உதயம் முதல் அஸ்தமனம்
வரையில் ஒரு முழுப்பகலும்
கொத்தடிமைச் சிறைப்பாடு
கொண்டதுதான் எம்வாழ்வு
இதனை மறுதலித்து
8 மணி உழைக்க
8 மணி ஓய்வெடுக்க
8 மணி வாழ்வில்
இன்பம் அனுபவித்து
ஆறுதல் கொள்வதற்கு
அறிவு பெறுவதற்கு
கற்றல் நட்போடு
சூழ்ந்து மகிழ்வதற்கு
தேனீர்க் கெண்டிக்கும்
மாலை விளக்குக்கு
மூலையில் ஓர் இருக்கைக்கும்
ஊதுகுழல் இசைக்கும்
நேசமனப் பாங்குக்கும்
அவகாசம் பெறுவதற்கு
உழைப்பு நேரத்தில்
ஒரே ஒரு மணிக்காக
வேலைநிறுத்தம் செய்தோம்
6 தொழிலாளர்
கொலை செய்யப்பட்டார்கள்
ஆமாம்...
பண்ணை அதிபர்கள்
கொலை செய்து முடித்தார்கள்
தானியச் சந்தைக்கு (ஹே மார்க்கெட்)
வெளியில் தெருமுனையில்
படுகொலைக்கு எதிரான
பிரகடனம் ஒலித்தது
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
நடத்தியவர்கள் மீது
மெய்க் கோர்மிக் மிருகத்தின்
வெடிகுண்டு வீச்சாலே
ஊர்வலத்தில் போன
4 தொழிலாளர்
பிணமாகி விழுந்தார்கள்
“நியாயவான்களே”
நீங்களெல்லாம்
நீதிபதிக்குரிய
அலங்கார மேலங்கி
அணிந்து பகட்டுங்கள்
பொய்முதிர்ச்சி காட்டும்
வெள்ளைப்புனை முடியை
தலைக்கணத்தில் தரியுங்கள்
காவடியில் முன்கூட்டி
தீர்ப்போடு காத்திருக்கும்
தண்டல்காரர்களே
அகப்பட்டவர் மீதே
பழிகளைச் சாட்டுங்கள்
சட்டம் என்றால் கொலையின்
மற்றோர் காவல்தானே
கொலைப்பட்டோர் மீதே
கொலைப்பழி சுமத்துங்கள்
செத்தொழிந்தோர் மீதே
அவதூறு செய்யுங்கள்
ஒரேவொரு மணிநேர
உழைப்பைக் குறைப்பதற்கு
கோரிக்கை வைத்தவரை
ரகம் பிரித்துக் கொல்லுங்கள்
கொல்லப்பட்டோர்கள்
எல்லோரும்
காட்டுமிராண்டிகள் என்றே
செல்லப்பேர் சூட்டுங்கள்
அவர்கள் கையில் விலங்கிட்டு
சிறைக்கூடத்தில் வதைத்து
தூக்கு மேடைக்கனுப்புங்கள்
அந்த மேதினத்தை
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
உழைப்போரே நீங்கள்
உரக்கக் கூவுங்கள்
தொலைவழியில் கேட்கும் அது
மேதினத்தின் பாட்டாக
மீண்டும் வருகிறது
மனப்பூர்வமாக அதை
ஆகிறதே கிடையாது
பதிலுரையை நீங்கள்
நினைவு வைத்துக்கொள்ளுங்கள்
வெகுமக்கள் கூட்டம்
உத்வேகம் பெறுக
மேலுமொரு இயக்கத்தின்
நியாயவெறி ஆவேசம்
நெறிப்படுத்திச் செய்க
எல்லாம் முன்னோக்கி
மேலேறு - இறங்காது
அந்த
தானியச் சந்தையின்
புதைகுழியைப் பாருங்கள்
பச்சைப்புல் படர்கிறது
சாவடியில் முன்கூட்டி
தீர்ப்போடு காத்திருக்கும்
தண்டல்காரர்களே
அகப்பட்டோர் மீதே
பழிகளைச் சாட்டுங்கள்
ஓ.....
ஆலைத் திருச்சபையில்
அதிபர்களே - வர்த்தகத்தின்
ராஜகுமாரர்களே
ரயில்வண்டி மன்னர்களே
பெரும் ஆலைப் பிரபுக்களே
உங்கள்
பேரேட்டின் கணக்குகளை
தீர்த்துக் கொள்ளுங்கள்
அதற்கான வெகுமதியை
பெற்றுக் கொள்ளுங்கள்
ஏனென்றால் - இதுதான்
கணக்குத் தீர்க்கிற காலம்
நம்மிடையே
கணக்குத் தீர்க்கின்ற காலம்!