தோழர் பாலமோகனன் மறைவுக்கு சிபிஎம் தமிழ் மாநிலச் செயற்குழு இரங்கல்
சென்னை,மே 8- புதுச்சேரி அரசு ஊழியர்களின் முன்னோடியும் சிறந்த தொழிற்சங்கவாதியுமான தோழர் சி.ஹெச். பாலமோகனன் அவர்களின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனத்தை உருவாக்கியவரும், சிறந்த தொழிற்சங்கவாதியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் சி.ஹெச். பாலமோகனன் ( வயது 74) அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தோம். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு ஆழ்ந்த அஞ்சலியையும், செவ்வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
தோழர் பாலமோகனன் மாஹே பகுதியில் தனது மாணவர் பருவம் முதல் அநீதிக்கு எதிரான போராட்டங்களை முன்நின்று நடத்தியவர். 1975 ஆம் ஆண்டு அடக்குமுறை காலத்தின் போது கைது செய்யப்பட்டு காவல்துறையின் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர். புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் சம்மேளனத்தை உருவாக்கிய முன்னோடி. அரசு ஊழியர்களின் உரிமைகளுக்காகவும், நலன்களுக்காகவும் பல்வேறு இயக்கங்களை முன்னெடுத்து வெற்றி கண்டவர். புதுச்சேரி மாநில இணைப்பிற்கு எதிராக வீரம் செறிந்த போராட்டங்களை முன்னெடுத்தவர். ஜிப்மர் மருத்துவமனையை ஒன்றிய அரசு தனியார்மயமாக்க முனைந்த போது பல்வேறு இயக்கங்களை நடத்தியதோடு, உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி அம்மருத்துவமனையை பாதுகாத்தவர். இயற்கை, சுற்றுச் சூழல் ஆகியவற்றை பாதுகாப்பதில் தனிக் கவனம் செலுத்தியவர். புதுச்சேரி மாநிலம் இன்று தனித்த அடையாளமாக திகழ்வதற்கும், அதன் மாநில உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும் தொடர்ந்து குரலெழுப்பியவர். தொழிலாளர்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் பாடுபட்ட சிறந்த தொழிற்சங்கவாதி. அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், தொழிற்சங்க இயக்கத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், புதுச்சேரி மாநில தோழர்களுக்கும் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தலைவர்கள் இரங்கல்
தோழர் சி.எச்.பாலமோகனன் மறைவுச் செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் ஏ.கே.பத்மநாபன், பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் உள்ளிட்ட தலைவர்கள் துயரமும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளனர்.
1976அக்டோபர் 12,காலை மணி பத்து, புதுச்சேரி வைசியாள் வீதியில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் தலைமையிலான காவல்துறை நுழைந்தது. பதிவாளரிடம் அங்கு பணியாற்றும் ஊழியரை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாகச் சொன்னது. குள்ளமான உருவம், எளிமையான தோற்றம், சுருட்டையான அடர்த்தியானமுடி,உறுதியான உள்ளம், தீர்க்கமான கண்கள்,தோளில் நிரந்தரமான இடத்தைப் பிடித்திருக்கும் ஜோல்னாப்பை. இவைகளுடன் சதாசர்வ காலமும் சுறுசுறுப்பாக பணிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் ஊழியர்,28 வயது இளைஞர். விசாரணைக்கு அழைக்கப்பட்ட அரசு ஊழியர். அதிகாரி அனுமதிஅளித்ததும் காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டார். திருமணமாகி ஒரு மாதம் லீவு முடிந்து அன்றுதான் பணியில் சேர்ந்து இருக்கிறார்.தனது வாழ்க்கைத் துணை சந்திரி அவர்களை அவர் பணியாற்றும் ரோமன் ரோலன் நூலகத்தில் சைக்கிளில் இறக்கிவிட்டு கூட்டுறவுத்துறை அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். அந்த ஊழியர் தான், தனதுவாழ்நாள் முழுவதும் புதுவைமாநிலஅரசு ஊழியர்களுக்காகவும்,பாதிக்கப்பட்ட கடைநிலை ஊழியர்களுக்காகவும், மறுக்கப்பட்ட உரிமைகளுக்காகவும் இறுதி மூச்சுவரை போராட்டக் களத்தையே வாழ்க்கைத் தளமாக்கிக் கொண்ட தோழர் சி.எச்.பாலமோகனன் அவர்கள்.
இன்று புதுவையில் அஞ்சலி
சி.எச்.பி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட தோழர் பாலமோகனன் 2022, மே 08 ஞாயிறன்று காலை 04.30 மணியளவில் கேரள மாநிலம் வடகரா கூட்டுறவு மருத்துவமனையில் கடுமையான மாரடைப்பால் காலமானார். தோழரின் உடல் அவரது சொந்த ஊரான மாகியில் மாலை 4 மணிவரை பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மே 09, திங்கட் கிழமையன்று (இன்று) காலை 10 மணி முதல் மாலை 04.00 மணி வரை அவரது வாழ் நாளில் பெரும் பகுதியை செலவழித்த புதுவை மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தில், அரசு ஊழியர்கள், அரசியல் கட்சிகள், ஜனநாயகத் தொழிற்சங்க இயக்கங்கள், சமூக நல அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்த வைக்கப்படுகிறது. 1948ல் பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற சாரோத் குஞ்ஞிக்கண்ணன், குண்ணும்மல் சிருதா தம்பதிகளுக்கு மூன்றாவது குழந்தையாக 1948 செப்டம்பர் 30 இல் பிறந்தார். மாணவப் பருவத்திலேயே தான் படித்த பள்ளியில் மாணவிகளுக்கு தனியான கழிப்பிடம் வேண்டியும், மாகியில் கல்லூரி வேண்டியும் போராடத் தொடங்கினார். போராளியாகவே வாழ்க்கைத் தொடங்கியது.
1969 இல் நடைபெற்ற அரசு எழுத்துத் தேர்வில் புதுச்சேரி மாநிலத்தில் அதிக மதிப்பெண்களை பெற்று முதல் ஊழியராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதுவை அரசின் கீழ் இயங்கும் கூட்டுறவுத் துறையில் பணியில் இளநிலை எழுத்தராக தோழர் பாலமோகனன் பணியில் சேர்ந்தார். சில மாதங்களுக்குள்ளாகவே அரசு ஊழியர் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். அன்றைய முதல்வர் எம்.ஓ.ஹெச் ஃபாரூக் மரைக்காயர் ஆட்சி காலத்தில் நடைபெற்ற அரசு ஊழியர்களின் பல கட்ட போராட்டங்களில் முன்னணியில் நின்றார் தோழர் பாலமோகனன். அன்றைய நாளில் மத்திய, மாநில, பொதுத்துறை ஊழியர் பேரவையே அனைத்து அரசு ஊழியர்களுக்காக போராடக்கூடிய அமைப்பு. 1975ல் புதுவை மாநில அரசு ஊழியர் சம்மேளனம் உருவானது. அதனுடைய முதல் பொதுச் செயலாளர் தோழர் சி.எச். பாலமோகனன். தோல்வி கண்டு துவளாத, அடக்குமுறைகளுக்கு அஞ்சாத போராளியாகவே தனது தொழிற்சங்கப் பயணத்தை தொடங்கினார்.
அவசரநிலை – சித்ரவதை
1975-77 ஆண்டுகள் இந்திய அரசியல் வரலாற்றில் ஜனநாயக இயக்கங்களுக்கும், மனித உரிமைப் போராளிகளுக்கும் கருப்பு நாள். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தங்கள் பதவிகளை தக்க வைத்துக்கொள்வதற்காக அவசர நிலை பிரகடனம் அமலுக்கு வந்தது. அவசர நிலை பிரகடனம் புதுச்சேரி மாநிலத்திலும் இருந்ததன் அடையாளம்தான் தோழர் பாலமோகனனின் கைது. அன்றைய தினம் விசாரணை என்ற பெயரில் காவல்துறை வாகனத்தில் ஏற்றபட்ட தோழர் பாலமோகனன் இறங்கியவுடன் கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். அவரது மனைவியிடம் அலுவலகப் பணிக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் காவல்துறையின் உயர் அதிகாரிகள் முதல் கடைநிலைக் காவலர்களின் கொடுங்கரங்கள் பாலமாகனனைத் தீண்டியது. உச்சகட்டமாக இரண்டு காவலர்கள் பாலமோகனனை ஒரு சாக்கில் வைத்து கட்டி கடலில் இறக்கினார்கள்.“உண்மையைச் சொல்லிவிடு. ராகவனை சந்தித்தாயா?,அஜிதாவைத் தெரியுமா?, உங்களது அடுத்த திட்டம் என்ன?” எதுவும் எனக்குத் தெரியாது என்பதே தோழரின் பதில். இவர் விசாரணை என்ற பெயரில் அழைக்கப்பட்ட வழக்கு, கேரளப் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாகி சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.வி.ராகவன் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு தேடப்படும் நபராக இருக்கிறார்; அவர் அவசர நிலை காலத்தில் தலைமறைவுவாழ்க்கைக்குச் சென்றுவிட்டார். தோழர் அவரை சந்தித்ததாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள்.
சிறைவாசம்
கொடுமையான சித்ரவதைக்குப் பின்னர், புதுச்சேரி மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.7 மாத சிறைவாசத்திற்குப் பின்னர் இந்திரா காந்தி தேர்தலில் தோல்வியுற்று, அவசர நிலை வாபஸ் பெறப்பட்ட பிறகு விடுதலை செய்யப்பட்டார். சிறைவாசத்தில் தமிழ் மொழியை எழுதப் படிக்க கற்றுக் கொண்டார். சிறை வாசத்திலும் தோழர் கடமையாற்ற தவறவில்லை. புதுச்சேரி சிறைக் காவலர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. சிறைவாசம் தோழரை புதுச்சேரி மாநிலத்தின் தலைசிறந்த தொழிற்சங்க தலைவராக உருவாக்கியது.
புதுச்சேரி - தமிழகம் இணைப்பு எதிர்ப்பு இயக்கம்
புதுச்சேரியை அண்டை மாநிலமான தமிழகத்துடன் இணைக்கப் போகிறேன் என்ற ஒரு அறிவிப்பை அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் அறிவித்தார்.அதை எதிர்த்து புதுச்சேரி மாநிலத்தில் போராட்ட நெருப்பு பற்றியது. மாபெரும் மக்கள் இயக்கம் நடைபெற்றது. புதுச்சேரி அரசியல் கட்சிகள்,(அதிமுக தவிர) தொழிற்சங்க ஜனநாயக இயக்கங்கள், சமூக நல அமைப்புகள் அனைத்தும் அந்த இயக்கத்தில் பங்கேற்றன. முன்னணி தளபதியாக தோழர் பாலமோகனன் விளங்கினார். விடுதலைக்குப் பின்னர் புதுச்சேரியில் முதன்முதலாக ஊரடங்கு உத்தரவு, துப்பாக்கிச்சூடு முதலியவை நடைபெற்றன. ஜனவரி 26 குடியரசு நாள் புறக்கணிப்பு முழுமையாக நடந்தது.போராட்டக்காரர்கள்புதுச்சேரி, கடலூர் மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டனர். அரசியல் கட்சித் தலைவர்களுடன் தோழரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். போராட்டத்தின் வீச்சால் மத்திய அரசு புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்கும் முடிவைக் கைவிட்டது.தோழர் பாலமோகனன் தன்னிகரற்ற தலைவராக அந்த இயக்கத்தில் பரிணமித்தார்.
புதுவை அரசுக்கு எதிர்க்கட்சி
தொடர்ந்து பல இயக்கங்கள் அரசு ஊழியர்களுக்காக நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க அரசு ஊழியர் இயக்கம் 1981ஜூலையில் புதுவை மாநில அமைச்சக ஊழியர்கள் பதவி உயர்வு தொடர்பாக அரசு ஊழியர்களின் போராட்டம் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் இதன் விளைவாக தோழர் பாலமோகனன் கைது செய்யப்பட்டார். அதைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. புதுவை மாநில அரசு ஊழியர் வரலாற்றில் இது போன்றதொரு பேரணி அதுவரை நடந்ததே இல்லை. பேரணி ஒரு கட்டத்தில் மத்திய சிறைச்சாலையை முற்றுகையிட்டது. சிறைச்சாலையின் விதிகள் மீறப்பட்டு கதவுகள் திறக்கப்பட்டன. தோழர் பாலமோகனன் பேரணியைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டார். பேரணி தொடர்ந்தது. விளைவு! அதிகாலை 3:00 மணிக்கு தலைமைச் செயலாளர் பேச்சுவார்த்தைக்காக சிறைச்சாலைக்கு வந்தார். பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகளால் அன்றைய முதல் அமைச்சர் டி.ராமச்சந்திரன், சட்டமன்றத்தில் “புதுச்சேரி மாநிலத்தில் எதிர்கட்சியே கிடையாது, சம்மேளனந்தான் எங்களுக்கு எதிர்கட்சி” என்றார். புதுச்சேரி அதிகாரவர்க்கமும், சுயநல அரசியல் சக்திகளும் திரைமறைவில் அரசு ஊழியர்களின் உருக்கு போன்ற அமைப்பான சம்மேளனத்தை உடைக்கவும், தோழரை பழிவாங்கவும் சதி வேலைகளை தொடங்கினர்.
வேலைநிறுத்தம் – பழிவாங்கல்கள்
புதுவை மாநில அரசு ஊழியர் சம்மேளனமும் இந்திய அளவில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றது. சுயநல அரசியல் சக்திகளும், அதிகார வர்க்கமும் இணைந்து இந்த போராட்டத்தைக் காரணமாகச் சொல்லி பாலமோகனன் உள்பட 11 தோழர்கள் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி கிரிமினல் வழக்குகளை போட்டனர். குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிருபிக்கப்பட்டதாக சிறைக்கு அனுப்பப்பட்டனர். தற்காலிக பணிநீக்கம், பணியிடை நீக்கம் அனைத்தையும் அரசு ஊழியர் சங்கத்தின் மீது ஏவினர். அரசு ஊழியர் சம்மேளனம் உடைக்கப்பட்டது.4 ஆண்டுகள் நெடிய போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள் அனைத்தையும் சந்தித்து பாலமோகனன் பதவி உயர்வுடன் பணிக்குத் திரும்பினார்.
வரலாற்றுச் சாதனை
பாலமோகனனின் அனைத்துச் செயல்பாடுகளும் அவர் நேசிக்கின்ற இடதுசாரிக் கோட்பாடுகளால் தீர்மானிக்கப்பட்டன. எனவே தோழரின் வர்க்கச் சாய்மானம் அனைத்துப் போராட்டங்களிளும் அரசு ஊழியராக பணியாற்றிய கடைநிலை ஊழியர்களுக்காகவே இருந்தது. அவரது பணியின் பெரும்பகுதி இதற்காகவே செலவிடப்பட்டது. குறிப்பாக தினக்கூலி ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், கௌரவப் பணியாளர்கள், பகுதிநேர ஊழியர்கள் ஆகியோரின் பணி உத்தரவாதம், நிரந்தர பணியில் இவர்களுக்கு உரிய இடம்,உரிமைகள் கோரியும் இருந்தது. எண்ணற்ற பேச்சுவார்த்தைகள், போராட்டங்களை திட்டமிட்டு, தலைமை ஏற்று நடத்தினார். வரலாற்றுச் சாதனையாக இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாதஅளவில் அங்கன்வாடி ஊழியர்கள் நிரந்தரமாக்கப்பட்டனர். சுமார் ஆயிரம் பெண் ஊழியர்கள் 25 ஆண்டுகாலமாக பணியாற்றிய, அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரமாக்கி வரலாற்றுச் சாதனை படைத்தது சி.எச்.பாலமோகனன் தலைமையிலான அரசு ஊழியர் சம்மேளனம்.
ஜிப்மர் பாதுகாப்பு இயக்கம்
ஜிப்மர் மருத்துவமனை ‘தன்னாட்சி’ என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்க்கப்படும் சூழலில், அதை தடுத்து நிறுத்தும் மக்கள் இயக்கம் நடைபெற்றது. மக்கள் இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் தா.முருகனுடன் இணைந்து போராட்டக் களத்தில் நின்றார் பாலமோகனன். இன்றைய வரையில்குறைந்த செலவில் மருத்துவக்கல்வி, இலவச மருத்துவம் ஜிப்மரில் தொடர்வதற்கு அந்த மக்கள் இயக்கமும் தோழரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாகும். புதுவைத் தொழிற்சங்க வரலாற்றில் நாடாளுமன்ற நிலைக்குழு புதுவைக்கு வருகை புரிந்ததும், நாடாளுமன்றத்தில் மசோதா திருப்பப்பட்டதும் முதல் முறையாகும்.
அரசுப் பணி ஓய்வு
எண்ணற்ற போராட்டங்களை புதுச்சேரி மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்காகவும், புதுச்சேரி மக்களுடைய உரிமைகளுக்காகவும் களத்தில் நின்று போராடியவர் தோழர். புதுச்சேரி மாநிலத்தின் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் பாதுகாப்பு போன்ற பணிகளிலும் தன்னை அர்ப்பணிப்போடு ஈடுபடுத்திக் கொண்டார். இயற்கையின் மீது இவரது நேசத்தை பூத்துறையிலுள்ள நூற்றுக்கணக்கான மரங்களின் காற்று பேசும். தோழர் பாலமோகனன் ஒரு முன்னுதாரணமான தொழிற்சங்கத் தலைவராக, மத்தியதர வர்க்க ஊழியராக இருந்தார் என்ற கூற்று மிகையல்ல. ஒரு அரசு ஊழியர் பணிஓய்வு நாள் பொதுவாக கொண்டாட்டங்களின் மூலமே இருக்கும். ஆனால் புதுவை மாநிலத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி, அதன் தொடர்பாக அரசின் மீது வழக்குத் தொடுத்தார் என்ற ஒரு காரணத்திற்காக பணி ஓய்வு நாள் அன்று தோழர் பாலமோகனன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவரின் பணி ஓய்வு நாளும் அரசு ஊழியர்கள் மறியல், கைது இவைகளுக்கு மத்தியில் நடந்தது. சராசரி அரசு ஊழியர் போலல்லாமல் பாலமோகனன் என்ற போராளிக்கு போராட்டக் களத்தில்,தற்காலிக சிறைக்கூடத்தில் பணி ஓய்வு ஆணை அளிக்கப்பட்டது. புதுச்சேரி வரலாற்றில் முதன் முறையாக தற்காலிக சிறைக் கூடத்திலேயே இவருடைய பணி ஓய்வு பாராட்டு விழாவும் நடைபெற்றது.
உறங்காத சூரியன்
பாலமோகனனுக்கு தோல்விகள் ஏதேனும் இருப்பின் அவை அடுத்தகட்ட வெற்றிகளுக்காக இடப்பட்ட உரங்களே. வெற்றிகளை எப்போதுமே தனிநபர் வெற்றியாக இவர் பார்ப்பதில்லை, அவற்றை ஒட்டு மொத்த ஊழியர்களின் ஒற்றுமையாகவும்,சம்மேளத்தின் சக்தியாகவும் இவர் கருதினார். எனவே தான் என்றும் அடக்கத்தோடு அவருடைய இறுதி நாள் வரை இருந்தார். அரசு ஊழியர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து இவருடைய இதயம் துடித்துக் கொண்டிருந்தது. பாலமோகனன் ஒரு பிரச்சனையை அணுகும்முறை இதுதான்: “தோழர், இஷ்யூ அடிப்படையில் தான் பிரச்சனைகளைப் பார்க்கவேண்டும், தனி நபர் சார்ந்து அல்ல”. இந்த அணுகுமுறை தான் மாற்று அமைப்பினரையும் இவர்மீது மரியாதைக் கொள்ள வைத்தது. அரசு ஊழியர்களின் உரிமைகள் குறித்து இவருடைய விரல்கள் என்றும் ஆங்கிலத்திலும் தமிழிலும் உணர்வு எழுத்துக்களை எழுதிக் கொண்டே இருந்தன. பணி ஓய்வுக்குப் பிறகும் பல்வேறு விதமான நூல்களையும், மொழிபெயர்ப்பு நூல்களின் மூலப்பிரதிகளையும் தேடினார். இவர் ஏற்கனவே கற்றிருக்கும் மலையாளம், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகள் இவருக்கு கைகொடுத்தன. இவருடைய அனைத்து திறமைகளும் கடைமட்ட ஊழியர்களுக்காகவும், குரலற்றவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவுமே இருந்தன. இவருடைய வாழ்க்கைப் பயணம் என்பது புதுவை மாநில தொழிற்சங்க வரலாற்றில் ஒரு அழியாத அத்தியாயமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. புதுவை மாநில அரசு ஊழியர்களின் விடியலுக்காக என்றுமே உறங்காத சூரியனாக பாலமோகனன் செயல்பட்டார். ஓய்வறியாச் சூரியன் தன்னுடைய பணிகளாலும், வாழ்க்கைப் பதிவுகளாலும், குன்றாகக் கொள்ககையாலும், அதிகாரவர்க்கத்திற்கு என்றுமே பணியாத உறுதியான செயல்பாடுகள் மூலமாக ஒளி வீசிக்கொண்டிருக்கிறார். செவ்வணக்கம் தோழர் பாலமோகனன்!