நன்றி. பலரும் போஸ்ட் கார்டு உருளை செய்து பார்த்திருக்கீங்க. நீங்கள் ஆச்சரியத்தில் இருந்ததையும் பகிர்ந்திருக்கீங்க. மிக்க நன்றி. பலருக்கும் பலவிதமான விடைகள் வந்திருப்பதையும் நான் பார்த்தேன். அதுதான் உண்மை. கணிதத்தில் ஒரு சிக்கலுக்கு பல தீர்வுகள் உண்டு. அதைத்தான் உங்கள் செயல்பாடுகள் உணர்த்துகின்றன.
இப்படி நாம் வடிவங்களை பற்றி பேசுவதுதான் ஜியோமிதி. நீங்க கூட உங்க பையில் ஒரு ஜியோமிதி பாக்ஸ் வைச்சிருப்பீங்க. ஜியோமிதின்னா பூமியை அளப்பது என்று அர்த்தம்.
நாம் செய்த உருளையின் மேல் மற்றும் அடிப்பகுதி வட்டமாக இருப்பதை பார்த்திருப்பீங்க. அந்த வட்டத்திலிருந்து வந்ததுதான் சக்கரம். அந்த சக்கரத்தின் வழியில்தான் மனிதகுலம் வளர்ந்துள்ளது.
சரி வாங்க, உங்க கையில ஒரு வளையக்கூடிய கம்பி கொடுக்கிறேன். நீங்க என்ன செய்வீங்க? அதை எந்த வடிவத்தில் வளைத்தால் அதிக பரப்பு கிடைக்கும்?
அந்த படிக்காதவங்களுக்கு இதற்கு பதில் தெரியும். ஆனால் அவர்களால் அதை நிருபிக்க வாய்ப்பு இல்லை. அவர்கள் கண்ட பதில் அதிக பரப்பளவு கொடுக்க கூடிய வடிவம் வட்டமாகும். பார்த்தீங்களா நீங்களும் வட்ட வடிவத்தில் தானே வளைச்சிருக்கீங்க.
இதுக்கு காரணம் என்ன? அன்றாட நாம் பார்க்கும் வடிவமே . இயற்கையில் நிலா,சூரியன்,கோள்கள் வட்ட வடிவில் பார்க்கிறோம். நம் வீட்டில் தட்டு, கடிகாரம், கிணறு, தண்ணீர்த்தொட்டி, கண்மாய், இதெல்லாம் வட்டமா இருக்கும். இது தவிர வேறு எதெல்லாம் வட்டமாக உள்ளது என்பதை பட்டியல் இட்டு ஒரு போஸ்ட் காரட்டில் எழுதி அனுப்புங்கள்.
ஆனால் நாங்கள் உழும் நிலமெல்லாம் வட்டமாக இல்லையே என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. உண்மையில் நம்முடைய முன்னோர்கள் பண்டைய காலத்தில் உணவு தீர்ந்து போனால் அடுத்த இடத்திற்கு போய்விடுவர். அதனால் அவர்களுக்கு நிலம் தேவைப்படவில்லை. நிலம் தேவைப்படும் காலத்தில் அவர்களுக்கு நிலங்களை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்பதும் தெரியவில்லை. இப்போதுதான் பருவ காலங்களை அவர்கள் உற்று நோக்கினர். அதனை பதிவு செய்தனர். அது குறித்து அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இப்படி பல நூறு ஆண்டுகள் கணித்து நிலத்தை செவ்வகமாவோ, அல்லது சதுரமாகவோ இருந்தால் தான் தானியங்களை பாத்திக் கட்டி பல வகை தானியங்களை விளைவிக்க முடியும் என்பதை உணர்ந்தனர். மேலும் விதை தூவதற்கும், தேவையை அறிந்து கொள்வதற்கும் இந்த வடிவம் எளிமையாக இருந்ததை உணர்ந்தனர். அதனால் தான் வயல்கள், விவசாய காடுகள் எல்லாம் செவ்வக வடிவத்திலோ அல்லது சதுரவடிவத்திலோ இருக்கின்றன.
இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடு, கண்டம் போன்ற அனைத்தையும் தாண்டி கணக்கு மனித குல வளர்ச்சிக்கு பயன்படுகிறது. அறிவியலின் ராணியான கணிதத்தை சரியாக உணர்ந்து முறையாக பயன்படுத்துவதன் வழியாக நாம பல நன்மைகளை அடையலாம். அதற்காக நாம் கணக்கோடு கை கோர்க்கலாம்…
நாம் ஒரு சின்ன விளையாட்டை விளையாடிப் பார்க்கலாமா?
ஒரு செவ்வகத் தாளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மூன்று முக்கோணங்களாக வெட்டிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். அந்த மூன்று முக்கோணத்தையும் இணைத்து மறுபடியும் செவ்வகமாக்க முடிகிறதா பாருங்கள். தொடர்ந்து அதை கொண்டு சதுரமாக்க முடிகிறதா என்பதையும் செல்லுங்கள். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்.