கு சென்றிருந்தோம். இருதரப்பு மக்களையும் சந்தித்த பிறகு, இந்த பிரச்சனை குறித்து அதற்கு அடுத்தநாள் சிறுபான்மை ஆணையத் தலைவரிடம்  நான் பேசினேன். அப்போதுதான் அவ ருக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. அதன்பிறகு அடுத்த வாரத்தில் ஒருநாள் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு தான் வரு வதாகவும் விபரங்களோடு தன்னை வந்து தென்காசி மாவட்ட சிபிஎம் தலைவர்கள், மற்றவர்கள் பார்க்கட்டும் என்றும் குறிப்பிட்டார். அதற்கு  முன்பு பள்ளிக் கூடம் இடிக்கப்பட்டது, சர்ச் இடிக்கப்பட்டது, புதிய பள்ளிக்கூடம் கட்டப்பட்டது, சர்ச் புதிதாக கட்டப்படுவது உள்ளிட்ட எந்த விபரமும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

புரளி 3

இந்து மாணவர்களை மதம் மாற்றுகிறார்கள்

உண்மை

1946லிருந்து இந்த பள்ளி இயங்கி வருகிறது. காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடம் பேசும்போது, இந்த பிரச்சனைக்கு முன்பாக ஒருபோதும் இத்தகைய மதமாற்றம் புகார்கள் வந்ததாக எந்த பதிவும் இல்லை, யாரும் இதற்கு முன்பு இதுபோன்று பேசியதும் இல்லை. இவர்கள் சொல்வதுபோல் மதமாற்றம் நடந்திருந்தால் 1946லிருந்து இப்போது வரை 100க்கும் குறைவான வீடுகள் மட்டுமே கிறிஸ்துவர்களாக இருப்பது சாத்தியமா?

புரளி 4

அந்த இடத்தில் சர்ச்சே இல்லை என்றும் இல்லாத சர்ச்சை புதுப்பிப்பதாக சொல்லி மாவட்ட ஆட்சித் தலைவரை ஏமாற்றி அனுமதி பெற்றுவிட்டார்கள்.

உண்மை

1941லிருந்து அந்த இடத்தில் சர்ச்சும் இருக் கிறது, பள்ளிக்கூடமும் இருக்கிறது. இது அரசு ஆவணத்தில் இருக்கிறது.

புரளி 5

புதிதாக ஊராட்சிமன்ற அலுவலகம் கட்டுவதற் காகத்தான் அந்த இடத்தை கேட்கிறோம்.

உண்மை

ஏற்கனவே ஊராட்சி மன்ற அலுவலகம் கிராம சர்வே எண்: 107/21பி-யில் செயல்பட்டு வருகிறது. 2020க்குப் பின்பு கட்டப்பட்டது. 2020ல் ஆவணப் பதிவு எண்: 1223/2020 நாள்: 18.03.2020-ன் படி தான் அந்த நிலம் ஆளுநர் பெயரில் நன்கொடையாகப் பெறப்பட்டு அதன் பிறகு அந்த இடத்தில் புதிதாக ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது.  எனவே, அச்சங்குட்டம் கிராமத்தில் புதிதாக சர்ச் கட்டப்படுகிறது என்பதோ அல்லது அந்த சர்ச் கட்டு வதற்கான முயற்சிகள் எடுத்த போது அதை தடுத்தார்கள் என்பதோ, ஊராட்சி மன்ற அலுவலகத்திற்காகத்தான் அந்த இடம் கேட்கப்படுகிறது என்பதோ, ஊர்மக்கள் அனைவருமே அந்த பள்ளியில் மாணவர்களை சேர்க்க மறுக்கிறார்கள் என்பதோ முற்றிலும் பொய்யானது.  சர்ச் கட்ட வாய்ப்பு கிடைக்காத வள்ளி கன்ஸ்ட்ரக்ச னுக்கு உதவுவதற்காகவும், மதமோதலை தூண்டி குளிர்காய்வதற்காகவும் இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் கட்டவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளைத் தவிர வேறொன்றுமில்லை.  பெரும்பான்மையாக உள்ள ஊர்பொதுமக்கள் சங்பரிவாரின் இந்த புரளிகளை ஏற்கவில்லை என்ற போதும் பயம் மற்றும் நிர்ப்பந்தத்தின் காரணமாகவே தங்கள் குழந்தைகளை டி.டி.டி.ஏ. பள்ளியில் சேர்க்காமல் வைத்திருக்கிறார்கள். சேர்க்க நினைத்தாலும் அவர்களது மாற்றுச் சான்றிதழ் சங்பரிவார் அமைப்பினர்களிடம் தான் இருக்கிறது.  இதைத்தான் பணயமாக வைத்துக் கொண்டு குழந்தைகளின் படிப்பை நாசம் செய்து வருகிறார்கள்.

தென்காசி மாவட்டம் முழுவதும் இந்த புரளிகளை பரப்பி மக்களிடையே பிளவைத்தூண்டி வன்முறைக்கு வித்திடுகிறார்கள். அதுதான் அவர்களின் அரசியல் நோக்கமும், நடவடிக்கையும்.  எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் தலையிட்டு சங்பரிவாரின் சதிகளை உறுதியாக முறியடிக்க வேண்டும்.