வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் போன்ற இதர சிறுபான்மையினர் மீது தொடர்ந்து தாக்குதல்கள் மேற்கொள்ளப் பட்டு வருவது மிகவும் கவலை அளிக்கிறது. ஒரு வெகுஜன இயக்கத்திற்குப்பின்னர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஷேக் ஹசீனா அரசாங்கம் கவிழ்ந்து, அவருடைய எதேச்சதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, அங்கே அதைவிட சிறந்ததொரு ஜனநாயக அமைப்புமுறை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், ஒருசில நாட்கள் அங்கே நிலவிய குழப்பத்தின்போது, சில இந்துக் கோவில்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தின் வீடுகள் தாக்கப்பட்ட தகவல்கள் வெளிவந்தன.
இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ், சிறு பான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்தார். ஆனால் அதன் பின்னர், ஏராளமான வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதுவரை 2,000 வன்முறை வெறியாட்டங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
சனாதன ஜாக்ரன் ஜோட் கும்பல் தாக்கி...
இந்து மதத்துறவியான சின்மாய் கிருஷ்ண தாஸ் என்பவர் தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டதை அடுத்து அங்கே நிலைமை மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. சின்மாய் தாஸ் என்பவர் இதற்கு முன் ‘இஸ்கான்’ (ISKCON) என்னும் அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்தார். ஆனால் அவர் அதிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்போது அவர் சம்மிலிதா சனாதன ஜாக்ரன் ஜோட் (Sammilita Sanatani Jagran Jote) என்னும் அமைப்பின்கீழ் இருந்து மிகவும் தீவிரமான கருத்துக்களைப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.
இவர் வங்க தேசத்தின் தேசியக் கொடியை அவமதித்துப் பேசியதை அடுத்து, தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். தாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிணை மறுக்கப்பட்டதால், அவரது ஆதரவா ளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கலகம் செய்த கும்பலின் தாக்குதலுக்குள்ளான அரசுக் குற்றத்துறை உதவி வழக்குரைஞர் உயிரிழந்து விட்டார். எந்த அளவிற்கு மதவெறி சமூகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது.
இடைக்கால அரசின் தவறு\
இடைக்கால அரசாங்கமும் அதன் செய்தித் தொடர்பாளர்களும் இந்தத் தாக்குதல்களை அடக்கி வாசிக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தத் தாக்குதல் தொடர்பான செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை என்று அவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அவாமி லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கோபத்தின் வெளிப்பாடே இது என்று அவர்கள் சித்தரிக்க முற்பட்டுள்ளார்கள். வங்க தேச எதிர்ப்பின் பின்னணியில் இந்திய அரசாங்கத்தின் கை இருப்பதாகவும் அவர்கள் பார்க்க முனைகின்றனர். இவ்வாறு யூனுஸ் தலைமையிலான அரசாங்கம் சிறு பான்மையினர் மீது இஸ்லாமியவாத சக்திகளால் தொடுக்கப்படும் தாக்குதல்க ளைப் புறக்கணிக்க முயல்வதன் மூலம் தவறு செய்துகொண்டிருக்கிறது.
இஸ்லாமிய பழமைவாதிகளின் இந்திய எதிர்ப்புணர்வு முகமூடி
மோடி அரசாங்கம், ஷேக் ஹசீனா அரசாங்கத்தை ஆதரித்து வந்ததன் காரணமாக மக்கள் மத்தியில் இந்தியா எதிர்ப்பு உணர்வு இருந்து வருகிறது. இஸ்லாமிய பழமைவாத சக்திகள் தாங்கள் சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடுக்கும் தாக்குதல்களுக்கு இதை ஒரு முகமூடியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புக்கு இருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டு, சிறையிலிருந்த அதன் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். இவர்க ளுடன் ஹெஃபாசட்-இ-இஸ்லாம் போன்று அடிப்படைவாத அமைப்புகளும் இந்துக்களைக் குறி வைத்துத் தாக்கி, மக்கள் மத்தியில் மதவெறிப் பிரிவினை உணர்ச்சிகளை உருவாக்கக்கூடிய விதத்தில் சுதந்திரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில்கூட, இத்தகைய அடிப்ப டைவாத சக்திகள் சிறுபான்மையினருக்கு எதிராக மிகவும் சுறுசுறுப்புடன் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள். இத்தகைய மதவாத சக்திகள் தங்கள் பிளவுவாத அரசியலை நிறுவிட ஒரு வாய்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு வாய்ப்பு அளிக்காதவிதத்திலும், அவர்களை வீழ்த்தும் விதத்திலும் வங்க தேசத்தை ஆளும் இடைக்கால அரசாங்கமும், ஜனநாயக சக்திகளும் உறுதியுடன் செயல்பட வேண்டும்.
தூதரகத்துக்குள் நுழைந்து தாக்குதல்
இந்தியாவில் ஆர்எஸ்எஸ்/பாஜக அணுகுமுறையும் மற்றும் பல்வேறு இந்துத்துவா அமைப்புகளின் அணுகுமுறையும் நிலைமையைச் சரியான முறையில் எதிர்கொள்ள உதவவில்லை. எல்லைகளுக்கு அப்பால் உள்ள இந்துக்களின் அவலநிலை குறித்து இவர்கள் மேற்கொண்டுவரும் வெறித்தன மான பிரச்சாரம் வங்க தேச அதிகாரிகளாலும் மற்றும் ஜனநாயக அமைப்புகளா லும் இப்போது அங்கே அமைந்துள்ள புதிய அரசியல் ஒழுங்கை அச்சுறுத்தி, களங்கப்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாகவே கருதப்படுகின்றது.
இந்துத்துவா தீவிரவாத குழுக்களால் கொல்கத்தா, அகர்தலா மற்றும் குவ ஹாத்தியில் வங்கதேச தூதரகத்தின் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டங்களின்போது எழுப்பிய வெறித்தனமான முழக்கங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கி யுள்ளன. அகர்தலாவில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட இந்து சங்கர்ஷ் சமிதியைச் சேர்ந்தவர்கள் வங்கதேச தூதரகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த சொத்துக் களை சேதப்படுத்தி இருப்பது வங்கதேசத்தில் இந்தியாவிற்கு எதிராக இருந்து வரும் உணர்வுகளை மேலும் கடுமையாக்குவதற்கே இட்டுச் செல்லும்.
இங்கே இவர்கள் வங்க தேசத்திற்கு எதிராக எழுப்பிடும் அனல் பறக்கும் கோஷங்கள், வங்க தேசத்தில் வாழ்ந்துவரும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு க்கு ஆபத்தையே ஏற்படுத்திடும். இந்தியாவில் வாழும் மதச் சிறுபான்மையின ரைப் பல்வேறு வடிவங்களில் துன்புறுத்தி வரும் இந்திய ஆட்சியாளர்கள், ‘சிறு பான்மையினரைப் பாதுகாக்க வேண்டும்’ என்று தங்களுக்கு உபதேசம் செய்வதை வங்கதேச மக்கள் ஏளனமாகப் பார்க்கிறார்கள்.
அமித்ஷாவின் பொய்க்குற்றச்சாட்டு
வங்கதேசத்திற்கு எதிராக இந்திய உயர்மட்டத் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருவதன் காரணமாக வங்க தேசத்தில் பொதுக் கருத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மாநிலத்தில் பெரிய அளவில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி யிருக்கிறார்கள் என்று பொய்க்குற்றச்சாட்டை சுமத்தியதோடு, அவர்களுக்கு எதிராக கடுமையான முறையில் எச்சரிக்கையும் விடுத்தார். முன்னதாக இத்தகைய ஊடுருவல்காரர்களை அவர் ‘கரையான்கள்’ என்று விளித்தார்.
இரு நாடுகளிலும் வாழும் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகள், மத வெறி பிளவுவாத அரசியல், இரு நாடுகளில் வாழும் மக்களின் நலன்களுக் கும் ஊறு விளைவித்திடும் என்பதை உறுதிபட கூற வேண்டியது அவசியமா கும். ஷேக் ஹசீனாவின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராகப் போராடிய வங்கதேசத் தில் உள்ள மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகள் நாட்டில் உள்ள சிறுபான்மையின ரையும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திடவும் முன்வர வேண்டும்.
டிசம்பர் 4, 2024, தமிழில் : ச.வீரமணி