articles

img

ஜி-20 : மோடியின் சுய துதிபாடல்

புதுதில்லியில் நடைபெற்ற ஜி.20 உச்சிமாநாட்டின் கூட்டுப் பிரகட னத்தில், உக்ரைன் யுத்தம் தொடர்பாக கூர்மையான சில விமர்ச னங்கள் இருந்தபோதிலும், அதன் உறுப்பு நாடுகள் அனைத்தும் அதனை நிறைவேற்றியிருப்பது, ஒரு சாதனையாகும். உக்ரைன் யுத்தம் தொடர்பான எட்டு பத்திகளில் 2022க்கும் 2025க்கும் இடையே தலைமைப் பொறுப்பை ஏற்ற நாடுகள் அல்லது ஏற்கவிருக்கும் நாடுகளான இந்தியா, இந்தோனேசியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சிகள் காரணமாக வெற்றிகரமாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.  உக்ரைன் யுத்தம் தொடர்பான பகுதியில், அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் கூறிவருவதுபோல் ரஷ்யாவை ஆக்கிரமிப்பாளர் என்று எங்கும் குறிப்பிடவில்லை. ‘பிரிக்ஸ்’ அமைப்பு ஒரு வலுவான அமைப்பாக உருவாகிக் கொண்டிருப்பதால், இந்த சமயத்தில் ரஷ்யாவை ஆக்கிரமிப்பாளர் என்று கண்டித்தால் ஜி.20ஐ மோசமான முறையில் காட்டிவிடும் என்று கருதியதாலேயே அவர்கள் தங்களின் உறுதியான நிலைபாட்டிலிருந்து பின்வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், ஜி.20 உச்சி மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியி ருப்பதும், சீனாவிற்கு எதிராக இந்தியாவைத் தன்னுடைய முக்கியக் கூட்டாளி யாக அமெரிக்கா கருதுவதும் இதற்கு மற்றொரு காரணமாகும். ஜி.20 உலகப் பொருளாதாரப் பிரச்சனைகளை விவாதிக்கும் ஓர்  அமைப்பாக மாறியிருக்கிறது. இது, கிழக்கு ஆசிய நாடுகளில் பொருளா தார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து 1999இல் அமைக்கப்பட்டது. நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துவதன் காரண மாக, அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடியை வளர்ந்து வரும் நாடுகள் மீது பணக்கார நாடுகள் திணித்ததன் விளைவாகவே, தவிர்க்க முடியாதவாறு இவ்வாறு ஜி.7 நாடுகள் ஜி.20 நாடுகளாக விரிவடைந்துள்ளன. 2008 பொருளாதார மந்தம் ஏற்பட்ட பின்னணியில், அரசாங்கங்களுக்கிடையே அமைச்சரவை மட்டத்தில் நடைபெற்ற வருடாந்திர ஆலோசனைகள், அரசாங்கங்களின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சி மாநாடுகளாக மாற்றப்பட்டன. ஜி.20 தலைவர் பதவி உறுப்புநாடுகளுக்கிடையே ஒவ்வோ ராண்டும் சுழற்சி முறையில் அளிக்கப்பட்டு வருகிறது. 

பிரகடனம் நிறைவேறும் ஆனால் அமலாகாது
ஒவ்வோராண்டும் நடைபெறும் ஜி.20 உச்சிமாநாடுகளின் அனுபவம் காட்டுவது என்னவெனில், இம்மாநாட்டில் பல்வேறுவிதமான பிரச்சனைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்று, பின்னர் ஒரு பிரகடனம் நிறைவேற்றப் படும் என்ற போதிலும் எந்த நாடும் அதனை அமல்படுத்துவதற்கு எவ்வித  நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதேயாகும். இவ்வாறு ஜி.20 உச்சி மாநாடுகள் என்பது வழக்கமாக நடைபெறும் ஒரு விஷயமாகிப் போனது என்பதும், இதில் பொருளாதார விவகாரங்கள் விவாதிக்கப்படும் என்பதும், சில உறுதிமொழிகள்கூட எடுத்துக்கொள்ளப்படும் என்பதும் நடை பெற்ற போதிலும், இவை எந்த நாட்டிலும் அமல்படுத்தப்படுவதும் இல்லை,  அமல்படுத்த வேண்டும் என்று எந்த நாட்டையும் இதனால் கட்டுப் படுத்திடவும் முடியாது. உக்ரைன் யுத்தத்தைத் தொடர்ந்து அதனைச் சுற்றியுள்ள நாடுகளுக்கி டையே பதற்றம் அதிகரித்து, ஒரு பக்கத்தில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கும் மறுபக்கத்தில் சீன-ரஷ்யா ஆகிய நாடுகளுக்கி டையே புதியதொரு பனிப்போர் நிலையை உருவாக்கியிருக்கிறது.  சென்ற ஆண்டு பாலி உச்சி மாநாடு நடைபெற்ற சமயத்தில் ஜி.7 நாடுகள் உக்ரைன் பிரச்சனையை நிகழ்ச்சிநிரலில் சேர்க்க வேண்டும் என்று வலி யுறுத்தியபோது, அது நாடுகளுக்கிடையே பிளவினை உருவாக்க இட்டுச் சென்றதுடன், கூட்டுப் பிரகடனம் வெளிவரும் நடைமுறையைக்கூட ஆபத்திற்குள்ளாக்கியது.

துல்லிய நடவடிக்கை ஏதுமில்லை

நரேந்திர மோடியும், இந்தியாவும் ஜி.20 உச்சிமாநாட்டை, தென் உலகின் குரலாகச் சித்தரித்திட முயன்றனர். இந்தியா, அமெரிக்காவின் நெருங்கிய ராணுவக்கூட்டணியாக மாறிக்கொண்டிருந்தபோதிலும், மாறி வரும் உலக நிலைமை மற்றும் வளர்ந்துவரும் பல்துருவக் கோட்பாடு (multi-polarity), ஆகியவற்றின் காரணமாக,  இந்தியாவை தென் உலகின் சாம்பியனாக நிலைநிறுத்த வேண்டி இருப்பதை மோடி அறிவார். எனினும்கூட, ஜி.20 மாநாட்டின் புதுதில்லிப் பிரகடனம் வளர்முக மற்றும் ஏழை நாடுகள் எதிர்கொள்ளும் எரிகிற பிரச்சனைகள் எதன்மீதும் உருப்படியான அல்லது துல்லியமான நடவடிக்கை எதையும் அறிவித்திட வில்லை. புவி வெப்பமயமாதல் குறித்தும், வெப்பமயமாதலைத் தணித்திட மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பருவநிலை நிதி (climate finance) பிரச்சனை  குறித்தும்கூட, பிரகடனத்தில் பொதுவான அறிக்கை கள் மட்டுமே இருக்கின்றன. புவிவெப்பமயமாதலால் ஏற்பட்டுக்கொண்டி ருக்கும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்கு வளர்முக நாடுக ளுக்கு இது மிகவும் முக்கியமாகும்.

உறுதிமொழி நிறைவேறா நிலை நீடிப்பு

பாரிஸ் மாநாட்டின்போது தொழில்மய நாடுகள் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்கள் அளிப்போம் என்று கூறிய உறுதிமொழி இதுவரையிலும் நிறைவேற்றப்படாத நிலை நீடிக்கிறது. பருவநிலை நிதி தொடர்பாக வளரும் மற்றும் ஏழை நாடுகளின் கோரிக்கைகளை இந்த உச்சி மாநாட்டின் பிரகடனம் பிரதிபலிக்கவில்லை.

கடுமையாகும் கடன் சுமை

வளர்முக நாடுகளில் தீவிரமடைந்துவரும் கடன் நெருக்கடி (debt distress) மற்றும் கடன் சுமையைக் குறைத்திட உண்மையான நடவடிக்கை கள் எதுவும் முன்மொழியப்படவில்லை. அமெரிக்க வங்கிகளால் வட்டி  விகிதங்கள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதன் காரணமாக, சென்ற  ஆண்டில் மட்டும் ஏழை நாடுகளின் கடன் சுமார் 800 பில்லியன் (பில்லி யன் = 100 கோடி) டாலர்களுக்கு அதிகரித்துள்ளது என்பதை உச்சி மாநாட்டின் பிரகடனம் சுட்டிக்காட்டத் தவறியிருக்கிறது. மிகவும் கடுமை யான அளவில் கடன் சுமைக்கு ஆளாகியுள்ள 60 நாடுகளுக்குக் கடனை ரத்து செய்வதற்கான அறிவிப்பு இல்லாதது அந்நாடுகளின் கடன் பொறுப்புகளை (debt obligations) மிகவும் கடுமையாக்கியுள்ளன. விரைவான முன்னேற்றத்திற்கு (accelerating progress), 2015 இல் தொடங்கப்பட்ட ஐ.நா. மன்றத்தின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை, அடைய வேண்டும் என்றும், அவை 2030க்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும், ஜி.20 உச்சிமாநாட்டின் பிரகடனம் அறைகூவி அழைக்கிறது. ஆனால், மேற்படி 17 இலக்குகளில் 12 விழுக்காடு அளவிற்கு மட்டுமே முன் னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவின் சாதனையும் மிக மோசமாகும். எனினும் அவற்றை முழுமையாக அடைவதற்கான முயற்சி களில் ஈடுபடுங்கள் என்று கூறுவதுடன் பிரகடனம் திருப்தி கொண்டி ருக்கிறது.

ஒரே ஒரு ஆக்கப்பூர்வ நடவடிக்கை

நடைபெற்ற ஜி.20 உச்சிமாநாட்டில் தென் உலகிற்கான ஒரேயொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை ஒன்று உண்டு என்றால் அது ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஒரு நிரந்தர உறுப்புநாடாக  அனுமதித்திருப்பதேயாகும். ஜி.20 உச்சிமாநாடு நடைபெற்றபோது அதற்கு வெளியே நடைபெற்ற சில விஷயங்கள் குறிப்பிடத்தக்கனவாகும். அமெரிக்க ஜனாதிபதி பைடன்,  உச்சிமாநாடு தொடங்குவதற்கு முன் மோடியுடன் இருநாடுகளுக்கும் இடை யேயான பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி இருக்கிறார். பைடன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, மோடி அமெரிக்கா சென்றிருந்த போது ஜெட் என்ஜின்கள், ராணுவம் தொடர்பாக ட்ரோன்கள் முதலா னவை வாங்குவது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஒப்புக் கொண்டவைகளை உறுதிப்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொண்டி ருக்கிறார்.  இந்திய விவசாயிகள் வயிற்றிலடித்து அமெரிக்காவுக்கு சலுகைகள் மேலும் அமெரிக்கக் கடற்படைக்கும் மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவ னத்திற்கும் இடையே மாஷ்டர் ஷிப் பழுதுபார்க்கும் ஒப்பந்தம் கையெ ழுத்தாகி இருப்பதை அடுத்து, இந்தியா, அமெரிக்கக் கடற்படை மற்றும் விமானப்படை கப்பல்களையும், விமானங்களையும் பழுதுபார்க்கும் ஒரு மையமாக உருவாகி இருப்பதையும் அடிக்கோடிட்டுக்கொள்ள வேண்டும். மேலும் இந்தியா, அமெரிக்க கோழிப்பண்ணைகள் மற்றும் விவசாய உற் பத்திப் பொருள்கள் மீது பெரிய அளவில் சுங்க வரிகளை விலக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்கள், பாதாம்பருப்பு, பருப்பு மற்றும் இதர வேளாண் பொருள்கள் பலவற்றிற்கும் சுங்க வரிகளைக் குறைத்திருக்கிறது. இவ்வாறு மோடி அரசாங்கம் இந்திய விவசாயிகளின் வயிற்றில் அடித்து அமெரிக்காவிற்கு சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது. உச்சிமாநாட்டிற்கு வெளியே நடைபெற்றுள்ள மற்றொரு முக்கிய ஒப்பந்தம்  என்பது, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை உருவாக்குவதற்கான (IMEC-India-Middle East-Europe Economic Corridor) அறிவிப்பாகும். இந்த ஒப்பந்தமும் அமெ ரிக்காவின் முன்முயற்சியால் மேற்கொள்ளப்பட்டதேயாகும். இந்த வழித் தடமானது மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியாவை ஐரோப்பா வுடன் இணைக்கும் ரயில் மற்றும் கடல் வழித்தடங்களின் வளர்ச்சியை உள்ளடக்கியதாகும். இதற்கான நிதி மற்றும் திட்டங்களின் முழு விவரங்க ளும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்குப் போட்டியாக அமெரிக்கா இதனைச் செய்ய விரும்புகிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

ஜி7 ஆதிக்கம் செலுத்தும் பயனற்ற அமைப்பு

ஜி.20 செயல்முறையானது ஒரு பலதரப்பு அமைப்பாக (a multil ateral forum) பயனற்றது என்பது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் இதில் ஜி.7 நாடுகளும் அதன் கூட்டாளி நாடுகளுமே ஆதிக்கம் செலுத்து கின்றன. எனினும் நடந்த ஜி.20 மாநாட்டிற்கு இந்தியா தலைமைப் பொறுப்பு ஏற்றதன்மூலம் அது இதனை வேறு விதங்களில் பயன்படுத்திக் கொண்டுள்ளது. நரேந்திர மோடியும், பாஜக அரசாங்கமும், ஜி.20 உச்சி மாநாட்டை, மோடி தலைமையேற்றதால் இந்தியாவிற்கான ஒரு மாபெரும் சாதனையாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றன.   இந்திய மக்கள் மத்தியில் மோடியின் சித்திரத்தைப் பூதாகரமாகக் காட்ட வேண்டும் என்பது தான் இவர்களின் ஒரே நோக்கமாகும். உச்சிமாநாட்டை மிகவும் படாடோப மானமுறையில் டாம்பீகமாக நடத்தினார்கள். சுமார் 4,100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் உண்மையில் ஜி.20க்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை என்பது வெறும் 990 கோடி ரூபாய் மட்டுமேயாகும்.

பிரிட்டிஷ் பத்திரிகையின் விமர்சனம்

உச்சிமாநாட்டின்போது தில்லியில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மான விளம்பரங்கள், மோடியை சர்வதேச அரங்கில் ஒரு மைய நபராகச் சித்தரித்தது. இதனை வெளிநாட்டு ஊடகங்கள் கவனிக்கத் தவறவில்லை.  பிரிட்டிஷ் இதழான, தி அப்சர்வர், தன்னுடைய தலையங்கத்தில், “மோடி தன்னுடைய தனிப்பட்ட சித்திரத்தைப் பூதாகரமாகச் சித்தரித்தி ருக்கிறார்” என்றும், “அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறக்கூடிய தேர்தலில் தனது வாய்ப்புகளை உயர்த்துவதற்காக, உச்சிமாநாட்டை அப்பட்டமாகப் பயன்படுத்தி இருக்கிறார்” என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இவ்வாறு ஜி.20 உச்சிமாநாடு மோடியை விஷ்வ குருவாகச் சித்தரித்திட நடைபெற்ற மற்றொரு நிகழ்வாகவே நடைபெற்றுள்ளது. செப்டம்பர் 13, 2023,  தமிழில்: ச.வீரமணி