222 நாட்கள் கடல்வழியே கப்பலில் பயணம் செய்து தரங்கம்பாடிக்கு அவர் வந்திறங்கிய போது அவருக்கு வயது 24. மிக இளம் வயதிலேயே கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக டென்மார்க் நாட்டு மன்னரால் தரங்கம்பாடிக்கு அனுப்பப்பட்டவர். மத போதகராக வந்து தமிழ்த்தொண்டராக உயிர்நீத்து அவர் கட்டிய ஆலயத்திலேயே அடக்கம் செய்யப்பட்ட ஜெர்மனி நாட்டை சேர்ந்த பார்த்தலேமேயு சீகன்பால்கு தரங்கம்பாடியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே செய்த சாதனைகள் ஏராளம்.
காகித ஆலை, மைக்கூடம்
1706 ஜூலை 9 அன்று தரங்கம்பாடிக்கு வந்தவர் மிக குறுகிய காலத்திலேயே தமிழைக் கற்றுக் கொண்டார். பைபிளை தமிழில் மொழிபெயர்த்தார். தரங்கம்பாடிக்கு அருகிலுள்ள பொறையாரை ஒட்டியுள்ள “கடுதாசிப் பட்டறை” என்று அழைக்கப்படுகிற கிராமத்தில் இந்தியாவிலேயே முதன் முறையாக காகித ஆலையையும், மை தயாரிக்கும் கூடத்தையும் அமைத்து, 1710 இல் ஜெர்மனி நாட்டில் உள்ள ஹாலி என்னும் இடத்தில் சதுர நிலைக்குத்தலான அச்சு எழுத்துகளை வடிவமைத்து கப்பல் மூலம் வரவழைத்தார். அந்த எழுத்துகள் அச்சுக்கு ஏற்றதாக இல்லாததால், 1713இல் தரங்கம்பாடியில் வசித்த பொற்கொல்லர்களை (இன்றும் தரங்கம்பாடியில் பொற்கொல்லர் தெரு உள்ளது) வைத்து பித்தளையால் ஆன அச்சு எழுத்துகளை வடிவமைத்து இந்தியாவில் முதன் முதலாக அச்சகத்தை அமைத்து 1715 இல் முதன்முறையாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை (புதிய ஏற்பாடு) தமிழில் அச்சடித்து வெளியிட்டார். தமிழ் நூல்களான திருக்குறள், தொல்காப்பியம், ஆத்திச்சூடி, கொடுந்தமிழ் அகராதி, இஸ்லாமிய, இந்துக்களை பற்றிய நூல்கள், பல்வேறு சமய கடவுள்களின் வரலாறு, தமிழ் பஞ்சாங்கம், தமிழ் காலண்டர், நீதிவெண்பா மற்றும் 70 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட தமிழ்அகராதியையும் அச்சடித்து வெளியிட்டார். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை விடவும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக உழைத்த அவர், ஜெர்மனியில் இருந்த தனது சொத்துகளை விற்று தரங்கம்பாடியில் பல்வேறு பணிகளை செய்துள்ளார்.
பள்ளி, விடுதி...
1708 இல் திண்ணைப் பள்ளிக்கூடத்தை உருவாக்கி தான் வசித்த வீட்டின் அருகிலேயே பள்ளிக்கூடம், விடுதி, விதவைகளை ஆசிரியர்களாக நியமித்து பெண்களுக்கான பள்ளி, விடுதி, தையல் பயிற்சிப்பள்ளி என ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை செய்து, ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்கு கல்வி கிடைக்க வழிவகை செய்தார். சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகவும், பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராகவும் தனது மனைவியுடன் இணைந்து போராட்டங்களையும் நடத்தியிருக்கிறார். தரங்கம்பாடியில் வெறும் 13 ஆண்டுகளே வாழ்ந்து 37 வயதிலேயே உயிர்நீத்த தமிழ்தொண்டர் சீகன்பால்குவால் டேனிஷ் கலைநுணுக்கத்துடன் கட்டப்பட்ட ஆசியாவிலேயே முதல் சீர்திருத்த திருச்சபையான (புராட்டஸ்டாண்டு) புதிய எருசலேம் இன்றும் கம்பீரமாய் காட்சியளிப்பது போலவே, அவர் வசித்த அட்மிரல் தெருவிலுள்ள 1710 இல் கட்டப்பட்ட அவரது வீடும் வரலாற்றுச் சின்னமாய் பொலிவுடன் காட்சி தருகிறது.
அருங்காட்சியகம்
பழுதடைந்திருந்த அந்த வீட்டை 2017 இல் ஜெர்மன் நாட்டின் பண்பாட்டு பாதுகாப்பு அமைப்பு மற்றும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை பழமை மாறாமல் புதுப்பித்து ‘சீகன்பால்கு பன்முக பண்பாட்டு அருங்காட்சியகம்’ என்ற பெயரில் மையத்தை திறந்தது. அங்கு சீகன்பால்கு பயன்படுத்திய பொருட்கள், 18 ஆம் நூற்றாண்டு அச்சு இயந்திரம், சீகன்பால்கு வெளியிட்ட பைபிள் மாதிரி என ஏராளமான வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 1682 இல் ஜெர்மனியில் பிறந்த சீகன்பால்குவுக்கு செயின்ட் நிக்கோலஸ் ஆலயத்தில் திருமுழுக்கு அளிக்கப்பட்ட பழமையான திருமுழுக்கு பாத்திரம், தரங்கம்பாடியில் 1706-1719-களில் வாழ்ந்த சீகன்பால்கு எழுத்து பணிக்கு பயன்படுத்திய மரத்திலான மேஜை, 1715 இல் சீகன்பால்கு ஜெர்மனி ஹல்லே பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தபோது தமிழில் எழுதிய விருந்தினர் பதிவேட்டின் அசல் புத்தகம் (தமிழில்), தரங்கம்பாடியில் அச்சடிக்கப்பட்ட ஞான கீதங்கள் புத்தகப் பிரதி மற்றும் 1706 இல் இருந்த அச்சு இயந்திர புகைப்படம், கடுதாசிப்பட்டறை காகித ஆலை கிடங்கு புகைப்படம் உள்ளிட்ட பழமையான புகைப்படங்கள், 18 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட அச்சு எழுத்துகள் என பல நூற்றாண்டுகளை கடந்த பழமையான பொருட்கள் சீகன்பால்கு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மணிமண்டபம்
ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா விரும்பிகள் என நூற்றுக்கணக்கானோர் அருங்காட்சியகத்தை கண்டு வரலாற்றை அறிந்து செல்கின்றனர். கிறிஸ்தவத்தை பரப்புவதற்காக தரங்கம்பாடி வந்து தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக உழைத்த தமிழ்தொண்டர் சீகன்பால்குவின் அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கையை இனிவரும் சந்ததியினர் அறிந்துகொள்ள, தரங்கம்பாடியில் அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டுமென, தரங்கம்பாடியின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் சீகன்பால்கு பன்முக பண்பாட்டு மையத்தின் இயக்குநராக பணியாற்றும் டாக்டர் சாமுவேல் மனுவேல் கோரிக்கை விடுத்துள்ளார். ‘தமிழ்மொழி எனக்கு மற்றுமொறு தாய்மொழி’ என தமிழை நேசித்து வளர்த்த தமிழ்தொண்டர் சீகன்பால்குவின் நினைவை போற்றும் விதமாக தரங்கம்பாடியில் மணிமண்டபம் கட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா?
- செ.ஜான்சன்