மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாட்டிற்குப் பின்னரான காலத்தில், பாஜக தன்னை மேலும் ஒருமுகப்படுத்திக்கொண்டதைப் பார்க்கிறோம். இது தன் ஆட்சியில் ஆர்எஸ்எஸ்-இன் பாசிச இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை மிகவும் வெறித்தனமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. மதவெறி சக்திகளுடனும் கார்ப்பரேட்டுகளுடனும் கள்ளத்தனமாக உறவினை வலுப்படுத்திக்கொண்டு, நவீன தாராளமய சீர்திருத்தங்களை மேலும் வெறித்தனமாகப் பின்பற்றுவதன்மூலம், நாட்டின் சொத்துக்களை சூறையாடுவதுடன், கூட்டுக்களவாணி முதலாளித்துவத்தை ஊக்குவித்தும், அரசியல் ஊழலை சட்டப்பூர்வமாக்கியும், எதேச்சாதிகார நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொண்டும் மக்கள்மீது பன்முகத் தாக்குதல்களைத் தொடுத்தது.
2019க்குப்பின் நடைபெற்ற தேர்தல்களில் பாஜக தன் மதவெறி நடவடிக்கைகள் மூலம் மக்கள் மத்தியில் அதிக சதவீத வாக்குகள் மூலம் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை அமைத்தது. அதன்பின்னர், மதவெறி நடவடிக்கைகளை மேலும் கூர்மைப்படுத்தி, நம் மதச்சார்பற்ற ஜனநாயக அரசமைப்புச்சட்டத்தின் அடித்தளங்களையே அரித்துவீழ்த்திடும் நடவடிக்கைகளில் இறங்கியது. அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவு மற்றும் 35-ஏ பிரிவுகளை ரத்து செய்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை கலைத்தது. அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. அயோத்தியில் கோவில் கட்டும் பணியைத் தொடங்கியது. மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது ஈவிரக்கமின்றி தாக்குதல்களைத் தொடுத்தது. இந்திய அரசமைப்புச்சட்டத்தின் கீழான குடியரசின் முகத்தோற்றத்தையே மாற்றுவதற்கு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும் இந்தக்காலத்தில் மோடி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக உழைக்கும் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளும் அதிகரித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தோம். உழைக்கும் வர்க்கம், தொழிலாளர் நலச் சட்டங்களை “தொகுப்புச் சட்டங்கள்” என்ற பெயரில் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றியிருப்பதற்கு எதிராகவும், தனியார்மய நடவடிக்கைகளுக்கு எதிராகவும், பொது வேலைநிறுத்தங்கள் மூலமாகவும், துறைவாரியான வேலைநிறுத்தங்கள் மூலமாகவும் எதிர்ப்பினைக் காட்டியது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான இயக்கம் வெகுஜனப் போராட்டமாக மாறியது. மிகப்பெரிய அளவில் நீண்ட நாட்கள் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டதுடன் வரலாறு படைத்த வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.
கடந்த நான்கு ஆண்டுகளில் பாஜக அரசாங்கம் அமெரிக்காவின் ராணுவ சூழ்ச்சி நடவடிக்கைகளுக்கும், அதன் அரசியல் மற்றும் பாதுகாப்பு சார் சூழ்ச்சித் திட்டங்களுக்கும் முழுமையாக சரணடைந்துள்ளது. இவற்றின்மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உறுதியான இளைய பங்காளியாக மாறியிருக்கிறது. இதனால் நாம் நம் அண்டை நாடுகளுடனான உறவில் மிகவும் ஆழமான அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
அரசியல் நிலைப்பாடு
பாஜக அரசாங்கத்தின் சுமார் எட்டு ஆண்டு கால ஆட்சி, மதவெறி சக்திகள்-கார்ப்பரேட்டுகளின் கள்ளப்பிணைப்பை ஒருமுகப்படுத்தி, மக்கள் மீது எதேச்சதிகாரத் தாக்குதல்களை அதிகரித்திருப்பதைப் பார்த்து வருகிறோம். 2019இல் மீண்டும் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபின், பாஜக தன்னுடைய இந்துத்வா ராஷ்ட்ரத்திற்கான நிகழ்ச்சிநிரலை மேலும் வெறித்தனமாகப் பின்பற்றத் தொடங்கியது. இத்துடன் நவீன தாராளமயக் கொள்கைகளையும் எதேச்சதிகார ஆட்சியையும் தொடர்கிறது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இந்துத்துவா ராஜ்ஜியம் நிகழ்ச்சிநிரல் நம் அரசமைப்புச்சட்டத்தின் அடித்தளத்தை அரித்துக்கொண்டிருப்பதுடன், இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம்சத்தையே அழித்துக்கொண்டிருக்கிறது.
எனவே, பாஜக-வைத் தனிமைப்படுத்தி முறியடிப்பதே நம்முன் உள்ள பிரதான கடமை. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி சக்திகளின் சுயேட்சையான பலத்தை அதிகரிப்பது அவசியம். மக்கள் போராட்டங்களையும், வெகுஜனப் போராட்டங்களையும் மேலும் சக்திமிக்கதாக வலுப்படுத்திட வேண்டியது அவசியம்.
இந்துத்துவா நிகழ்ச்சிநிரலுக்கு எதிராகவும், மதவெறி சக்திகளின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல கட்சி மற்றும் இடதுசாரி சக்திகளை வலுப்படுத்த வேண்டியதும் அவசியம். கட்சி அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் இந்துத்துவா மதவெறிக்கு எதிராக விரிவான அளவில் அணிதிரட்டிட வேண்டும்.
நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதில் கட்சி முன்னணியில் இருந்திட வேண்டும். நம் நாட்டின் சொத்துக்கள் நேரடியாகவே சூறையாடப்படுகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குப் பெரிய அளவில் தாரை வார்க்கப்படுகின்றன. இவற்றுக்கெதிராக வர்க்க மற்றும் வெகுஜனப் போராட்டங்களை உக்கிரப்படுத்திட வேண்டும். இது, சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் போன்று அமைந்திட வேண்டும். மதச்சார்பற்ற அனைத்து சக்திகளையும் கார்ப்பரேட்டுகள்-மதவெறி சக்திகளின் கள்ளப்பிணைப்புக்கு எதிராக விரிவானமுறையில் அணிதிரட்டிட வேண்டும். இந்துத்துவா-கார்ப்பரேட் கள்ளப்பிணைப்புக்கு எதிரான போராட்டத்தின் வெற்றி, இந்துத்துவா மதவெறி சக்திகள் மற்றும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துடன் ஒரேசமயத்தில் நடத்தப்பட வேண்டியது அவசியம்.
ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள பிரச்சனைகள் மீது நாடாளுமன்றத்தில் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒத்துழைத்திடும். நாடாளுமன்றத்திற்கு வெளியே, அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் மதவெறி நிகழ்ச்சிநிரலுக்கு எதிராக விரிவானமுறையில் அணிதிரட்டிட கட்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளும். மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரி சக்திகளும் சுயேட்சையாகவும் ஒன்றுபட்டும் இதர ஜனநாயக சக்திகளுடன் குறிப்பிட்ட பிரச்சனைகள் அடிப்படையில், நவீன தாராளமயம், ஜனநாயகத்தின் மீதான எதேச்சதிகாரத் தாக்குதல்கள், மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துக்கூறுவோர் மீது கொடூரமான சட்டங்கள் மூலம் தாக்குதல்கள் ஆகிய அனைத்தையும் எதிர்த்துப் போராடும். வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றுபட்ட நடவடிக்கைகளுக்கான கூட்டு மேடைகளை கட்சி ஆதரித்திடும். கட்சி தொழிலாளி-விவசாயி-விவசாயத் தொழிலாளிகளின் ஒன்றுபட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்திட மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் கட்சி ஆதரித்திடும்.
கட்சியின் சுயேட்சையான பலத்தை வளர்த்திடவும், இடதுசாரிகளின் ஒற்றுமையைப் பலப்படுத்திடவும் முன்னுரிமை அளிக்கப்படும். முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து ஒன்றுபட்ட இடதுசாரிகள் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்கள் உயர்த்திப்பிடிக்கப்படும். கட்சி, வெகுஜன இயக்கங்கள் மற்றும் சமூக இயக்கங்கள் உட்பட அனைத்து இடது மற்றும் ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்டிட தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும். தேர்தல்கள் நடைபெறும் சமயங்களில் பாஜக-விற்கு எதிரான வாக்குகள் சிதறிப்போகாமல் இருக்கும் விதத்தில் மேலேகூறப்பட்ட அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் பொருத்தமான தேர்தல் உத்திகள் கடைப்பிடிக்கப்படும்.
இன்றைய சூழ்நிலையில் நம்முன் உள்ள கடமைகள்
1.கட்சி சுயேட்சையான பங்கினை வலுப்படுத்திட முன்னுரிமை அளித்திட வேண்டும். அதன் செல்வாக்கை அதிகரித்திட வேண்டும், வர்க்க மற்றும் வெகுஜனப் போராட்டங்கள் மூலமாக அதன் தலையிடும் வல்லமையை அதிகரித்திட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் மீதான ஸ்தலப் போராட்டங்களை வலுப்படுத்தி, தொடர் நடவடிக்கைகளையும் உத்தரவாதப்படுத்திட வேண்டும். 2.நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாகப் பொருளாதார சுரண்டலுக்கு ஆளாகியுள்ள அனைத்துத்தரப்பினரையும் அணிதிரட்டி, அவர்களின் வாழ்வாதாரங்களுக்கான போராட்டங்களை உக்கிரப்படுத்திட வேண்டும். மக்கள் தன்னெழுச்சியாக மேற்கொள்ளும் போராட்டங்களில் கட்சி தலையிட்டு அவற்றை வலுப்படுத்திட வேண்டும். 3.கட்சி, இந்துத்துவா மதவெறிக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருந்திட வேண்டும். இந்தப் போராட்டம் தொடர்ந்து பல மட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக அதனால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள், அமைப்புகள், சமூக இயக்கங்களுடன் இணைந்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் விரிவான ஒற்றுமையைக் கட்டி எழுப்பிட வேண்டும்.
4.கட்சி, எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒன்றுபடுத்தி கூட்டுப்போராட்டம் நடத்துவதில் முன்னணியில் இருந்திட வேண்டும். 5.கட்சி சமூக நீதிக்கான போராட்டங்களையும், பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் மீதான சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களையும் முன்னெடுத்துச்செல்வதற்கான முயற்சிகளை வலுப்படுத்திட வேண்டும். 6.இந்துத்துவா மதவெறியின் அடிப்படையில் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களிலிருந்து அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திடும் போராட்டங்களை வலுப்படுத்திட வேண்டும். 7.பழமைவாதம், பத்தாம்பசலித்தனம், பகுத்தறிவுக்கு எதிரான மூட நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக கட்சி தன்னுடைய தத்துவார்த்தப் போராட்டங்களையும், சமூகப் போராட்டங்களையும் வலுப்படுத்திட வேண்டும். மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்திட நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
8.நாட்டு மக்கள் மத்தியில், நம் நாட்டின் தேசிய மற்றும் பொருளாதார இறையாண்மையைப் பாதுகாத்திடக்கூடிய விதத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வினை கிளர்ந்தெழச் செய்திட வேண்டும். சோசலிசத்தை உயர்த்திப்பிடித்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவொன்றே முதலாளித்துவதற்கு மாற்று என்பதை வலுப்படுத்திட வேண்டும். 9.மோடி அரசாங்கம், அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் சரணாகதி அடைந்திருப்பதற்கு எதிராக மக்கள் மத்தியில் கருத்துப்பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவின் சுயேட்சையான அயல்துறைக் கொள்கையை மீளவும் கொண்டவர நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். 10.கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தைப் பாதுகாத்திட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். மேற்குவங்கத்திலும், திரிபுராவிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் பாசிச தாக்குதல்களுக்கு எதிராகவும் கட்சி நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
முடிவுரை
இந்தக் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டுமானால், நாடு முழுதும் ஒரு வலுவான கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டி எழுப்புவது அவசியமாகும். மார்க்சிசம்-லெனினிசத்தின் அடிப்படையில் நாடு முழுதும் வெகுஜனத்தளத்துடன் வலுவானதொரு கட்சியைக் கட்டவேண்டியது அவசியம். அதற்கு கொல்கத்தா பிளீனம் ஸ்தாபனம் தொடர்பாக அளித்திட்ட முடிவுகளை உண்மையாக அமல்படுத்துவதன் மூலமே சாத்தியம். இதற்குக் குறிப்பாக, (1) வெகுஜனங்களுடன் உயிர்ப்பான, வலுவான பிணைப்பினை ஏற்படுத்திக்கொண்டு புரட்சிகரக் கட்சியை வலுப்படுத்திடுவோம். (2)மக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கை விரிவான அளவில் எடுத்துச் செல்வோம். இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளை அணிதிரட்டிடுவோம்.
(3)கொல்கத்தா பிளீனம் சுட்டிக்காட்டியுள்ளபடி தரமான உறுப்பினர்களுடன் கட்சி ஸ்தாபனத்தை வலுப்படுத்திடுவோம். (4)இளைஞர்கள் மற்றும் பெண்களைக் கட்சிக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்குக் கவனம் செலுத்திடுவோம். (5)அனைத்து அன்னிய தத்துவங்களுக்கும் எதிராகத் தத்துவார்த்தப் போராட்டங்களை வலுப்படுத்திடுவோம். ஒரு வலுவான கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவதற்கான நம் உறுதியை இரட்டிப்பாக்கிக்கொள்வோம். வெகுஜன உயிர்ப்புமிக்க புரட்சிக் கட்சியை நோக்கி முன்னேறுவோம். அனைத்திந்திய வெகுஜனத் தளத்துடன் ஒரு வலுவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி முன்னேறுவோம்.
தமிழில்: ச.வீரமணி