articles

img

கொண்டாடப்பட வேண்டிய கவிஞர் தமிழ்ஒளி - இரா.தெ.முத்து

இந்த ஆண்டு கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டு  தொடங்குகிறது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி  அருகே ஆடூர் கிராமத்தில் பிறந்து புதுச்சேரியில் குடியேறி சென்னை தமிழ்நாடு என  பயணித்து புதுச்சேரியில் அமரர் ஆனார். பாவேந்தர் பாரதிதாசனின்  அன்பைப் பெற்று அவரின் வளர்ப்பு  மகன் போல இருந்து பாவேந்தரின் கவிதைகள் வழி உற்சாகம் பெற்று அவரைப் போலவே கவிதைகள் எழுதினார்.

வந்த விடுதலை யாருக்கென்றே அதை 
வாங்கிய வீரரைக் கேட்டிடு வோம் - இங்கு
நொந்து கிடப்பவர் வாழ வில்லை- எனில்
நொள்ளை விடுதலை யாருக்கடா?

என விடுதலை நாடு மாநிலம் குறித்த தீர்க்கமான கருத்துகள் இளவயதிலேயே தமிழ்ஒளிக்கு இருந்தமை யால் தோழர் ஜீவாவை சந்தித்து ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பொதுவுடைமை அரசியல், செந்தமிழ்கவிதை என இரட்டைக்குதிரையில் தனித்துவத்தோடு பயணித்தவர். 1939இல் இந்திய அளவில் உருவான அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர்  சங்கத்தின் தமிழ்நாட்டு அமைப்புக் கிளையின் ஒருங்கிணைப்புக் குழுவில் 1949இல் பங்காற்றி, தமிழ்நாட்டுக் கிளையின் மாநிலச் செயலாளராகவும் இயங்கியவர்.

பன்முகம் கொண்டவர்...

தமிழ்ஒளி கவிஞர் மட்டுமல்லர்.மார்க்சிய தத்துவ நோக்கு கொண்டவர்.பத்திரிகை ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், கலை இலக்கிய ஆய்வாளர், சிறார் எழுத்தாளர், திரைப்பட எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் தமிழ்ஒளி. எழுத்தாளர் ஜெயகாந்தன் தனக்கு தமிழ் கற்பித்த ஆசான்கள் ஜீவாவும் தமிழ்ஒளியும் என்று சொல்வதிலேயே தமிழ்ஒளியின் புலமைநோக்கு பிடிபடும்.1950 களில் வெளிவந்த தமிழ்ஒளியின் சாக்கடை சமுதாயம் சிறுகதை தொகுப்புதான் தனக்கு சிறுகதை எழுத உத்வேகம் தந்தது என்றும் ஜெயகாந்தன் சொல்கிறார்.

உழைக்கும் மக்களின்  ஒன்பது காப்பியங்கள்

ப்பியம்  தனிப்பாடல் சிற்றிலக்கியம் எழுதிய தமிழில் உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்கப்பட்டோரை பாட்டுடை தலைமையாக்கி காப்பியம் படைத்தவர் தமிழ்ஒளி. கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு பதிப்பித்த தமிழ்ஒளியின் ஒன்பது காப்பியங்களின் தொகுப்பு நூலான கவிஞர் தமிழ்ஒளி காவியங்கள் நூல் வழி விரிவாக இதனை அறிந்து கொள்ளலாம். புதுமை இலக்கியம், ஜனயுகம், முன்னணி, மனிதன் போன்ற இதழ்களின் ஆசிரியராகவும் ஆசிரியர்குழு விலும் பணியாற்றியவர். ஜனசக்தி அரசால் தடை செய்யப்பட்ட காலத்தில் கட்சியின் குரலை எதிரொலித்த முன்னணி இதழின் இணை ஆசிரியராக ஆசிரியர் குயிலனோடு புரட்சிகர தொண்டாற்றியவர் தமிழ்ஒளி. சிலப்பதிகாரம் காவியமா? நாடகமா? தமிழர் சமுதாயம்,திருக்குறளும் கடவுளும் என 1959 களில் வெளிப்பட்ட தமிழ்ஒளியின் அபுனைவு நூல்கள் தமிழ் ஆய்வுலகில் தமிழறிஞர்கள் மத்தியில் வீச்சை உருவாக்கியது. தமிழ்ஒளியின் காப்பியங்கள் சென்னை பல்கலைக் கழக பாடத்திட்டத்தில் இணைத்து பயிற்றுவிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக சென்னை பச்சைப்பன் கல்லூரி, தாம்பரம் கிருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு அரசின் பாடநூல் கழக திட்டத்திலும் தமிழ்ஒளியின் படைப்புகள் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டன.

தமிழ்ஒளி இருக்கை - சிலை நிறுவவேண்டும்

காசநோய், எழுத்தை முழுநேர தொழிலாக கொண்ட மையால் உருவான வறுமை போன்ற காரணங்களால் 42 ஆவது வயதில் புதுச்சேரியில் அமரர் ஆனார். இந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்குகிற தமிழ்ஒளி யின் நூற்றாண்டு விழாவை அரசுவிழாவாக புதுச்சேரி அரசு போல தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும்.  தமிழ்நாட்டின் ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ஒளி படைப்புகளை மேலதிக ஆய்வு செய்திட தமிழ்ஒளி இருக்கை உருவாக்கப்பட வேண்டும். சென்னையில் தமிழ்ஒளிக்கு சிலை ஒன்றை மேதின பூங்கா வளாகத்தில் நிறுவிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு, கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு ஆகியவை தமிழ்நாடு அரசிற்கு எழுத்துப்பூர்வமான வேண்டுகோளை நேரடி சந்திப்பில் விடுத்திருக்கின்றன