மோகன் பகவத் முன்னிலை வகிக்க
கோலாகலத்துடன் கும்பாபிஷேகம் முடிந்தது.
அரிராமனின் அம்புராத் தூணியில்
ஆர் எஸ் எஸ் தடி சாயலில்
அம்புகள் நிரப்பப்பட்டு விட்டன.
கண்ணைக் கட்டி இந்தியரை
கார்ப்பரேட் காட்டில் விட்ட விஸ்வகுரு
கார்வண்ணனின் கண் திறந்து முடித்தார்.
ராகவன் நகரில் ராத்திரி தொடங்கியது.
அயோத்தி மக்களும்
ஆண்டவனும் தூங்கத் தொடங்கினர்.
குறட்டை விட்டுத் தூங்கிய
கோதண்டராமன் கண்களில்
கொடுங்கனவு ஒன்று வந்து குந்தியது.
மக்களுக்கு மகிழ்ச்சியும்
ஆண்டவனுக்கு ஆபத்தும் தரும்
அமங்கலக் கனவு.
கண்ட கனவு கடுங்கனவு.... என்
கவிதை அதை சொல்கிறது .....
* * *
இரண்டாயிரத்து இருபத்துநான்கு
எலக்க்ஷன் முடிவுகள் அறிவிப்பு.
மோடி தர்பாருக்கு மூடி போடப்பட்டு
முடிவு கட்டப் படுகிறது.
தூக்கு போட்டுக் கொண்டவன் நாக்கு
துருத்திக் கொள்வது போல
நாக்பூர் நாக்கைக் கடித்துக் கொண்டது.
ஆர் எஸ் எஸ் தடிகளுக்கு
அடக்க முடியாத ஆத்திரம்.
மக்கள் மேல் கொண்ட கோபம்
மகேசன் மேல் திரும்பியது.
ஓட்டு வாங்க உதவாத ராமனை
உடைந்த சட்டி ஓட்டைப் போல
தூக்கி எறியத் தொடங்கினர்.
அயோத்தி ராமன் பாவம்
அயோக்ய ராமன் ஆகிப்போனான்!
ராமன் திருமேனியை ரணகளமாக்க
ராஜ்ஜியம் முழுவதும்
திரிசூலிகள் திரியலாயினர்.
ராமனுக்கு பாவம் ராகு காலம்.
அது மட்டுமா ?
சாமி ராமனுக்கு சனி பிடித்த சாட்சியமாய்
காகுத்தன் கோயில் மேல்
கருடாழ்வாருக்குப் பதில்
காகம் உட்கார்ந்து கரையலானது.
சங்கிகள் ராமனுக்கு சாபம் இட்டனர்:
“மரா மரத்தை துளைத்ததாம் உன்
மகா சக்தி வாய்ந்த அம்புகள்... ஆனால்
ஓட்டு எந்திரத்தின் உள்ளே புகுந்து
எமக்கான தாமரைக் குறிகளை
ஏற்படுத்தாமல் போன இழிவு நேர்ந்ததே.
“மசூதியை இடித்த கடப்பாரையை விட
மவுசு குறைந்தவை ராமா உன்
மழுங்கிப் போன அம்புகள்!
நீ அருந்திய
சோமபானத்தில் மூழ்கி
ராமபாணத்தில் தள்ளாட்டம் வந்ததோ?
“தாமரை சின்னத்தை நீ
கண்ணாக கருதினாய் எனவும் ...அதை உன்
கண்ணுக்குள் வைத்ததால் தான்
கமலக்கண்ணன் என அழைக்கப்பட்டாய் எனவும்
கப்சா விட்டு கதை கட்டினோம்....இனி
செந்தாமரைக் கண்ணுக்கு சீக்கு வரட்டும்.
மலர்க் கண்களுக்கு
மாலைக்கண் நோய் வரட்டும்.
“சூர்ப்பனகையின் மூக்கரிந்த
தம்பி லட்சுமணனுக்கு சரி போட்டியாய்
எங்கள் மூக்கரிந்தாயே ... அதாவது
எலக்க்ஷனில் தோற்று நாங்கள்
இழிவடைய வைத்தாயே!
“டில்லி அரியணை எம்மை விட்டு
தள்ளிப் பிரிந்திடும் தருணம் வந்ததே!
அயோத்தி அரியணையில் நீ
அமர்ந்து எமக்கு ஆவது என்ன?....உன்
அரியணைக் கால்களை
அரிக்கட்டும் செங்கரையான்!
“அங்கதன் ஏந்தும் உடைவாள்
அட்டைக் கத்தியாய் மக்கி மண்ணாகட்டும்!
பரதன் ஏந்திய வெண்கொற்றக் குடைத் துணி
பாடைப் பிணத் துணியாய் பவிசு இழக்கட்டும்.
“கௌசல்யா மகனே உனக்கு கவரி ஒரு கேடா?
இஸ்லாமிய, தலித் குடிசைகளை நாங்கள்
எரித்த வெப்பமும் புகையும்
எதற்கு பிரயோஜனம்?....ஆனால்
கமறல் எடுத்து நீ
கக்கி இருமும் படியாய் அந்த புகைகள்
இலக்குவனும் சத்ருக்கனனும்
ஏந்திய கவரியில் இடம் பிடிக்கட்டும்.
“பொன்னாடை அணிவித்துத்தான்
போற்றினோம் உன்னை ....ஆனால் ஆனால்
பன்னாடையைத் தான் இனி
உன்னாடையாக உடுத்த வைப்போம்.
“தர்மப் பிரபு தயாளப் பிரபு
ரபேல் நாயகனுக்கான
தைவான் காளான் இறக்குமதியை
தள்ளி வைக்கிறோம் ... ஆனால் அதை
உள்ளூரிலேயே வளர்க்க உத்தேசித்திருக்கிறோம்.
காளான் தயாரிப்புக்கான கச்சாப் பொருளாான
வைக்கோலை திணித்து வைக்க
காகுத்தனே இனி உன்
கருவறையை பயன்படுத்துவோம்.
“பிரான் பிரதிஷ்டைக்காக
புனித நீராடி விரதம் இருந்தார் எமது
பூலோக குரு....அதோ மீண்டும்
தண்ணீர் நோக்கித் தாவிச் செல்கிறார்!
“சரயு நதியில் ஜலசமாதியான உன் போல்
தானும் ஜல சமாதியாகவா செல்கிறார்?
அல்ல அல்ல அரி ராமா!
ஓட்டுகள் கிடைக்காத உளைச்சலில்
உயிரைப் போக்கிக் கொள்ள அல்ல!
அப்படிப்பட்ட அற்புதப் பொற்பதம்
அடையட்டும் அவர் என ஆசீர்வதிக்காதே!
“விஸ்வ குருவின் திருவாய் அதோ
வெறுப்பில் முணுமுணுக்கிறது.
உன்னை சபிக்கிறார் உற்றுக்கேள்:
‘காரியக் கும்பிடு பலன் தரவில்லையே
காகுத்தா!
ஆரிய ஆட்சி தொடராமல் எமக்கு
ஆப்பு வைத்தார்களே அரி ராமா!
ஓட்டு வாங்க உதவாத ராமனே
ஒழிந்து போ.
தசரத ராமா இதோ உன்னை
தலைமுழுகித் தொலைத்தேன்’ என
சிரசில்மேல் நீர் மொண்டு கொட்டிக்கொள்ளவே
செல்கிறார் நீர்நிலை நோக்கி ஜெககுரு.
கார்ப்பரேட் சீடர் அதானிதாசர் அம்பானி நேசர்.”
ஜாமம் வரை மேலும் நீண்டது
ஜானகிராமன் கனவு ......
கார்வண்ண ராமனை
காவி வண்ண ராமனாய்
பெயிண்ட் அடித்து மாற்ற
பிரையாசைப் பட்டவர்கள்
ஓட்டுகள் வாங்க ராமன்
ஒத்துழைக்காததால்
வேத முதல்வன் மேல்
வெற்றிலைச் சாற்றைத் துப்பி
இந்த வெற்றிலைக் காவி தான் உனக்கு
ஏற்புடையது என்றார்கள் .
குரங்காட்டியிடம் இருந்த
குரங்கை பிடித்து வந்தனர்.
அனுமார் வாகனத்தின் மேல்
அமர்ந்திருந்த ராமனை
அகற்றிவிட்டு இந்த
குரங்கையே அனுமார் மேல்
குந்தவைத்தனர்.
பரதன் சிரம் மேல் சுமந்த
பாதுகையைப் பிடுங்கி வந்தனர்....அதை
தலைமேல் ராமனையே சுமக்கச் சொல்லி
தகராறு செய்தனர்.
ஜெய் ஸ்ரீ ராம் கோஷம்
செல்லுபடி ஆகாததால்
பொய் ஸ்ரீ ராம் என
கோஷம் போட்டு கூச்சலிட்டனர்.
அரிராமனின் அம்புராத் தூணியில்
அம்புகளைக் கவர்ந்து வந்தனர்....அவற்றை
சவ ஊர்வலத்தின் சமயம்
வான் நோக்கிச் செலுத்தும்
வாணவெடிக் குச்சியாக்கிக் கொள்ள
வெடி தயாரிப்பவரிடம்
வீசிச் சென்றனர்.
ராவணனின் பத்துத் தலையிலும்
பேன் பார்க்கச் சொல்லி
சீதா பிராட்டியாரை
சீண்டினார்கள் சீறினார்கள்.
கோதண்டத்தைப் பறித்துக் கொண்டு
கூனியைக் குறி பார்த்த
உண்டை வில்லை கையில் திணித்தார்கள்.
இந்த வில் தான் உனக்கு லாயக்கு
கோசல ராமா குருவி அடிக்கப் போ என
கோபித்தார்கள்.
அபகரித்து வந்த ரம்ஜான் பிரியாணி
அண்டாவை கழுவ
கோசல ராமனின் கும்பாபிஷேக நீரை
கோயில் பூசாரிகள் கொடுத்தனுப்பினாார்கள்.
ஈறுக்கும் பல்லுக்கும்
இடையில் சிக்கின பிரியாணி
இறைச்சித் துணுக்குகள்.
ராமனின் வில்லைப் பிளந்து
ஈர்க்குச்சியாக வகிர்ந்து
பல்குத்தும் குச்சியாக
பயன்படுத்திக் கொண்டார்கள்!
இறுதியில் இப்படி எச்சரித்தார்கள்:
“சாவர்க்கரின் வாரிசுகள் நாங்கள் .
சாட்சாத் அவரைப் போலவே எமக்கும்
சாமி பக்தி என்பது சும்மா!
திருப்பதி பெருமாள் எமக்கு
லட்டு என்றால்
ரகுராமா நீ எமக்கு
ரவா லட்டு!
புளியோதரை போல் உன்னை
புரட்டி உருட்டி விழுங்கி
புளியேப்பம் விடுபவர்கள் நாங்கள் !”
* * *
தீர்த்தத்துக்குப் பதில் மேனியில்
திராவகம் தெளித்தது போல்
திடுக்கிட்டுக் கனவு கலைந்தான் ராமன்.
அயோத்தியில் இருந்தால்
ஆளை காலி செய்து விடுவார்கள் என
அச்சமடைந்தான்....
ஆயிரத்து எண்ணூறு கோடி ரூபாய்
ஆலயம் விட்டு வெளியேறினான்....மீண்டும்
ஆரண்யம் ஏக ஆயத்தம் ஆனான் ....ஆனால்
காடுகள் எல்லாம் களவு போயிருந்தன.
நாட்டை மொட்டை அடித்தவர்கள்
காட்டையும் மொட்டை அடித்திருந்தனர்.
பர்ணசாலை அமைத்துக் கொள்ள
பயன்படும் கொம்புகள் காட்டில் இல்லை.
கங்கைக் கரை வழியில்
கால் கடுக்க நடந்து வந்தான்....அங்கே
குகனின் வழிவந்த மீனவர்களின்
குப்பத்துக் குடிசைகள் தென்பட்டன.
“குகனின் வாரிசுகள்
கொடுப்பார்கள் அடைக்கலம்.
தங்கிக் கொள்ள இதுவே தகுந்த இடம்.
இங்கே நான் பாதுகாப்பாக
இருப்பேன்.....ஏனெனில்
2024க்குப் பிறகு
எலக்சன் மீண்டும் வரும் வரை
இதுபோல் குப்பங்களை சங்கிகள்
எட்டிப் பார்க்க மாட்டார்கள். “
ராஜா ராமன் சாதா ராமனாய்
கோயில் ராமன் குடிசை ராமனாய்
கோட்சே ராமன் காந்தி ராமனாய் ..
குகனது பரம்பரை ஒருவனின்
குடிசைக்குள் புகுந்தான்.