articles

img

மதவெறி சக்திகளை அழித்தொழிக்க உந்து சக்தி தோள் சீலைப் போராட்டம் - கே. பாலகிருஷ்ணன்

இந்திய வரலாற்றில் நிலங்களையும், வளங் களையும் உண்டுகொழுக்கும் நிலப்பிரபுக் கள் உழைப்பாளி மக்களை அடிமைகளாக அடக்கி, ஒடுக்கி எண்ணற்ற கொடுமைகளை அரங்கேற்றி வந்தனர். இவர்களுக்கு பேராயுதமாக மனுஸ்மிருதி என்ற மனுதர்மம் மனித சமூகத்திற்கு எண்ணற்ற கொடுமைகளை இழைத்தது. பிறப்பால் மனிதனை சாதிய, சமூக கொடுமைகளுக்கு உட்படுத்தியது, பெண்களை அடிமைப்படுத்தியது, குழந்தை திருமணம் - சிசுக்கொலையை அரங்கேற்றியது, கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறும் நியதியை உருவாக்கியது. இந்த நால்வருண முறை யில் சூத்திரர்கள் மனிதர்களாகவே நடத்தப்பட வில்லை. நால்வர்ண முறைக்கு வெளியில் வாழ்ந்த பஞ்சமர்கள் என்ற பட்டியலின மக்கள் மிருகங்களை விட மிக கேவலமாக நடத்தப்பட்ட கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன. இக்கொடுமைகளை எதிர்த்து இந்திய நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்த உழைப்பாளி மக்களின் எழுச்சிகளுக்கு பல ஆன்மீக வாதிகளும், முற்போக்கு சிந்தனையாளர்களும் வரலாற்று காலந்தொட்டு குரல்கொடுத்தது வரலாற்று ஏடுகளில்  இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, புத்தர், மகாவீரர், ஜோதிபா பூலே, ராஜாராம் மோகன்ராய், ராமகிருஷ்ண  பரமஹம்சர், வள்ளலார், நாராயணகுரு, அய்யன் காளி, ஐயா வைகுண்டசாமி போன்ற பலரையும் குறிப்பிடலாம்.

சனாதனத்தின் கொடுமைகள்

இன்றுள்ள குமரி மாவட்டம் உள்ளிட்ட அன்றைய தென்திருவிதாங்கூரில் வர்ணாசிரம அதர்மத்தால் வதைக்கப்பட்டு வந்த ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்திய மகத்தான போராட்டம் ‘தோள் சீலைப் போராட்டமாகும்’. 1822ஆம் ஆண்டு முதல் 1859 ஆம் ஆண்டு வரை மிகப்பெரிய எழுச்சியுடன் இப்போராட்டம் நடந்துள்ளது. வர்ணாசிரம அதர்மம் ஏற்படுத்திய ஒடுக்குமுறை அன்று எந்த அளவுக்கு கொடிய விளைவுகளை எற்படுத்தியது என்பதை அறிந்துகொள்வது இன்றைய காலத்தின் கூடுதல் தேவையாக உள்ளது. ஏனெனில் சனாதன தர்மம் குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு வகுப்பெடுக்கும் ஆளுநர் ரவி போன்றவர்கள் மூடி மறைக்கும் ரத்தம் தோய்ந்த வரலாறு அது. “ஒரு நம்பூதிரி இருக்கும் இடத்திலிருந்து நாடார்கள் மற்றும் ஈழவர்கள் 36 அடி தொலைவிலும்,  புலையர்கள் 96 அடி தூரத்திலும், நாயர்களிடமிருந்து நாடர்கள் மற்றும் ஈழவர்கள் 12 அடி தூரத்திலும், புலையர்கள் 60 அடி தூரத்திலும் நிற்க வேண்டும்” எனும் அளவுக்குச் சாதிவெறி மேலோங்கி இருந்தது.  அரசர் - நம்பூதிரிப் பார்ப்பனர் - நாயர் - வேளாளர் ஆகியோரைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் தீண்டப்படாதோர் என்றே கருதப்பட்டனர். அதனால் உயர்சாதி நம்பூதிரி - நாயர் - வேளாளர் தவிர பிற சாதியினர் குடை பிடிக்கக் கூடாது; செருப்பு அணியக் கூடாது; கிணறு, குளம், சாலை,  சந்தை ஆகியவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. மேலும் ஆண்கள் யாரும் மீசை / தாடி வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி வைத்தால் அதற்குத் தனி வரி கட்ட வேண்டும் என்ற  கொடிய நிலை நிலவியது. 

ஒடுக்கப்பட்ட சாதி ஆண்களுக்கே இவ்வளவு கொடிய கட்டுப்பாடுகள் என்றால் பெண்களைப் பற்றிப் பேசவும் கூடுமோ?. பெண்கள்மீது அனைத்துக் கட்டுப்பாடுகளும் திணிக்கப்பட்டன. உயர்சாதிப்  பெண்கள் வீட்டை விட்டு அதிகம் வெளியே வரக்கூடாது. கோயில் போன்ற இடங்களுக்கு வரும் பொழுது முகத்தைப் பனைக்குடையால் மறைத்துக் கொண்டு வர வேண்டும். கணவன் மற்றும் நெருங்கிய உறவினர்களைத் தவிர யாரிடமும் பேசக்கூடாது. வெளியே செல்லும்பொழுது மேலாடை  அணிந்து கொள்ளலாம். ஆனால் நம்பூதிரிப் பார்ப்பனர்கள் முன்னால் வரும்பொழுது, திறந்த மார்போடுதான் வர வேண்டும் என்பன போன்ற கடுமையான தடைகள் விதிக்கப்பட்டன. உடைகள் அணிவதில் மிகக் கடுமையான விதி களைக் கடைப்பிடிக்குமாறு பெண்கள் நிர்ப்ந்தப் படுத்தப்பட்டுள்ளனர். பார்ப்பனரல்லாத, ஒடுக்கப் பட்ட சாதிப் பெண்கள் தங்களின் மார்பகத்தை மறைக்குமாறு ஆடை எதுவும் அணியக் கூடாது  எனவும், அப்படி ஆடை அணிந்தால் அதற்கு “மார்பக வரி” கட்ட வேண்டும் எனவும் அறிவிக்கப் பட்டிருந்தது. மார்பக வரி கட்டினால், அப் பெண்கள் பார்ப்பனர் அல்லாதோர் முன்னிலையில் மேலாடை அணிந்து கொள்ளலாம். ஆனால் வரி கட்டி இருந்தாலும், நம்பூதிரிப் பார்ப்பனர்கள் முன் வரும்பொழுது திறந்த மார்போடுதான் வர வேண்டும் என்ற முறை நிலவி வந்தது. இத்தகைய கொடுமைகளைக் கண்டு கொதித்தெழுந்த விவேகானந்தர்  “சாதிப் பைத்தியங்கள் வாழும் பைத்தியக்கார விடுதி, கேரளம்” என சாடினார்.

தோள் சீலை எழுச்சி

இந்த காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் தோன்றிய முத்துக்குட்டி சாமிகள் என்று அழைக்கப்பட்ட ஐயா வைகுண்டர் அவர்கள் இக்கொடு மைகளை எதிர்த்தும், பிரம்மனின் வாரிசெனக் கூறி கொண்டு, தங்களுக்கே அனைத்தையும் ஏகபோக உரிமையாக்கிக் கொண்ட பிராமணர்கள், தென் திருவிதாங்கூர் பகுதியில் பெரும்பான்மையினரின் தாழ்வு நிலைக்கு காரணமாக இருந்ததை கண்டு  வெளிப்படையாக தாக்கினார். சாதி பேதமின்றி மக்கள் வாழ வேண்டுமென்றும், பொதுக் கிணறு களில் குளிப்பதற்கும், உணவு அருந்துவதற்கும் உரிமை வேண்டுமென்றும், இடுப்பில் குடம் எடுத்துச்  செல்ல உரிமை வேண்டுமென்றும், சாதிய வேற்றுமை களை முற்றாக ஒழிக்க வேண்டுமென்றும் குரல் கொடுத்ததோடு பெண்கள் திறந்த மார்பகங்களோடு இருக்கக் கூடாது எனவும், இந்த இழிநிலையினை அகற்றிட வேண்டுமெனவும் குரல் கொடுத்தார். இவரது குரல் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெண்கள் தங்கள் வழக்கத்தினை மாற்றி, உயர் சாதியினரைப் போன்று உடை அணிந்து வெளிவந்தனர். இதே காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாக இறைப்பணி செய்ய வந்த கிறித்துவ மிஷினரிகள் சாதிய துவேசங்களை எதிர்த்தும், அனைவருக்கும் கல்வி போதிக்கிற பணிகளை மேற்கொண்டனர். கல்வி வளர்ச்சியினால் விழிப்புணர்வு பெற்ற மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட அணி திரண்டனர். வர்ணாசிரம தர்மத்தினால் வடிவமைக்கப்பட்ட சாதிய கொடுமைகள், ஒடுக்குமுறைகள், பெண்ணடிமைத் தனம் போன்ற கொடுமைகள் ஒடுக்கப்பட்ட மக்கள் கிறித்துவ மதத்தை தழுவ வேண்டிய நிலை ஏற்பட்டது. கிறித்துவ பெண்கள் மேலாடை அணிந்து நடமாடுவதை ஏற்றுக் கொள்ளாத உயர்சாதி பிராமணர்கள், நாயர்கள் இவர்கள் மீது கொடூரமானத் தாக்குதல்களை தொடுத்தனர்.

1822ம் ஆண்டு கொத்தவிளை கிராமத்தில் சிறிய கலவரமாக ஆரம்பித்து சுமார் 37 ஆண்டுகள் வரை நீண்ட, நெடிய போராட்டமாக இப்போராட்டம் நீடித்தது. 1822 முதல் 1823 வரையிலும் முதற்கட்ட மாகவும், இரண்டாவது கட்டமாக 1827-1829 வரை யிலும், மூன்றாவது கட்டமாக 1858-59 வரையிலும் நடைபெற்றது. கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் மிஷினிரிகள் நடத்திய போராட்டத்தோடு ஐயா வைகுண்ட சாமியால் தைரியமும், உத்வேக மும் ஊட்டப்பட்ட இந்து சமயத்தைச் சார்ந்த பெண்களும் மேலாடை அணிந்து போராட்டத்தில் இறங்கினார்கள். 1855ம் ஆண்டு வெளியான அடிமைகள் விடுதலை பிரகடனமும் இப்போராட்டத்தை மேலும் ஊக்கப்படுத்தியது. நிலவுடமையாளர்களாக இருந்த உயர்சாதியினருக்கு இப்பிரகடனம் பெரும்  எரிச்சலை ஏற்படுத்தியது. 1858ம் ஆண்டு இப்போராட்டம் தீவிரமடைந்து டிசம்பர் மாதம் 30ம் நாள் கோட்டாறு கடைவீதியில் பெரும் கலவரம்  மூண்டது. வீடுகள், சந்தைகள், கடைகள், தேவா லயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கிராமம், கிராமமாக  கலவரம் பரவியது. இந்து - கிறித்துவ - நாடார் மக்கள் வேறுபாடின்றி ஓரணியில் திரண்டு போராடினர்.  எதிரணியில் திரண்டு வந்த உயர்சாதி கூட்டணியருக்கு  சரியான பதிலடி கொடுத்தனர்.  இதன் விளைவாக  ஆங்கில அரசின் வற்புறுத்தலின் பேரில் திருவிதாங்கூர் திவானும், மகாராஜாவும் நாடார் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒரு அறிக்கை  வெளியிட்டனர். அதன் மூலம் நாடார் பெண்கள் கிறித்துவ பெண்களைப் போல மார்பகங்களை ஏதாவது ஒரு வகையில் மறைத்துக் கொள்ளலாம் என  ஆணை வெளியிடப்பட்டது. ஆனால், நாடார் சமுதாயப் பெண்களுக்கு கிடைத்த உரிமை பிற தாழ்த்தப்பட்ட பகுதி பெண்களுக்கு கிடைக்கவில்லை. எனவே, தங்களுக்கும் இத்தகைய உரிமை வேண்டுமென ஈழவர் போன்ற பிற ஒடுக்கப்பட்ட சாதியினரும் போராட்டத்தை தொடங்கியதன் விளைவாக 1865ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் இவர்களும் மேலாடை அணிவதற்கான உரிமைகளைப் பெற்றனர்.

உந்துசக்தியாக திகழும்

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடைபெற்ற தோள் சீலைப் போராட்டம் வர்ணாசிரம தர்மத்தையும், அதன் கொடுமைகளையும் எதிர்த்து நடந்த வீரம்செறிந்த போராட்டமாகும். சனாதன  கொடுமைகளை எதிர்த்து தோள் சீலை அணிவதற்கே பல்லாண்டுகள் போராடி தான் வெற்றிபெற  முடிந்தது. இத்தகைய சனாதன கொள்கையுடைய மதவெறி அமைப்புகள்  ஒன்றிய ஆட்சியில் அமர்ந்து பாரம்பரியமான பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை கொண்ட இந்திய நாட்டை குறுகிய மதவெறி இந்து ராஷ்டிரமாக மாற்ற முயற்சிக்கின்றனர். அரசியல் சாசனத்தை அப்புறப்படுத்தி விட்டு மீண்டும் மனுசாஸ்திரத்தை சட்டமாக்க முனைந்துள்ளனர். இவர்களது சதிகளை முறியடித்து இந்திய  நாட்டையும், இந்தியாவின் பன்முகத் தன்மையை யும், மதச்சார்பின்மையும், மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் பாதுகாத்திட நாடு முழுவதும் நடத்த வேண்டிய மகத்தான போராட்டத்திற்கு குமரி மண்ணில் நடந்த தோள் சீலைப் போராட்டம் உந்து சக்தியாக திகழும்.